Saturday, May 4, 2013

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.......



வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது.
மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்புகை, என முழுவதும் மனதுக்குள்ளும் ஒரு எரிவை ஏற்படுத்திவிடும்.

பரபரப்புடன் பிங் கலர் குடையை பிடித்துக்கொண்டு நிலப்பக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தவள், நெருசலில் சில ஆண்டிமாரும், சில நடுத்தரங்களும் உஸ்.. உஸ் கொட்டியபோதுதான், குடை அவர்களுடன் உரசிப்பார்த்ததை உணர்ந்து அவசரமாக தனது குடையினை சுருக்கிக்கொண்டாள்.
அவள்  இலங்கையில்தான் வசித்துவந்தாலும் சத்தியமாகத்தான் அவளுக்கு வெயில் ஒத்துவராது.

நிலப்பக்கத்தில் இருந்து கடற்பக்கமாக மாறினால் கொஞ்சம் வெயில் குறைவாகப்படும் என்று அவளது ஆறாவது அறிவு அந்தப்பக்கம் இழுக்கவே மற்றப்பக்கமாக கடக்க எத்தனித்தவள் தன்னிலை மறந்து கொஞ்சநேரம் ஸ்தம்பித்து நின்றாள்...
ஆமாம் அவளைச்சுற்றி நுவரேலியாவின் குளிர் சூழ தொடங்கியது, கொழுத்தும் வெயில் சண்கிளாஸினூடே பார்ப்பதுபோல மங்கிப்போனது, அவளைச்சூழ புரூட் பெர்பியூம் நறுமணம் பரவ தொடங்கியது......
ஆம் நிச்சயமாக அவன் வந்துவிட்டான்...... இது அவனேதான் என்று உணர்ந்த மறுகணமே அவளது முகம் இன்னும் சிவந்துகொண்டது. 

ஓவ்வொன்றையும் இரசித்தபோதும் அவன் பின்தொடர்வதை உணர்ந்த அவள், அவசரமாக தன் நடையினை வேகமாக்கிக்கொண்டாள். அவன் வந்த அறிகுறிகள் ஒன்றும் குறையாததைக்கண்டு அவன் தனது நடைக்கு ஈடாகவே தானும் பின்தொடர்வதை அறிந்துகொண்டாள். மனதிற்குள் விபரிக்கமுடியாத ஒரு கிளுகிளுப்பு! ஆதனால் அவளுக்கு பயங்கரமாக ஒரு படபடப்பு ஏற்பட்டது.

தான் முதல் நினைத்ததுபோலவே வாகனங்களை சமாளித்துக்கொண்டு அவசரமாக எதிர்த்திசை சென்று, அதே அவரமாக தரிப்பிடத்தில் இருந்து புறப்பட தொடங்கிய பஸ்ஸில் அது என்ன பஸ்? எத்தனையாம் இலக்கம் என்பதைக்கூட பார்க்காமல் ஏறிக்கொண்டாள்.
பஸ்ஸில் கொஞ்சம் கூட்டம்தான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நின்றவள், தன் அருகில் நிலவிய குளிர்மை அதிகரித்திருப்பதையும், பூருட் பெர்பியூம் மிக அருகில் மணப்பதையும் உணர்ந்து கால்கள் நடுங்கத்தொடங்க பயந்தவளாக அதேநேரம் அதை இரசிப்பவளாக முகத்தில் சிறு புன்முறுவல் பூத்தாள்.

என்ன 155 பஸ்ல ஏறியிருக்கிறீங்க? மோதரைக்குத்தானே போறீங்க? என்று அவள் காதுமடல்களின் பின்னால் குழைவான குரலில் அவனது குரலைக்கேட்டதும் சொக்கித்து நின்றாள். 
அந்தநேரத்தில் கொன்டக்டர் வரவே மோதரைக்கு இரண்டு என்று சிங்களத்தில் சொல்லி காசைக்கொடுத்தான் அவன்.
 மற்ற ஆள் யார்? என்று சிங்களத்தில் கென்டக்டர் கேட்டபோதுதான் இயல்பு உலகத்திற்கு வந்தான் அந்த காதல் கிறுக்கன்.

Thursday, May 2, 2013

நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை.



ஆம் அது ஒரு காலம்....... யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை அமைதி காக்கத்தான் வந்திருக்குது, எங்கட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று கனக்கக்கப்பேர் அவையை பூப்போட்டு வரவேற்ற காலம்.
அதாவது 1987 ஆம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மிஞ்சி மிஞ்சிப்போனால் வெறும் இரண்டு மாத்களே. அதற்குள் என்றுமில்லாத விமர்சையாக வந்து போன நல்லூர்த்திருவிழா!

சும்மா சொல்லக்கூடாது இந்த இரண்டு மாதங்களும் யாழ்ப்;பாணத்தைப் பொறுத்தவரை ஒரு ஜொலிபுள் மாதங்கள் தான். அப்ப விடலை கண்ட அண்ணை அக்கா மார், ரியூசனுகளுக்கும் சாலியில (ஒரு வகை மோட்டார் சைக்கிள்) போய் இறங்கினது இப்பவும் என் கண்ணில் நிற்கிறது.
ஜி ரென் டெக்குகளும், சொனி ரீவிகளும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திறங்கி வீடியோ வாடைக்கு விடுறவைபாடு படு பிஸியாக இருந்த காலகட்டம் அது.

இந்தியாவில இருந்து பாஸ்போட் இல்லாம வந்திறங்கிய அமைதி காக்கும் படையுடன், யாழ்ப்பாணத்திற்கு அந்த நதியா மோகமும் வந்திறங்கியதாகவே இப்பவும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.
தமிழ்நாட்டுக்காரார் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும், அங்க முதல் முதல் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினதென்டால் அது குஸ்புக்கு என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்...... ஆனால் யாழ்ப்பாணத்திலை அந்தநேரம் நதியாக்கு இருந்த மார்க்கட்டே தனி ரகம்.

அந்த நாட்களில் பூக்கும் பூக்கள் எல்லாம் நதியாவாகவே பல அண்ணன்மாருக்கு பூத்தன, தலை வெட்டிலிருந்து பாவாடை வெட்டுவரை நதியாவாகவே பல அக்காமார் மாற முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
நதியாவின் வகை வகையான புகைப்படங்கள் சேர்ப்பதிலே பல அண்ணன்மாருக்கு போட்டி நடந்துகொண்டிருந்தது. 
நதியாவின் புண்ணியத்தில் பான்ஸி கடைகள் எல்லாம் வீறுகொண்டு எழுந்து கூட்டத்தில் சிக்கித்தவித்தன. பல பான்ஸி கடைக்காரர்களின் யாழ்ப்பாண பீக் ரைம் இதுதான் என்று இன்றும் பல மூத்த பான்ஸி கடைக்காரார்கள் சொல்லிக்கொண்டிருகின்றார்கள்.

புடவைக்கடைகளில் நதியா புரொக், நதியா ஸ்கேட், நதியா புளவுஸ், நதியா பெல்ட், நதியா பியாமா என்று நிறைய, பன்ஸி கடைகளில் நதியா தோடு, நதியா வளையல், நதியா ஹேர் பான்ட், நதியா கம்மல், நதியா பட்டன் என ஏராளமான நதியா ஐட்டங்கள் வெளியில் எடுத்து 15 நமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
மறு புறம் நதியா செருப்பு, நதியா சைக்கிள், நதியா பொட்டு, நதியா ஹான்ட் பாக் என குவிந்துகொண்டிருந்தன.
இவற்றில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாம் நதியா திரைப்படங்களில் உடுத்து, அணிந்து நடித்த பார்க்கக்கூடிய ஐட்டங்கள்தான்.
ஆனால் அதே நேரத்தில் நதியா சென்ட் என்று ஒரு ஜஸ்மின் நறுமண சென்ட் வகை அப்போது பெண்கள் பெரும்பாலானவர்கள் பாவித்த ஒன்று!

சரி........ இவ்வாறு வாங்கிக்குவித்தவற்றை போட்டுக்காட்டுவதற்கான களம் ஒன்று வேண்டாமா? கணக்காக வந்தது நல்லூர் கந்தன் திருவிழா. அப்பா அந்த 25 நாட்களையும் வேற எந்த வருட 25 நாட்களுடனும் ஒப்பிட முடியுமா என்ன?
நதியா ஹாவ்சாறிகள் நிறைந்து நின்றன நல்லூர் வீதிகள் எங்கும்.

மேற்சொன்ன நதியா வகையறாக்களை விட மேலும் பல நதியா ஐட்டங்கள் வந்து குவிந்தன இதைப்பார்த்து வேறு விற்பனையாளர்கள் கூட தமது பொருட்களையும் நதியா என்ற அடைமொழியுடனே விற்கத்தொடங்கினர்.
நதியா ஐஸ்கிறீமில் இருந்து நதியா கச்சான் வரை சென்றது.

உண்மைதான் என்னைப்பொறுத்தவரை நதியா, மற்றும் நதியா கோஸ்மட்டிக் பொருட்களுக்கு அப்போதைய யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த வரவேற்பை அதன் முன்போ, அதன் பின்போ வேறு யாருக்கும் தரவில்லை.
யாழ்ப்பாணம் ஜொலிபுள்ளாக இருந்த அந்த 1987 ஜூலை, ஓகஸ்ட்டு மாதங்களில் அடித்த நதியாப்புயல் அதை நினைத்துப்பார்க்காத அளவுக்கு கரைபுரண்டு சென்றது அடுத்தடுத்து நிகழ்ந்த யுத்தங்களால்.

Wednesday, May 1, 2013

வல்லமை தாராயோ..........




இந்த வரிகள் இப்போதெல்லாம் அடிக்கடி இதயப்பொருமலுடன் முணுமுணுத்துக்கொள்ளும் வறட்சியான வார்த்தைகளாக இதயத்தில் தொக்கி நிக்கின்றது. 
'கலியுக முடிவுக்காலம் என குறிப்பிடப்பட்ட விபரணங்கள் எமக்கே நடப்பதுபோல ஒரு முரட்சியும் அப்பப்போ மிரட்டிக்கொண்டுதான் இருகின்றது'

உலகப்பரப்பில் நாம் யார்? நாம் சபிக்கப்பட்ட ஒரு இனமா? அரசியல் அநாதைகளா?
இவையே மனம் முழுவதும் மரணவேதனையை விட அதிக ரணம் தரும் சுய அதிஉச்ச கேள்வியாக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் துளைத்துக்கொண்டிருக்கின்றது.

கால தேச வர்த்த மானங்களைத்தாண்டி ஒரு முடிவின்றி வரையறையின்றி அல்லலும், இன்னலும்;தான் பரிசுகளாக மாறி மாறி வருவதென்றால் வாழ்வியலில் எங்கோ ஆழமான ஒரு புரழ்வு இருப்பதாகவே தெரியும்.
மறுபுறம் முடிவின்றி தொடரும் அல்லல்களின் இடையே பல தலைமுறைகள் மாறிவிட்டன. தலைமுறைகளின் சிந்தனை வயப்புகள் பெரும் வியப்பு நிலைக்கு இட்டுச்செல்கின்றன.

இந்நிலைக்கு காரணம் அவைதான், அவர்கள்தான், அவங்கள்தான், என மாறி மாறி விரல்களை சுட்டிக்கொட்டிக்கொண்டிப்பதிலேயே காலங்கள் கரைந்துகொண்டிருகின்றது. 
வரலாற்று, பூகோள, அமைவிட, கலாசார இருப்புகள்தான் நமக்கு பாதகமாகப்போகினவோ தெரியாது! 
சரியான ஒரு அரசியல் தலைமை இல்லை, பொறுப்பான ஒரு வழிகாட்டல் இல்லை, தோழ்கொடுக்க ஒரு நாடுகூட இல்;லை, அடக்கு முறையை எதிர்க்க ஒரு நாதி இல்லை, நாளைகள் மீது நம்பிக்கை மட்டும் எப்படி வரும்? 

இப்போதெல்லாம் நம்மில் பலரை பார்த்திருக்கின்றேன், எதையும் யோசிக்காமல், பத்திரிகை கூட பார்க்காமல் கஸ்டப்பட்டு தாம் உண்டு தம்பாடு உண்டு என்று இருக்கவேண்டும் என்றே பிரயத்தனம் எடுத்து வாழப்பழகுகின்றார்;கள், இருந்தபோதிலும் ஏதோ ஒரு வகையில் அவர்களையும் அக்கிரமங்களும், அஜாக்கிரகங்களும் துரத்திக்;கொண்டுதான் இருகின்றன.

ஒரு முப்பது வயதை கடந்து அடுத்த சந்ததியையும் கைகளில் ஏற்தியுள்ள பெண் ஒருவர்  'நான் பிறந்தது மயிலிட்டி ஆனால் நான் இன்றுவரை என் இடத்தில் வாழ்ந்ததில்லை' என கண்களின் ஈரத்துடன் சொல்வது ஒன்றும் செய்திக்;கான தொனிப்பொருள் இல்லை, அந்த சொல்லின் உள்ளே அவளின் ஆணிவேரே அறுக்கப்பட்ட வேதனை அடங்கியுள்ளது.

நாதியற்று குற்றுயிராய்க்கிடக்கும் ஒரு சமுதாயம் வேதனையுடன் வான் பார்த்து நிற்பதென்னமோ.... அட எங்காவது ஒரு ஒளிக்கீற்றாவது தென்படுகின்றதா என்பதுதான். இப்போது தென்படும் எரிகற்களை எல்லாம் நட்சததிரங்கள் என்று நம்பினால் மீண்டும் ஒரு ஏமாற்றததுடன் நிரந்தரமாக கண்மூடுவதை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

மீண்டும் இதெற்கெல்லாம் காரணம் அவங்கள்தான், அவர்தான், அவைதான், என்று சுட்டுவிரல்களைக் காட்டாமல் ஒட்டுமொத்தமாக உ(எ)ங்கள் யாருக்குமே வல்லமை இல்லை என்ற பெரிய உண்மையை ஒத்துக்கொண்டு.
இனியாவது சிந்தித்து சாணக்கியத்தனமாக வல்லமையாக இருக்க முயற்சி செய்வோமா?

(அடடா...... இந்த பதிவை பொறித்துக்கொண்டு இருக்கும்போது வீதியால் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது என ஒரு ஐஸ்பழ வாகன ஒலிபெருக்கி பாடிக்கொண்டு செல்கின்றது)

Tuesday, January 8, 2013

தேவதைக்கதைகளின் கதை – 02



பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், கொடுமை, அடிமை நிலை என்பவற்றினால் தவிக்கும் இந்த தேவதைக்கதாபாத்திரங்கள் கதையோட்டத்தால் அந்த சூழ்சிகளில் இருந்து தப்பி இறுதியில் உயர்ந்த நிலையை அடைவதாகவே கதையோட்டங்கள் யாவும் அமைந்துசெல்வதை கவனிக்கலாம்.

பாலர் பருவங்களில் அவர்களின் மனங்களில் விதைக்கப்படும் இந்தக்கதைகள், காலங்கள் கடந்தாலும் அவர்களின் மனங்களை விட்டகலாமல் இருப்பதற்கு அந்தக்கதைகளின் பாத்திர வார்ப்புக்களும் பிரதான காரணம்தான் எனலாம்.

பியூட்டி அன்ட் த பீஸ்ட்

இந்த தேவதைக்கதையின் நாயகியாகிய தேவதையின் பெயர் பெல்லி. மென்மையான எதையும் நேசிக்கும் மாசற்ற அன்புள்ளம் கொண்டவர்களுக்கு எவற்றின்மீதும், மயமோ, அச்சமோ, அதீத ஆசைகளோ கிடையாது அன்பு எந்தவொரு மாஜத்தையும் செய்துவிடும் என்று கருத்தை பறைசாற்றுகின்றது இந்தக்கதை.

இதுவும் ஒரு பிரஞ்சுதேசத்துக்கதைதான், 1740 ஆம் ஆண்டு பிரஞ்சுப் பெண் புனைகதை எழுத்தாளரான கேப்ரியல் ஸூசான் பார்போர்ட் விலனியூவ் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது என அறியப்படுகின்றது.
அதேவேளை 1756ஆம் ஆண்டு இதே கதையினை ஜென்னி மரீன் என்பவர் மீள் பிரசுரம் செய்துவைத்தபோதே இந்த தேவதைக்கதை மிகப்பிரபலம் அடைந்ததாக குறிப்புக்கள் கூறுகின்றன.
அந்தவகையில் அடுத்த ஆண்டாகிய 1757ஆம் ஆண்டே இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உலகமெல்லாம் பீஸ்ட்டுடன் அந்த தேவதை உலாவரத் தொடங்கினாள்.

இது மட்டுமன்றி மேற்படி பியூட்டி அன்ட் த பீஸ்ட் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடக அரங்கங்களில் பெரிதும் இடம்பிடித்த மக்களின் மனதைக்கவர்ந்த நாடகமாவும் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளுக்கு நவரசத்தையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்கும் இந்தக்கதை அவர்களை வெகுவாகக்கவர்ந்து கொண்டது எவ்வாறு என்ற சந்தேகத்தையே இல்லாது செய்துவிட்டது.

மனைவியை இழந்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார் ஒரு வர்த்தகர். அந்த மூன்று பெண்களிலும் இளையவளான மூன்றாவது பெண் பெல்லி ரொம்ப அழகானவள்.
அவளது அழகு மட்டும் அன்றி, அவளது இனிமையானபேச்சு, அன்பான அணுகுமுறை, மென்மை, நேர்த்தி என்பன பலருக்கு அவள் மேல் பேரபிமானத்தை ஏற்படுத்திவிட்டன.
இதனால் மூத்தவர்களான இரண்டு பெண்களுக்கும் இவள்மேல் பொறாமை இருந்துவந்தது. 

இந்தவேளை வர்தகரின் கப்பல் ஒன்று புயலிலே சிக்குண்டுவிட்டதாக செய்திவருகின்றது. அதனால் அவர்களின் தந்தையான வர்த்தகர் பெருந்துயரத்திற்கு உள்ளாகின்றார். அந்தவேளை பெல்லி அவருக்கு ஆறுதல் வார்ததைகள்கூறி அவரை ஆசுவதப்படுத்துகின்றாள். கப்பல் மீண்டும் கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருங்கள் என்கின்கின்றாள்.

அவள் சொன்னதுபோலவே வணிகருடைய கப்பல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்ததாக செய்தி வருகின்றது. சந்தோசமடைந்த வர்ததகர் கப்பலை பார்க்க பிராயாணத்திற்கு ஆயத்தமாகின்றார்.
அந்தவேளை தமது மூன்று பெண்களையும் அழைத்த தந்தை, உங்களுக்;கு என்ன வேண்டும் என்று வினவுகின்றார். அதற்கு பதிலளித்த முதலிரு பெண்களும், தமக்கு விதவிதமான உயர்தர ஆடைகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் என அடுக்குகின்றனர்.
ஆனால் பெல்லியோ தனக்கு எதுவும்வேண்டாம் என தந்தையின் நிலையை உணர்ந்து சொல்கின்றாள். ஆனால் அவளது தந்தை எதையாவது நீயும் கேள் மகளே என்றபோது.... சரி எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ மட்டும் வாங்கிவாருங்கள் என்றாள்.

துறைமுகத்தை அடைந்த தந்தை அங்கு தனது கப்பலை பார்த்துவிட்டு, நெடுந்தூரப்பயணமாக பெருநகரத்தில் தனது முதல் இரு மகள்மாரின் வேண்டுகோளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி நெடுந்தூரம் தனது வீட்டைநோக்கி பயணிக்கும்போது தாகம் பசி கழைப்பு நிலைக்கு உள்ளாகின்றார், தூரத்தில் அவர் கண்களுக்கு அழகான அரண்மனை ஒன்று தென்படுகின்றது. 

மகிழ்ச்சியுடன் அந்த அரண்மனையை அடைகின்றார், அங்கு எவரையும் காணமுடியவில்லை, ஆனால் நிறைய பழரசங்கள் முதல் மேசையிலே இருந்தன, அவற்றை எடுத்து அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றார். பின்னர் அறுசுவை உணவாக பலவேறான உணவுகள் நாவுக்கு ருசியாக அவருக்கு தெரிகின்றன அவற்றையும் உட்கொண்டு பசியாறுகின்றார்.
அடுத்து சோம்பலாக இருக்கவே காற்றோட்டமான இடத்தில் உயர்தர இலவம்பஞ்சு மெத்தையிலே படுத்து உறங்குகின்றார். 

உறக்கம், சோம்பல் இரண்டும் விடுபட்ட நிலையில் அப்போது மேசைமேலே இருந்த தேனீரை அருந்தியவாறே இந்த உபசரிப்பு செய்தவர் யார்? அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என அங்குமிங்கும் யாராவது உள்ளனரா எனத்தேடுகின்றார்.
அந்தநேரம் அந்த அரண்மனை தோட்டத்திற்கு வருகின்றார். அங்கே பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைக்கண்டு தனது இளைய மகளின் நினைவு வரவே ஒரு ரோஜா மலரை அவர் பிடுங்கிவிடுகின்றார்.

அந்தவேளையில் பேரிரைச்சலுடன் அவர் முன்னால் ஒரு பூதம் தோன்றுகின்றது...
ஏ...... மானிடனே உன் புத்தியை காட்டிவிட்டாயே........ அருந்த பழரசம், விதவிதமான உணவு, இளைப்பாற மெத்தை இத்தனையும் தந்தேன் ஆனால் இந்த நந்தவனத்தில் உள்ள பூக்களை கொய்ய உனக்கு உரிமை இல்லை. இந்தப்பூவை நீ யாருக்காக கொய்தாயோ அவரை நீ இங்கே சேவகம் செய்ய நீ அனுப்பி வைக்கவேண்டும் என ஆணையிடுகின்றது........

அதன் பின்னர் அந்த அரண்மனைக்கு வரும் பெல்லியின் அன்பால், கவரப்படும் பூதம் ஒரு கட்டத்தில் அவளைப்பிரிந்து இறக்கும் நிலைக்கு செல்லும்போது, பெல்லி ஓடிவந்து அந்த பூதத்திறகாக அழுவதும், அவளது தூய்மையான கண்ணீர் பட்டதும் பூதம் சாப விமோசனம் பெற்று அழகிய இளவரசனாகி பெல்லியையே மணந்துகொள்வதும் நீங்கள் அறிந்த கதைதானே!

இவ்வாறான தேவதைக்கதைகள் குழந்தைகளின் முனதில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு இந்த தேவதைக்கதைகள் தொடரை எழுதும் நானே சிறந்த உதாரணம். இந்தக்கதைகளை படித்த பாலர் காலத்திலே எனது பெரிய தந்தையார் வெளியூர் பிரயாணம் ஒன்று செல்லும்போது அன்பாக எம்மிடம் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச்சொல்ல 'எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ போதும்' என்று சொன்னவன் சாட்ஜாத் நான் தான்.

அடுத்த பதிவில் மீண்டும் ஒரு தேவதையுடன் உங்களை சந்திக்கின்றேன்.

Monday, January 7, 2013

தேவதைக்கதைகளின் கதை – 01


பாலர் பருவங்களில் பலரின் இதயங்களில்  மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்.
தலைமுறைகள் பல தாண்டியும் இந்தக்கதைகளில் வரும்தேவதைகளுக்கும், இந்தக்கதைகளுக்கும் ஏனோ வயதாகிவிடவில்லை. இந்தக்கதைகளை புனையும்போது இந்தக்கதைகளை புனைந்தவர்களுக்கு தெரியுமோ தெரியாது இந்த தேவதைகள் சாகாவரம் பெற்றவை என்று.

தேவதைகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? அந்தக் குழந்தைகளின் கற்பனைகளுடனான யதார்த்தப்பின்னல்களுடன் இந்த தேவதைகள் எப்படி இணைக்கப்பட்டார்கள்? குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என ஒவ்வொரு மருபுக்கும் இந்தத்தேவதைகளின் பாச்சல் எப்படி சாத்தியமானது என்பன போன்ற கேள்விகள் அதிசயிக்க வைக்கின்றன.

வெறுமனே ஐரோப்பிய காலாச்சாரமும், காலனித்துவமும், நாடுகாண்பயணங்களும் மட்டுமே இந்த தேவதைக்கதைகளை உலகமெங்கும் கொண்டு சென்றன என்று ஒற்றைவரியில் சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது.
மாறாக இந்தக்கதைகளில் வரும் தேவதைகளுக்கு ஐஸ்லாந்து என்றால் எக்ஸிமோக்களின் உடை உடுத்தவும், ஜப்பான் என்றால் ஹிமோனோவை போர்திக்கொள்ளவும், தென்ஆசியா என்றால் சேலை கட்டிக்கொள்ளவும் தெரிந்ததே அவை என்றும் அழியாத வரம பெற்று தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதற்கான காரணம் என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

ஐரோப்பிய கதைகள் மட்டும் இல்லாமல் இந்தியாவிலிருந்து பஞ்சதந்திரகதைகள், தெனாலி ராமன் கதைகள், அராபியாவின் ஆயிரத்தோர் இரவுகதைகள், ஈசாப்கதைகள் என்று கதைகள் ஆயிரம் வந்தன. இருந்தாலும் ஐரோப்பிய தேவதைகளின் காஸ்லியோ இல்லை காலனித்துவம் செய்பவர்கள்மேல் உள்ள உயரிய எண்ணமோ இந்த தேவதைக்கதைகள் பாலர்வயதிலேயே அனைவர் மனதிலும் பசுமரத்தாணிபோல் நச் என்று இறங்கிவிட்டன மனதில்.

சரி..... அந்த தேவதைகளை ஒவ்வொருவராக நினைவு படுத்திக்கொண்டு அவர்களின் கதைகளின் கதைகளை பார்ப்போமா?

ஸின்ரெல்லா...

பிரஞ்சுதேசத்திற்கு முதற்சொந்தமான இந்ததேவதை 'த லிட்டில் கிளாஸ் சில்பர்' அலலது ஸின்ரெல்லா ஆகிய கதைகளின் நாயகி ஆவாள்.
அறிந்த மட்டில் 1634 ஆம் ஆண்டளவில் இந்தக்கதை வெளிவந்ததாக அறியமுடிகின்றது.
சார்லஸ் பெர்லட் அவர்கள் எழுதிய இந்தக்கதை உலகம் முழுவதும் பலதடவைகள் மீள் வெளியீடு செய்யப்பட்டு சில நாடுகளில் சிலசில மாற்றங்களுடன் இன்றும் சிறுவர்களின் மனதை தொடும் முதல் தேவதையாக உலவருகின்றாள் இந்த ஸின்ரெல்லா........

அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒருவள் திடீர் அதிஸ்டத்தினால் இளவரசி ஆவதுபோல உருவாக்கப்பட்டுள்ளதே இந்தக்கதை.
இருந்தபோதிலும் ஆரம்பத்தில் கிரேக்கத்தில் இதுபோன்ற சாயலினான கதை ஒன்று வழக்கத்தில் இருந்துவந்ததாகவும், அதேபோல எகிப்தில் முதலாம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே வழக்கில் இருந்த ஒரு கதைபோலவே இநத கதையின் கரு உள்ளதாகவும் சுட்டிக்;காட்டப்பட்டுள்ளது.

இது தவிர ஒவ்வொரு தேசப்பதிவுகளிலும் சிறு சிறு மாறுதல்கள், கதைச்சூழ்நிலை மாற்றங்கள் உள்ளன என்பதும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்றாகவே உள்ளது. இருந்தாலும் பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்த நாடுகளில் ஆங்கிலப்பதிப்பே வந்து சேர்ந்தமையினாலும் அதேவேளை அந்தக்கதையே தற்போதும் தொடர்வதனால் நாம் முக்கியமாக ஆங்கிலப்பதிப்பு தேவதைகளுடனேயே வலம்வரவேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் பொதுவாக அற்புமான முடிவுகளையும், சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் முடிவுகளையுமே விரும்புவதனால் ஆங்கிலப்பதிப்புகளின் தேவதைக்கதைகளின் முடிவுகள் மிகவும் கழிப்பூட்டுபவையாக உள்ளன.
அதேவேளை சில நாட்டுப்பதிவுகளில் பல சோகமுடிவுகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழ்கின்றாள் ஸின்ரெல்லா. ஆனால் அவளது விதி, அவளின் தந்தை அவளைவிட வயதான இரண்டு பெண்குழந்தைகளை உடைய ஒரு விதவையை மறுமணம்புரிகின்றார்.
அதன் பின்னர் மாற்றாந்தாயாலும், சகோதரிகளாலும் ஸின்ரெல்லா கொடுமைப்படுத்தப்படுகின்றாள்.
ஒரு அடிமைப்பெண்ணாக அவர்களுக்கும், அவர்களின் வீட்டிற்கும் சேவகம் செய்துவருகின்றாள். அந்தநேரம் அரண்மனையில் ஒரு விடே நிகழ்வுக்கு அனைவரும் மன்னரால் அழைக்கப்பட்டு சென்றுகொண்டிருகின்றனர்.
இவள் மட்டும் அடுக்களையில் முழு வேலைகளையும் செய்துவிட்டு அயர்ந்து தூங்குகின்றாள். திடீர் என்று அவள்முன் ஒரு தேவதை தோன்றி, அவளை பேரழகியாக்கி, பூசணியை தேராகவும், எலிகளை குதிரையாகவும் ஆக்கி, அந்த விழாவுக்கு அரண்மனைக்கு போ என அனுப்பி வைக்கின்றது.
ஆனால் போகுமுன் அவளுக்கு ஒன்றை நினைவூட்டுகின்றது,
அது என்னவென்றால் இன்று நள்ளிரவு தாண்டினால், அவளது தோற்றம், மற்றும் தேர், குதிரைகள் அனைத்தும் சுய உருவத்திற்கு வந்துவிடும் அதன் முன்னர் நீ வீடு திரும்பிவிடவேண்டும் என்பதே அது.

பேரழகியாக அரண்மனை வரும் அவளை இளவரசன் கண்டு காதல் வயப்படுகின்றான், அவளுடன் நடனம் புரிகின்றான்,  மெல்ல மெல்ல நேரம் நள்;ளிரவை தொட்டு அலாரம் அடிக்கும் தருணம் தேவதை சொன்னது நினைவுவர, ஸின்ரெல்லா தனது இருபபிடததை நோக்கி ஓடுகின்றாள், அவள் ஓடும்போது அவளது பாதணி ஒன்று கழன்றுவிழுகின்றது........

அவளை திடீர் என பிரிந்த இளவரசன் காதல்  உணர்வு பீரிட, அவளது பாதணியை எடுத்து அவனது மந்திரியின் சொற்படி அந்தப்பாதணிகளை நகரில் உள்ள அனைத்து இளம் பெண்களையும் அணியும் படியும் பாதணி யாருக்கு பொருந்துகின்றதோ அவளே என் தேவதை என்று ஆணை இடுகின்றனர்.
பாதணியுடன் வீடு வீடாக வரும் சேவகர்கள், ஸின்ரெல்லாவின் வீட்டை அடைகின்றனர், அடுக்களையில் அடைந்து கிடக்கும்; ஸின்ரெல்லாவையும் அவளது வீட்டார்களின் பல்வேறு மறுப்புக்கு பின்னரும் அந்த பாதணியை அணிய வைக்கின்றனர். அந்த நேரம் அதே தேவதை தோன்றி அவளை முன்னர்போல அழகி ஆக்கியது. அதன்பின்னர் அவள் அந்த நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டாள் என அந்தக்கதை முடிகின்றது.

இது நாம் சிறுவயதில் படித்து இப்போ நமது சிறுவர்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் ஒரு தேவதைக்கதைதானே?

அடுத்த தேவதை யார்? அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.

Saturday, January 5, 2013

பிரபஞ்ச இரகசியம் இது!


எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…

மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.

மெல்ல மெல்ல..கண்கள் கூச திறந்து பார்க்கின்றேன்.. மிகை ஒளியுடன், ஒரு பிரபஞ்சம் வியாபித்திருந்தது. குறிப்பிட்ட இத்தை மட்டும் என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கு அங்கால் ஏதோ பரந்த ஒன்று வியாபித்து இருந்தது.

அடடே..முதன் முதலில் நான் அனுபவித்த உணர்வே இது..இத்தனைநாளாக இந்த உணர்வு எனக்குள்த்தானா? மறைந்திருந்தது? உணர்வுகளை நினைத்து பிரமித்துப்போகின்றேன்.
அந்த உணர்வின் பின்னரான… தாயவளின் கதகதப்பு, தந்தையின் இனிய அரவணைப்பு, சொந்தங்களின் பாசங்கள், உணவு உண்ணும்போது வேடிக்கை காட்டிய பறவை விலங்குகள், பள்ளிபோன முதலாம் நாள், விளையாடிய விளையாட்டுக்கள், பாடப்புத்தகங்களில் இருந்த பாடங்கள், முதன்முதல் பார்த்தமழை, பரீட்சை ஒன்றில் தோற்ற துயர்உணர்வு, முதல் முதல் இழந்த பாட்டனாரின் துயரம், மீசை அரும்பியபோது ஏற்பட்ட கிளர்ச்சி, மனது இலகித்த கன்னியர், முதற்காதல், கல்லூரிவாழ்வு, வேலைக்குப்போனது, திருமணம்கண்ட காட்சி, தாம்பத்தியசுகம், முதற்குழந்தை, இடமாற்றம், அடுத்த குழந்தை, குழந்தைகள் வளர்ப்பு, குழந்தைகள் கல்வி, அவர்களின் வாழ்வு, பாட்டனார் ஆனமை, மனைவியின் இழப்பு.. என அனைத்தும், கோர்வையாக வந்து வந்து போகின..

மூச்சுவிட மிகச்சிரமமாக இருக்கின்றது. என் பேர் சொல்லி மருத்துவர் அழைப்பதும் தூரத்தில் கேட்பதுபோல் தோன்றுகின்றது…

ஆ..மீண்டும் அதே உணர்வு…

எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…

மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.

(மீள் பதிவு)

Friday, January 4, 2013

மியூஸிக் தெரப்பி.




'இசையால் வசமாகா இதயமெது? இறைவனே இசைவடிவம் எனும்போது' என்று மெய்சிலிர்க்க வைத்திடும்பாடல் வரிகள் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் வரிகள் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு இசையின் மகத்துவம் பற்றி இன்று பல்வேறு ஆராட்சிகள் ஆச்சரியமான முடிவுகளை தந்துகொண்டிருகின்றன.
இசை என்பது மனிதனை மகிழ்வூட்டுவது, மனிதனை மட்டுமன்றி உயிரினங்களை சிலர்க்கவைக்கின்றது, மனித மனங்களின் சோர்வுகள், அலர்ச்சிகளை போக்கி புத்துணர்வை தருகின்றது என்பனவற்றை எல்லாம் கடந்து மருத்;துவரீதியில்க்கூட 
பல நோயாளர்களின் உள, உடல் ஆற்றல்களை மேம்படுத்தி இசையால் நோய்கள் நீங்கும் பண்புகள் பற்றி அண்மையில் ரீடேஸ் டஜஸ்ட்டில் வந்த கட்டுரை ஒன்று மனதை ஆச்சரியம் கொள்ள வைத்தது.

சுமார் எழுபது ஆண்டுகளாகவே இசையில் இருந்து நாம் அடையக்கூடிய வித்தியாசமான நன்மைகள் பற்றி பல நிபுணர்கள் பாரிய ஆராயவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களின் ஆராட்சிகளில் இசை மனித, உடல் மற்றும் மனதிற்குள் நடத்தும் ஆச்சரியங்களும், மாறுதல்களும் மிக ஆச்சரியமானதாகவும், எதிர்பார்த்ததைவிட பாரிய அளவு பிரமிப்புக்களை உண்டாக்கக்கூடியதாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இசை நோயாளர்களுக்கு மிக மிக நன்மையான ஒன்று அடித்துக்கூறுகின்றார்கள் அவர்கள்.

அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் மரினா என்ற பெண் பயங்கர கார்விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டாள். அவள் க்ளீவ்லான்டில் உள்ள செயின்லூக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.
சுற்றிலும் அறுவைச்சிகிற்சை நிபுணர்கள். மரினாவின் உடலின் பாகங்களை சிஸ்ரங்களுடன் இணைத்தார்கள். அவை அவளது மூளை அதிர்வுகளையும், இதயத்துடிப்பையும் பதிவு செய்தது. 
மறுபக்கம் இயர்போனை அவள் காதில் பொருத்தி, விவால்டி இசைத்த இசை இறுவெட்டொன்றை இசைக்கவிட்டனர்.

அறுவைச்சிகிற்சையின்போது அறுவை நிபுணர்கள் மற்றொருபுறம் மொஸார்ட், ப்ரொம்ஸ் போன்ற மேதைகளின் இசையினை கேட்க ஏற்பாடாகியிருந்தது.
தியேட்டரில் எந்த ரென்ஸனும் இல்லாமல் இயங்க இசை எமக்கு உதவியது. என்றும் 
நோயாளியின் முளையினை பதிய பொருத்தப்பட்ட சிஸ்ரத்தில் அவரது காதில் இயர்போன் மூலம் இசை சைக்கப்பட்ட பின்னர் ஆச்சரியமான வகையில் முளை அதிர்வுகள் அமைதியானதை அவதானிக்கமுடிந்ததாகவும், நோயாளி ரிலாக்ஸானதை தாம் உணரக்கூடியதாக இருந்ததாகவும் க்ளைட் நாக்ஷ் என்ற பெண் அறுவை சிகிற்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.

'மருந்தைவிட இசை மேலானது, அதனால் வலிநிவாரணி வழங்கப்படுவதை விட இசையினை பயன்படுத்துவது சிறந்தது என ஆயவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இசை நோயின்போது ஏற்படும் கடுமையான சிக்கல்களை தவிர்க்க உதவுகின்றது.
நோயாளியின் ஆரோக்கியத்தை மே;படுத்துகின்றது. நோயாளி மருத்துமனையில் தங்குவதற்கு அதிகநாள் எடுப்பதை தவிர்த்துவிடுகின்றது என்கிறார் நியூயோர்க் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் மத்யூலி.

கடுமையான தலைவலியில் இருந்து நிவாரணம்பெற இசை உதவும். இரத்த அழுத்தத்தை குறைக்கவும், சுவாசத்தை சீராக்கி மன இறுக்கத்தை இல்லாதொழிக்கவும் வைக்கும்.

சூசன் கோல்ஸ்கி என்ற பெண்ணுக்கு முதற்பிரசவம். பிரசவிடுதியில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வலியினால் பெரும் அவதிப்பட்டாள். வலி பொறுக்கமுடியாமல் அவள் அவதிப்பட்டபோது, பீத்தோவான், பார்க் ஆகியோரின் இனிய இசையினை  மாறிமாறி ஒலிக்கவிட்டனர்.
சூசன் சாந்தமாகினாள் பிரசவிக்கின்ற கட்டத்தில் ப்ரொம்ஸின் ஸிம்பொனி வரவேற்புடன் குழந்தை உலகிற்கு வந்தது.

புற்றுநோயாளிகள் டாக்டர்களிடம்பேசுவதற்கு நிறைய யோசிப்பார்கள், இசைச்சிகிற்சை அவர்களுடனான தகவல் தொடர்புகளை இலகுபடுத்தி சிகிற்சையின்போது நோயாளிகளை ஒத்துளைக்கவைக்கின்றது.

அமெரிக்க மாநிலமான மேரிலான்டில் பள்ளிக்கூடமொன்றில் மூளை வளர்ச்சி குறைந்த, உணர்வுகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இசையிலும் நடனத்திலும் பயிற்சி அளிக்கின்றார்கள்.

நரம்புக்கோளாறு காரணமாக பேசவோ அசையவோ முடியாதவர்கள்கூட இசையின் அற்புதத்தால் ஆடவும் பாடவும் செய்கின்றார்கள்.
மூளைக்கோளாறுகளை சீரழிவில் இருந்து தடுத்து ஆரோக்கியத்துடன் இயங்கச்செய்யவும் இசை உதவுகின்றது.
தமக்கு பிடித்தமான இசையினை தொடர்ந்து கேட்கும்போது ஸ்ரோக் உள்ளவர்களும் குணமாக முடிவதாக தெரியவந்துள்ளது.

சோக நிமிடங்களை மகிழ்ச்சியாக்குவது இசை. அதை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமபோது அதன் சக்தியும் கூடுதலாக இருக்கும்.
இசை நோய் பற்றிய கவலையினை மனதில் இருந்து அகற்றும். மன இறுக்கத்தை குறைக்கும். பிரச்சினைகளை இலேசாக்கும்.
எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

LinkWithin

Related Posts with Thumbnails