Friday, December 31, 2010

நாட்குறிப்பின் இறுதி நாள்.

ரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமாகவே பார்க்கடுகின்றது. சூரியமையத்தின் பூமியின் பரிபூரணமான சுற்றாக மட்டும் அது பார்க்கப்படவில்லை. வாழ்வியலின் ஒரு கட்டத்தின் சுற்றாக பார்க்கப்படுகின்றது.
எது எப்படியோ வருடத்தின் இறுதிநாள், தெரிந்தோ தெரியாமலோ மனதிற்குள் பல கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துவிடுகின்றது! ஒரு வருடம் என்பது தனி மனித வாழ்வியலின் ஒரு வயது ஆகின்றது. அந்த வருடம் கொடுத்துச்செல்லும், அனுபவங்கள் பல, வலிகள் பல, சந்தோசங்கள் பல!! இந்த அனுபவங்களின் வீதங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது.

இன்றுடன் இந்த வருடம் ‘கடந்தகாலத்தில்’ என்ற பதத்தில் அடக்கப்படப்போகின்றது. ஒவ்வொரு வருட இறுதியும் எமக்குள் ஒவ்வொரு இரகசியங்களை சொல்லிவிட்டே விடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை நாம் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கின்றோம் என்பதே கேள்வியாக உள்ளது.
எத்தனை பிரிவுகள், எத்தனை இழப்புக்கள், எத்தனை சோகங்களைக்கூட இந்த ஆண்டு சிலருக்கு கொடுத்துவிட்டு போய்க்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நாளை என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக, எல்லாநாளும் புதிதாக பிறந்தாலும் நாளை என்ற புதுவருடத்தின் புதியநாள் ஒன்று ஏக்கத்துடன் வரவேற்கப்படும் நாளாக அமையப்போகின்றது.

ஒன்றைக்கவனித்தீர்களா? வருட இறுதிநாள் என்று நாட்குறிப்பின் கடைசிப்பக்கத்தை, அல்லது கலண்டரின் இறுதிநாளை எட்டும்போது, மனதிற்குள் இனம்தெரியாத ஒரு சோகம்கூட இழையோடுவதை உணரமுடிகின்றது அல்லவா?
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்றும்போகின்றது என்ற ஆழ்மனதின் எச்சரிக்கையாக அதைக்கொள்ளமுடியுமோ என்னமோ?
இந்த நாளில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் நாள்வரை, நாம் சாதித்தவைகள் எவை? தவறவிட்டவைகள் எவை? கற்றுக்கொண்டவைகள் என்ன? பெற்றுக்கொண்டவைகள் என்ன? முக்கியமான நிகழ்வுகள், சந்தோசங்கள், துன்பங்கள், என அத்தனையையும் இந்த நாளில் ஒரு சுயவிமர்சனத்திற்கான நாளாக கொள்ளவேண்டும் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவற்றை வைத்துக்கொண்டே அடுத்த ஆண்டின் திட்டங்களை வரையறை செய்யவேண்டும் என்று பல வெற்றிபெற்றவர்களின் குறிப்புக்களை கொண்டு உதாரணங்கள்வேறு கூறப்படுகின்றது. ஒரு வகையில் பார்த்தால் நாங்கள் போகும்பாதை சரியானதாக உள்ளதா? என்ன மாற்றங்களை செய்யவேண்டும், நாம் விட்ட தவறுகள் என்ன? பெற்ற வெற்றிகளுக்கான காரணங்கள் எவை? என்று அறிந்துகொள்ள அது மிக உதவியானதாகவே இருக்கும்.

“அடுத்த நொடி ஒழித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்” இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துவைத்திருக்கின்றோம். அதே ஆச்சரியத்துடன் அந்த நொடிகளின் பெருந்தொகுதியான இன்னும் ஒரு வருடத்திற்கு முகம்கொடுக்கத் தயாரானவர்களாக நாம் நாளை என்ற புதிய வருடம் ஒன்றுக்குள் இழுத்துச்செல்லப்படுகின்றோம்.
அடுத்த வருடம் எமக்கு ஒழித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களோ மிக ஏராளமானதாக இருக்கப்போகின்றது. இருக்கும்.

இணையங்கள், வலைப்பூக்களை கையாள்பவர்களுக்கு “பக்கப்” என்றதொரு வார்த்தை நன்றாகத்தெரியும், அதாவது தொடக்கத்தில் இருந்து இந்த கணம்வரை நாம் எழுதியவை, சேகரித்தவை, சேமித்தவை அத்தனையையும் பாதுகாத்துக்கொள்வது.
அதேபோல எம் மனதையும், இந்தவருட அனுபவங்களையும், “பக்கப்” எடுத்துக்கொள்ளும் நாள் இன்றுதான்.
எமது மனம் என்ற சிஸ்ரத்தில் அப்பப்போ படிந்த வைரஸ்களை, சிந்தனை என்ற அன்டி வைரஸ் அப்டேட்பண்ணி, தெளிவான ஒரு சிஸ்ரமாக நாளையை வரவேற்போம்.

இந்த வருடம் என் இணைய எழுத்துக்களுடன் பயணித்து என்னோடு இன்றும் தொடர்ந்து நிற்கும், பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள், திரட்டிகளில் வோட்டு போட்டு, பின்னூட்டமிட்டு ஆதரவு தந்து தட்டிக்கொடுத்தவர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சொல்லிக்கொள்கின்றேன்.

ஸியேஸ்….

Thursday, December 30, 2010

மனதிற்குள் எப்போதும் இசை மீட்டுபவர்கள்.

சை ஒரு உன்னதம், சுபானுபவம், மனங்களை மலரச்செய்யும் மந்திரம் இப்படி எதனைவேண்டும் என்றாலும் சொல்லிக்கொள்ளலாம். இசை என்பதிலேயே இது தன்னகத்தை அத்தனையையும் இசைத்துக்கொண்டு சென்றுவிடும் என்ற பொருள் சுட்டி நிற்கின்றதே! என்னைப்பொறுத்த வரையில் இசை ஒரு மூலம், இசை ஒரு தவம், இசை ஒரு வரம்.

உன்னதமான இசை ஒன்றை முழுமையாக அனுபவித்திருக்கின்றீர்களா? ஒவ்வெலாரு செல்லிலும் இசை ஊடுருவும் என்பதன் அர்த்தங்கள் அப்போது கண்டிப்பாக உங்களுக்கு புரிந்துவிடும். மனதில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும், உணர்வுகத்தின் அடி ஆழத்திற்கே சென்று தட்டி எழுப்பிவிடும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு.
என்னைக்கேட்டால்… உன்னதமான இசை ஒன்றைக்கேட்டால் என்னை மறந்து நான் அழுதுவிடுவேன்.
ஆஹா… தியானத்தின் சுகம் என்கிறார்களே…இசையில் இலகித்தல்கூட ஒரு தியானமே. கழுத்துக்கரையோர கீழ்ப்பாகத்தில் இருந்து உச்சந்தலைக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை இசையில் இலகிக்கும்போது எப்போதும் அனுபவித்துக்கொள்கின்றேன்.

இசை.. கறைபட்ட மனங்களை கழுவிவிடுகின்றது, இசை தெளிவில்லாத மனங்களை, தெளிவு படுத்துகின்றது, இசை மனிதனை மனிதனாக்கின்றது, ஏன் ஒருபடிமேலேபோனால் இசைதான் மனிதனை இறைவனுடன் நெருங்கி இருக்க செய்கின்றது. இசைக்கு மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் இலகித்துவிடுவதாக மெஞ்ஞானம் அன்றே சொன்னது, விஞ்ஞானம் இன்று சொல்கின்றது. மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் எப்போதும் ஒரு கணம் கௌரவப்பார்வை பார்ப்பது என்னமோ இசைக்கு மட்டுமே.

இதோ…இசை எனும் நாதம் பரப்பில் என் மனதில் இசைக்கற்களை எறிந்து, இன்றும் மனதிற்குள் இருந்து இசை பரப்பியவர்களில் பத்துப்பேர்.
இவர்கள் என் மனதில் இசை என்னும் கல் எறிந்தவர்களில் முதன்மையானவர்கள்.
சிரிக்கவைத்தவர்கள், சுகானுபவங்களை பெறவைத்தவர்கள், சற்றுநேரம் என்றாலும் என்னை மறக்கவைத்தவர்கள், இசையின்ப வெள்ளத்தில் என்னை அழவைத்தவர்கள்.

ஷாஹீர் உசைன்

கே.ஜே.ஜேசுதாஸ்

மான்டலின் சிறினிவாசன்


குன்னைக்குடி வைத்தியநாதன்

இசைஞானி இளையராஜா

ஏ.ஆர்.ரஹ்மான்

எம்.எஸ்.சுப்புலஷ்மி

மைக்கேல் ஜக்ஸன்

குரு காரைக்குடி மணியம்


லக்கி அலி

Wednesday, December 29, 2010

ஸிக்ஸ்! ஸிக்ஸ்!! ஸிக்ஸ்!!!


(பொதுவாக தமிழில் ஃபான்ரஸிக் கதைகள் குறைந்துவரும் நிலையில், பதிவர்களிடையே ஒரு சுவாரகசியம் மிக்க ஃபான்ரஸி கதை ஒன்றை கொண்டு செல்வோமே என்ற ஒரு முனைப்புத்தான் இந்த ஃபான்ரஸி தொடர்கதை.
இதை தொடங்கி ஒரு இடத்தில் நிறுத்தும்வரை மட்டுமே என்பங்கு. அடுத்து இந்த கதையில் என்ன என்ன மாயாஜாலங்கள் வரப்போகின்றன எப்படி எல்லாம் சிரிக்க வைக்கப்போகின்றன என்பது இதை கொண்டோடும் அடுத்த அடுத்த பதிவர்களிலேயே தங்கியுள்ளது. தொடங்கு என்றார்கள் தொடங்கியுள்ளேன், இனி இந்த ஓட்டத்தில் தேச எல்லைகளைக்கடந்து பல பதிவர்கள் ஓடவுள்ளதாக அறிமுடிகின்றமையால் கதை விறுவிறுப்பாக போகும் என்றே எண்ணுகின்றேன்.
இதோ எனது பிள்ளையார் சுழி.)


ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் கடற்கரைக்குப்போய் விளையாடாதீங்கடா! என்று சந்தியில் சம்மணம்போட்டிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த பெரியவரின் 26 டிசெம்பர் 2004ஆம் ஆண்டு அனுபவ பயமுறுத்தலை செவியில் எடுக்காமல் நழுவிவிழும் காற்சட்டைகளை பிடித்தபடி ஒருவனும், மூக்குநீரை இரண்டு கைகளாலும் ஓ வடிவில் துடைத்துக்கொண்டு ஒருவனும், எந்த ஒரு பிளானும் இல்லாமல் இரண்டு பேருக்கும் பின்னால் ஓடும் ஒருவனுமாக கடற்கரையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் மூன்று சிறுவர்கள்.

இன்னும் 5 நாட்களில் மூன்றுபேரும் மொண்டசறியில் இருந்து பாடசாலைக்கு பிரமோட் ஆகின்றார்கள். மொண்டசறியில் “வண்ணத்திப்பூச்சி” சொல்லத்தெரியாமல், “வண்ணாத்தி ஊச்சி” என்று பாடியதில் இருந்து மூன்றுபேருக்கும் சினேகிதம் ஏற்பட்டதாக வைத்துக்கொள்ளுங்களேன்.

அடேய்…அங்க பாருங்கடா..கப்பல்; ஒன்றை கரையில் விட்டிருக்கிறாங்க தானே..அங்கபோய் இருப்போமடா..என்றான் காற்சட்டை அளவில்லாமல் இந்த கதையில் நாலாவது வரியில் அறிமுகமான பையன். அதையே எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமல் ஆமோதித்து அந்த இடத்தில்போய் சத்தமிட்டுக்கொண்டே ஒருவர் மீது ஒருவர் ஓடிவந்து விழுந்து பின்னர் அதே இடத்தில் உக்காந்துகொண்டனர்.

டேய் இந்தக்கப்பல்ல நேற்று நான் அப்பாவோட, ஆப்கானிஸ்தான் போட்டு வந்தேன் என்றான் மற்றவன். சரி..ஆப்கானிஸ்தானில இருந்து எனக்கு என்னடா கொண்டுவந்தே என்றான் காற்சட்டை அளவில்லாதவன். சிரித்துக்கொண்டே நான் சும்மா சொன்னேன்டா என்றான் கதை விட்டவன்.
சரி..அதுகளை விடுவோம்டா… இந்தப்பயல் என்ன இன்றைக்கு பேயை பார்த்ததுபோல முளித்துக்கொண்டிருக்கிறான் என்று பின்னால் ஓடிவந்தவனை பார்த்தனர் இருவரும்.

“டேய்.. எனக்கு ஏ.பி.சி.டி.க்கு அங்கால ஒழுங்காத்தெரியாதா! நேற்று இரவு எங்க சித்தப்பா மூலையில் இருந்து பாடமாக்குடா என்று சொல்லிப்போட்டாரு!”
இதிலிருந்து எப்படி தப்புவது என்று யோசித்து நேத்து இராத்திரி கடற்கரைக்கு ஓடிவந்து நிலவை பார்த்திட்டு இருந்தேன்டா..
அப்போ..திடீர் என்று கடலுக்குள் இருந்து சிவப்பாய் பாய்ந்து வந்து என் மடியில் விழுந்திடிச்சுடா.. எடுத்து பார்த்தா ஏதோ ஏதோல்லாம் சொல்லுதடா..
இந்தா இந்த படகுக்கு பக்கத்தில அதை புதைச்சுட்டு போய்ட்டேன்டா என்றான் அவன்.

அவன் காட்சிய இடத்தில் தோண்டி ஒரு பெட்டிபோன்ற ஒன்றைக்கண்டு கையில் எடுத்தனர். உடனே அது சிவப்பு வர்ணத்தில் பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டது.
போட்டுவிட்டு மூன்றுபெரும் ஓட்டம் பிடித்தனர். “பிளீஸ் ஸ்ரொப் மைடியர் லோர்ட்ஸ்.. ஓ சொறி..இட்ஸ் மை மிஸ்ரேக்” தயவு செய்து நில்லுங்கள் என் பிரபுக்களே.. நீங்கள் மூவருமே இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்..ஆம் நீங்களே அந்த 666. நான் உங்கள் கட்டளைகளை நிறைவேற்றும் அடிமை என்றது அது.

ஓடுவதை விட்டுவிட்டு ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தனர் காட்சட்டை நழுவிவிழும் ஆறுமுகன், மூக்குக்குள் வோட்டர்போல் வைத்திருக்கும் ஆறுபடையான் மற்றும் நேற்று இரவு வந்து அதை மடியில் ஏந்திய ஆறுனி.

டேய்..நம்ம மூன்றுபேரின் பெயரும் ஆறு என்றுதான் தொடங்குது என்று அதுக்கு தெரியுதடா என்றான் ஆறுமுகன். ஆமாடா..முந்தநாள் டீச்சர்கூட சொல்லித்தந்தாங்களே..கடற்கரையில ஒருபையன் போத்தல் ஒன்றுக்குள்ள இருந்து பூதத்தை வெளியில கிழம்ப வைத்தான் என்று!! அது இதேதாண்டா என்றான் ஆறுனி.

எஜமானர்களே…மன்னியுங்கள். நீங்கள் கூறுவதுபோல நான் பூதம் கிடையாது. 666 என நான் சொன்னதையும் நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள். அது டேமியன்…..!
சீ வேண்டாம் உங்களுக்கு புரியாது. உங்களுக்கு ஒன்று தெரியுமா இந்தப்பெட்டியாகிய இதை வைத்துக்கொண்டு நீங்கள் மூவரும் ஒருமித்து எதைச்சொன்னாலும் நடக்கும். இந்த உலகமே இப்போது உங்கள் காலடியில் என்றது அந்தப்பெட்டி.

அப்படியா என்று விட்டு. டேய்.. எங்களுக்கு 5 ஸ்ரார் சொக்லட்ஸ் இந்த கப்பல்நிறைய வேண்டும் என்று ஆணைபிறப்பித்தனர். என்ன ஆச்சரியம் அங்கு கரையில் நின்ற அந்தக்கப்பல்முழுவதும் 5 ஸ்ரார் சொக்லட்ஸ்சாக நிறைந்தது.
டேய் கதைகள்ல பாட்டியும், டீச்சரும் சொல்லுறது பொய்யில்லைடா..
சும்மா சின்னப்பிள்ளைத்தனமா சொக்லட்ஸ் அது இது என்றாமல் ஏதாவது பெரிதாக செய்யவேண்டுமடா என்றான் ஆறுபடையான்.

இந்த இடத்தில் நிறுத்திக்கொண்டு தொடர்ந்து கதையை சுவாரகசியமான போக்கில் கொண்டோட நகைச்சுவை மன்னன் கூல்போய் கிருத்திகனை அழைக்கின்றேன்.

Tuesday, December 28, 2010

ஹொக்ரெயில் -28.12.2010

GOOD BYE - 2010.

நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொள்ளும் இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படியான ஒரு சிறப்பான ஆண்டாக இல்லை என்பதுடன் உலக அரசியல் ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ரீதியில் எந்தவொரு பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்திவிடவும் இல்லை. அதேவேளை வருடத்தின் பின் பாதியில், வடகொரிய, தென் கொரிய முறுகல் நிலை, ஆங் சாங் ஷ_கியின் விடுதலை, விக்கிலீக் கிளப்பிவிட்ட அதிர்ச்சி என்பதே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கின்றது.
அதேவேளை உலகக்கோப்பை கால்பந்துப்போட்டி இந்த ஆண்டின் உற்சாகமான சுவாரகசியம். இலங்கையை பொறுத்தவரை ஜனாதிபதித்தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக ஜனாதிபதி, பொதுத்தேர்த்தல், யுத்தக்குற்ற சர்ச்சைகள் என்பன பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அதேபோல இந்தியாவைப்பொறுத்தவரை இது ஊழல்களின் ஆண்டு என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சர்ச்சைகளும், பிரளயங்களும் இன்னும் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்கின்றன.

எரிமலை வெடிப்பு, சுரங்க விபத்துக்கள், விமான, ரெயில் விபத்துக்கள், மண் சரிவு, போன்ற அனர்த்தங்களும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் பதிவுலகத்திலும், பெரியதொரு தொய்வுநிலை ஏற்பட்டது என்பதுடன் பல பல சர்ச்சைகளும், மோதல்களும்கூட இடம்பெற்றுவிட்டன.
கால நிலையில் கூட பாரிய மாற்றங்கள், அளவுக்கதிகமான வெயில், ஆடியில் காற்று பெரிதாக அடிக்கவே இல்லை, வெப்பநிலை திடீர் என்ற உயர்வு, மேற்குலகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பனிப்பொழிவு, ஆசிய நாடுகளில் தொடர் தாளமுக்கங்கள், மார்கழியும் முடியும் நிலையிலும் தொடர்ந்து பெய்யும் மழை என இயற்கையும் பொய்த்த ஆண்டாகவே இது உள்ளது.
உலகில் பொதுவாக வசந்தங்களை கொண்டுவராத 2010ஆம் ஆண்டே சென்றுவிடு.

வனப்பேச்சி

தமிழச்சி தங்கபாண்டியன், நான் கவனித்துக்கொண்டிருக்கும் ஒருவர். அவரது பேச்சுக்கள் மட்டும் அல்லாது அவரது எழுத்தக்களும் கொஞ்சம் வர்ணனைகளும், அலட்டல்களும் இன்றி யதார்த்தத்தை அப்படியே கொடுப்பவையாக இருக்கும்.
இன்று காலையில் நண்பர் ஒரிவரிடம் இருந்து தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி புத்தக்தை படிப்பதற்கு வாங்கி படித்துமுடித்தேன்.
அத்தனை கவிதைகளிலும் எனக்குள்ளே ஏக்கத்துடன் காத்திருந்த வலிகள் வெளிப்பட்டன. கிராமங்களுடன், உணர்வுகளையும், பாசங்களையும் தொலைத்துவிட்ட நம் சமுதாயத்தின் மேல் ஒரு ஏக்கப்பெருமூச்சு விட வைக்கின்றன கவிதைகள்.
எமக்கு கூட புலப்பெயர்வு என்ற ஒன்று வாழ்வில் ஏற்படுத்திவிட்ட தாக்கத்தை, அவர் கருவாக எடுக்காதபோதிலும் சாடிக்கு மூடியாக அளவாகவே அதுகூடப்பொருந்துகின்றது.
அத்தனை கவிதைகளும், என் காற்சட்டைப்பருவகால பசுமையான நினைவுகளையும், அதை தொலைத்துவிட்டு இன்று நிற்கும் வெறுமையினையும் காட்டுகின்றது.
உதாரணத்திற்கு ஓரிரண்டு இதோ….

"சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…"

"சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்"

ஆடை கட்டிய காமத்திற்கு பெயர் காதல் இல்லை.

நாகரிகம் பெரு வளர்ச்சிபெற்ற போதிலும் இன்றும் தென்னாசிய நாடுகளில் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே பெற்றோர்கள் பதறிப்போவது ஏன்?
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும்கூட காதல் என்ற பெயரில் இன்று அதிகரித்துவிட்ட காமக்களிப்புக்களே அதற்கு முதற்காரணமாக அமைந்துவிடுகின்றது. குறிப்பாக விடலைப்பருவத்தினர் விழிப்பாக இருக்கவேண்டிய தருணங்கள் இது. விடைபுரியமுடியாத விநோதங்கள் மனதில் வந்து வட்டமிடும் நாட்களில் உத்தரவின்றியே உள்ளேவரும் இனம்புரியாத இன்ப உணர்வுகள், தவறான வழிநடத்துதல்கள், பாதுகாக்காத சுற்றம் என்பனவே, பெரும்பாலும் இந்த ஆடை கட்டிய காதலுக்கு ஏதுவாகிவிடுகின்றன.
காமக்கண்ணோட்டித்திற்கும், சில வக்கிரகங்களுக்கும் காதல் என்னும் அற்புதமான பெயர் இழுத்துப்போடப்படுவது எத்தனை கொடுமையானது.
குறிப்பாக 13 தொடக்கம் 21 வயதிற்கு இடைப்பட்டவர்களை அந்த வயதிலேயே இவை பற்றிய போதிய தெளிவுடையவர்களாக ஆக்கவேண்டிய தேவை இன்று சமுகத்திற்கு எற்பட்டுள்ளது. இந்த பாரிய பொறுப்பு பெற்றோர்கள், உறவுகள், மற்றும் ஆசிரியரிடமே கூடுதலாக உள்ளதை புரிந்துகொண்டு, ஒரு வளமான எதிர்காலத்திற்காக தமது பிள்ளைகளையும், மாணவர்களையும் உருவாக்கவேண்டும்.

இன்றைய குறும்படம்.

நிர்வாகம்???

நிர்வாகம் என்பது மேல் மட்டத்தில் இருந்து கடைநிலைவரை தம்நிலை அறிந்து நடந்தாலே அனைத்திலும் சிறப்பான பெறுபேறுகளை தாமும், தம்சார்ந்தவர்களும் அடைந்துகொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால் நிரந்தரமான ஒரு பதவி, வேலைசெய்தேனோ வேலை செய்யவில்லையோ மாதக்கடைசியில் ஊதியம், என்ற நிலை வந்தால், சில அசண்டையீனங்கள், தலைதூக்கி, அதனுடன் சுயநலமும், அலுப்பும் ஒன்றுகூடி கடமைமீறல், நிர்வாக அலங்கோலங்கள் எனத்தொடங்கி அதன் தாக்கம் சமுகத்தின்மேல் பாய்ந்து அதுவே பாரியதொரு பிரச்சினையாக விஸ்வரூபம் எடுக்கும் சந்தர்ப்பங்கள் மிக உண்டு.
நேரடியாகவே சொல்லுகின்றேன், இன்றைய அரசாங்க அலுவலக ஊழியர்களில் ஒரு சிலரின் நிலை இதுதான்.
எத்தனை நிர்வாகச்சிக்கல்கள், பொதுமக்களுக்கு எத்தனை பிரச்சினைகள்.
அரச அலுவலகர்கள் என்ற பதமே மிகத்தவறு. அரசாங்கமே பொதுமக்களின் சேவகர்கள்தான். பொதுமக்களின் வேலைக்காரர்கள்தான் நாங்கள் என்ற உணர்வு இருந்தால் அரச அலுவலகங்களில் எந்தவொரு நிர்வாக சிக்கல்களும் ஏற்படாது.

தனியார் மயமாதல் நடவடிக்கைகளுக்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து, சம்பள உயர்வுக்கு கொடிபிடித்து, ஆனால் வேலைகளை அசண்டையீனமாக செய்துவரும் அரசாங்க ஊழியர்கள் பலபேரை நான் பார்த்திருக்கின்றேன். அதேபோல திறமையானவர்களை வரவிடாமல் இனவாத காரணங்கள்கூறி நிறுத்தி, தாமும் ஒன்றும் செய்யாமல் வைக்கல் பட்டறையில் படுத்திருக்கும் பலர் யாழ்ப்பாண அரச அலுவலகங்களில் உண்டு.
ஒன்றை யோசித்துப்பாருங்கள், இன்னும் வேலை கிடைக்காமல் உங்களைவிட எத்தனை பட்டதாரிகள் வெளியில் ஏக்கத்துடன் நிற்கின்றனர். இதை உணர்ந்தாவது கொஞ்சமாவது கடமை என்ற பதத்தை கடைப்பிடிக்கலாமே!

ஆஹா…போடவைக்கும் அடன்சமி.

நிசப்தமான இராத்திரிகளின் தனிமைகளில் அடன்சமியின் பாடல்களை கேட்டிருக்கின்றீர்களா? அற்புதமான அனுபவங்கள் அவை. கிளஸிக்கல், இந்துஸ்தானி, பாகிஸ்தானிய இசை, ஜாஸ் என எத்தனை ஸ்வரங்களில் அற்புதமான குரலில் மனதை வருடிச்செல்லும் அடன்சமியின் குரல்.
“ராக் டைம்” முதல் “தெரி கஷம்” வரையான ஆல்பங்கள் என் ஐப்பொட்டில் எப்போதும் என் எவர்கிரீன் தெரிவுகள்.
தமிழில்க்கூட ஆய்த எழுத்து திரைப்படத்தில் “மஞ்சத்தில் என்னை மன்னிப்பாயா?” என்ற பாடலை ஏ.ஆர்.ஆர் இசையமைப்பில் பாடியுள்ளார்.
1973ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பிறந்து கனடிய பிராஜா உரிமையுடன், மும்பைக்கும் கனடாவுக்கும் அடிக்கடி பறந்துகொண்டிருப்பவர் அடன்சமி.
அடன் ஒரு இசைச்சுரங்கம்.

இன்றைய பாடல்.

சர்தாஜி ஜோக்.
ஷர்தாஜியின் ஊரில் இளைஞர்கள் இரண்டு குழுவாகப்பிரிந்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்தனர். மாநாடு அளவில் அவர்களது வாதங்களும் பிரதிவாதங்களும் முன்னெடுக்கப்பட்டன…விடயம் இதுதான் பூமிக்கு சூரியனா? சந்திரனா? முக்கியம் என்பதே அந்த வாதம். இந்த நிலையில் அந்த வழியால் எதேட்சையாகச்சென்ற நம்ம ஷர்தாஜியைக்கண்ட அந்த இளைஞர்கள்…எங்கள் பன்டாசிங் அண்ணன்தான் உலகம் முழுவதும் சுற்றித்திரிபவர் அவரையே நடுவராக வைத்து விவாதிப்போம்..தீர்ப்பை அண்ணனே சொல்லட்டும் என்றனர்…ஷர்தாஜியும் அதனை ஏற்றுக்கொண்டு…அமைதியாக இருந்து வாதப்பிரதிவாதங்களைக் கேட்டார்…
இறுதியில் இளைஞர்கள்….அண்ணே..இப்ப நீங்கள் இந்தப்பிரச்சினையை உங்கள் தீர்ப்பால் முடித்துவைக்கவேண்டும்…அத்துடன் அந்த தீர்ப்புக்கான காரணத்தையும் சொல்லவேண்டும் என்றனர்..
நம்ம ஷர்தாஜியின் தீர்ப்பு இதுதான்…
சந்திரனே…பூமிக்கு முக்கியமானது…
காரணம்…சந்திரன் இல்லாவிட்டால் இரவு நேரத்தில் கிடைக்கும் சின்ன வெளிச்சம்கூட கிடைக்காமல்போய்விடும். ஆனால் சூரியனோ வெளிச்சம் தேவைப்படாத பகல் நேரத்தில்க்கூட கண்ணுக்குள் குத்திக்கொண்டு நிற்கின்றது

Monday, December 27, 2010

கமல் ஹாசனின் தசா அவதாரங்கள்…


தாய்மடியில் பிறந்து, தமிழ்மடியில் வளர்ந்து, நாடகத்தில் கலந்த ஒரு உன்னத கலைஞன் கமல் ஹாசன். விருப்பத்துடனும், அர்ப்பணிப்புடனும் கலைத்துறையில் இருக்கும் கலைஞானி.
“எனக்கு பிடித்தமான தொழிலை செய்யச்சொல்லி, அதற்கு பணமும் தருவது எனக்கு பெரிய ஆட்சரியமே” என்று மிக எழிமையாக தன் கலைவாழ்வை குறிப்பிட்டுக்கொள்பவர். “சகலகலா வல்லவன்” என்பதன் உருவமே கமல் ஹாசன்தான்.

எனக்கு பிடித்தமான, எனக்கு உயிரான ஒரு நடிகன், மகாகலைஞன் பற்றி எழுது என்று மதி.சுதா என்னை அழைத்ததையும் கமல் ஹாசனின் ஆச்சரியத்துடனேயே நானும் பார்க்கின்றேன். கரும்பு தின்னக்கைக்கூலிதேவையா என்ன?

எனக்கு கமல் ஹாசனை எப்படி பிடித்தது? இன்றும் என் மனது கேட்கும் பெரிய கேள்வி இது? எனக்கு கமல் ஹாசனை பிடித்தது பாலர்பராயத்தில் இருந்தே என்றுதான் சொல்லவேண்டும்.
என் பக்கத்து வீட்டில் நாம் முதலாம் ஆண்டு படிக்கும்போது, இருந்த நண்பன். தற்போது அவன் ஜெர்மனில் வசிக்கின்றான். அப்போதே அவன் தந்தையாரின் தூண்டலால் ஆங்கிலப்படங்களை பார்த்துவிட்டுவந்து, எமக்குள் விளையாட்டாக மோதிக்கொள்ளும்போது, நான்தான் புரூஸ்லி வா..அடிபடுவோம் என்பான், அப்போது அப்பாவியாக நான், சரி…நான்தான் கமல் ஹாசன் என்றுவிட்டு அவனுடன் பாசாங்கிற்கு அடிபடுவேன். அப்போதிருந்தே நான் கமல் ரசிகனே.
என்ன ஆச்சரியம் பாருங்கள் நான் நானாகவே இருக்கின்றேன்.. அவன் இப்போ தீவிர கமல் ரசிகன்.

கமல் ஹாசன் பற்றி சொல்லவேண்டும் என்றால், அதற்கு தனியாக ஒரு வலைப்பூவையே அமைத்து எழுதிக்கொண்டே இருக்கலாம்.
விடயத்திற்கு வருகின்றேன். என்னை பதிவெழுத அழைத்த அன்பு நண்பர் பதிவர் மதி.சுதாவின் வேண்டுகோளுக்கிணங்க இதோ என்னைக்கவர்ந்த கமல் ஹாசனின் தசாவதாரங்கள்… (கமல் ஹாசனின் படங்களுக்குள் என்னைப்பொறுத்தவரையில் பிடித்தபடங்கள், பிடிக்காத படங்கள் என்று கிடையாது. இருந்தபோதிலும், பெரும்பாலும் மற்றவர்கள் எழுதாத படங்களாக பார்த்து தருகின்றேன்)

ஏக் துயே ஹேலியே…

கமல் ஹாசனின் நடிப்பில் சிகரம் தொட்ட ஒரு படமாக இதனைக்கொள்ளலாம்.
குருநாதர் கே.பாலச்சந்தர் இயக்கிய இந்தி திரைப்படம். 1981ஆம் ஆண்டு வெளியாகி பெருவெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனுடைய ஜோடியாக ரதி நடித்திருந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து கோவா செல்லும் கமலும், அங்கே பக்கத்துவீட்டு வடநாட்டு பருவமங்கை ரதியும் ஒருவரை ஒருவர் காதல் கொள்கின்றனர். இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு, பின்னர் மொழிகடந்த இவர்களின் காதல் பலம் புரிந்து, இருவரும் ஒரு வருடப்பிரிவு ஒப்பந்தத்திற்கு நிற்பந்திக்கப்பட்டு, அந்த ஒரு வருடத்தில் வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், சூழ்ச்சிகளில் சிக்கி, பின்னர் இருவரும் இணையும் சந்தர்ப்பத்தில் விதியின் சூழ்ச்சியில், இறுதியில் இருவருமே ஒருவராக உயிர்விடும் காட்சிகளை பார்த்து உருகி அழாதவர்கள் இருக்கமாட்டார்கள். படத்தின் இறுதி முடிவு படம் பார்ப்பவர்களின் மனதில் குறைந்தது இரண்டு நாளுக்கு தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “தெரேமெரே பீச் மென்” என்ற பாடலைப்பாடியதற்காக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தேசிய விருது முதற்தடவையாக கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

உல்லாசப்பறவைகள்

1980 ஆம் ஆண்டு சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், கமல் ஹாசன், தீபா, ரதி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் உல்லாசப்பறவைகள்.
தனது காதலி தீபாவின் இழப்பினால் மனதளவில் தாக்கத்திற்கு உள்ளாகும் கமல் ஹாசன், மனப்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும்வேளையில், அவரது தந்தையால் மாற்றம் ஒன்றிற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். அங்கே அவரது பால்ய சினேகிதியான ரதி அவருக்கு உதவுகின்றார். அதேவேளை அவரது சொத்திற்கு ஆசைப்படும் நபரால் கமல் ஹாசனும் கொலை செய்ய எத்தனிக்கப்படுவதும், பின்னர் சூழ்ச்சிகளை வென்று ரதியை கரம்பிடிப்பதுமே படத்தின் போக்கு.
இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசை…ஆஹா..போட வைத்தது.
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல், ஜெர்மனியின் செந்தேன்மலரே…போன்ற அற்புதமான பாடல்களும் இந்த திரைப்படத்தில் உண்டு.

கடல் மீன்கள்.

கமல், சுஜாதா, அம்பிகா நடிப்பில் தந்தை, மகனாக கமல் இரட்டைவேடத்தில் நடித்த திரைப்படம் கடல்மீன்கள். 1981 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தினை ஜி.எம்.ரங்கராஜன் இயக்கியிருந்தார்.
கடற்தொழில் செய்பவராக வரும் தந்தை கமல் இயங்கைச்சீற்றத்தினால், கடலிலே அல்லாடிப்போவதும், கரையில் தன் மனைவி சுஜாதாவை நினைத்து ஏங்குவதும், மீண்டு வந்து பார்க்கும்போது கடற்கரைக்குடியிருப்புக்கள், கடல்கேளால் பாதிக்கப்பட்டதையும், தன் மனைவி, கருவில் இருந்த குழந்தை இருவருமே இறந்துவிட்டதாக எண்ணி மறுவாழ்வு வாழ்வதும், மறுகரையில் தாயும், மகனும் தப்பித்து வாழ்வதும், பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான மோதல்களும்,
இறுதியில் தந்தையை புரிந்துகொண்ட தனையன் பாசத்திற்காக ஏங்கும்போது, தாயும் தந்தையும் கடலிலேயே காவியமாவதும் கண்களுக்குள் கடலை கொண்டுவந்துவிடுகின்றது.

சிம்லா ஸ்பெஷல்.

கமல் ஹாசன், ஸ்ரீ பிரியா, எஸ்.வி.சேகர் நடிப்பில் உருவான தரைப்படம் சிம்லா ஸ்பெஷல். 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை வி.சிறினிவாசன் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நாடகக்கலைஞராக கமல் ஹாசன் நடித்திருப்பார். இவரது நண்பராக எஸ்.வி.சேகர், வை.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
தன் சுயநலத்திற்காக நண்பனின் இக்கட்டான நிலமைகளைக்கூட நண்பனிடமிருந்து மறைக்கும், நண்பனின் துரோகத்திற்கு மத்தியிலும், நண்பனிடம் கொடுத்த வாக்கிற்காக, வாக்கை காப்பாற்றும் நட்பும் படத்தின் அடிநாதமாக அமைந்தது. “உனக்கென்ன மேலே நின்றாய் ஓ..நந்தலாலா” பாடல் ஒரு ஹைலைட்.

பேசும்படம்.

சங்கீதம் சிறினிவாச ராயோ இயக்கத்தில் கமல் நடித்த படம் பேசும்படம். இது ஒரு பேசாத படம். ஆம்…சைலன்ட்மூவி. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக அமலா நடித்திருந்தார்.
புனிக்கட்டி கத்தியால் கொலை செய்வது இன்றுவரை என்னை அதிசயிக்க வைத்துகொண்டிருக்கின்றது.

கலைஞன்.

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரில் படங்களில் ஒன்று. சில கொலைகளும், சில செயல்களும், அதில் கமல்தான் சம்பந்தப்படுவதுபோன்ற ஒரு மாயத்தோற்றமும், இறுதிவரை திரிலாக செல்லும் ஒரு திரைப்படம். கலைஞன்.
ஜி.பி.விஜய்யின் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம்.
இதில் கமல் ஹாசனுடன், பிந்தியா, நிர்மலா, சிவரஞ்சனி ஆகியோர் ஜோடிகளாக நடித்திருந்தனர். இதில் நடனக்கலைஞனான இந்திரஜித்தாக கமல் வாழ்ந்திருந்தார்.

சதி லீலாவதி.

முழுநீள நகைச்சுவையான ஒரு திரைப்படம். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்த திரைப்படத்தில் கமல் ஹாசனின் ஜோடியாக கோவை.சரளா நடித்திருந்தார். ரமேஷ் அரவிந்த் கல்ப்பனா தம்பதிகளிடையில், ரமேஸ் அரவிந்த் ஹீரா தொடர்புகளால் ஏற்படும் குளறுபடிகளை நீக்க கமல் ஹாசன் படும் பாடுகளும், சரளா கமல் தம்பதிகளின் லூட்டிகளும், வயிறுவெடிக்கும் வரை சிரிக்க வைக்கும் கிளைமக்ஸ் காட்சிகளும் அபாரம்.
ஏப்போதும், எத்தனை தடவைகளும் மீண்டும் மீண்டும் பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம்.

அவ்வை சண்முகி

சண்முகா…உனது படைப்பால் உயர்ந்து நிற்கும் பிள்ளையா..பிரபல நாடகச்சக்கரவர்த்தி அவ்வை சண்முகம் நினைவாக கமல் ஹாசன் பெயரிட்டு நடித்த படம். நகைச்சுவை, சென்டிமென்ட் நிறைந்த நகைச்சுவைப்படம்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கமல் மடிசார் மாமியாக பிள்ளைப்பாசத்தினால் போட்டுக்கொண்டவேடமும் பாவங்களும் அபாரம்.
இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மீனா, ஹீரா ஆகியோர் நடித்திருந்தனர்.

வேட்டையாடு விளையாடு.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த அக்ஸன் திரைப்படம் வேட்டையாடு விளையாடு. பொதுவாக கௌதம்மேனனின் திரைப்படங்களில் இயக்குனர் முத்திரைதான் தெறிக்கும், அதையும்தாண்டி கமல் முத்திரைகள் தெறித்த படம் வேட்டையாடு விளையாடு. அதிகம் அக்ஸன் படங்களில் பேசி நடிக்காத கமல் இதில் பேசி நடிப்பது ஆச்சரியம்.
இரத்தமும் சதையும் துடிக்கும் ஒரு படம்.

மருதநாயகம்
இது கமல் ஹாசனின் இலட்சியத்திரைப்படம் மட்டுமல்ல என் ஏக்கத்திரைப்படமும் கூட…என்றோ ஒருநாள் கண்டிப்பாக வரும் என்ற எதிர் பார்ப்புடன்…

சரி..அடுத்தது இதை எழுத வேறு பதிவர்களை அழைக்கவேண்டுமா? ஏற்கனவே ஒரு லிஸ்ட் ஒன்றை பல பதிவர்களுக்கு கொடுத்தனால் பலர் என்மீது கடுப்பாக இருக்கும்நேரத்தில்!!!! ம்ம்ம்ம்...சரி..கமல் ஹாசன் ரசிகர்களாக உள்ள பதிவர்கள் இதை எழுத வேண்டும் என நினைக்கும் பதிவர்களை தொடர்ந்து கமலின் 10 படங்கள் பற்றி எழுத அழைக்கின்றேன்.

Sunday, December 26, 2010

இந்தவாரப் பதிவர் - திரு. டிலான்


வித்தியாசங்கள் பார்க்கும் நபர்களை திரும்பி பார்க்கவைத்துவிடும். அதேபோல பதிவுலகிலும் ஒரு வித்தியாசமான பாணியை கடைப்பிடிப்பவர் பதிவர் டிலான்.
“தவறணை” இவரது தளத்தின் பெயரே கொஞ்சம் கிறுங்க வைக்கின்றது.
தவறணைக்குள் சென்று பார்த்தால் திகட்ட திகட்ட கள்ளு மட்டும் அல்ல பல விடயங்களையும் நகைச்சுவை கலந்து, யாழ்ப்பாண பேச்சுவழக்கிலேயே, விழுந்து விழுந்து சிரிக்கவும் பின்னர் கொஞ்சம் யோசித்து அதிசயிக்கவும் வைப்பன டிலானுடைய எழுத்துக்கள்.

டிலானுடைய பதிவுகளை “மண்ணின் பதிவுகள்” என்ற தலைப்பின்கீழ் கொண்டுவந்துவிடலாம். ஏனென்றால் அவரது பதிவுகளில் முக்காலத்தையும் மண் மணத்துடன் கண்முன் கொண்டுவந்துவிடுகின்றார்.
அதிலும் பெரிய அதிசயம் என்னவென்றால் பல சர்வேக்கள் கூறுகின்றன, டிலானுடைய தவறணைக்கு பெண் வாசகர்களின்கூட்டமே அதிகம் என்று.

நகைச்சுவை எழுத்துக்கள் என்பது சிலருக்கு மட்டுமே அரிதாக கிடைக்கும் ஒரு வரம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் டிலானுடைய ஒவ்வொரு வசனங்களும் சிரிக்கவைத்துக்கொண்டே போகும். ஆனால் சில இடங்களில் நன்றாக சிரிக்க வைத்துவிட்டு, இறுதியாக சோக உணர்வை கொடுத்து கண் கலங்க வைத்துவிடுவதும் டிலானுடைய திறமை.
ஒரு முகாமைத்துவத்துறை சார்ந்தவரான டிலான் இலக்கியங்கள்மீது ஆர்வம் கொண்டவர். அதேபோல குறும்படங்கள் மீதும் அதீத ஆர்வம் கொண்டவர்.
தனது சிறு வயதில் நடந்த சம்பவங்களைக்கூட மனது மறக்காது நகைச்சுவையாக சொல்லி, நாம் மறந்துபோன பல விடயங்களையும் வந்து எடுத்து தருவது டிலானின் எழுத்துக்களின் மெனாரிசம்.

சண்முகநாதன் டிலக்ஸ்மன் என்ற இயற்பெயரைக்கொண்ட டிலான், யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்தவர். சிறந்த ஒரு பந்துவீச்சாளராகவும், உதைபந்தாட்ட வீரனாகவும் இருந்தவர் என அறியமுடிகின்றது.
தற்போது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அவர், வேலைப்பழுக்கள் காரணமாக பல நாட்களாக வலைப்பதிவுகளை எழுதவில்லை என்பது வாசகர்களுக்கு ஏமாற்றமே.

“அன்னம்மா பெத்தவளே” என்ற வைரமுத்துவின் கவிதையை பழனிச்சாமி பெத்தவனே என்று மாற்றி எழுதி வயிறு வெடிக்க சிரிக்கவைத்தவர் டிலான், அதேபோல தவறணையில் க்யூ வரிசை, எல்லாம் செப்படி வித்தை என்பவற்றை வாசித்து வயிறு நொந்தவர்கள் பலபேர்.

தற்போதைய முகாமைத்துவ முறைகளின் முக்கியமானது, கட்டளையிடுதல், பழமையான முறைகளை விட, நகைச்சுவை இழையோட உரையாடி பல விடயங்களை முடித்தல் என்னும் சாதகமான முறை! இதையே டிலான் தனது எழுத்துக்களில் கொண்டுவருவது தெரிகின்றது. படு சீரியஸான விடயங்களைக்கூட நகைச்சுவையாக சிரிக்கவைத்து, மெல்லமாக சிந்திக்க வைத்துவிடுகின்றன டிலானுடைய எழுத்துக்கள்.
தனக்கென வித்தியாசமான பாதையினை அமைப்பதே, முக்கியமான ஒரு பிரச்சினை என்ற நிலையில், மிக மிக ஆச்சரியமாக தனது வலைத்தளத்தின் பெயராலும், எழுத்து முறையாலும் வாசகரை நெருங்கி வந்து உட்கார்ந்துவிடுகின்றார் பதிவர் டிலான்.

சரி… இந்த வாரப்பதிவரான டிலானிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும்.

கேள்வி – பேச்சுவழக்கத்திலான எழுத்து முறையினை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்ன?

டிலான் - எதாவது வித்தியாசமாக தெரிந்தால் முதலில் அங்கே அது என்னவென்று பார்ப்பதுதான் என் சுபாவம். மாற்றங்களையும், வித்தியாசங்களையும் விரும்பும், சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறிக்கொள்ளலாம்.
ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுதான் என் வலையை தொடங்கினேன்.
என்னை இழுத்துக்கொண்டு வந்ததில் உங்கள் பங்கும் உள்ளது.
அதேநேரம் மண் சார்ந்த எழுத்துக்கள் மனங்களை சென்டிமென்டாக நெருங்கிவிடுவதையும், அந்த எழுத்துக்கள் என்றும் மரித்துப்போவது கிடையாது என்பதையும் புரிந்துகொண்டேன். அதனாலேயே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் எழுதுவதை நடைமுறைப்படுத்தினேன்.

குறிப்பாக சிறுவயதில் “டிங்கிரி சிவகுரு” குழுவினரின் மண் மணம் கமழும் பேச்சுக்கள் அடங்கிய நகைச்சுவை ஒலிநாடாக்களை கேட்டது உண்டு. அவை என்மனதில் பெரியதொரு தாக்கத்தை செலுத்தின. இன்றும் அவர்களின் வசனங்கள் அத்தனையும் பாடமாக மனதில் உள்ளன. இரசிக்கக்கூடியதாகவும் உள்ளன.
என் எழுத்துக்களிலும் அவர்களின் பாதிப்பை காணலாம்.

அதேவேளை மண்ணிய எழுத்துக்களினால் சில பாதிப்புக்களும் உண்டு. அதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு பிரதேசங்கள், நாடுகளைச்சேர்ந்தவர்கள் இதை புரிந்துகொள்ள சற்று சிரமப்படவேண்டியதாக இருக்கும்.

கேள்வி – பதிவுகள், பதிவுலகம் பற்றிய உங்கள் பார்வை?

டிலான் - குறிப்பாக ஒன்றைச்சொல்லிக்கொள்ளவேண்டும் என்றால் என் எழுத்துக்களை, என் கருத்துக்களை மற்றவர்களும் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும், என்ற அடிப்படையில், அதே ஆசைகளுடன் எழுதப்படும் ஒரு சைக்கோலொஜி எபெக்ட்தான் பதிவுகள். எத்தனைபேர் இதை ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது.
ஆனால் தெரிந்தோ தெரியாமலோ பதிவுகள் மூலம் பல ஆரோக்கியமான விடயங்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றது. பொதுவாக வாசிப்பு அதிகரித்துள்ளது, எண்ணங்கள் பகிரப்படுகின்றது, மாறு பட்டகோணங்களுடனான சிந்தனைகள் வளம் பெறுகின்றன.
அதேவேளை நான் கூறியதுபோல பதிவு எழுத வருவதற்கு ஒரு சைக்கோலொஜி எபக்ட் உள்ளது என்பதுபோல சில சைக்கோக்களும், தாறுமாறாக பதிவுலகில் உருவாகிவருவது வருந்தத்தக்கதே. கணணிகளில் ஏற்படும் வைரஸ்கள்போல, பதிவுகளில் உள்ள வைரஸ்கள் அவை. அவற்றிற்கும் ஒரு ஆன்டி வைரஸ் கண்டுபிடிக்கட்டால் பதிவுகள், சிறப்பாக இருக்க ஏதுவாக அமையும்.

கேள்வி – தற்போது தங்களின் பதிவு பற்றி?

டிலான் - குறும்பான ஒரு கேள்வி. கடுமையான வேலைப்பழு, சில கற்றல் நடவடிக்கைகள், என்பவற்றால் சிறு தேக்கம் கண்டுள்ளது என் பதிவுகள்.
குறிப்பாக ஒரு சிலருக்கு தவிர மற்றவர்களுக்கு என் பதிவுகள் சென்றடையவில்லை காரணம் என்னை நான் வெளிப்படுத்திய சந்தர்ப்பங்கள் குறைவு என்பதே. எனினும் நான் பல பதிவுகளை படிப்பதுண்டு, பெரிதாக பின்னூட்டம் இடுவதில்லை.
தற்போது 3 மணிநேரம்தான் உறக்கம் என்ற நிலை. நிலமை புரிந்திருக்கும்.
எனினும் விரைவில் வழமைபோல எழுத தொடங்குவேன். குறிப்பாக இலங்கை பதிவர்கள் பற்றி அண்மையில் சந்தோசமான தகவல்கள் பதிவுகள் மூலம் கிடைத்தன. உங்களின் ஒற்றுமை, கிரிக்கட் ஆட்டம், சந்திப்பு என அத்தனையும் பெருமிதம் கொள்ள வைக்கின்றது. என்றும் மாறாத அதே அன்புடன் இணைந்த பதிவுகளாக நாங்கள் இருக்க வாழ்த்துக்கள்.
இந்தவாரம் என்னையும் ஒரு பதிவராக அறிமுகப்படுத்திய அன்பு அண்ணர் உங்களுக்கும் என் நன்றிகள்.

நல்லது நண்பர்களே இன்று பதிவர் திரு.டிலான் பற்றி ஒரு சின்ன பார்வை ஒன்றை பார்த்தோம். சிரிப்பதற்கு ரெடியாக டிலானுடைய தளத்திற்கு சென்று பாருங்கள்....
டிலானின் தவறணை.

சரி..அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மற்றும் ஒரு பதிவுலக நண்பர் பற்றிய தகவல்களுடன் உங்களை சந்திக்கின்றேன்.
நன்றி.

Friday, December 24, 2010

விபத்துக்களும் அனுபவங்களும்.


விபத்து என்ற சொல்லிலேயே எதிர்பாரது, சந்திக்கும்போது அபத்தம் கொண்டது என்ற அர்த்தம் உள்ளதை கண்டுகொள்ளலாம்.
விபத்துக்கள் எவருமே எதிர்பாராதுதான், என்றாலும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் மிகக்கொடியவை. வேலைப்பழு அதிகம் உடையவர்கள், வாகனம் ஓட்டும்போது சிந்தனைகளை சிதறவிடாமல் கட்டுப்படுத்த தெரியாதவர்கள், இசையில் இலகிப்பவர்கள், பிரச்சினைகளுக்கு உள்ளானவர்கள், ரென்சனாக உள்ளவர்கள் என இப்படி பலர் குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனங்களை ஓட்டுவதை தள்ளிப்போடுவது மிக்க நல்லது. அப்படி ஓட்டத்தான் வேண்டும் என்றால்….
நிதானம்…நிதானம்…நிதானம்…

வாகன விபத்துக்களால் பாதிக்கப்படப்போகின்றவர்கள், குறிப்பிட்ட நபர் மட்டும் அன்றி இன்னொருவருமே ஆவார்கள். விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு வாகனம் ஓட்டும் நபர் ஒருவரிடம் எப்போதும் இருக்கவேண்டும். ஏனெனில் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்படும் பட்சத்தில் உயிர் அபாயம், உடல் உறுப்புக்களை இழக்கும் நிலை, இயங்கா நிலமை என பல்வேறு கோர விளைவுகள் ஒரு நொடிப்பொழுதில் ஏற்பட்டுவிடும்.

நேற்று மாலை ஒரு திடீர் விபத்து ஒன்றை நான் சந்தித்து இருந்தேன். வழமையாக நான் பயன்படுத்தும் அதேவீதி, மாலை நேரம் என்பதால் வாகன நெருக்கங்களும் அதிகமாக இல்லாத நேரம். குறிப்பிட்ட ஒரு நாற்சந்தி, அதில் எப்போதுமே நான் நிதானமாகவே செல்வதுண்டு, நேற்றும் ஒலி எழுப்பி, வலம் பார்த்து இடம் பார்த்துக்கொண்டே திருப்பினேன். எனக்கு இடப்பக்கமாக வீதியில் நேரே செல்ல முற்பட்டவர் அதிவேகமாக வந்த காரணத்தால் ஒரு நொடிப்பொழுதில் ஒரு விபத்து.

என் மோட்டார் வாகனம் அடித்து விழுத்தப்படும்போது, எப்படி ஒரு முன்னெச்சரிக்கையோ, அல்லது தெய்வாதினமோ, ஒரு செக்கன் முடிவாக நான் வாகனத்தின் போக்கின்கு போகாமல் அதற்கு எதிரான பக்கம், வாகனகத்தில் இருந்து முற்றாக விலகி, விழுந்துகொண்டேன், அதே வேகத்திற்கு சற்றுத்தூரம், வீதியில் இழுத்து செல்லப்பட்டதால், என் ஆடைகள் அத்தனையும் கிழிந்து போய் இருந்தது. காலில் சிறு சிராய்ப்பு காயம் மட்டுமே. என்றாலும், விழுந்த அடியின் வேகம், மோதியவரின் மோட்டார் வாகனத்தின் அதிவேகம் என்பவற்றை கணிக்கையில் நான் உயிர் தப்பியதே பெரும் அதிசயம், அதிலும் எந்தவித காயங்களும் இன்றி நான் நானாக இரும்பு மனிதனாக எழுந்து நின்றது எனக்கு அதிசயத்தின் மேல் அதிசயமே. (தலைக்கவசம் அணியாது இருந்திருந்தால் இந்த நேரம் சங்குதான்.)

எனக்கு எதுவும் இல்லை என்று தெரிந்துகொண்டு உடனயடியாகவே எழுந்து, தன் வாகனத்தை என்மீது போதிய புண்ணியவானை பார்க்கின்றேன். மெதுவாக எழுந்தவர் திடீர் என்று மயக்கமடைந்து விழுந்துவிட்டார். எப்போதும் ரென்ஸனுக்கு மனதில் இடங்கொடுக்காத எனக்கு அப்போது படு ரென்ஸன் ஆகிவிட்டது.
அருகில் உதவிக்குக்கூட ஆட்கள் இல்லை. மக்களின் உதவும் மனநிலை எப்படி என்பது எனக்கு துல்லியமாக தெரியும் என்பதால், இரண்டு மோட்டார் வண்டிகளையும் அவசரமாக (இரண்டும் பாரிய சேதம்) அருகில் இருந்த வீடு ஒன்றில் தூக்கி போட்டுவிட்டு, அந்தநேரம் தெய்வாதீனமாக அங்கு வந்துகொண்டிருந்த ஆட்டோ ஒன்றை மறித்து மேற்படி நபரை, ஏற்றி, வைத்தியசாலையில் கொண்டுசென்று அனுமதித்து, அவரது பெற்றோருக்கும் அறிவித்தேன். பெற்றோர்கள் வந்ததும் அவர்களுடன் உரையாடி, முதலில் அவர்களை அமைதிப்படுத்தி, விடயங்களைப்புரியவைத்து கொண்டேன், என்னுடன் மோதியவர் ஒரு தொழிநுட்பக்கல்லூரி மாணவன் என்பது தெரிந்தது. அவர் நினைவு வந்து என்னை கண்டவுடனேயே, உங்களுடனா அண்ணா மோதினேன்? என்ற கேள்வியையே கேட்டார். நான் அவருக்கு அது இருக்கட்டும், முதலில் அந்த நினைவுகளை கொஞ்சம் மறந்துவிடுங்கள், ஒன்றும் ஆகிவிடவில்லை என்று தேற்றினேன். (அவருக்கு காலில் பெரிய காயம், கை ஒன்று முறிவு)
இல்லை அண்ணா…நான் தான் கொஞ்சம் வேகமாக வந்துவிட்டேன் சொறி அண்ணா என்றார். இல்லை என்மேலும் பிழை உள்ளது நான் நின்று வந்திருக்கவேண்டும் என்று கூறிவிட்டு.

அவரது தந்தையை அழைத்துச்சென்று அவரது மோட்டார் வண்டியை, குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு சென்று, சேதங்களை பார்த்து, அவை முழுவதற்குமான தொகையை கொடுத்துவிட்டு, பின்னர் மருத்துவமனைவந்து, அவரை பார்த்து மருத்துச்செலவுக்கும் ஒரு தொகையினை கொடுத்து (அவர்கள் மறுத்தபோதும்) சிறிது நின்மதியுடன், இரவு வீடு வந்து சேர்ந்தேன்.
உண்மையாக எனது ரென்ஸன் இன்னும் ஒருவர் பாதிக்கப்பட்டதற்கு நான் காரணமாகிவிட்டேன் என்பதாகவே இருந்தது.
அங்கு பலர், குறிப்பாக மேற்படி நபரின் உறவினர்கள், நண்பர்கள், உங்களைப்போல எல்லோரும் இருக்கமாட்டார்கள், இத்தனையையும் தனி ஆளாக விரைவாக செய்து விட்டீர்களே, உங்களுக்கு ஒரு குறையும்வராது, பார்க்கப்போனால் நீங்கள்தான் இந்த விபத்தில் மரணமடைந்துகூட இருக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் இருக்கு, அனால் உங்களுக்கு சிறு காயம்கூட இல்லை, இப்படி ஒரு அபூர்வமானவராக இருக்கின்றீர்கள், அதனால்த்தான் என்று எல்லாம் சொன்னார்கள்.
அவற்றை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றால் அது பொய்! காதில் வாங்கியபடியால்த்தான் எழுதமுடிகின்றது.

இருந்தபோதிலும் நேற்று இரவு முழுவதும் எனக்கு இந்த விபத்தும் குற்றமனமும் உறுதிக்கொண்டே இருந்தது. அதேவேளை அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் நினைக்கையில் நான் சமயோசிதமாக ஒரு கணத்தில் என்னை பாதுகாத்து கொண்டது என் தன்னம்பிக்கையா, அல்லது தெய்வாதீனமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அது என்னைப்பொறுத்தவரையில் தெய்வாதீனமான செயலாகவே உள்ளது.

இன்று மீண்டும், முதல் வேலையாக என் மனைவி சகிதம் மருத்துவமனை சென்று அந்த சகோதரனை மருத்துவமனையில் பார்த்து உரையாடினேன். அண்ணா..நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பாடாதீர்கள் என்றார். எனக்கு ஒன்றும் இல்லை. நாளை மருத்துவமனையில் இருந்து வீடு செல்லலாம் என்றார். அவரது தந்தையார் இன்று என்னை நிர்ப்பந்தப்படுத்தி, வாகனத்திற்கான பணத்தில் நான் கொடுத்ததில் பாதி தொகையினை திருப்பி தந்துவிட்டார். தம்பி, இவன் எனக்கு ஒரு பிள்ளைதான். ஆனால் இவனுக்கு ஒரு அண்ணன் இருந்தால் என்ன செய்வானோ அதை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்களும் எனக்கு பிள்ளைபோல்த்தான் என்றுவேறு கூறி என்னை முழுவதும் நெகிழ வைத்துவிட்டார்.
அடடா.. விபத்துக்கள் கூட பல அன்பான நெஞ்சங்களை உறவுகளாக தந்துவிட்டனவே!

இதையேன் கூறுகின்றேன் என்றால், மற்றவர்களைவிட ஒருபடி மேல் என் அன்புக்குரிய சக பதிவர்களே, நண்பர்களே, வாசகர்களே…
நீங்கள் அனைவரும் வாகனங்களை ஓட்டுபவர்கள்தான்…
விபத்து என்பது சொல்லி வருவது கிடையாது. ப்பிளீஸ்… அவதானம், நிதானம், ஒருங்கீர்ப்புக்களுடன் வண்டிகளை செலுத்துங்கள்.

இப்போது எனக்குத்தேவை ஒரு முழு றிலாக்ஸ்…ஆம் என் அபிமான நடிகரின் “மன் மதன் அம்பு” பார்க்கப்போகின்றேன்.

Wednesday, December 22, 2010

மாத்தி யோசி!! (பதிவர்களுக்கு ஒரு அழைப்பு)


கடந்த பதிவர் சந்திப்பு முடிந்து கொஞ்சம் நின்று அளவலாவியபோது நண்பர் லோஷன் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது குறிப்பாக ஒவ்வொரு பதிவர்களுக்கும் ஒரு “ரேட் மார்க்” இருக்கும், சில பதிவர்கள், சில மையக்கருத்தில் பதிவுகளை எழுதுவது அரிது. அந்த வகையில் பதிவர்களின் “ரேட் மார்க்கை” கொஞ்சம் மாற்றிப்போட்டு பதிவு எழுதலாமே நன்றாக இருக்குமே என்பதே அந்த கருத்து. கொஞ்சம் யோசித்து பார்த்தால் அது சிறந்ததொரு ஐடியாவாகவும் தெரிகின்றது.

எனவே லோஷன் பிரேரித்த அந்த கருத்தை நான் வழிமொழிகின்றேன். அதன் பிரகாரம் ஆழமாக யோசித்ததில் இன்ன பதிவர்கள் இதை, இதை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணக்கரு மனதில் பட்டது.

இதோ எனது அன்பான அழைப்புக்கள்….

சிதறல்கள் ரமேஸ் - ஒரு கிரிக்கட் பதிவு
யோ வொயிஸ் யோகா – திகில் திடுக்கிடவைக்கும் ஒரு ஆவிக்கதை.
சுபாங்கன் - ஏதாவது சமகால உலக நடப்பு சம்பந்தமான ஒரு பார்வை.
கன்-கொன் - ஏதாவது வேற்றுமொழிக்கதை ஒன்றின் தமிழாக்கம்.
மருதமூரான் - இலங்கையில் பங்குகளின் முதலீடும், அதன் இலாப நட்டமும்
அனுதினன் - விஞ்ஞானம் சம்பந்தமான (தொழிநுட்படம் அல்ல) ஒரு பதிவு.
பவன் - இலங்கைப்பதிவர் சுற்றுலா (ஒரு கற்பனை, கலாய்ப்பு பதிவு)
வரோ - இலங்கையில் நாடகக்கலை (சிங்களம், தமிழ்)
மதி.சுதா - ஈழத்தில் ஆறுமுகநாவலரின் பின்னரான சைவ வளர்ச்சி!
கிப்போ – பெண்ணியம் போற்றும் ஆண்கள் ஐவர்.
அசோக்பரன் - ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை.
சின்மயன் - தொழிநுட்பம் சம்பந்தமான ஒரு நவீன பதிவு
நிரூஜா – மனித மனத்தின் விநோதங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
வந்தீஸ் - காதல் ரசம் சொட்டும் ஒரு காதல் சிறுகதை.
ஜீ - சுஜாதாவின், கணேஸ்- வசந்த் ஒரு பார்வை.
வந்தியத்தேவன் - “அன்புள்ள ரஜினி” என்ற தலைப்பில் சினிமா தவிர்ந்த ரஜினி
சதீஸ் - “புலம்பெயர்வும் தமிழ் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு பதிவு
நா. மது – ஹொலிவூட் திரைப்படங்கள் அண்மைக்காலப்பார்வை.
கூல் போய் - சுய முன்னேற்றத்திற்கான வழிகள் என்ற தலைப்பில்
அஸ்வின் - மனம்போல் வாழ்வு என்ற தலைப்பில் ஒரு பதிவு
வடலியூரான் - நத்தாரும் ஏதென்சும் என்ற தலைப்பில்
கார்த்தி – கனாக்காணும் காலங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
ஜனகனின் எண்ண ஜனனங்கள் - திருக்குறளும் முகாமைத்துவமும்
லோஷன் - முன்மொழிந்தவரல்லவா?... லோஷன் ஒரு கவிஞரும்கூட என்பது எனக்கு ஓரளவு தெரியும் ஆனால் நீண்டநாட்களாக அது…மிஸ்ஸிங்…
சோ… பதிவுகளைப்போலவே நீளமான ஒரு கவிதை.

இந்த லிஸ்டில் வராத பதிவர்கள் அப்பாடா…கண்டுக்கலை என்று நினைக்கவேண்டாம். மேலே உள்ளவர்கள் இதை நடைமுறைப்படுத்த தொடங்கியவுடன் அடுத்த லிஸ்ட் தயாராகவே உள்ளது.

Tuesday, December 21, 2010

ஹொக்ரெயில்.- 21.12.2010

பதிவர் கிரிக்கட்போட்டியும், பதிவர் சந்திப்பும்.

கடந்த சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பன மிகவும் சந்தோசமான நாட்கள் என்றே கூறிக்கொள்ளவேண்டும். சனிக்கிழமை இலங்கை தமிழ் பதிவர்கள் ஒன்று கூடி கிரிக்கட் போட்டியொன்றை வெற்றிகரமாகவும், குதூகலமாகவும் நடத்தி முடித்த அதேவேளை, மறுநாள் திட்டமிடப்பட்டபடி சிறப்பாகவே பதிவர் சந்திப்பும் இடம்பெற்று முடிவடைந்ததுமே ஆகும்.
இதற்கு முதற்கண் ஏற்பாட்டுக்குழுவினருக்கு அனைத்து பதிவர்கள், பதிவுலகம் சார்பில் விசேடமான நன்றிகள்.
எழுத்துக்களால் சந்தித்துக்கொண்ட பலர் நேரடியாக சந்தித்து தமது உறவுகளை மேலும் வலுச்சேர்க்கவும், ஆணித்தரமான நட்புக்களை நிலை நிறுத்திக்கொள்ளவும் இவ்வாறன சந்திப்புக்கள் ஏதுவாக அமைந்துள்ளன என்பன நிரூபிக்கப்பட்டுவிட்டது.
பல்வேறு துறை சார்ந்தவர்களும் வலையுலக எழுத்துக்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைந்து நட்பு பாராட்டுவது மனதிற்கு மிகவும் சந்தோசமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளது என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் ஒருவிடயமாகும்.
இந்த சந்திப்புக்கள் மூலம் இலங்கை பதிவுலகம் புதியதொரு பாதையில் வீறு கொண்டு எழும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இந்திய திரை நட்சத்திரங்களின் பிரமாண்ட கிரிக்கட்போட்டி.

கிட்டத்தட்ட ஐ.பி.எல் ரேஞ்சிற்கு!! ஒரு கேளிக்கையான சினிமா நட்சத்தரிரங்கள் பங்குகொள்ளும் கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை நடத்த இந்திய கிரிக்கட் நிறுவனங்கள் சினிமா சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் புத்தாண்டின் முதல் மாதத்தில் இந்தப்போட்டிகளை நடத்த முயற்சிகள் பெருமளவில் இடம்பெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.
குறிப்பாக இது தொடர்பாக இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள திரையுலகத்தினருக்கு இந்த அழைப்புக்கள் கிடைத்துள்ளன எனவும், இதில் தமிழ் சினிமா சங்கம் கலந்துகொள்வதென அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
“தமிழ் சுப்பர்ஸ்ரார்ஸ்” என்ற பெருடன் தமிழ் சினிமா அணியினர் இந்தப்போட்டியில் கலந்துகொள்வர் எனவும், குறிப்பாக ஜெயம்ரவி, கார்த்தி, ஜீவா, விக்ராந்த், ஆர்யா, ஷாம் போன்ற இளைஞர் நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், அதேவேளை பெரும்பாலும் இந்த அணிக்கு நடிகர் சூர்யா தலைமைதாங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தபோட்டிகளுக்கு பல முன்னணி விளம்பர நிறுவனங்கள் அனுசரணை வழங்கத்தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ இதை இரசிக்கவும் பெரிய கூட்டம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. அதேவேளை படங்கள் தான் ஒழுங்காக ஓடவில்லை கிரிக்கட்டாவது ஒழுங்காக ஆடுவார்களா? என்பதுபோன்ற கேள்விகளும் கிண்டல்களாக ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

நீங்கப்பட்டது கமலின் மன்மதன் அம்பு கவிதைப்பாடல்!!

கமல் ஹாசன் எழுதி “மன்மதன் அம்பு” திரைப்படத்தில் வரும் காட்சியாக இருந்த
“கண்ணோடு கண்ணை கலந்தாளென்றாள்” என்ற பாடலை தற்போது படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
பாடல்கள் வெளியாகியதில் இருந்தே ஒருவித சர்ச்சையினை இந்தக் கவிதைப்பாடல் உருவாக்கியது. இதை பலர் வரவேற்று இரசித்ததையும், சிலர் கடுப்பாகி எதிர்த்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
விரசம் கக்கும் வரிகள், இந்து மதத்தினரை புண்படுத்தும் வரிகள் கொண்டுள்ளது இது என இந்து மக்கள் கட்சியினர் போர்க்கொடி தூக்கினர்.
இருந்தபோதிலும் இந்தப்பாடலுக்கு தணிக்கை குழு அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் எதிர்வரும் 24ஆம் நாள் இந்த திரைப்படம் வெளிவர இருக்கும் நேரத்தில் தற்போது இந்த கவிதைப்பாடல் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமல் ஹாசன் நேற்று அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதில் தாம் என்றும் பகுத்தறிவு வாதியே என்பதை குறிப்பட்டுள்ள அவர், இதே தமது சொந்த நிறுவனம் தயாரித்த படம் என்றால் இந்தப்பாடலை நீக்குதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனவும், இருந்தபோதிலும் இது ரெட் ஜெயன்ட் மூவிஸின் படம் என்பதாலும், தான் பகுத்தறிவு வாதி என்றபோதிலும், இவற்றின் நம்பிக்கை உள்ள பலரின் மனங்களை தாம் ஒருபோதும் புண்படுத்த எண்ணியது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய குறும்படம்

இவள் பெயரும் தமிழிச்சிதான்….

அர்த்தங்கள் புரியமல்
அந்தரித்த நாட்கள்..
இடம் மறால்கள்கூட
இடக்கரடக்கல் ஆகியபோதும்
அர்த்தம்புரியா மொழிகளின்
அரவணைப்பினை நாடியபோதும்
தாய் நாட்டின் தாகம்
கழுத்தை நெரித்து அடக்கப்பட்டபோதும்
குடியுரிமைக்கான பொய்கள்
குடியில் மெய்யாகியபோதும்
சுகம் என்னும் போலிவாழ்க்கையுடன்
சுகத்தினுள் அவலமாக கரைகின்றாள்
இவள் பெயரும் தமிழிச்சிதான்.
-ஒரு கவிதை முயற்சிதான்

நரேந்திரனின் வினோத வழக்கு

அனேகமாவர்களுக்கு தெரியும் இது சுஜாதாவின் ஒரு படைப்பு. எத்தனையோ நாள் கேள்விப்பட்டு நேற்று நூலகத்தில் எடுத்து படித்துக்கொண்டிருக்கின்றேன். படு சுவாரகசியமாகச்செல்கின்றது.
முன்பு, நடிகர் ராஜீவ், வை.ஜி மகேந்திரன் நடித்த ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் காட்சிகள் படிக்கும்போது கொஞ்சம் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றது.
பின்னர் வலையில் தேடியபோதும் மின் நூல் வடிவில் இந்த புத்தகம் உள்ளது தெரிந்தது. உங்களுக்கு பயன்படுமே.

சர்தாஜி ஜோக்.
கணனி ஒன்றை வாங்கி குறிப்பாக எம்.எஸ்.ஒபிஸ் பாவித்துவரும் சர்தாஜி கணனியையும் அதன் நிகழ்வுகளையும் ஆராய்ந்து பில்ஹேட்சுக்கு எழுதிய ஒரு கடிதம்.

Dear Mr Bill Gates,

This letter is from Banta Singh from Punjab. We have bought a
computer for our home and we found problems, which I want to bring to
your notice.

1. After connecting to internet we planned to open e-mail account and
whenever we fill the form in Hotmail in the password column, only ****** appears, but in the rest of the fields whatever we typed appears, but we face this problem only in password field.

We checked with hardware vendor Santa Singh and he said that there is no problem in keyboard. Because of this we open the e-mail account with password *****.

I request you to check this as we ourselves do not know what the
password is.

2. We are unable to enter anything after we click the 'shut down '
button.

3. There is a button 'start' but there is no "stop" button. We request you to check this.

4. We find there is 'Run' in the menu. One of my friend clicked 'run' has ran upto Amritsar! So, we request you to change that to "sit", so that we can click that by sitting.

5. One doubt is that any 're-scooter' available in system? As I find only 're-cycle', but I own a scooter at my home.

6. There is 'Find' button but it is not working properly. My wife lost
the door key and we tried a lot for tracing the key with this ' find',
but unable to trace. Is it a bug??

7. Every night I am not sleeping as i have to protect my 'mouse' from
CAT, So i suggest u to provide one DOG to protect from the cat.

8. Please confirm when u are going to give me money for winning
'HEARTS' (playing cards in games) and when are u coming to my home to
collect ur money.

9. My child learnt 'Microsoft word' now he wants to learn 'Microsoft
sentence', so when u will provide that?

10. Hey, I brought computer, cpu, mouse and keypad there is only one
icon with 'MY Computer', where is remaining ?

11. And in 'MY Pictures' there is not even single photo of mine, So when u will keep my photo in that.

Thanks
Banta Singh…

Thursday, December 16, 2010

சுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10


ரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்பானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
இருந்த போதிலும் என்னைப்போல கமல் ரசிகர்களிடம் ரஜினி படங்கள் பற்றி எழுது என்பது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஏன் என்றால் பக்கச்சார்பற்ற தரமான ரஜினி படங்கள் பற்றிய ஒரு பார்வையை கொண்டுவந்துவிடலாம்.
அந்த வகையில் நண்பர் பதிவர் லோஷன் இந்த பதிவு பந்தை என்னிடம் தட்டி விட்டுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க… இங்கே..இதோ நான் ரஜினியை ரசித்த “சுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10”

புவனா ஒரு கேள்விக்குறி

ரஜினியின் படங்களில் விழியிலே விழுந்தது உயிரிலே கலந்தது என இந்த படத்தை சொல்லிக்கொள்ளலாம். 1977ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரஜினியை புதிய திருப்பத்திற்கு கொண்டு சென்ற படமாக கருதிக்கொள்ளலாம்.
மகரிஷியின் கதைக்கு திரைக்கதையினை பஞ்சு அருணாச்சலம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் இதுவாகும். இவர்களின் கூட்டணியில் ரஜினி நடித்த முதல்படம் இது. பின்னர் இதேகூட்டணியினரே ரஜினியை உச்சத்திற்கு உயர்த்திய ஏணிகளில் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துணி, புடவைகள் வாங்கி விற்கும் பாத்திரங்களாக சிவகுமாரும், ரஜினியும் நடித்திருப்பார்கள். இதில் சிவகுமார் பெண்கள் விடையத்தில் மோசம் செய்பவராக மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருப்பார். தன் காதலியை இழந்து அந்த சோகத்துடன் வாழ்ந்து, இறுதிவரை போராடி சிவகுமாரால் ஏமாற்றப்பட்ட சுமித்திராவுக்கு இறுதிவரை ஒரு பாதுகாவலனாகவே இருந்து கடைசியில் உயிரைவிட்டு மனங்களில் வாழ்ந்துகாட்டினார் ரஜினி.

இளமை ஊஞ்சல் ஆடுது

ரஜினி, கமல் இணைந்து நடித்த படங்களில் இரண்டுபேரின் இளமையும் ஊஞ்சலாடிய ஒரு திரைப்படம். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதர் இரண்டுபேரையும் வைத்து இயக்கிய திரைப்படம் இது.
பணக்காரக்குடும்பத்தவராக வரும் ரஜினியும், ரஜினியின் பணக்காரத்தாய்க்கு இன்னும் ஒரு மகனாகவே கருதி பார்க்கப்படும் கமலும், இடையில் ஸ்ரீ பிரியாவும், வர பல சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் எதிர்பாராத முடிவுகளுடன் பயனிக்கும் அற்புதமான ஒரு கதை இந்த திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் பணக்காரனானாலும் மிகுந்த ஒழுக்கமுள்ளவனாகவும், ஒரு கனவானாகவும் ரஜினி நடித்திருப்பார். இந்த திரைப்படம் ரஜினி கமல் ஆகியோரின் இளமை ததும்பிய காலமான 1978ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மயுத்தம்

1979 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.சி. சக்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்மயுத்தம். ரஜினி, ஸ்ரீ தேவி இணைவில் முன்பாதி கலகலப்பாகவும், பின் பாதி சோகமாகம் நிறைந்ததாகவும் உள்ள திரைப்படம்.
அமாவாசை தினங்களில் முரட்டு சக்தி ஒன்று ரஜினிக்கு வருவதும், தன் தங்கைமேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ள ரஜினிக்கு, பிளக் ரோசஸ் என்ற கும்பலால் தன் தங்கையை இழக்க நேரிடும் சந்தர்ப்பமும், அதன் பின்னர் அவர்களை அழிப்பதற்கான அவரது தர்மயுத்தமும் ஒரு கோர்வையாக பயணிக்கும்.
அமாவாசை தினங்களில் ரஜினியின் முரட்டு சக்தியை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு, அந்த முரட்டுத்தனத்தை வெளிப்படுத்த அவர் உச்சமாக நடிக்கும் தன்மை, முகவெளிப்பாடுகள் அருமை.

நெற்றிக்கண்

ராமனின் தந்தை தசரதன்தானே! என்ற தத்துவத்தை வேறு ஒரு கோணத்தில் கொண்டுசென்ற ஒரு திரைப்படம். தந்தை மகனாக முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் ரஜினி இரட்டைவேடம் போட்ட திரைப்படங்களில் முதன்மையானது என்றுகூடச்சொல்லிவிடலாம்.
1981ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நெற்றிக்கண்.
பார்க்கும் பெண்களை எல்லாம் தன் கட்டிலுக்கு கொண்டுவர எண்ணும் தந்தையும், வாழும் வாழ்க்கை அது ஒருத்திக்குத்தான், காதலும் கற்பு நெறி வாழ்வதுதான் என்று ஒருதிக்காவே வாழ நினைக்கும் மகனும், இதற்கிடையில் தந்தையை திருத்த நினைக்கும் தனையனுக்கும் தந்தைக்கும் இடையிலான போராட்டங்கள். சுபமான இறுதி முடிவு என அற்புதமான திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் “ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்” என்ற ஒரு பாடலில் நாயகி மேனகாவும், மகன் ரஜினியும் நடித்திருப்பார்கள், மகன் பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துவதாக இந்தப்பாடல் காட்சி அமைந்திருக்கும் எந்த இடத்தில்க்கூட நாயகனும், நாயகியும் தொட்டுக்கொள்ளாமலேயே பாடல் முழுவதும் வருவது இயக்குனரின் டச்.

புதுக் கவிதை

ரஜினியை வைத்து எடுக்கபட்ட காதல் படங்களில் ஒரு புதுக்கவிதை இந்தத்திரைப்படம். ரஜினி, ஜோதி ஆகியோர் ஒரு உருக்கமான காதலர்கள். விதிவசத்தால் ஜோதிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் ஆகின்றது. காதலில் தோல்வியுற்ற ரஜினி உடைந்து அந்த காதல் ரணங்களை மறந்து வாழ எத்தனிக்கின்றார். மீண்டும் ஜோதியை ஒரு விதவையாகச்சந்தித்து, வித்தியாசமான முடிவுடன் திரைப்படம் முடிகின்றது. ஸ்ரைல், அக்ஸன், என்று பார்த்த ரஜினி இதில் காணமற்போயிருப்பார். மிக மெல்லிய இதயமுள்ள, காதலிலே தோற்ற ஒரு சராசரி இளைஞன்போல அருமையாக நடித்திருப்பார் ரஜினி.

எங்கேயோ கேட்டகுரல்

அம்பிகா, ராதா, என்ற தமிழ்சினிமா சகோதரிகளுடன் ரஜினி நடித்த ஒரு வித்தியாசமான, அதேவேளை நடிப்புக்கு அதிகவேலை இருந்த திரைப்படம் “எங்கேயோ கேட்ட குரல்” மிக அற்புதமான அந்த திரைப்படத்தில், சாந்தமான முகத்துடன், மிகச்சாந்தமான நடிப்பால், அனைவரினதும் கவனத்தை ஈர்ந்திருப்பார் ரஜினி.
தனக்கு துரோகம் செய்தவள் மூத்த மனைவி என்று ஊரே அவளை ஒதுக்கிவைத்த போது, இறுதியில் அவளது இறப்பிற்கு அதே ஊரே எதிர்த்தபேவாதும், தன் கடமைகளை முடித்து, ஊரைவிட்டே வெளியேறுவார் ரஜினி. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ரஜினியின் நடிப்பும், முகபாவமும் ஒவ்வொரு கதைகளை பேசும். நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் மகளாக இந்த திரைப்படத்தில்த்தான் அறிமுகமானார்.

அன்தா ஹானூன்.

ரஜினி நடித்த ஹிந்திப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு திரைப்படம். தனது குடும்பத்தினரை கொன்றவர்களை பழிவாங்க வலைவிரித்து ரஜினி வேட்டையாடும் ஒரு படம். இதில் ரஜினியின் அக்காவாக ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்ரராக ஹேமா மாலினியும், கொலைக்கும்பலால் பழிதீர்க்கப்பட்ட முன்னர் பொலீஸ் காரனாக அமிதாப் பச்சனும் நடித்திருப்பார்கள்.
இந்த திரைப்படம்தான் தமிழில் “சட்டம் ஒரு இருட்டரை” என்ற பெயரில் விஜய்காந்த் நடித்திருந்த படம்.
இதில் ரஜினியின் கதாநாயகியாக ரீனா ரோய் நடித்திருந்தார். அத்தோடு இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அம்ரிஸ்பூரி, தர்மேந்திரா, மாதவி, என பெரிய நடிகர் பட்டாளமே கொளரவ பாத்திரங்களில் நடித்திருந்தமைதான்.

அன்புள்ள ரஜினிகாந்த்

பெயரைப்போலவே அன்பை போதிக்கும் படம். குழந்தை மீனாவைச்சுற்றி அமைக்கப்படும் ஒரு கதை அமைப்பில் அன்பானவராகவே வரும் ரஜினி, பல இடங்களில் மனதில் சிம்மாம்போட்டு உட்காருகின்றார்.
தாய்க்குலங்கள், பெரியவர்களுக்கு ரஜினிமேல், பெரும் அன்பையும், மதிப்பையும் உருவாக்கிவிட்ட படம் என்றுகூடச்சொல்லலாம். இந்த திரைப்படம்போல அன்புள்ள….. என்று வேறு எந்த நடிகரைப்போட்டு எடுத்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ஒன்றிப்போ, யதார்த்தமோ வேறு யாரிலும் கிடைத்திராது என்பது மறுக்கமுடியாத உண்மை. “கருணை இல்லமே” என்ற பாடல் இப்போதும் கண்களுக்குள் நீரைக்கொண்டுவந்துவிடுகின்றது.

பிளட் ஸ்ரோன்

ஜேம்ஸ்போன்ட் உட்பட பல ஆங்கில திரைப்படங்களை தயாரித்த இந்தியரான அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் டி.எச்.லிட்டில் இயக்கத்தில் 1988ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம்தான் பிளட் ஸ்ரோன்.
இதில் ஸ்ரிம்லி, அனா நிக்கலொஸ் ஆகியோருடன் ரஜினி இணைந்து நடித்திருப்பார்.
12ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்திய அரசன் ஒருவன், கடவுளின் வரமாக இந்த கல்லை வைத்திருக்கின்றான். பின்னர் அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து 18ஆம் நூற்றாண்டில் அது பிரித்தானியரால் கொண்டு செல்லப்படுகின்றது.
பின்னர் அது அங்கிருந்து கடத்தப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றது. இதற்குள் தற்செயலாக அதில் சிக்கிக்கொள்ளும் ஸ்ரிம்லி, அனா நிக்கலொஸ் ஜோடிகள், பின்னர் டக்ஸி ரைவரான ரஜினியின் காரில் ஏறுவதும் ரஜினியின் காரில் அந்தக்கல் தவறுவதும், பின்னர் கொள்ளையர்களுக்கும் இந்த மூவருக்கும் இடையலான போராட்டமுமமாக இந்தக்கதை நகர்கின்றது.

சிவா.

ரஜினி, ரகுவரன் இணைந்த திரைப்படம்; என்றால் அதைப்பற்றி சொல்லத்தேவை இல்லை அந்த அளவுக்கு இருவருக்குமிடையலான இரசாயனவியல் நல்லா வேலை செய்யும். சிறுவயதில் நண்பர்களாக இருக்கும் இருவர் பிரிந்து, பின்னர் இணைவதான ஒரு திரைப்படம். ஆரம்பம் முதல் இறுதிவரை கலகலப்பாக இருக்கும் திரைக்கதை அமைப்பு பிரமாதம்.
“இரு விழியின் வழியில் தானாய் வந்து போன ஒரு திரைப்படம்”

*** விழியிலே தொடங்கி விழியிலே முடிச்சிருக்கோம்ல!!

சரி.. லோஷன் நம்மிடம் தட்டிவிட்ட இந்தப்பந்தை நாமளும் யாரிடமாவது தட்டிவிடணுமெல்ல…

ஜீ – என்னைப்போலவே கமல் ரசிகன் என்றாலும் ரஜினியையும் ரசிப்பவர்.
சிதறல்கள் ரமேஸ் - உணர்வுகளை பிழியும் இவரிடமிருந்து உணர்வான ரஜினி படங்கள் வெளிப்படலாம்.





style="color: rgb(0, 0, 0); -webkit-text-decorations-in-effect: none; ">
அகசியம் வரோ – தான் ரசித்தவற்றை மிகவும் நேர்தியாக கூறும் திறமை கொண்டவர்.

LinkWithin

Related Posts with Thumbnails