Wednesday, January 6, 2010

சென்னையில் 33ஆவது மாபெரும் புத்தகக்கண்காட்சி –ஒருபார்வை


எங்கள் மனதில் நெடுநாட்களாகவே வாங்கவேண்டும், எப்படியாவது படித்து முடித்துவிடவேண்டும் என்று மனதில் உள்ள புத்தகங்களை இலகுவில் அடைவதற்கும், அந்த நெடுநாள் ஆவலை பூர்த்தி செய்ய ஏதுவானதாகவும் புத்தக கண்காட்சிகள் அமைந்துவிடுகின்றமை உண்மையே.
குறிப்பாக என்னைப்பொறுத்தவரையில் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்தே, முக்கியமாக வாசிக்கவேண்டும் என்று நான் பட்டியலிடும் புத்தகங்களை சொந்தமாகவே வாங்கி வாசித்து பாதுகாத்துவைக்கும் பழக்கம் எனக்கு உண்டு.
இவற்றில் பல புத்தகங்கள் நண்பர்களால் வாசிக்கவேண்டும் என்று கூறி வாங்கப்பட்டு பின்னர் அறவிடமுடியாத புத்தகங்களாக மாறிய கதைகள் வேறு உண்டு.

பொதுவாகவே மாபெரும் புத்தக கண்காட்சிகள் இடம்பெறுவது புத்தக பிரியர்களுக்கு, இன்னும் சொல்லப்போனால் வாசிப்பு வெறியர்களுக்கு பெரிய வேட்டையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பாக மாபெரும் புத்தக கண்காட்சி ஒன்று இடம்பெறும்போது, பல பதிப்பகங்களும் தங்கள் பதிப்புக்களை, கொண்டுவந்து விற்பனைக்கு வைப்பதன்காரணத்தினால் நாங்கள் தேடிவந்த புத்தகங்களை இலகுவில் சென்றடையக்கூடியதாக இருக்கும்.


இந்த வகையிலேயே கடந்த மார்கழி மாதம் 30 திகதி முதல் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிவரை சென்னை பச்சையப்பன் கல்லூரி (150ஆம் ஆண்டு நிறைவு வாயில்) எதிர்ப்பக்கம் அமைந்துள்ள சென். ஜோர்ஜ் அஞ்சலோ மேல் நிலை பாடசாலையில் இடம்பெற்றுவருகின்றது.
வெளியில் தெரியும் அலங்கார வளைவுகளே உள்ளே புத்தகக்கண்காட்சியின் பிரமாண்டத்தை பறைசாற்றுவதாக இருந்தது.
கொழும்பில் இருந்து சென்னை வந்த மறுதினமே இந்த புத்தக கண்காட்சிக்கு செல்வது, மனதில் நெடுநாட்களாக பட்டியலிட்ட புத்தங்களை அள்ளுவது என்ற எண்ணத்துடன் இருந்தேன்.
எங்கள் சக தவறணைப்பதிவர் டிலான் அவர்களும் ஒரு பரீட்சை நிமித்தம் சென்னை வந்துள்ளதால் அவரையும் சந்தித்து அவருடன் இணைந்தே புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.

தாராளமாக வாகன தரிப்பட வசதிகள் இருந்தன. அதற்கான ஒழுங்கும் சிறப்பாகவே இருந்தது. வழமையாக விழாக்கள், கண்காட்சிகளில் சொதப்பிவிடுபவை அவைதான்.
உள்ளே செல்லும் போது வாசலின் மிக அருகே செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் பலர், இரத்த தானம் செய்ய அழைப்பு விடுக்கின்றனர். நல்ல விடயம்தான்.
நுளைவுக்கட்டணமாக பற்றுச்சீட்டு ஐந்துரூபா அறவிடப்படுகின்றது. (பறவாய் இல்லை) அதன் பின்புறம் அதிஸ்டலாப குலுக்கல் ஒன்றுக்காக எமது பெயர் விடயங்களை எழுதி, அருகில் இருக்கும் பெட்டியில் போடச் சொல்கின்றார்கள். இத்தனை பெரிய புத்தக கண்காட்சியில், இத்துனை இலட்சம்பேர்கள் கூடும் இடத்தில், கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் புத்தக வியாபாரம் நடக்கும் இடத்தில், குலுக்கல் பரிசு வெறும் 1000, 500, 250 தான் என்று போட்டிருகின்றார்கள். (கஞ்சத்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா?)

உள்ளே, பிரதான வாசல் வழியே நுளைந்தால் பாரிய ஒரு அறிவிப்பு பலகையில் பதிப்பகங்களின் அமைவிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேல்ல மெல்ல ஒவ்வொரு பதிப்பங்களாக சென்று கொண்டிருந்தோம். முதற்காரியமாக நான் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகங்களை வாங்கி அடுக்கிக்கொண்டிருந்தேன். நண்பர் டிலான், வணிகவியல், முகாமைத்துவம் சம்பந்தமாக தேடிக்கொண்டிருந்தார்.
அடுத்து எனது கண்களில், கொழும்பில் இருந்து புறப்படும்போது நண்பர் ஒருவர் வாங்கிவரும்படி தெரிவித்திருந்த முன்னாள் சி.பி.ஐ. தலைமை அதிகாரி ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. அப்படியே அமுக்கிக்கொண்டேன். ஏற்கனவே கார்த்திகேயனின் சோடிப்புக்கதைகளையும், எழுத்தாளர்களை மிஞ்சிய சில கற்பனைகளையும் அவர் எழுதிய இதே கருத்துள்ள புத்தகத்தில் படித்துள்ளோம் அல்லவா??

உயிர்மெய் பதிப்பகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் நான் தேடிவந்த பெரும்பாலான புத்தகங்களை வாங்கிக்கொண்டேன் மொத்தமாக சுஜாதாவின் 30 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே என் மதிப்புக்குரிய எழுத்தாளர் சாரு.நிவேதிதா அவர்கள் அமைதியாக நின்றிருந்தார். பின்னர் உண்மையில் எனது மனதிற்கு பிடித்த விகடன் பிரசுரம் பகுதிக்கு சென்றேன்.
வேறெங்கும் இல்லாத உபசரிப்பு. கவனிப்பு, உதவிகள், “ஈகோ வரமா சாபமா”, “சிகரம் தொட்ட சச்சின்” உட்பட சில புத்தகங்களை பொறுக்கிக்கொண்டேன்.
இந்த நேரத்தில் எங்கள் தமிழ் இலக்கியக் கூட்டத்தில் சந்திப்பு நிமித்தம் நண்பராகியவர் எனவே நண்பர் என்று சொல்லலாம். நண்பர் கோபிநாத் (விஜய் ரி.வி.) அவர்கள் எழுதிய “ப்பிளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க” என்ற புத்தகம் கண்ணில் விழுந்தது சரி…அவர் சொல்வதை ஏன் மீறுவான், வாங்கவேண்டாம் என்று தான் நினைத்தேன், என்றாலும் அவர் எதிர்பாhத்ததுபோலவே நான் வாங்கிக்கொண்டேன்.

பின்னர் ஒரு பதிப்பகத்தையும் மிச்சம் விடாமல் சற்றிப்பார்த்து சில புத்தகங்களை தேர்தெடுத்து வாங்கிக்கொண்டிந்தேன். அதற்கள் டிலானும் பல புத்தகங்களை வாங்கியிருந்தார். முன்னரே உத்தேசித்து முதுகில் கொழுவக்கூடிய பெரிய ஒரு பையினை கொண்டுவந்திருந்ததனால் எல்லா புத்தகங்களையும் அதற்குள் போட்டு சுமந்துகொண்டு வெளியேறினோம்.
ஒரே ஒரு விடயம் மட்டும் மனதில் உதைத்தது. நான் கொழம்பில் இருந்து சிறி லங்கன் ஏர்லைன்ஸில்த்தான் வந்திருந்தேன். அதில் 20 கிலோ கிராம் தான், கொண்டு செல்லமுடியும், இந்த புத்தகங்களே அதை தொட்டுவிட்டன போல் இருந்தன.

இனிமேல்த்தான் செல்லப்போபவர்களுக்கு சில டிப்ஸ்:
முதல் முறை சென்று அனைத்து புத்தக பதிப்பர்களிடமும், இலவசமாக வழங்கப்படும் பக்லெட்டினை வாங்கிக்கொள்ளுங்கள், பதிப்பகங்களின் அமைவிடங்களை முதலில் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து எதுவும் வாங்காமல் வீட்டுக்கு போய்விடுங்கள்.
அசுவாசமாக வீட்டில் இருந்து அந்த புக்லெட்டுக்களை எடுத்து அதில் உள்ள புத்தகங்கள் விலைகள் என்பவற்றை பார்த்து உங்களுக்கு தேவையானவற்றை ரிக் செய்து கொள்ளுங்கள்.
பன்னர் ழுமுவதையும் பார்த்து பைனலைஸ் பண்ணிக்கொள்ளுங்கள்.
பட்ஜட் இவ்வளவுதான் இதற்குமேல் வாங்குவதில்லை என்ற முடிவுடன் சென்று அமைதியாக ஆறுதலாக உங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிவாருங்கள்.

புத்தக கண்காட்சியில் குறைபாடுகள்.
பிற்பகல் 2.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரைதான் என்பது
வெறும் 10 வீதமே தள்ளுபடி.
பல புத்தக பதிப்பக கடைகளில் உள்ளவர்களின் ஏனோ தானோ மனோநிலை.
சில இடங்களில் புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள விதம்
ஒரே பெரிய கூடாரமாக இருப்பது..

இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும், மாபெரும் அளவில் ஒரு புத்தக கண்காட்சி நடைபெறுவது வருடத்தில் ஒரு முறையாவது தேவையானதுதான். புத்தகங்களுக்கு வருமானத்தில் கணிசமான ஒரு பகுதியினை ஒதுக்கிக்கொள்வதிலும் எந்த தவறும் இல்லை. உங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் எழுதிய உங்களுக்கு தெரியாத புத்தகங்களைக்கூட நீங்கள் கண்டுகொள்ளலாம்.
எனவே முடியுமானவர்கள் ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்...
இன்னும் நான்கு நாட்களே உள்ளன!!

5 comments:

சயந்தன் said...

நீங்க அழைத்தும் வராமல் இருந்ததுதான் தப்பு.சென்னை புத்தக கண்காட்சி பார்க்க மிக ஆவலாக இருக்கிறது.இப்படியான நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Mathumathy said...

…Very Useful information and Tips Jana.
Thanking you for your good information and Guide.

Cable சங்கர் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

புத்தகக் காட்சியில் உங்கள் அனுபவங்களை வாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Unknown said...

//மொத்தமாக சுஜாதாவின் 30 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே என் மதிப்புக்குரிய எழுத்தாளர் சாரு.நிவேதிதா அவர்கள் அமைதியாக நின்றிருந்தார்//

ஆகா உங்களுக்கும் இரண்டு பேரையும் பிடிக்குமா? நம்மாளா அண்ணே நீங்க?
ச்சே எனக்கும் ஒரு சான்ஸ் கிடச்சா, போய், நிறைய புத்தகங்கள் வாங்கணும்! :-)

LinkWithin

Related Posts with Thumbnails