Friday, September 24, 2010

உடையுதிர்காலம் - பாகம் -04


மயங்கிவிழுந்த சுபாங்கனை சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் படுக்கவைத்தான் கூல்போய். அவரசரமாக பக்கத்தில் இருந்த தேனீர் குடுவையில் இருந்த தண்ணீரை அப்படியே தூக்கி சுபாங்கனின் முகத்தில் ஊற்றினான்.
அடேய்..நாதாரிப்பயலே என்று முகத்தை பொத்திக்கொண்டு குளறினான் சுபாங்கன்.
அப்போதுதான் பார்த்தான் கூல்போய்.. தேனீர்க்குடுவை இவ்வளவு நேரமாக கீற்றரிலேயே இருந்தது தெரிந்தது.

ஐயோ ..ஐயோ என்றுகொண்டே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான் சுபாங்கன்.
பாஸ்…எதுவும் வேண்டும் என்றே நடப்பதில்லை. உங்களை மயக்கத்தில் இருந்து காப்பாற்றவேண்டும் என்ற துடிப்பில் நான் அது சுடுதண்ணீர் என்பதை கவனிக்கவில்லை பாஸ் என்றான் கூல்போய்.
போடா குரங்கு… உன்னை அப்புறம் வச்சுக்கொள்ளுறன்..!
பாஸ் அப்படி எல்லாம் மனதில் வஞ்சத்தை வளர்ததுக்கொள்ளாதீங்க. அப்புறம் நாம காக்கா நரி கதையில வாற கக்காநரி ஆகிடுவோம் என்றான் கூல்போய்.
அது என்னடா காக்கா நரி கதை!!
இல்லை பாஸ்..காக்கா நரி கதை இல்லை இது கக்காநரிக்கதை,
அனுதின ஆனந்தா சுவாமிகள், அனுதின ஆனந்தசுவாமிகள் என்று ஒரு சுவாமிகள் இப்போ இணையத்தில் நீதிக்கதை எல்லாத்தையும் அனுதினமும் எழுதிவாராரே தெரியாதா பாஸ் உங்களுக்கு? அவர் சொன்ன கதைதான் பாஸ் இது!!

ஆ… அப்படியா…அந்த சுவாமிகள் தன்னை பார்க்க யார் சென்றாலும் சைடாக நின்று கட்டிப்பிடித்து “நண்பேண்டா..நண்பேண்டா” என்று தான் சொல்வாராம்.
சரிடா விடுலே பாவம் பயபுள்ளை தப்பிப்போகட்டும் என்றான் சுபாங்கன்.
நீ இப்ப ரொம்ப வாசிக்கத் தொடங்கிட்டே அதுதான் ஒரு மார்க்கமா இருக்காடா!
ஆமா பாஸ். துக்கம் வந்தா யாழெடுத்து நீ வாசி என்று யாரோ சொன்னாங்க என்று இப்ப துக்கம் வந்தா நான் இணையத்தை வாசிக்க ஆரம்பித்துடுவேன் பாஸ்.
கஸ்டத்தை மறக்க இணையம் வாசிக்கப்போனால் ரமேஸ் என்று ஒரு எழுத்தாளர் படு சோக ஸ்ரேட்டஸ் எல்லாம்போட்டு என்ன அழவே பண்ணிடுறாரு பாஸ்!!
நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் அழாதமாதிரி நடிக்கிறது! என்றுவிட்டு ஓ…வென்று அழுதான் கூல்போய்.
உணர்வூட்டமான வாசிப்பில் நம்மள மிஞ்சிட்டான் போல இருக்கே என்று சுபாங்கன் மனதுக்குள் நினைச்சுக்கிட்டான்.

அதை எல்லாம் விடுங்க பாஸ்! இந்த ஆவிபேய் பற்றி நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?
அதுதான்டா எனக்கும் பெரிய தலைவலியாக இருக்கு! பேசாமா நாம திரும்பிடலாமா? என்ட டைம் மெஸின்வேற பரீட்சித்து பார்க்காமல் இருக்கு.
அதைவிட இதுமுக்கியம் என்று வந்தோம்னா நாங்க எவ்வளவு மடப்பயலுக என்று நினைத்துப்பார்ரா!
ஆமா பாஸ்!! நாம மடப்பயலுகதான். இந்த இடத்தில் உள்ள ஆவிகதை பற்றிய முழு விடயத்தையும் நான் அறிஞ்சாச்சுபாஸ்!
திடுக்கிட்டான் சுபாங்கன்! என்னடா சொல்லுறா!!

ஆமா பாஸ்! நீங்க மயக்கத்தில் அதே இடத்தில் கிடந்தீங்க சரி, மர நிழல்தானே சாவகாசமாக படுத்திருக்கட்டும். நினைவு திரும்பும்போது விழிக்கட்டும் என்று, பக்கத்தில் குண்டுபோளை விளையாடிய பயலுகளுடன் சேர்ந்து நானும் போளை விளையாடப்போட்டன் பாஸ்.
அந்த பயலுக மூலமாகத்தான்; பல விசியங்கள் புரிஞ்சுது. சொப்பன சுந்தரி சொப்பனசுந்தரி என்ற ஒரு பெண். சுஜாதாவின் நாவல்களை வாசித்து அதிலேயே ஊறிப்போய், தன்பெயரை சில்பியா என்று வேறு வைத்துக்கொண்டு முழு சுஜாதாவின் நாவல்கள் கட்டுரைகளை படித்துக்கொண்டே இருப்பாராம்.
இறுதியாக கொலையுதிர்காலம் படிச்சிட்டு இருக்கும்போது சுஜாதாவின் மறைவு அவரை பாதிச்சிடிச்சு, தலைமைச்செயலகத்தில் கொஞ்சம் பிசகு ஏற்பட்டு, கடைசியாக படித்த நாவல்போலவே வாழ ஆரம்பிச்சுட்டாவாம். அதாங்க அந்த ஆலமரத்து ஆவிபோல!
அதைப்பார்த்துதான் இந்த சனங்கள் பயப்பட்டு போட்டுதுகள். இதுக்குள்ள துளசிகாவின் கதைவேறு இடைச்செருக்கலாக இருக்கிறதால சனங்கள் இது துளசிகாவின் ஆவிதான் என்று முடிவு கட்டிட்டுதுக.

ஆனால் சின்னப்பயலுகளுக்கு விசியம் தெரியும். பின்னாலையே போய் சில்பியாவை கவனித்திருக்காங்க. இது பேயில்லை என்றும் தெரிந்துவிட்டது. இதை பெரியவங்க கிட்ட சொன்னபோது, அடேய் அங்காலைப்பக்கமே போகக்கூடாது. இப்படித்தான் அந்த பேய், பல ரூபத்தில வந்து உங்களை அடிச்சுப்போடும் என்று, ஏன்டா போகக்கூடாது என்று சொல்லியும் அங்க போனீங்க என்று அடி வேற போட்டிருக்காங்க.

பாஸ்! அதன் பிறகு, நீங்க விழுந்த இடத்திற்கு வந்தேன் மரத்தில் இருந்து அந்த சில்பியா இறங்கி போவது தெரிந்தது. பின்னாலேயே போனேன். பக்கத்தில் உள்ள ஒரு இடிஞ்ச வீட்டிற்குள் சில்பியா போனாள். போய்ப்பார்த்தேன், அந்த இடம்பூரா ஒரு தொகை சுஜாதாவின் புத்தகங்கள். சில்பியா அங்காலபோக அத்தனையையும் பொறுக்கிக்கொண்டு வருவமோ என்று யோசித்தேன் ஆனால் செய்யவில்லை.
பாவம் ஒரு எழுத்தின் தாக்கம் இப்படியான மனுசியை உருவாக்கிவிட்டது. அதற்கு மருந்தும் அதே புத்தகங்கள்தானே பாஸ்! என்றான் கூல்போய்.

டேய்..நெஞ்சை நக்கிட்டாய்டா… இந்தா பிடி உனக்கு இன்றில் இருந்து 1000 ரூபா அதிக சம்பளம் என்று 1000 ரூபா தாளை நீட்டினான் சுபாங்கன்.
சரிடா..நமக்கு இந்த வேலையினை கொடுத்தவரை கொன்டக் பண்ணி விபரத்தை சொலிடலாம்.
இல்லை பாஸ். ஆளை பிடிக்கமுடியலை. எவ்வளவோ ட்ரை பண்ணினேன்.
இதென்னடா பிரமாதம், மூஞ்சிப்புத்தகத்தை ஆன் பண்ணி தகவல் அனுப்பு ஆள் 24 அவர்ஸ் அதிலதான் நிற்கும்.
எங்கட அடுத்த வேலை அதுதான் பாஸ்! மூஞ்சிப்புத்தகத்தில இப்ப அவர்ட எக்கவுண்டே குளோஸ் ஆகிட்டுது. இந்த சதியின் பின்னால் யார் என்று கண்டுபிடிக்கணும்.

சரிவாடா நாம போகலாம்..என் டைம் மெசினை செக் பண்ணணும்… விஞ்ஞானத்தையே திரும்பி பார்க்க பண்ணணும் என இருவரும் புறப்பட்டார்கள்.

-அடுத்து இறுதிப்பாகம் கல கல..சுபாங்கனின் டைம் மெஸினால் கூல்போய்க்கு வந்த வினை. எதிர்பாருங்கள்.

Sunday, September 19, 2010

ஹொக்ரெயில் (19.09.2010)

எந்திரனாக ரஜினி! சங்கரின் சரியான சொய்ஸ்!!

தற்போது எங்கு பார்த்தாலும் எந்திரன் என்பதே தாரக மந்திரமாக உள்ளது என்னமோ உண்மைதான். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் மறுப்பிற்கு இடமில்லை.
படத்தின் ரெய்லர்கள் அந்த ரோபோ ரஜினி அனைவரினதும் மனங்களில் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை சிக்ஸர்ஸ்களை மழையாக பொழிவார்போலவே உள்ளது.
ஒரு முக்கிமான விடயத்தை கவனித்துப்பாருங்கள் நெகட்டிவ்ரோல்களில் ரஜினி கைவைத்தால் அது சோபிக்காமல்போனதாக சரித்திரம் இல்லை.
எந்திரன் ரெய்லர்களும் இதைத்தான் சொல்கின்றது.
“என்னை சரியாக பயன்படுத்தினால் நான் மனிதர்களின் நண்பன்…
பிழையாக பயன்படுத்தினால்…”என்று விட்டு திரையில் ரஜினி சிரிப்பார் பாருங்கள் ஒரு சிரிப்பு!!! அந்த சிரிப்பே அந்த ரோபோ கிளைமாக்ஸ் வரை எங்களை சீட் நுனியில் வைத்திருக்கப்போவது திண்ணம் என்பது தெரிகின்றது.
கிரிக்கட் சுப்பர்ஸ்ரார் சச்சின் மட்டும் அல்ல, திரையுலக சுப்பர்ஸ்ரார் ரஜினியும் திரைப்படங்கள் என்ற வன் டே கிரிக்கட்டில் டபிள் செஞ்சரி போடவேண்டும் என்பதே எனது ஆவாவும் கூட. அந்த ஒக்டோபர் முதலாம் திகதியை ஒரு திருவிழாவைப்போலவல்லவா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.


எந்திரனுக்கு ரஜினியை விட இந்திய சினிமாவில் சரியான தெரிவு இருக்கமுடியாது என்பதும் உண்மைதான். சங்கரின் தெரிவு சரியாகவே உள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரமிப்பும், பெறப்போகும் வெற்றியும், தமிழுக்கு விஞ்ஞானக்கதைகளை புகுத்தி, ஒரு அறிவியல் எழுத்துப்புரட்சி செய்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு மாபெரும் அஞ்சலியாகவே இருக்கும் என்பதே மிகப்பெரிய உண்மை.

முதல் முதல் தமிழ் சினிமாவில் லகரங்களை எண்ணிய கே.பி.சுந்தராம்பாள்.

தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முதலில் ஒரு நடிப்பு கலைஞரின் சம்பளம் இலட்சத்தை தொட்டதென்றால் அது கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் என்ற கே.பி.சுந்தராம்பாளுக்கே.
1908 ஆம் ஆண்டு கோவை கொடுமுடியிலே பிறந்த இவர், இள வயதில் இருந்தே நாடகங்களில் சோபித்து, தனது பாடல்களின் ரம்மியமான குரலால் இரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார்.
1917ஆம் ஆண்டு கொழும்பு வந்த இவர் இலங்கையின் பல பாகங்களிலும் தமது நாடங்களை நடத்தி நடித்துள்ளார் என்பது சிறப்பான அம்சமாகும். இலங்கையிலேயே இவர் எஸ்.ஜி.கிட்டப்பாவை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருவரும் இணைந்து நடித்த வள்ளி திருமண நாடகம் அக்காலத்தில் சக்கைபோடு போட்டது. அதன் பின்னர் நாடகத்தில் இணைந்த இவர்கள் இருவரும் இல்லறத்திலும் இணைந்துகொண்டனர்.
வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், பவலளக்கொடி, ஞானசௌந்தரி, போன்ற இவர் நடித்த நாடகங்கள் அக்காலத்தில் மிகப்புகழ்பெற்றன.
பக்த நந்தனார் என்ற திரைப்படத்தின்மூலம் தமிழ் திரைப்படத்திற்குள் நுளைந்த இவர், ஓளவையார் திரைப்படத்தில் ஒளவையாராகவே வாழ்ந்து தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டார்.
மணிமேகலை, பூம்புகார், மகாகவி காளிதாஸ், திருவிளையாடல், கந்தன் கருணை, உயிர்மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மமையார், திருமலை தெய்வம், உட்பட 12 தமிழ்த்திரைப்படங்களில் நடித்தும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஒளவையார் என்று சொன்னதும் நம் மனக்கண்முன் வருபவர் வேறு யார்?
1980 ஆம் ஆண்டு இதே நாள் இந்த உலகை விட்டுப்பிரிந்த அவர் தமிழ்த்திரையுலக நடிகைகளில் மறக்கப்படமுடியாதவரே.

பூமி வெப்பமாதல்..மனிதனின் அடாவடித்தனம்.


எமக்கு பக்கத்தில் வியாழன்.

இதுவரை காலம் 6ஆம் இடத்தில் ஆட்சி அதிபதியாக இருந்த வியாழன் நாளைமுதல் 7ஆம் இடத்திற்கு இடம்பெயர்வதால், பொதுவாக நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம் என்று சொல்வேன் என்றா நினைத்தீர்கள்???
இல்லைங்க… நம்ம பூமிக்கு மிக அருகில் நாளைமுதல் வியாழக்கிரகம் மிகப்பிரகாசமாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் அதைத்தான் சொல்லவந்தேன்.
50 வருடங்களின் பின்னர் இவ்வாறு பூமிக்கு அருகில் வியாழன் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடவை இதை மிஸ் பண்ணினால் 2022 ஆம் ஆண்டு மறுபடியும் பார்க்கலாம்!!!
சாதாரணமாகவே வியாழக்கிரகம் நம்ம ப+மியில் இருந்து பிரகாசமாகத்தெரியும்தான். ஆனால் நாளையில் இருந்து 4 நாளைக்கு இன்னும் பிரகாசமாக தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
இதைவச்சுத்தான் முதலே சில பயபுள்ளைகள் செப்ரெம்பர் 22 இல இரண்டு சந்திரன் தோன்றும் என்று கதை விட்டிச்சினமோ தெரியாது!

அண்மையில் இரசித்த பாடல்

தலைகோதி அவள் சாப்பிடும் மேசை மீது காகம் அகிறேன்
சிறாதோ ஒரு சாதமே ஏங்கினேன்…

அருகே நீ அமர்ந்தாயடி..தோழும்தோழும் கதைபேசுதே
உரசாதே உயிர்கோபுரம் சாயுதே…
அழகான ஒரு ஊர்வலம் நீயும் நானும்தான் போவதால்
பேருந்தே குலசாமியாய் ஆனதே…

சிலிர்க்கவைத்துவிட்டார்கள் பாடலாசிரியர் சாரதியும் யுவனும்.

யாழ்ப்பாண ஊர்களின் பெயரில் முருகதுதி!!
முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்
உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது என அணையென
பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே

என்னடாப்பா..சுன்னாகம், தாவடி, கொக்குவில் என்று யாழ்ப்பாணத்து ஊர்கள் வருது என்று பார்க்கின்றீர்களா? இதன் உண்மையான அர்த்தம்..

இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......

நட்சத்திரம் வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்” என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்

சர்தாஜி ஜோக்
ஷர்தாஜிக்கு வந்த பார்ஸல் ஒன்றை கொண்டுவந்து ஷர்தாஜியிடம் கொடுத்த தபால்க்காரர்…உங்களுக்காக நான் இந்தப்பார்சலை சுமார் 5 கிலேமீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்றார்…பாசலை வாங்கிவிட்டு …ஏன் நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு 5 கிலோமீற்றர்கள் வரவேண்டும் பேசாமல் இதை போஸ்ட் பண்ணி இருக்கலாமே என்றார் நம்ம ஷர்தாஜி.

Friday, September 17, 2010

உடையுதிர் காலம் - பாகம் 3



ஹாய்…என்று சிரித்துக்கொண்டே கன்-கொன்னின் குரல் வந்தது.
சுபாங்கன் அண்ணா, கூல் என்ன இரண்டுபேரும் ஆவி ஏதோ துரத்தபோறீங்கள் என்று கதை அடிபடுது! எனக்கும் கிரிக்கட் போல ஆவிகள் விசியத்திலும் கொஞ்சம் இன்ரஸ்ட்தான் என்றுவிட்டு சிரித்தார்..

கன்-கொன் ஒரு கிலாரிபிகேசன்..
ஒருத்தி சொல்லுகின்றாள்…
1988 ஏசியா கப் இந்தியா 6 விக்கட்களால் சிறி லங்காவை வென்ற தினத்தில் நான் பிறந்தேன்.
கபில்தேவ் வேர்ள்ட் ரெக்கோட் போட்ட அன்றைய நாள் நான் நேசறிக்கு போனேன்..
சச்சினின் நண்பன் பெயர்கொண்ட இவன் அவர்போலவே ஆரம்பத்திலேயே என் மனதில் ரெட்டைச்சதம் அடித்தான்.
1996 இன் அரையிறுதியில் அன்று அவர் வெளியேறியதுபோலவே இவனும் அழுதுகொண்டே என் மனதைவிட்டு போய்விட்டான்.. எனது இனிங்சும் முடிந்துபோய்விட்டது.
ஆம்..2008 இல் எனது இனிங்ஸ் முடிஞ்சுபோச்சு…இதுதான் என்றான் சுபாங்கன்..
அட இதுதானா!!

நவம்பர் மாதம் 04ஆம் திகதி 1988 அவள் பிறந்திருக்கின்றாள்.
1994 ஆம் ஆண்டு ஸ்கூலுக்கு போயிருக்காள்.
அது வினோத் கம்ளி..சோ இவள் காதலித்த ஆளின்பெயர் வினோத்.
2008 இல இறந்திருக்கின்றாள் அதாவது அவளது 20ஆவது வயதிலை..சரியா அண்ணா..

இதுதான் கன்-கொன் என்கிறது சபாஷ்..என்றான் கூல்போய்.
சரி..அண்ணா லோஷன் அண்ணாவும் ஒருக்கா தனக்கு உங்களை கோல் பண்ண சொன்னவர் ஒருக்கா எடுங்கோ என்ன! சரி நான் வைக்கின்றேன்.
பாஸ்..ஒருமாதிரி துளசிகாவின் பயோடேட்டாவை கண்டுபிடித்தாச்சு. சீ…ஒரு இரண்டு வருடத்திற்கு முந்தியே இந்த இடத்திற்கு வந்திருக்க கூடாதா! அந்த வினோத் பயல்மட்டும் என் கையில கிடைத்தான் செத்தான் என்றான் கூல்போய்.

மீண்டும் அந்த டைரி கிடந்த இடத்தில் ஆராய்ந்தான். தூசுகள்மூடி ஒரு புத்தகம் கிடக்கவே தட்டி பார்த்தான். வுந்தியத்தேவன் என்று அதில் பெரிய எழுத்துக்களால் இருந்தது. பாஸ் இங்க பாருங்க..நம்ம வந்தி அண்ணை தன்ரபெயரிலே புத்தகம் ஒன்று அடித்திருக்கின்றார் என்றான் கூல்போய்..
வாங்கிப்பார்த்தான் சுபாங்கன்.

அடேய்..இது நம்ம வந்தி அண்ணா இல்லைடா. ஒரியினல் வந்தியத்தேவன் பற்றியது. ராஜராஜசோழனின் மகள் குந்தவையின் கணவன். சோழப்பேரரசின் படைகளில் மிக முக்கியமான தளபதி. பொன்னியின் செல்வன் கேள்விப்பட்டனியோ?
ஆமாம் பாஸ்..இப்ப நம்மட பிரசாந்த் நடித்துண்டு இருக்காரே! பாவமண்ணை அந்த ஆள்!!
அடேய்..பொன்னியின் செல்வன் என்கிறது கல்கியின் கதையடா! அதின் கதாநாகன் இந்த வந்தியத்தேவன்தான்டா!!
ஓகோ…அந்தப்பாதிப்பிலைதான் நம்ம ஆள் அந்த பெயரை வைத்திருக்காரோ..
பாஸ் உங்க காலைக்காட்டுங்க பாஸ்…
சரி..சரி விடுடா…என்றான் சுபாங்கன்..
காலைக்காட்டச்சொன்னது இவ்வளவு அறிவாய்ப்பேசுறீங்களே! நீங்க சுபாங்கன்தானோ அல்லது ஆவியோ என்ற சந்தேகத்திலைதான் என்றான் கூல்போய்.

மீண்டும் போன் சிணுங்கியது…
ஹலோ நான் லோஷன் பேசுறேன்.
என்ன பல விடயங்கள் பற்றி கேள்விப்பட்டேன். ஆவியை நேரில் பார்த்தீங்களா?
இரண்டு பேரும் விழுந்தடித்துக்கொண்டு போனை ஸ்பீக்கரிலை விட்டு மாறி மாறி முழு விடயத்தையும் விளங்கப்படுத்தினார்கள்.
லோஷன் அண்ணா சிலபல விடயங்கள் புரியவில்லை எல்லாத்தையும் கேட்டீங்கதானே இந்த அமானுசம் உண்மையா? ஆவி இருக்கா நீங்களாவது சொல்லுங்கள் என்றான் சுபாங்கன்.

சரி..சரி.. கொஞ்சம் யோசிக்கத்தான்வேண்டும். நீங்கள்வேறு களத்தில இறங்கி ரிஸ்க் எடுக்கின்றீர்கள். எதுக்கும் நான் நாளைக்கு சொல்லுறன். இரண்டுபேரும் கவனம். உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் முதலில். நான் நாளை கூப்பிடுகிறேன் என்றுவிட்டு போனை வைத்துவிட்டார் லோஷன்.

பாஸ்..நித்திரை கொள்ள பயமாக இருக்குது. எதுக்கும் ரேடியோவை சத்தமாக போட்டுவிட்டே படுப்பம் கொஞ்சம் பயம் தீரும் என்றுவிட்டு. ரேடியோவை போட்டுவிட்டே படத்துவிட்டனர் இரண்டுபேரும்.
இரண்டுபேர் கனவிலும் துளசிகா வந்தாள்..ஆவியாக அல்ல.

வணக்கம் நேயர்களே ஆவிகள் ஆமானுசங்கள் உண்மையா? உங்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளனவா? இது பற்றி இன்றைய விடியல் நிகழ்ச்சியில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என்று தனது சிம்மக்குரலில் கர்ஜனை செய்துகொண்டிருந்தார் லோஷன்.
இதைக்கேட்டு இரண்டுபேரும் திடுக்கிட்டு எழுந்துகொண்டனர்.

என்ன தம்பியவை எழுந்திட்டீங்கபோல! அது சரி..அந்த பெண்ணின் பெயர் துளசிகாவா? 2008 தானா இறந்தாள்? ஓம் தம்பி அப்ப இது அவளேதான். நான் வெளியாலை ஒருக்கா போகவேண்டி இருக்கு போய்ட்டு வாறன் என்றார் பெரியவர்.
இருவரும் பெரும் ஆச்சரியத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
டேய்..கவனித்தாயா நாங்கள் பேசியது எப்படி மேல்மாடியில் இருந்த அவருக்கு கேட்டது!
ஆமாம் பாஸ். இந்த பேய்..ஆவி என்பதெல்லாம் இந்த ஆளின் விளையாட்டுத்தான் போல. நாங்கள் கதைப்பதை கேட்க ஏதோ கருவி கீழே பூட்டப்பட்டிருக்கலாம் வாங்க தேடுவோம் என இரண்டுபேரும் முழு இடத்தையும் சல்லடை போட்டு தேடினார்கள்…ம்ம்கூம்..ஒரு சின்னத்துண்டு வயர்கூட கிடைக்கவில்லை…
பின்ன எப்படிடா? என்றான் சுபாங்கன்..இரண்டுபேரும் படுத்த இடத்தின் மூலையில் பிளாட்டில் பெரிய ஓட்டை ஒன்று இருப்பதை கவனிக்காமலே.

இதையெல்லாம் யோசித்துக்கொண்டே அந்த இடத்தில்ப்போய் படுத்துக்கொண்டான் சுபாங்கன். என்னடா இது பிரம்மசூத்திரமாக இருக்கு…கொஞ்சநேரம் மனதை ரிலாக்ஸ் பண்ணினால்த்தான் யோசனைகள் வரும் என்றுவிட்டு கண்களை மூடினான்..நித்திரையாகிப்போய்விட்டான்.

திடீர் என பின்பக்கம் மரங்கள் உலுப்பப்படுவதுபோல சத்தம். திடுக்கிட்டு எழுந்தான் சுபாங்கன். கூல்போயை காணவில்லை. பாவிப்பயல் மீண்டும்போய் கரண்டில அடிபட்டுபோட்டானோ என்று நினைத்துக்கொண்டே வளவை நோக்கி ஓடினான்.
பின் வளவில் மரங்கள் அனைத்திலிருந்தும் இலைகள் உருவப்பட்டதுபோல இருந்தது. ஒரே அமைதியாகவேறு இருந்தது.
எல்லா இடமும் தேடிப்பார்த்தான் யாரும் இல்லை. ஒரு இடத்தில் சென்று சற்று தயங்கி நின்றான். திடீர் என பின்பக்கம் இருந்து சுபாங்கனின் தோழில் ஒரு கை தொட்டது. திரும்பி பார்த்தான்..பயங்கர உருவம் ஒன்று நெருக்கமாக நின்றது.
மாஸ்கை கழட்டிக்கொண்டு பாஸ்..பயப்படாதீங்க அது நான்தான் என்று கூல்போய் சொல்வதற்குள் மயங்கி விழுந்துவிட்டான் சுபாங்கன்.

தொடரும்…

Thursday, September 16, 2010

உடையுதிர்காலம்!!! -02



குறிப்பு - இந்த கதைக்கு இலங்கை பதிவர்களின் அமோக ஆதரவுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இன்னும் இந்த கதை பற்றி விடயம் தெரியாதவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி- இந்த நகைச்சுவை கதையில் இலங்கையின் பெரும்பான்மையான பதிவர்கள் அனைவரும் கெஸ்ட் ரோல்ல ஏதோ ஒரு கட்டத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள் என்பதை அறியத்தருகின்றேன்.
சரி..இனி கதை…முதல் பகுதியை படிக்காதவர்கள் தயவு செய்து கீழே சென்று படித்துவிட்டு வாருங்கள்.

ஆவியின் கதையினை சொல்லத்தொடங்கினார் பெரியவர். சுபாங்கனும், கூல்போயும் மிக ஆர்வத்துடன் கேட்கத்தயாரனார்கள்.
ஒரு கோல்லீபை சேட் பொக்கற்றுக்க இருந்து எடுத்து, லைட்டரால் பத்த வைத்து, ஒரு உல்லாச இழுவை இழுத்துவிட்டு தொடங்கினார் அவர்…
நான் இந்த காணியை வாங்கமுதல் இந்த இடத்தில நல்ல வசதியான ஆக்கள்தான் இருந்தார்கள். அந்த குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளைதான் இருந்ததாம். ரொம்ப செல்லமாக வளர்ந்த பிள்ளை. உயர்தரம் பாஸ் பண்ணி இருக்கின்றாள். ஆனால் ஒரு நாள் திடீர் என்று நஞ்சுகுடித்து செத்துப்போய் இருக்கிறாள். ஏன் செத்தாள் என்பது புதிராகத்தான் இருக்கு!!
அவள் செத்த மாதம் செப்ரம்பர் நடுப்பகுதி என்பதால் ஒவ்வொருவருடமும் இந்த மாதத்தில் அவள் நடமாடுவதாக சொல்லுறாங்க. நானும் 3 செப்ரெம்பர் மாதங்களில அவளை கண்டுகொண்டுதான் வாறான் என்றார்.

டேய்..இன்பொமேஷனை நோட் பண்ணிக்கடா என்றான் சுபாங்கன்.

சரி ஐயா..அந்த அடிவளவு வேப்பமரத்தடியிலதானே ஆவி வாறது. நேரம் 9.30 ஆகிவிட்டது நாங்கள் அந்த மரத்தடியில போய் நிற்கிறம் என்று விட்டு இருவரும் அங்கு சென்றனர்.
10 மணி, 10.30, 11 மணி என நேரம் போய்க்கொண்டிருந்தது.ஆவியை காணவில்லை. என்னடா கனநேரமாய் கூல்போயின் சத்தத்தை காணவில்லை என்று உற்றுப்பார்த்தான் சுபாங்கன்..கூல்போயிடமிருந்து மெல்லிய கொறட்டை சத்தம் இப்போது கேட்டது.

அடப்பாவிப்பயபுள்ளை. என்று அவனை தட்டியெழுப்பிய அதே நேரம் மரத்தின் மேலே ஏதோ உலுப்புவதுபோல சத்தம் கேட்டது. இரண்டுபேரும் ஓடிவந்து..பெரியவரை தேடினர் ஆளைக்காணவில்லை. பெரியவர் வைத்திருந்த வெற்றிலை தட்டம் அப்படியே இருந்தது.
சுபாங்கன் அவசர அவசரமாக தனது புது கூல்பிக்ஸர் எல் ருவன்டி கமராவை எடுத்துக்கொண்டு வாடா கெதியாக என்று கத்திக்கொண்டே அடிவளவை நோக்கி ஓடினான்.
ஏன் பாஸ் கமரா? என்றான் கூல்போய்!
நல்ல சீனெறிகள் எடுத்து பவனிட்ட போட்டோ கொமன்ஸ் போடச்சொல்லப்போறன்..!
அடநீவேற!! ஆவியை போட்டோ எடுத்து ஆதாரபூர்மாக ஆராயத்தானடா!!
ஜெஸ் பாஸ்..எடுத்திட்டு பவனிட்ட காட்டினா உண்மையான கொமன்ஸ் கிடைத்திடும் என்றான் கூல்போய்.

இருவரும் ஈரக்குலைகளே ஆட அப்படியே நின்றுவிட்டனர். காரணம்..இரண்டு பெரிய கண்கள் மட்டும் பளிச்என்று இவர்களை உற்றுப்பார்த்துகொண்டிருந்தன. அந்த வேப்பமரத்துக்கு முன்னால் உள்ள ஜம்புநாவலில் இருந்து.
என்ன நினைத்தானோ தெரியவில்லை கூல்போய்..பெரியவரின் வெற்றிலை தட்டம் இருந்த இடத்திற்கு ஓடிவந்து அங்கிருந்த பாக்குவெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவந்து அந்த கண்ணை நோக்கி பாக்குவெட்டியை தூக்கி காட்டினான் கூல்போய்..
மறு நிமிடம்..ஐயோ என்றொரு சத்தம் சுமார் 9 அடிக்கு தூக்கி எறியப்பட்டான் கூல்போய். சுபாங்கனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த கண்கள் அவனை நெருங்குவதுபோலவே இருந்தது. கமராவை தூக்கி சட சட என்று போட்டோக்களை அடித்தான் சுபாங்கன். அதற்குள் கூல்போயின் சத்தம் கேட்டு வளவுக்கு ஒரு பவரான டோச் லைட்டுடன் ஓடிவந்துகொண்டிருந்தார் பெரியவர்.
என்ன தம்பியவை..ஏன் இந்த தம்பி விழுந்து கிடக்கிறார் என்று ஓடிவந்தார்.

டேய் உனக்கு என்னடா நடந்தது! இப்படி பறந்துபோய் விழுந்தாய் என்று கேட்டுக்கொண்டே வந்தான் சுபாங்கன். மெல்லமாக கண் வழித்துப்பார்த்தான் கூல்போய். கூல்போய் பாக்குவெட்டியை தூக்கி காட்டிய இடத்தில் டோச்சை அடித்துப்பார்த்தார் பெரியவர்.. அந்த இடத்தில் ஒரு கரண்ட் கம்பி இருந்தது!!

ஏன்டா பாக்குவெட்டியை கொண்டுவந்து தூக்கி பிடித்தாய் என்றான் சுபாங்கன். பாஸ் அந்த கண்ணை பார்த்தால் எனக்கு ஆந்தையிண்ட கண்கள்போல இருந்தன. ஆந்தைக்கு பாக்குவெட்டியை தூக்கி காட்டினால் ஓடிவிடும்…சீ..பறந்துவிடும் என்று சொல்லுங்கள் பெரிசுகள் அதுதான். பாழாய்ப்போன கரண்ட் கம்பி இதாலை போகுமெண்டு எனக்கு தெரியவில்லை என்றான் கூல்போய்.

சரி..வா உள்ளபோவோம் என்றான் சுபாங்கன். சரி தம்பியவை நீங்கள் கீழபடுங்கோ நான் மேல்மாடியில படுக்கிறன் கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்திவிட்டு படங்கோ..ஏதும் அவசரம் என்றால் என்னை கூப்பிடுங்கோ என்றுவிட்டு இந்தாங்கோ சுடுதண்ணி வைக்கிற கொயில் சீனி, தேயிலை எல்லாம் இருக்கு களைத்துப்போட்டியள் ரீபோட்டு குடியுங்கோ என்றுவிட்டு மேலே போனார் அவர்.

அவரை அனுப்பிவிட்டு இரண்டுபேரும் உள்ளே போனார்கள். பாஸ்..போட்டோ எடுத்தீங்கள் தானே. அதுபோதும் அதை உங்கள் லப்ரொப்பில போட்டு பார்த்தால் சரி என்றான் கூல்போய்.
ஓமடா..நீ கரண்ட் அடித்து விழுந்தபோதும் உன்னைக்கூட தூக்காமால் என்ன நடந்தாலும் பறவாய் இல்லை என்று றிஸ்க் எடுத்து பட பட என்று போட்டோ அடித்தேன் என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றனர்.
புளொக்கில் கமராவின் பற்றி இரண்டும் போட்டபடி அப்படியே இன்னும் சார்ச் ஏறிக்கொண்டிருந்தது!!
சொதப்பிட்டீங்களே பாஸ்..வயித்தை கிள்ளுது பாஸ்..நைட் சாப்பிட மறந்துபோய்ட்டோம் என்றான் கூல்போய்.

இந்த நடு சாமத்தில சாப்பாட்டுக்கு எங்கபோறது. அந்த ஆள் சீனி, தேயிலை எல்லாம் தந்திருக்கு ரீ போட்டு குடிப்பம் என்றான் சுபாங்கன்.
அதென்ன பாஸ். உங்கள் பைக்குள்ள ஒரு பார்சல்? ஓமடா…எங்கட யோ..வொய்ஸ் யோகா!! ஏதோ ஒரு பார்சல் அனுப்பி இருந்தார். இந்த அமளிதுமளியில அதை மறந்துபோயாச்சு எடுத்து ஒருக்கா என்ன வென்று பிரித்துப்பார் என்றான் சுபாங்கன்.

பாஸ்..பார்சல் முழுக்க நூடில்ஸ் பக்கட் என்றான் கூல்போய்.
அடடா…எடுத்து சுடுதண்ணிக்க போடுடா நைட் சாப்பாடு ரெடி. மனுசன் கணக்காத்தான் பார்சல்போட்டிருக்கு என்றான் சுபாங்கன்.
நூடில்ஸை சுவைத்துக்கொண்டே..பாஸ் அங்கபாருங்க அழகான ஒருபுத்தகம் என்று தூசிகளுக்கு மத்தியில் இருந்து ஒரு புத்தகத்தை தூக்கினான் கூல்போய்.
டேய்..அது புத்தகம் இல்லைடா டயரி இங்கே தா..என்று பறித்து திறந்துபார்த்தான் அவன்.
என் பெயர் துளசிகா..என்று ஒரு அழகான பெண்ணின் படத்துடன் தொடங்கியது அந்த டயரி..உள்ளே!!
1988 ஏசியா கப் இந்தியா 6 விக்கட்களால் சிறி லங்காவை வென்ற தினத்தில் நான் பிறந்தேன்.
கபில்தேவ் வேர்ள்ட் ரெக்கோட் போட்ட அன்றைய நாள் நேசறிக்குப் போனேன்.
என்று முழுவதும் கிரிக்கட் சம்பந்தமாக சூசகமாவே அந்த டயரி முழுவதும் எழுதப்பட்டிருந்தது.
சச்சினின் நண்பன் பெயர்கொண்ட இவன் அவர்போலவே ஆரம்பத்திலேயே என் மனதில் ரெட்டைச்சதம் அடித்தான்.
1996 இன் அரையிறுதியில் அவர் வெளியேறியதுபோலவே இவனும் இன்று அழுதுகொண்டே என் மனதைவிட்டு போய்விட்டான்.. எனது இனிங்சும் முடிந்துபோய்விட்டது. என எழுதப்பட்டிருந்தது…
புடித்துக்கொண்டே சுபாங்கன் சொன்னான் டேய்..அடிடா தொலைபேசியை கன்-கொன்னுக்கு..

-தொடரும்…

Wednesday, September 15, 2010

உடையுதிர்காலம்!!!



கதையின் முற்குறிப்பு – பதிவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர் சுஜாதாவின் பரம ரசிகர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய அமானுசத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் கொண்ட “கொலையுதிர் காலத்தை” நகைச்சுவைக்காக மட்டுமே உள்ட்டா பண்ணி வரப்போவதுதானுங்க இந்த உடை உதிர்காலம்.
இதில் கணேசாக – பதிவர் சுபாங்கனும், வஸந்த் ஆக – பதிவர் கூல்போய் கிருத்திகனும் வாறாங்க. (சகிக்காதுதான் என்றாலும் அந்த இரண்டுபேரையும் இந்த நகைச்சுவை கதை முடியும் மட்டும் கணேஸ் வசந்தாக ஏத்துக்குங்க)
முக்கிய குறிப்பு - இது சுபாங்கன், கூல்போய் கிருத்திகனை தவிர மற்ற யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
சரி…இனி கதைக்கு போங்க…


சக்ஸஸ்..சக்ஸஸ்…என்று இரண்டு வயர்துண்டுகளை V வடிவமாக வைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் கணக்காக கதைக்குள் எண்டர் ஆகின்றான் சுபாங்கன்.
அப்படி அவன் கத்தியதற்கு காரணம் “கால இயந்திரம்” ஆம் அவனால் பின்பக்கமாக கடந்த நூற்றாண்டுகளுக்கு செல்லக்கூடிய ஒரு டைம் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் அந்த கத்தல்.

அடடா..இந்த வெற்றியை யாருக்காவது சொல்லனுமே என்று கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தபோது…
மொபைல் சிலிர்த்த்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் எடுத்துப்பார்த்தான் சுபாங்கன்.
மருதமூரான் என்று டிஸ்பிளேயில் விழுந்தது.
ஹலோ வணக்கம் பொஸ்…யாழ்ப்பாணத்திலையா நிற்கிறீங்கள்? மருதமூரானிடமிருந்து
ஓமோம்…ஒரு முக்கியமான விசியம் ஒன்…

அதைவிட முக்கியமான விடயம்.. உங்கட கொக்குவில் பக்கம் உள்ள, சொதி வளவு என்ற இடத்தில் ஆவி ஒன்றின் அட்டகாசமாக இருக்குதாம். அந்தப்பக்கமே சனங்கள் போக பயப்படுகுதுகளாம். இதைபற்றி விரிவாக ஆராய ஒருத்தரும் இல்லை அதுதான் உங்களிடம் சொல்லுறன்..ஒருக்கா உண்மையோ என்று அராய்ந்துபாருங்கோவன்…

ஓ…அதுசரி…நான் ஒரு டைம் மெஷி…

நான் ஆவிகளை நம்பிறதில்லை. இதில ஏதோ வேற விடயங்கள் இருக்கு கண்டிப்பாக போய் ஒருக்கா ஆராயுங்கோ..

ஓம் அண்ணை…நான் ஒரு ரைம் மெஷி..
கவனமாக காண்டில் பண்ணவேணும் சுபாங்கன். பலபேர் இந்த ஆவியை பார்த்திருக்கினமாம். பஸ்ஸில போய்கொண்டிருக்கின்றேன் சுபாங்கன் நான் பிறகு கோல் பண்ணுறன். போனை கட் பண்ணிவிட்டார் மருதம்ஸ்.

கொய்யாலே…நான் சொல்லவந்த விசியத்தை கேட்டுதா இந்த மனுசன்??? மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சுபாங்கன்.

ஆவியா? படு இன்ரஸ்ரிங்கான விசியம்தான். ஆனால் அதற்கு முதல் என்ட ரைம் மிஸின் பத்தி யாருக்காவது….!! மொபலைப்போட்டு நோண்டுகின்றான் சுபாங்கன்.
மதி.சுதா….!! ஜெஸ் ஆர்வமான பெடியன் இவனிடம் டைம் மிஷின் பற்றி பேசிக்கொள்ளலாம்.

மறுமுனையில் வணக்கம் சுபாங்கன் அண்ணா..எப்படி இருக்கிறியள்? யாழ்ப்பாணத்தில நிற்கிறீங்களாம்.

ஓமோம்..சுதா டைம்மிஸின் ஒன்…

ஓமண்ணா.. நான் அது பற்றி ஒருகதையை போனமாசம் எழுதியிருந்தன். இப்பதான் படிச்சனீங்களோ?
பற்றி தீர்ந்து சுபாங்கனின் போன் “ஓப்” ஆகிவிட்டது.

சற்றுநேரத்திற்கெல்லாம் சி.பி.ஷட் ஒன்றின் உறுமல் சத்தம் கேட்க வந்துகொண்டிருந்தான் கூல்போய்.
பாஸ்… டைம் மெஷின் என்ன ஆச்சு! சக்ஸஸா?
ஆமாடா…யாருக்காவது சொல்லுவோம் என்றால் செவிகொடுக்கிறாங்களா பார்!
பாஸ்..ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ அந்த மெஷினை வைத்து செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு! அதை பிறகு பார்ப்போம்..
மருதம் கோல் பண்ணி ஒரு விடயம் சொன்னார். உங்களுக்கும் கோல் பண்ணினதாக சொன்னார் என்றான் கூல்போய்.

ஆமாடா நீ ஆவிபேயை நம்புறியா என்ன?
ஜெஸ் பாஸ்..சில சம்பவங்களை விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியலையே!
இது எங்களுக்கு ஒரு பெரிய சலேஞ்ச் பாஸ். நாங்கள் இந்த மர்மத்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும்.
நீயே சொல்லிட்டாய் பிறகு என்ன கிழம்பு. உன்ர ஆர்வத்திற்கு இன்றையில இருந்து உனக்கு 80 ரூபா சம்பளம் யாஸ்தி.

இருவரும் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு புறப்பட்டு சென்றார்கள். ஒரு பெரிய வளவுதான். அயலிலே பெரிதாக ஒரு வீடும் இல்லை. ஆனால் வளவின் பின்பக்கம் கோவில் மதில்மாதிரி சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தது. முன்னால் ஒரு பழையகால மாடி வீடு ஒன்று இருந்தது. வளவு முழுக்க ஒரே பற்றைகளாகவும் நிறைய மரங்களும் நின்றன. பட்டப்பகலிலை பார்க்கும்போதே ஒரு பயங்கரம் தெரிந்தது உண்மைதான்.
டேய்.. பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டில் விசாரித்து பார்ப்போம் வா என்றான் சுபாங்கன்!
இருவரும் சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டின் முன்னால் சி.பி.ஷட்டை நிறுத்தி கோர்ன் அடித்தனர்.

உள்ளே..இருந்து ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க பருவ மங்கை ஓடிவந்தாள்.
பாஸ்…எழிமையிசை இயக்கம் நிறுவப்படுது பாஸ் என்றான் கூல்போய்.
டேய்..ஆரம்பிச்சுட்டியா? சும்மா இருடா!! அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்றான் சுபாங்கன்.
அதுசரி..அதை நீங்க சொல்லுறீங்க!!! என்று விட்டு அன்புள்ள சந்தியா..என்று வாய்க்குள் பாடலை முணுமுணுத்தான் கூல்போய்.

வாசல் வரை ஓடிவந்த அந்த பெண்ணில் இவர்களைக்கண்டவுடன் ஒரு ஏமாற்றமும், அதைவிட ஒரு அச்சமும் தெரிந்தது.
பாஸ்..இவள் வேற யாரையோ எதிர்பார்த்துகொண்டிருக்கின்றாள் போல என முணுமுணுத்தான் கூல்போய்.
என்ன என்பதற்கான பாவத்தை தன் முகத்தில்க்காட்டி இவர்கள் இருவரையும் பார்த்தாள் அவள்!
தூரத்தில் தெரியும் அந்த வளவைக்காட்டி இது யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா என்றான் சுபாங்கன்.
தெரியாது அண்ணா!! அந்த அண்ணா என்ற சொல்வந்ததும் பீறிட்டுக்கொண்டுவந்த வறட்டு எச்சிலை கஸ்டப்பட்டு விழுங்கினான் சுபாங்கன். சந்தர்ப்பங்களை மறந்து ஹெக்கெக்கே என்று சிரித்துக்கொண்டிருந்தான் கூல்போய்.

நாங்கள் இந்த இடத்திற்கு வந்து 2 மாசம்தான் ஆகுது அண்ணா. அது யார்ட என்று தெரியாது அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இப்போ வீட்டில் யாரும் இல்லை என்றாள் அவள்.
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா! என்றான் கூல்போய்! வீட்டில் யாரும் இல்லை என்பது அவனின் காதில் விழுந்த மறுவினாடியே.
கூலைமுறைத்துபார்த்த சுபாங்கன். போதும் எடுடா சி.பி.ஷட்டை என்றுவிட்டு. நன்றி சிஸ்ரர் என்று கஸ்டப்பட்டு சொல்லிவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் வந்தனர்.

டேய்..இன்றைக்கு இரவு எப்படியும் அந்த வளவுக்குள் நுளையவேண்டுமடா! இன்பர்மேஷன் ஒன்றும் கிடைக்கலையே. அது இருக்கட்டும். ஆவி என்பது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? என்றான் சுபாங்கன்.
என்னைப்பொறுத்தவரை அது இருக்கு பாஸ் என்றான் கூல்போய்.
திடீரெனறு;..நினைவு வந்ததும்..டேய்..இது பற்றி கேட்க சரியான ஆள் நம்மட பாலவாசகன் தாண்டா. எடுடா போனை ஆளை கனநாள் தொடர்புகொள்ளமுடியலை என்றான் சுபாங்கன்.
பாலவாசனுக்கு போன் போகவில்லை. கோல் பெயிலியர் என்று வந்துகொண்டிரந்தது.
பாஸ்..ஒரு செய்தி. பாலவாசகன் இப்ப ரொம்ப பிஸி. ஆளை பிடிக்கவே முடியாது.
ஆள் நாசாவுக்கு போய்ட்டார் என்றும் ஒரு கதை அடிபடுது என்றான் கூல்போய்.

இருப்பு கொள்ளுதில்லைடா..வா திரும்ப அந்த வளவுப்பக்கம்போய் ஏதாவது தகவல்கள் கிடைக்குதா என்று பார்ப்போம் என இருவரும் புறப்பட்டார்கள்.
இப்பொழுது அந்த வளவிற்குள் ஒரு நடுத்தர வயதானவர் நின்று கொண்டிருந்தார்..
அவரை இருவரும் அணுகினார்கள்.
யார் தம்பிமார் நீங்கள்?
ஓன்றும் இல்லை அண்ணை. இந்த வளவிற்குள் ஏதோ ஆவி சுற்றுதாம் என்று கேள்விப்பட்டோம் அது உண்மையா என்று அறியத்தான் என்றான் கூல்போய்.
இவர்களை ஏற இறங்க பார்த்த அவர்.
ஓம் தம்பி நான் பல தடவை கண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில ஒருவரும் நம்பேல்லை. இப்ப கனக்கபேர் பார்த்திருக்கினம். என்றார் அவர்.

எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை அண்ணா. இது உங்கள் வளவா? என்றனர் இருவரும்.
ஓம் தம்பி இது என் வளவுதான். வேண்டுமென்றால் இன்றைக்கு இரவு நின்றுபாருங்கள் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றார் அவர்.
ஒரு விசியம்தம்பி. உங்கட ஆர்வக்கோளாறை பார்த்தால் எனக்கும் தைரியம் வருது. இன்றைக்கு நீங்கள் இங்க நின்றால் உதவிக்கு நானும் நிப்பேன். பார்ப்போம் என்றார் அவர். சரி தம்பியவை நான் இன்றைக்கு இங்க தான் நிற்பேன் ராவுக்கு வாருங்கோவன் என்றார் அவர்.

இரவு 8 மணிபோல் இரண்டுபேரும் அந்த வளவை அடைந்தார்கள். ஒரு காக்கா குருவிகூட இல்லையேடா என்றான் சுபாங்கன்.
பாஸ்..காக்கா குருவி எல்லாம் தங்கட கூட்டில் நித்திரைக்கு போயிருக்கும் என்றான் கூல்போய்.
என்ன தம்பியவை வந்திட்டியளோ? என்று கேட்டுக்கொண்டே அந்த மனிதரும் வந்தார். பழைய கிணத்தடி ஒன்றில் இருந்து மூவரும் பல கதைகள் பேசினர்.
தம்பி இந்த ஆவி பற்றி ஒரு கதை இருக்கு என்று அந்த தெரியவர் கூறத்தொடங்கினார்…

பெரியவரின் கதையும், ஆவியின் அட்டகாசமும், ஆவிதுரத்தும் பதிவர்களின் கேனைத்தனமும் அடுத்த பதிவில்.. இனித்தான் உங்கள் வயிறும் நோகவுள்ளது…

Tuesday, September 14, 2010

காற்றினிலே வந்த கீதம்…(மீண்டும் ஒரு தடவை)


அரிவரி தொடங்கி, கைதேய மண்மீது அகரம் எழுதத்தொடங்கிய காலங்களின் முன்னேயே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்துவிடுகின்றது.
கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள்கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்துவரும்போது, என் இயல்புகள் அத்தனையும் தொலைத்துவிட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்தஓட்டம் அதிகம்பாய சிலிர்துப்போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலகித்த சம்பவங்கள் பல…

என் கண்கண்ட தெய்வங்கள், வித்தாக உறங்குமிடத்தில் கார்த்திகைப்பூவின் மாதத்தில் ஒளிவெள்ளமெழுப்பி இசைபாடும் அந்த “எங்கே எங்கே ஒருதரம் உங்கள் திருமுகம் காட்டுங்கள்” என்ற அந்த இசையினால் எத்தனை தரம் தேம்பித்தேம்பி அழுதிருப்பேன்.
காதல் உணர்வுகளில் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றனரே??
அதைவிட ஆயிரம்மடங்கு பட்டாம்பூச்சிகளை இசையினால் பரப்பிவிடமுடியும்.
இதை இசைமூலம் நிரூபித்தவர்கள் பலர், பீத்தோவானில் இருந்து, இளையராஜாவரை என்னை சிலிர்க்கவைத்த இசை ஸ்ரிங்காரர்கள் பலர்.

நிகழ்கால எதிர்நீச்சல்களிலும், எதிர்கால சவால்களுக்கும் மத்தியில் மனதிற்கு அப்பப்போ ஆறுதல் தருவது இறந்தகால வசந்தங்களே. அவை எப்போதும் இனி திரும்பி வந்துவிடப்போவதில்லை.
அகரம் கிறுக்கத்தொடங்கிய காலங்கள் அது! அம்மம்மா எங்கே என்று கேட்க, அம்மம்மா சாமியிட்ட போட்டாங்க, என்று பதில் வந்தவுடன். கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அம்மம்மாவை தேடிய காலங்கள் அது.


அந்தக்காலங்களில்த்தான், என் வீட்டில் அருகில் இருக்கும் அதே நல்லூர் கந்தசுசாமி கோவிலில்த்தான் அந்த இசை என்னும் நாத வெள்ளம், நாதஸ்வரமாகி என் காதுகளில் தேன்பாச்சி சுவாமியை விட்டுவிட்டு, என்னை அந்த ஸ்வர வித்தைகளால் கவர்ந்தவர் லயஞான பூபதி பத்மநாதன் அவர்கள்.
அந்த நாளில் இருந்து உயர்தரம் கற்கும்வரை நான் அந்த நாதஸ்வர இசையினை இரசித்தேன், ஓலங்களாக காற்றில்வரும் பிசிறுகள் எல்லாவற்றாலும், தான் இழுத்து ஊதும் காற்றுக்களால் கீதங்களாக மாற்றிய வித்தகர் அவர்.

மாநிறம், கூர்மையான கண்கள், கலைக்கான முகம், அகன்ற நெற்றி, நிமிர்ந்த தேகம், எட்டுமூலை வேட்டி, அதன்மேல் இடையில் பட்டுத்துணி நாதஸ்வர துளைகளைத்தடவும் விரல்களில் மோதிரங்கள். என் கண்களில் இன்றும் நிலைத்திருக்கும் அந்த இசை வித்தகரின்தோற்றம் இதுதான். அப்பப்பா இந்தமனிதரால் கோவிலுக்கு வந்த அத்தனைபேரையும் எப்படி அந்த கான இசையினால் கட்டிப்போட முடிகின்றது என என்முகம் ஆச்சரியக்குறியாகிய சந்தர்ப்பங்கள் பல.


இவன் கோவிலுக்கு வந்து சாமியையா கும்பிடுகின்றான், பீப்பி, மேளத்தைத்தான் பார்த்துக்கொண்டு அதன் பின்னாலேயே சுற்றுகின்றான் என என் அக்கா தாத்தாவிடம் முறையிட்டதும், அதற்கு என் தாத்தா அளித்த பதிலும் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
என் தாத்தா ஒரு கலாநிதி. பகுத்தறிவாளனும்கூட, கோவிலுக்கு செல்வதில்லை.
அவர் கேட்ட கேள்வி ஒன்றுதான் யார் அங்கே நாதஸ்வரம் வாசிப்பது என்பதுதான்.
என் அக்கா:- பத்மநாதன் என்றதும், அப்படி என்றால் இவன் செய்வது சரிதான். என்றுவிட்டு பத்தமநாதன் பற்றி பல தகவல்களையும் எனக்கு அன்று விரிவாக கூறினார். தன் பேரன் போற்றுதலுக்குரிய ஒரு நாதஸ்வர வித்தகரின் இரசிகனாகிவிட்டானே என்ற பெருமையினை அவர் முகத்தில் அன்று நான் பார்த்தேன்.

யாழ்ப்பாணத்தில் அளவையூர் என்று சிறப்பிக்கப்படும், அளவெட்டி பிரதேசத்தை சொந்த இடமாகக்கொண்டவர் பத்மநாதன் அவர்கள். 1931ஆம் அண்டு பிறந்த இவர், புகழ்பெற்ற கலைஞர்களான வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, முல்லைவாசன் முத்துவேற்பிள்ளை, அப்புலிங்கம், ஆறுமுகம்பிள்ளை ஆகியோரால் செதுக்கப்பட்டவராவார்.
பின்னர் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்த சீர்காழி பீ.எம்.திருநாவுக்கரசிடமும், திருச்சி கிரிஸ்ணமுர்திப்பிள்ளையிடமும் நாதஸ்வரக்கலையின் நுட்ப நுணுக்கங்களை கற்றுத்தேர்ச்சிபெற்றார்.


பின்னர் இவரது காலத்தின் பொற்காலம் என்றும், இன்றும் ஈழத்தமிழர்களால் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான காலமும் இவரும் உலகப்புகழ்பெற்ற தவில்மேதை தெட்சணாமூர்த்தியும் இணைந்து இசைபரப்பிய காலகட்டங்களாகும்.
இது இவரது 25 ஆவது வயதிலிருந்து ஆரம்பித்ததாக அறியமுடிகின்றது.
நான் அறிந்து இவர் வாசிக்கும்போது தவில்மேதை புண்ணியமூர்தி அவர்களும், அதன்பின்னர், அவரது மாணவனும், தவில்மாமேதை தெட்சணாமூர்த்தியின் புத்திரன் உதயசங்கர் அவர்களும் தவில் வாசித்தனர்.

பலபொழுதுகளில் நான் இவரை இரசித்தது நல்லூர் தேவஸ்தானத்திலேயே மற்றும்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இசை விழாக்களிலும், பிற கோவில் மஹோட்சவங்களிலும் இவரது கச்சேரிகளை பாhத்திருக்கின்றேன். இவர் வாசிக்கும் மல்லாரியை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒருதடவை இசை விழா ஒன்றில் இவர் வாசித்த தில்லானாவை நேரில் பார்த்து நான் இருக்கும் இடமே தெரியாமல் இலகித்து அந்த இடத்தில் நான் இல்லை என்ற உணர்வு நிலைக்கே சென்றிருக்கின்றேன்.

என் இரசிப்பு வெறியாகிய சந்தர்ப்பத்தில் என் தாத்தா ஓர் நாள் இவரது இல்லத்திற்கு என்னை அழைத்துசென்று சந்திக்கவைத்தார். அன்றுதான் நான் அவரது வாயினால் வரும் பேச்சினையும் கேட்டேன். அட எவ்வளவு அன்பான மனிதர்! என் தாத்தா அவரின் இரசிகன் நான் என்றதும் என்னை தன் மடியில் இருந்தி கதைபேசினார். என் தாத்தா பற்றி நான் அறியாத பல விடயங்களை என்னிடம் சொன்னார். அந்த பொழுதுகளை இன்று நினைத்தாலும் மனம் பெருமை கொள்கின்றது.

அடுத்து 91 அல்லது 92 ஆம் ஆண்டு கட்டத்திலே அவருக்கு நடந்த மணிவிழாவை என்னால் மறக்கமுடியாது. நல்லை ஆதீன மண்டபத்தில் நடந்த அந்த விழா மிகவும்; சிறப்பாக நடைபெற்றது. பெரிய பெரிய கல்விமான்கள், இசை வித்தகர்கள் எல்லோரும் இவரை புகழ்ந்துபேசினார்கள், தாங்களும் இவரின் இரசிகர் என்றார்கள். அப்பா…! அந்த விழாவே இன்றும் என்மனக்கண்ணில் முழுப்பதிவாக இருக்கின்றது.

அதைதொடர்ந்து நான் மிருதங்கம் கற்ற இசைமன்றத்தினரால் இவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மற்றும் பாராட்டு விழாவில் இவரை புகழ்ந்து கவிதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்கு என் தமிழாசிரியரிடம் உதவி கேட்டேன், உண்மையான கலைஞன் ஒரு 13 வயது சிறுவனின் மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வான், எனவே நீயே எழுதவேண்டும் என அவர் சொல்லிவிட்டார். அன்று ஒரு கவிதை எழுதினேன், வாசித்தேன்..பலர் கைகள்கூட தட்டினார்கள். அது கவிதையா இல்லையா என்று எனக்கு இன்றுவரை தெரியாது.


2003ஆம் ஆண்டு இவர் இயற்கையெய்திய செய்தி அறிந்தேன். அந்த ஆண்டு நல்லூர் திருவிழா பற்றிய ஊடகம் ஒன்றுக்கான ஒளித்தொகுப்பு பெட்டகம் ஒன்றுக்கு இந்த ஆண்டு வழமைபோல் நல்லூரில் எல்லாம் இருக்கும், ஆனால் அந்த தெய்வீக நாதம் இருக்காது என்று உண்மையான கவிதை ஒன்று வாசித்தேன்.
தற்போதும் கூட நல்லூர் வாசலில் நான் போய் நிற்கும்போதும் நான் இரசித்த அந்த நாதஸ்வர இராகம் தேவாமிர்தமாக என்காதுகளில் கேட்கும். சுவாமி வீதிவலம் வந்தால் அங்கு நாதஸ்வரம் இசைப்பவரை ஏக்கத்துடன் மனம் பார்க்கும்.
காற்றில் வந்த அந்த கீதம், அந்தச்சூழலில் இன்றும் காற்றில் வந்து கலந்துகொண்டுதான் இக்கின்றது.

நாதஸ்வர கச்சேரி ஒன்றில் இருந்து

Sunday, September 12, 2010

ஹொக்ரெயில் (12.09.2010)

எந்திரன் பிரமாண்டமான சுப்பர் ஹீரோ!

ஹொலிவூட் சுப்பர் ஹீரோக்களின் படங்களை மிஞ்சும் அளவுக்கு இயந்திரன் உள்ளதை கண்டு இந்திய சினிமா இரசிகர்கள் அனைவருமே மூக்கில் விரலை வைத்துள்ளனர்! என எந்திரன் பற்றிய லேட்டஸ்ட் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சுப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் வருவதற்கு முன்னர் அதுபற்றிய பில்டப்புக்கள் டாப் கியரில் வருவது வழமையானதுதான். என்றாலும் இந்த முறை சண் பிக்கஸர்ஸ் தயாரிப்பாச்சே!! சோல்லவும் வேண்டுமா என்ன?
சாதாரண ஹீரோக்கள் நடித்த படங்களுக்கே வரும் பில்டப்புக்களை பார்த்து சப்பா…கண்ணைக்கட்டுதே!! என்று சலித்திருப்பீர்கள் இப்போ..
வெறும்வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?

பொதுவாகவே சயன்ஸ்பிக்ஷன் என்றால் கற்பனைகளை எப்படிவேண்டும் என்றாலும் சுழலவிடலாம். ஏன் என்றால் ரெக்னோலொஜி மற்றும் சயன்ஸ் என்பன எப்படி எல்லாம் நியமாகவே பிரமிக்க வைக்கப்போகின்றது என்பது இந்த நொடிவரை எவருக்கும் தெரியாமல்த்தான் இருக்கும்.

சுஜாதா சொன்னதுபோல “சயன்ஸ் பிக்கஷன் என்றால் ஒரு சௌகர்யம். எந்த சாகசத்தையும் நிகழ்த்தலாம், பிரமிக்கவைக்கலாம், பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் நம்பியே ஆகவேண்டும். இங்கே யதார்த்தம் என்ற கேள்வி இல்லாமல் போயிருக்கும்.
ஆனால் ஒன்று அவற்றுக்கான ஆரம்ப கட்டங்களாவது தற்போது ஆய்வில் உள்ளதாக இருந்தால் புரிதலுக்கு நன்றாக இருக்கும்”

உண்மைதான் எந்திரன் ரெய்லர்கள் இதைத்தான் சொல்கின்றன. திரைப்படம் வரமுன்னரே பலர் போற்றவும், சிலர் தூற்றவும் தொடங்கிவிட்டனர்.
எது எப்படியோ.. என்னைப்பொறுத்தவரையில் எந்திரன் ரோபோக்கு ரஜினி சரியான தெரிவு. சுஜாதாவின் கதைகளை வைத்து எடுக்கப்படும் படங்களில் ரஜினி நடிக்கும் மூன்றாவது படம் இது என நினைக்கின்றேன். (காயத்திரி, ப்ரியா, எந்திரன்)
பெரும்பாலானவர்கள் போல நானும் எதிர்வரும் 24ஆம் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

ஹப்பி இன்று முதல் ஹப்பி..

அண்மையில் பார்த்தவற்றில் பாட்டைவிட காட்சியாக்கல் பிடித்துப்போன ஒரு பாடல்.
செம்மொழிப்பாட்டை கொஞ்சம் நினைவு படுத்தினாலும் நல்லாத்தான் இருக்கு.
பாடகர்கள் ஒவ்வொருகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி வருவது சிறப்பாக இருக்கு.

யாழ்ப்பாண டாப் 10 பாடல்களில் முதலாவது.
யாழ்ப்பாணத்தில் தற்போது மக்களால் அதிகம் விரும்பி கேட்கப்படும் டாப் 10 பாடல்களில் எந்திரனைவிட முதல் இடத்தை ஒரு பக்திப்பாடல் பிடித்துக்கொண்டுவிட்டது.
அதற்கான காரணம் ஒரு காலத்தில் இந்த நில மக்களின் ஆதர்ஸ பாடகராக இருந்த பாடகர் அதனைப்பாடியதாக இருக்கலாம்.
பெரும்பாலும் யாழ்ப்பாணத்தின் எந்த பாகத்திற்கு சென்றாலும், கடைகள், வர்த்தக நிலையங்கள், கோவில்கள் என அந்தப்பாலே ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்கக்கூடியதாக உள்ளது.
இந்தப்பாடல் வெளியாகி பல நாட்கள் கடந்த நிலையிலும் தற்போதுதான் அது பல மட்டங்களுக்கும் சென்று ரீச்சாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார்” என ஆரம்பிக்கும் எஸ்.ரி.சாந்தன் பாடிய பாடலே அந்த ஜவ்னா டாப் 1.


வசந்த்! வசந்த்!

எழுத்தாளர் சுஜாதாவின் வசந்த்! வசந்த்! நேற்று படித்தேன். படித்துமுடித்ததும் வசந்த் மனது முழுக்க நின்றார். அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.
அண்மையில் படித்த சுஜாதாவின் கணேஷ் - வசந்த் இணைந்த கதைகளைவிட இது பல திருப்பங்களையும் ஊகிக்கமுடியாத நிகழ்வுகளையும் கொண்டிருந்தமை சிறப்பாக இருந்தது.
விஷம், மற்றும் இறுதியில் துப்பாக்கி குண்டுக்கு ஆளாகியமை என வசந்த் இதில் படு றிஸ்க் எடுத்துள்ளார். ராஜராஜன் கிணறு என்ற ஒரு பழங்காலக்கிணற்றின் மர்மங்களை கண்டறிய செல்லுகின்றார்கள் கணேஷ் - வசந்த் பின்னர் கணேஷைவிட வசந்தே இந்த கதையில் பெரும் பகுதிக்கு வருவதுடன், மனதில் நிற்கின்றார்.
கல்கியில் இந்தக்கதை வந்தபோது வசந்திற்கு இரசிகர்கள் கூடியதாகவும் அறியமுடிகின்றது. கண்டிப்பாக ஒரு தடவை படித்துப்பாருங்கள்.

Prarambha – குறும்படம்


நாட்டார் பாடல்களில் காதலர் சல்லாபம்.

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே,
நல்லபாம்பு வேடங்கொண்டு நான் வருவேன் சாமத்திலே

நல்லபாம்பு வேடங்கொண்டு நடுச்சாமம் வந்தாயானால்
ஊர்குருவி வேடம்கொண்டு உயரப்பறந்துடுவேன்

ஊர் குருவி வேடங்கொண்டு உயரப்பறந்தாயானால்
செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்

செம்பருந்து வேடங்கொண்டு செந்தூக்காய் தூக்கவந்தால்
பூமியைக் கீறியெல்லோ புல்லாய் முளைத்துடுவேன்

பூமியை கீறியெல்லோ புல்லாய் முளைத்தாயானால்
காராம்பசு வேடங்கொண்டு கடித்திடுவேன் அந்தப்புல்லை

காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆலமரத்தடியில் அரளிச்செடி தானாவேன்

ஆலமரமுறங்க அடிமரத்தில் வண்டுறங்க
உன்மடியில் நானுறங்க என்னவரம் பெற்றேனடி.

அத்திமரம் நானாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
நந்திவரும் மச்சானுக்கு முத்துச்சரம் நானாவேன்.

சர்தாஜி ஜோக்
நம்ம ஷர்தாஜி ஒரு சமயம் லண்டன் போயிருந்தார். அங்கே உள்ள கடற்கரை ஒன்றில் காலை நேரம் சண்பார்த் எடுத்துக்கொண்டிருந்தார் நம்ம ஆள். அப்போது அந்தப்பக்கம் வந்த ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் ஒருவர் " Are you relaxing"? எனக்கேட்டார்? அதற்கு பதிலளித்த நம்ம ஆள்…NO..No… I am Banta singhஎன்று பதில் சொன்னார்.
சிறிது நேரத்தில் இன்னும் ஒருவர் வந்து அதே கேள்வியைக் கேட்டார் அவருக்கும் நம்ம அள் அதே பதிலையே சொன்னார்…இப்படியே தொடர்ந்து 6 நபர்கள் அவரை கேட்க அவர்களுக்கும் நம்ம ஷர்தாஜி இதனையே சொல்லிக்கொண்டிருந்தார்.
இறுதியில் இங்கிருந்தால் இவர்கள் இதையே கேட்பார்கள் என நினைத்த நம்ம ஷர்தாஜி கடற்கரையோரம் 1 கிலோ மீற்றர் தள்ளிப்போய் அங்கே சண்பார்த் எடுக்க திட்டமிட்டார். சென்ற வழியில் இன்னும் ஒரு ஷர்தாஜி சண்பார்த் எடுத்துகொண்டிருப்பது தெரியவே
அவரிடம் " Are you relaxing”? எனக்கேட்டார் நம்ம ஆள்…அந்த ஷர்தாஜி நல்ல அறிவுள்ளவர் எனவே அவரும் உடனடியாக Yes I am relaxing எனத் தெரிவித்தார் உடனே வந்ததே நம்ம ஷர்தாஜிக்கு கோபம்.. யோவ்வ்….இங்க இருந்து என்னையா செய்யிறாய்…அங்க உன்னை காலையில இருந்து எட்டு வெள்ளைக்காரனுக தேடித்திரியிறாங்க உடன அங்கபோ…என்றார்

Saturday, September 11, 2010

கவிதையும் இல்லை! ஹைக்கூவும் இல்லை!! (றிப்பீட்டு )

யதார்த்தம்.


மரித்துப்போனவனின்
மனதுக்கு மட்டும் புரியும் எது யதார்தம்
விஞ்ஞானம் முரணாக…

தேவை.


தேவை… . தேவையென்ற கேள்விகள்
ஏது மற்ற நிரம்பல்கள்.

ஆளம்.


அற்புதங்கள், ஆச்சரியங்கள்
ஐ..ஐ..யோ  முடிந்துவிட்டதே என் ஆயுள்.

மனைவி.


நிச்சயிக்கப்படாத நிட்சயதார்தம்.
தேவதையின் அருள், சாத்தானின் சாபம்
இரண்டினதும் ஒரே உருவம்.

கடவுள்.


உயிர்களுக்காக அத்தனை அழகும் படைத்தும்
பொறித்துவிட்டு போகவில்லை
உபயம் நான் என்று…

சாத்தான்.


ஸ்ரீ லங்கா -ஈழத்தில் தமிழர்படுகொலை..
சீனா -திபெத்தை ஆக்கிரமித்தது..
பாகிஸ்தான் -ஸ்ரீ லங்காவுக்கு உதவி…
ஆரம்பங்கள் அதன் விம்பங்கள்.

தமிழன்.


உலகமெங்கும் பறந்து
பிறர்கூடுகளில் முட்டையிடும் பறவைக்கு
சொந்தமாக இல்லை ஒரு வளை.

துரோகி.


அடிப்படை மரபுரிமைகள்
என்றும் மறைவதில்லையாம்
சொல்கின்றது விஞ்ஞானம்…
உண்மைதான்..ஆப்பிள் கடித்த நாள்முதல்
தொடர்கின்றதே..

நட்பு.

சார்பியல் பொய்யில்லை,
தனித்து நிற்காத அட்டைகள்
சார்ந்து தலை முட்டி நிலைத்து நிற்கின்றதே..

நன்றி.


பரஸ்பர சந்தோசம்
நான் பண்பானவன்
செய்தவன் மனம்குளிர்கின்றது…

Tuesday, September 7, 2010

இந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? - ஒரு திறந்த போட்டி.


கடந்த ஒரு பதிவிலே பாடல்களின் இடை வரிகளை குறிப்பிட்டு அந்தப்பாடல்களின் ஆரம்ப வரிகளை கண்டு பிடியுங்கள் என்ற திறந்த ஒரு போட்டி பதிவை பதிவிட்டு அசந்துபோனேன். ஏனென்றால் அதற்கு கிடைத்த வரவேற்பும் பங்கு பற்றிய நண்பர்களின் தொகையும் என்னை பிரமிக்க வைத்துவிட்டது.
தொடர்ந்தும் பல பதிவுலக நண்பர்கள் அவ்வாறான போட்டி பதிவுகளை எழுதுங்கள் மிகவும் சுவாரகசியமாக உள்ளது என்று கேட்டுக்கொண்டனர்.
அந்த வகையிலேயே பதிவுகளுடன் சம்பந்தமுடைய வகையில் பெரும்பாலும் எமது பதிவர்கள் எல்லோருமே பிரபரல எழுத்தாளர்களின் நாவல்கள், எழுத்துக்கள்மேல் வாசிப்பு புலிகளாக உள்ள காரணத்தால் இந்தப்போட்டியை பதிவாக இடலாம் என்று முடிவெடுத்தேன்.

இங்கே பல பிரபலமான எழுத்தாளர்களின் நாவல்கள், கட்டுரைகளில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை தருகின்றேன்.  பல தடவைகள் நீங்கள் படித்த இரசித்த எழுத்தாளர்களின் எழுத்துநடைகள்தான் அவை.
எங்கே நீங்கள்தான் வாசிப்பு புலிகள் ஆச்சே.. ஒவ்வொரு எழுத்துநடையும் யார் யாருடையவை என்று வாசிக்கும்போதே ஊகித்துக்கொள்ளலாமே!
கிழே தரப்படும் இலக்கமிடப்பட்ட ஒவ்வொரு எழுத்துநடைகளும் யார் யாhருடையவை என உங்கள் மேலான பின்னூட்டங்களில் அதே இலக்க வரிசையில் தெரிவியுங்கள். அனைத்தையும் கண்டு பிடித்தவர் உண்மையில் வாசிப்பு புலிதான் என்று இந்த பதிவுலகமே ஒத்துக்கொள்ளும்.

சென்றமுறை பின்னூட்டங்களை மட்டறுக்காமல் வெளிப்படையாக விட்டதன் காரணமாக உடனடியாகவே பல சூரர்கள் கெட்டிக்காரத்தனத்தை வெளிப்படுத்திவிட்டார்கள் இதனால் பின்னர் வந்தவர்களால் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது.
இந்த முறை அப்படி இல்லை. பின்னூட்டங்கள் மட்டுப்படுத்தப்படும். போட்டி அசல் போட்டிதான். எங்கே குவியட்டும் உங்கள் பின்னூட்டங்கள் சரியான விடைகள் என..
போட்டிக்கு நான் தயார் நீங்கள் தயாரா?

01. நீ என் மதை பறித்துக்கொண்டு “காக்கா தூக்கிட்டுப்போச்சு!” என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை. நானும் “இல்லே..இல்லே..என்று உன்னை சுற்றிவரமாட்டேன். பதிலாக நீ பறித்த அடுத்த நொடியே “பறிச்சுட்டா.. பறிச்சுட்டா..” என்று கத்தியவாறே உலகமெல்லாம் ஓடுவேன்.

நீ என் மனதை அருகே வந்து தொட்டு பறிக்கவேண்டும் என்பதில்லை. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்து ஒரு புன்கை வீசினாலோ ஒரு பார்வைத்தூண்டில் வீசினால்க்கூடப்போதும். காக்கா உட்கார்ந்துகொண்டதும் விழும் பனம் பழமாய் என் மனது உன் மடியில் விழுந்துவிடும்.

02. இதுநாள்வரை தான் கட்டுப்பாடாக வாழ்ந்ததற்கு காரணம் தாத்தாவிடம் தனக்கு இருந்த அச்சம்தான். என்பதை விரைவில் நீரூபித்தார்…………..;.
முதல்வேலையாக டில்லி அருகே யமுனை நதிக்கரையில் கேளிக்கைகளுக்காகவே ஒரு மாளிகை கட்டப்பட்டது. அங்கு …………; அருகில் மதுக்கோப்பைகள் அடுக்கிவைக்கபட்டிருந்தன. படுக்கையினை சுற்றிலும் மதி மயக்கும் மங்கையர்கள். கெய்கூபாத் ஆட்சியில் ஒவ்வொரு மறைவிடத்திலிருந்தும் கேள்விக்குரிய பெண்கள்தான் வெளிப்பட்டனர்.
ஓவ்வெலாரு தெருவிலும் கும்மாளம் தலைவிரித்தாடியது.
நீதிபதிகள் கூட மயக்கத்தில் தெருவில் தள்ளாடிக்கொண்டிருந்தார்கள்.

03. இரைச்சலும் இரைச்சலை அடிப்படையாகக்கொண்ட மனித உரையாடல்களும் தரும் உளவியல் நெருக்கடிகள் இன்று உலகலாவிய முறையில் மனித சமுகத்தை அச்சுறுத்தும் வியாதிகளாக பரவியிருக்கின்றது.
நமது அற்புதமான சங்கீதக்கருவிகளான ஷெனாயும், சரோதும் துக்கதினங்களை அனுஸ்டிக்கப் பயன்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் , துரதிஸ்டவசமாக  நாம் மௌனத்தை துக்கத்தின் அதடையாளமாக மட்டும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

மௌனம் ஒரு கொண்டாட்டம்.
மௌனம் ஒரு இசை
மௌனம் ஒரு மொழி.

04. மனதிற்கு கிழே மனமற்ற இடத்தில் கிடப்பது அங்கே கிடந்தவாறு எழுந்திருந்து வெளியே பார்ப்பது, பேசுவது என்பது ஏற்பட்டுவிட்டது. இப்படி வாக்கியங்கள் ஆக்குவதைத்தவிர வேறு எப்படியும் சொல்வதற்கு இல்லை.
சொல்ல சிறிது வெக்கமாகவும் இருக்கின்றது.

இது நாணமல்ல சொல்லவே முடியாது என்பதால் ஏற்பட்ட நிலை. எதற்கு இதைச்சொல்லவேண்டும் என்கின்ற வினா எழுந்ததால் உண்டான மனப்பின்னடைவு.

05. அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை
மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை
நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன்
பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன்
உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில்
வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.
எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது? ஒரு
பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த
அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.

06. உன்னை தொடாது முத்தம் கொடுக்கலாமில்லையா? அதுக்கு ஒரு முறை இருக்கு! என்று குனிந்து உதடுகளால் அவள் உதடுகளை ஒத்தி “இதற்குப் பெயர் உமார்கய்யாம் முத்தம்”
அவள் விலகிக்கொள்ள கையைப்படித்தான். முதலில் திமிறினாள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த திமிறலின் உத்வேகம் குறைந்தது.
வேண்டாம்…வேண்டாம்.. என்ற வார்த்தை எதிர்ப்புகளுக்கு வந்து அதுவும் மழுங்கப்பட்டு, அப்படியே நாற்காலியில் இருவரும் விழுந்தனர்.

நியான் வெளிச்சம் போட்டு போட்டு அணைக்க, அவன் கைகள் அவள் முதுகை வளைக்க, தன்னுடன் ஒட்ட வைத்துக் கொள்ள, நெஞ்செல்லாம் அவனை நிரப்பினால்ப்போல மூச்சு திணறியபோது….

07.  உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.
அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள்.
உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.
சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.
அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படி யாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத்தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

08. நான் சாதாரணமான ஆள்தான். என்றாலும் இன்றைய மந்திரிகள் போன்றவர்களைவிட எவ்வளவோ மேலானவன். உலகம் சுற்றியவன். பூரணமான ஒரு பகுத்தறிவு வாதி. சொத்து சம்பாதிக்கவேண்டிய அவசியம் இல்லாதவன். சொந்தத்திற்காக பணம் சேர்க்கவேண்டிய தேவைகள் இல்லதாதவன்.

சரி இந்த எட்டு உரைநடைகளையும் எழுதியவர்கள் யார் யார் என்று இலக்கப்படி எழுதுங்கள் பார்ப்போம்.
குறிப்பு – தேடுதளங்களில் வசனங்களை கொடுத்து தேடாதீர்கள். அவற்றில் பயன் இல்லை.

Sunday, September 5, 2010

ஹொக்ரெயில் (05.09.2010)

மனம்கொத்தும் சாருநிவேதிதா.

பொதுவாக எழுத்தாளர் சாரு நிவேதிதா என்றாலே பலபேருக்கும் பல பல நினைவுகள் வந்துவிடுவது என்னமோ மறுக்கமுடியாத உண்மைகள்தான்.
அவரது எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் கூட அவர் ஏதாவது எழுதினால் வந்து எட்டிப்பார்த்துகொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது உண்மையே.
இதற்கிடையில் நிர்வாணம், பச்சை, டாய்ஸ்மார்க், விரசம் என்ற அடைமொழிகளையும் சேர்த்து எழுத்தாளர் என பலர் அவரை நேரடியாகவே விமர்சனம் செய்வதையும் பார்த்திருக்கின்றேன். இத்தனையும் ஏன் சாருவின் எந்த நூலைக்கூட படிக்காதவர்களே அவரை விமர்சனம் செய்ததையும் கண்டு எனக்குள் சிரித்திருக்கின்றேன்.

என்னைப்பொறுத்தவரை பல இடங்களில் கொஞ்சம் ரூ மச்தான் என்று சொல்லியும், அவரின் சில கட்டுரைகளை படித்து அடடா நம்மாளு இப்படியும் எழுதியுள்ளாரே என வியந்தவைகளும் உண்டு.
பொதுவாக சாரு எழுதும் அரசியல் கட்டுரைகளை முற்றிலும் உடன்படாது விட்டாலும் வியந்திருக்கின்றேன். அதிகாரம், அமைதி, சுதந்திரம் அதற்கு ஒரு உதாரணம். அவரை இரண்டுதடவை சந்தித்திருக்கின்றேன்.
அவருக்கு மின் அஞ்சல் ஒன்று அனுப்பிவிட்டு, வந்தபோது இரண்டாவது நிமிடத்திலேயே அழைப்பெடுத்து என்னை திகைக்கவைத்து சந்திக்க வரச்சொன்னவர் அவர்.

தற்போது ஆனந்த விகடனின் அவர் தொடராக எழுதிவரும் “மனம் கொத்திப் பறவை” சில விமர்சனங்கள் இருந்தாலும் எனக்கு பிடித்துள்ளது.
பலவிடங்கள் பற்றியும் சிலாகித்துவருகின்றார் மனுசன்.
“மாட்டின் வயிற்றில் இருக்கும் மூன்றோ அல்லது நான்கு மாத கன்று குட்டியை மாட்டின் வயிற்றில் இருந்து அறுத்துஎடுத்து அதில் உப்பும் இன்ன பிறவும் அப்படியே முழுசாக பர்பிக்சியூப் ஸ்ரைலில்…” வேற்று நாட்டுக்காரர்களின் உணவு வகைகளை சொல்லுகின்றார் சாரு. செக்ஸை மட்டுமா? சாப்பாட்டைக்கூட அருவருக்கத்தக்க வகையில எழுதுறாரே நம்ம ஆளு!!

கடந்தவார தொடரிலே ஹிட்டலர் தனது நாஜி பிரசாரத்திற்காக சினிமாவை பயன்படுத்தியதாக குறிப்பிட்டு, “Triumph of the will” என்ற திரைப்படத்தை குறிப்பட்டிருந்தார். மிக அருமையான தகவல் தேடிப்பிடித்து ஒரு பெரியவரிடம் வீடியோ கொப்பியாக இருந்த அதை தூசி தட்டி, இத்துறையில் உள்ள நண்பனிடம் கொடுத்து அதை தெளிவாக்கி அவனது வீடியோ கொப்பி டெக்கிலே பார்த்தேன். உண்மையில் பிரமித்துப்போனேன்.

மனம் கொத்தி பறவை மனதிற்குள் புகுந்துவிட்டது.

ஒரு விசியத்தை கவனித்தீர்களா?
2008, 2009 கால கட்டங்களில் ஆளுக்காள் மாறி மாறி 2011 இல் நாங்கள்தான் ஆட்சி, நான்தான் முதல்வர் என்ற ரேஞ்சுக்கு ஆளாளுக்கு பேசி வந்தார்கள்.
2011 இல் நான்தான் சி.எம். என்று ஆளாளுக்கு காமடி பண்ணிட்டு இருந்தவங்க எல்லாம் அட 2011 கிட்ட நெருங்கிவிட்ட இந்தவேளையில் மூச்சு சத்தமே கேட்காமல் இருக்கிறார்களே!!
இப்போ அரசியல் பண்ணுராங்களா? அல்லது இப்போதுதான் அரசியவேலே புரிய ஆரம்பிச்சிருக்கா??

நல்லூர் பெரும் திருவிழா.


யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுhமி கோவில் பெரும் திருவிழா ஆரம்பமாகி இன்று 22 நாட்கள் ஆகிவிட்டன. திருவிழா வழமைபேலவே இடம்பெற்றுவருகின்றது. இம்முறை போக்குவரத்து சிக்கல்கள் இல்லாத காரணத்தினால் கோவிலுக்கு வரும் மக்களின் தொகை முன்னரைவிடக் கூடியுள்ளது என்பது உண்மை.
அதேவேளை ஆலய சூழல்களில் முன்னைய நாட்களில் பிரசங்கங்கள், கர்னாடக சங்கீதக்கச்சேரிகள், கலைவிழாக்கள், வினோத நிகழ்வுகள் என்பன நடக்கும் அங்கெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.
இப்போதும் பிரசங்கம், கர்னாடக சங்கீத கச்சேரிகள் என்பன நடக்கின்றதுதான் ஆனால் பொறுமையாக இருந்து அவற்றை கேட்கும் மக்கட்கூட்டம் இன்று காணமற்போய்விட்டது. பெரும்பாலான மக்கள் சுவாமி வெளிவீதி வலம்வந்து கோவிலின் உள்ளே சென்றவுடனேயே வீட்டுக்கு திரும்பிவிடுகின்றார்கள்.
ஆக மிஞ்சி மிஞ்சிப்போனால் ஐஸ்கிரீம் கொட்டகைகளில் கூடுகின்றார்கள். முன்னர் நிகழ்வுகளை இரசித்த ஒரு சமுதாயம் இன்று அதில் இரசிப்பு காட்டாத தன்மை என்னெவென்று சரியாக புரியவில்லை.
ஓன்று மன விரக்தி, அல்லது கேபிள் ரி.விகளின் ஈர்ப்பு!!

அம்மா...அன்பு


சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

நீண்டநாட்களின் பின்னர் பூ திரைப்படம் சலனமே இல்லாமல் என் இதயத்தில் கல்லெறிந்துவிட்டுப்போன ஒரு அற்புதமான திரைப்படம்.
ஓவ்வொரு மென்மையான மெல்லிய உணர்வுகளையும் கோர்த்து கட்டி சசி இந்தப்பூவை தந்திருந்தார். திரைப்படம் தொடங்கியதுமுதலே கண்களின் ஓரம் ஈரத்துடன், முடியும்வரை பார்த்த அற்புதமான திரைப்படம்.
குறிப்பாக இந்த திரைப்படம் பற்றி கூறியவர்கள் பலர் சொல்லமறந்த கதை எஸ்.எஸ்.குமரனைப்பற்றியது. பின்னணி இசையில் பின்னி எடுத்திருப்பார் குமரன்.
இந்த திரைப்படத்தில் எனக்கு பித்த பாடல் “ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே என்ற சின்மயின் சிலித்த குரலில் ஒலிக்கும்பாடல்.
ஒருமுறை ஆறுதலாக இருந்து பார்த்து, கேட்டுப்பாருங்கள்.
இந்தப்பாடற் காட்சியில் அவளது குழந்தைக்காலத்து நினைவுகள் வருகின்றன.
அவளது அண்ணன் ஜெட் விமானம் புகையினை கோடாக விட்டுப்போவதை இவளுக்கு காட்டுகின்றான். இவளோ தனது மனம் கவர்ந்தவனிடம் ஓடுகின்றாள். அதை அவனுக்கு காட்டுகின்றாள். அங்கே அந்த விமானத்தின் கோட்டினை தான் இரசிக்காமல் அவன் அதை இரசிப்பதைப்பார்த்து இவள் இரசிக்கின்றாள். எவ்வளவு ஒரு அழகான மனதை நனைக்கும் காட்சி…

அடடா…அற்புதம்.

தமிழ் திரைப்பட இயக்குனர்களே சலீம் கோஷை கவனியுங்கள்.

தமிழ்த்திரைப்படங்களில் இப்போது வில்லன் நடிகர்களுக்கான தெரிவுகள் பெரும்பாலும் பிழையானதாகவே உள்ளன.
ரகுவரன், பிரகாஷ்ராஜ், நாசர், ஆகியோரின் தரத்தில் தற்போது எந்த வில்லநடிகரும் தரமானவராக அறிமுகமாகவில்லை என்பது பெரிய குறையாகவே உள்ளது.
ரகுவரன் தனது வித்தியாசமான நடிப்பின்மூலம், அதிலும் பலரையும் கவர்ந்து இரசிக்கும் தனமான நடிப்பின்மூலம் கொடி நாட்டிப்போனவர்.
அதே போல பிரகாஷ்ராஜ், நாசர் என்பவர்களும் பல திறமைகளையும், நடிப்பாற்றலையும் தம்மகத்தே கொண்டுள்ளனர்.
இவர்களைப்போலவே தமிழ் இயக்குனர்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் விட்ட திறமையான ஒரு நடிகர் சலீம் கோஷ்.
வித்தியாசமான ஒரு நடிப்பு, அழகான குரல், பயமுறுத்தும் நடிப்பு, பாவங்களை மாற்றும் கண்கள் என புகுந்துவிளையாடுபவர் சலீம் கோஷ்.
வேற்றிவிழாவில் அந்த ஜிந்தாவை யாரும் அவ்வளவு சிக்கிரமாக மறந்துவிடுவார்களா என்ன? தர்மசீலன், சின்னகவுண்டர், திருடா திருடா, சீமான், ரெட், சாணக்கியா, இறுதியாக வேட்டைக்காரன் ஆகிய தமிழ்த்திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னைக்காரராக இருந்தாலும் தற்போது மும்பைவாசியாக இந்தி படங்களில் நடித்துவருகின்றார் இவர்.
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலுமே ஒரு முத்திரையினை இட்டுச்செல்லும் சலீம் கோஷை தமிழ் இயக்குனர்கள் அடிக்கடி மறந்துவிடுவதுதான் ஏன் என்று தெரியவில்லை!!!
“வேதநாயகம் என்றால் பயம்” என்று பயப்படுகின்றார்களோ???

சின்ன அலைகளும் சுனாமியும்.

முகில்களுக்கு பின்னால்
மழை..
கரைகளுக்கு பின்னால்
அலை..
வலைகளுக்கு பின்னால் -இவன்
வாழ்க்கை!

மென்மைகளே
வன்மைகளை ஆளும்
விநோதம்!

சூரியனாக விரும்பும்
கண்களை -வெறும்
சிலந்தி வலைகளால் கட்டாதீர்!

அறியாமை;
"அமைதியை"
அடங்குதல் என
அர்த்தம் கொள்ளும்- விளைவு
இந்த சின்ன அலைகளே..
பின்னர்
சுனாமிகள் ஆகி விடுகின்றன!!
(நண்பர் மயூரனின் கவிதை ஒன்று)

சர்தாஜி ஜோக்.
நம்ம ஷர்தாஜி பன்டாசிங்கும் அவரது “ஹசின்” ஷன்டாசிங்கும் ஓய்வுநேரங்களில் ஏரியில் மீன்பிடித்து பொழுதைக்கழிப்பது வழக்கம். அப்படி ஒரு மாலையில் இருவரும் ஒரு படகை வாடகைக்கு எடுத்துப்போய் மீன்பிடித்தனர். அன்று என்ன மாயமோ தெரியவில்லை வகை தொகையான மீன்கள் அவர்களிடம் பிடிபட்டன. உடனே நம்ம ஷர்தாஜி ஷன்டாசிங்கிடம்இ
நான் நினைக்கின்றேன் மீன்களின் பஜார் இந்த இடம்தான் போல அதுதான் இங்க எக்கச்சக்கமான மீன்கள் பிடிபடுகின்றன…எனவே இந்த இடத்தை குறித்து அடையாளம் ஏதாவது வைத்துவிட்டுவா என்றார்.
அடுத்தநாளும் அவாவுடன் இருவரும் படகில் ஏறி ஏரியின் நடுப்பகுதிக்கு வந்தனர்…நம்ம ஷர்தாஜி கேட்டார்…எலே…நேற்று நான் மீன்களின் பஜார் உள்ள இடத்தை அடையாளப்படுத்த சொன்னேனே? எங்கே அடையாளத்தை காணவில்லை எனக்கேட்டார்…அதற்கு ஷன்டாசிங்….படகின் அடியில் “+” என அடையாளம் வைத்திருந்தேன் பார் என்றார்….அதற்கு நம்ம ஷர்தாஜி…
அடே முட்டாளே…நாம் இன்று வேறு படகில் அல்லவா வந்திருக்கின்றோம் என்றார்.

LinkWithin

Related Posts with Thumbnails