Monday, November 4, 2013

மணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............


சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத விஞ்ஞான பூர்வ திரைக்கதையாகவும் மணிரட்னத்தினால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 3014 ஆம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்படும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் பின்னரான உலகம், விஞ்ஞானம் என்பன பற்றிய மணிரத்னத்தின் சாத்தியமான அசாத்திய கற்பனையை எண்ணி அனைவரும் பேராச்சரியப்படுவர், அதேவேளை தமிழிலும் ஒரே வேளையில் இந்த படம் எடுக்கப்படுவதால் தமிழ் எழுத்துத்துறையில் விஞ்ஞான பூர்வக்கதைகளின் முன்னோடி அமரர் சுஜாதா என்பதுபோல, திரையிலே மணிரட்னம் மிளிர்வார் என  திருமதி சுஹாசினி மணிரட்னம் தெரிவித்துள்ளார்.
அரசல் புரசலாக உலாவரும் கதை இதுதானாம்.........

3014ஆம் ஆண்டு உலகம் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது, தமது எண்ணப்படி நட்சத்திர தொகுதியின் வடிவமைப்பினை, பாதையினை மாற்றிப்போடும் வல்லமையினையே முக்கிய விஞ்ஞானிகள் பெற்றிருக்கின்றார்களாம்.
அதிலும் குறிப்பாக இந்தியாவே அன்றைய நாளில் விஞ்ஞானம் மற்றும் சக்தி மிக்க நாடாக விளங்குகின்றது!
உலகிலேயே மிக அதி உச்ச விஞ்ஞானியாக 'சிவ் சங்கர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவ்சங்கர் விஞ்ஞானத்தின் உச்சத்தையே கடந்தவராக உருவகிக்கப்படுகின்றாராம். புதிய பிளனட்களை உருவாக்கவும், பாதுகாக்கவும், அவற்றுக்குத்தேவையான வாயுக்களை கொண்டு சென்று உயிரியல் பரினாமத்துக்கு உதவவும், அதை அழிக்கவும், பின்னர் பிரபஞ்சத்தில் இருந்தே அதை மறைத்துவிடவும் அவரால் முடியுமாம்.

நீண்டகாலமாக அவரது உதவியாளராக அவருடன் இருந்து அறிவியல் கற்றவராக இந்த திரைப்படத்தின் வில்லன் 'பத்மசூர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம். 
ஒரு கட்டத்தில் விஞ்ஞானி சிவ்சங்கரிடமிருந்து பிரிந்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஞ்ஞானத்தை வைத்தே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றராம் வில்லன்.
பல இயற்கை தத்துவங்களையே மீறி பிரபஞ்ச அமைப்புக்கே பேராபத்தை உண்டாக்க தனது செயற்பாடுகளில் இறங்குவாராம் வில்லன் பத்மசூர்.

இந்தவேளை இயற்கை தத்துவத்தை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி சிவ்சங்கர் இறுதியில் வில்லன் பத்மசூரை அழிப்பதாக பிரமானம் எடுக்கின்றார்.
பால்வீதிக்கு அப்பால் உள்ள சூனியப்பிரதேசமொன்றில் உள்ள தனது இரகசிய ஆய்வுகூடம் ஒன்றில் தனது நம்பிக்கையான விஞ்ஞானத்திற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த ஆறு பெண்களுடன் ஆராட்சியில் ஈடுபடுகின்றார்.
இறுதியில் வில்லனை அழிக்கவல்ல சக்திவாய்ந்த ஒருவனை உருவாக்க முடிவு செய்கின்றார் குளோனிங் முறையில்.

தனது புருவ மேட்டில் இருந்து ஆறு சக்திவாய்ந்த செல்களை கண்டறிந்து அவற்றை அக்கினி சக்தியுடன் ஒரு சக்தி பீடத்திற்கு கடத்துகின்றார், பின்னர் பிரபஞ்வெளிக்கு கொண்டு செல்கின்றார், அதன் பின்னர் சக்தி மிக்க பிரபஞ்ச காற்றுக்களால் அதை மேலும் வலுவூட்டி இறுதியாக நீரிலே அந்த சக்திகளை மிதக்கவிட்டு ஒன்றாக்கின்றார். 
ஓளிபடைத்த நாயன் ஒளிர்கின்றான்......... அவனுக்கு இந்த ஆறு விஞ்ஞானிப் பெண்களும் அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர்.....
இயற்கையை இயல்பாக்க அவன் தயாராகின்றான் பெரும் பிரபஞ்சவெளிப்போருக்கு.... அவனுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்திருந்த பீக்கொக் என்ற பிரபஞ்ச 'வோர் ஸ்பேஸ் ஸிப்பை' அவனுக்கு கொடுக்கின்றார் விஞ்ஞானி சிவ்சங்கர். அப்புறம் என்ன நாயகன் வில்லனுக்கடையிலான பிரபஞ்ச சமர்தான் கிளைமாக்ஸ்.....

அட இன்னும் இது கடவுள் முருகனுடைய கதை என்பது புரியாவிட்டால் நான் என்ன செய்ய........ சும்மா கந்தர் சஸ்டி காலத்திலை வித்தியாசமாக சிந்தித்தால் இப்படி ஒரு பதிவு. எல்லாம் ஒரு தமாசுக்குத்தான். மணி சார் உட்பட அனைவரும் மன்னிச்சுடுங்கடா சாமி...

Sunday, September 15, 2013

வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -02


யுத்தமொன்று திணிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்பட்டு கொண்டு செல்லப்படும் என்பது உலகம் பல யுத்தங்களில் கண்ட உண்மைதான். ஆனால் இங்கு நடைபெற்றது உள்நாட்டு யுத்தம் என்று சொல்லிக்கொள்ளப்பட்டாலும் இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாகவே நடைபெற்றது. அதேபோல யுத்தமுடிவும் வெற்றி பெற்றவர்களால் செயற்படுத்தப்பட்டும், கொண்டாடப்பட்டும் இருந்தது.
யுத்தத்தை தொடர்ந்து வடபகுதி மக்கள் எதிர்பாராத நேரம் அவர்களை நோக்கி அதே சூட்டோடு பிரகடனப்படுத்தபட்டதே பொருளாதார யுத்தம்.
இன்றைய நிலையில் இந்த பொருளாதார யுத்தத்தின் முற்றுகைக்குள் அகப்பட்டு செய்வதறியாது திண்டாடுகின்றது வடபுல பொருளாதாரம். இதுவே யதார்த்தம். இதை புரிந்துகொள்ளாது இன்னும் தூங்குபவர்களும், தூங்குபவர்கள் போல நடிப்பவர்களும் இனி எழுந்திருக்கவே முடியாத நிலைக்கே போய்விடுவர்.

இளைய தலைமுறையின் தவறானபாதை!
அனைவரும் சொல்லிக்கொள்வதுபோல கட்டுக்கோப்புடன் இருந்த ஒரு தலைமுறை கட்டுக்கோப்பு அறுபடும்போது சிதறி ஓடுவதுபோல இன்றைய இளைய சமுதாயம் வடபுலத்தே போய்க்கொண்டுள்ளது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
காவாலித்தனங்கள், குழுச்சண்டைகள், காதுகூசும் வார்த்தைப்பிரயோகங்கள், அடிதடி வாள் வெட்டுக்கள் என்று இன்று இளைய தலைமுறைகள் சில தறுதலைச் சமுதாயமாக போய்க்கொண்டிருப்பதை கண்ணூடாகவே காணக்கூடியதாக உள்ளது.

பேற்றோர்கள், ஆசிரியர்கள், சமுக நலன்விரும்பிகள், மதப்பெரியவர்கள், அரியல்வாதிகள் என்போர் முன் எப்போதும் இல்லாதவாறு இன்றைய நாட்களில், வளமான சமுதாயம் ஒன்றை உருவாக்க பெருமுயற்சி கண்டிப்பாக எடுக்கவேண்டிய நாட்கள் இன்நாட்களே.

கல்வியும் வேலைவாய்ப்பும்
யுத்தகாலத்தைவிட தற்போது வடபுல கல்வி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் எனில் முன்னர்போல பெறுபேறுகள் பெரிய அளவில் இல்லாது விடினும் உயர் கல்வி என்பது பல்கலைக்கழகம் என் மட்டுப்படாமல் பல்வேறு கற்கை நெறிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளதனால் முன்னரை விட உயர் கல்வி கற்பவர்களின் அளவு கணிமான அளவு உயர்ந்துள்ளது.

தொழில் விடயத்தில் முன்னைய நிலையை விட பல நிறுவனங்கள் தாராளமான வேலை வாய்ப்புக்களை கொடுத்துவருகின்றபோதிலும் இன்னும் அரசாங்க வேலை, வெளிநாடு என்ற கனவுகளுடன் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு என்று அரசியல் வாதிகளிடம் போவது ஆளுமையை விடுத்து அடிமையாவதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.

சரி.... இந்த இடத்தில் வடபுல சமுதாயத்தின் நிலையினை நிறுத்திக்கொண்டு வடபுல தேர்தல் நிலைக்குச்செல்வோம்.

முன்னரே குறிப்பிட்டதுபோல தமிழ்த் தேசியக் கூடடமைப்பு, சுதந்திரக்கட்சி ஈ.பி.டி.பி. கூட்டணி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இவையே வடபுலத்தில் பிரதானமாக மோதவுள்ள கட்சிகள்.

ஐக்கிய தேசியக் கட்சி.
நாட்டின் பிரதானமான எதிர்கட்சி! என்ற பெயரை மட்டும்தான் இன்றைய நிலையில் தன்னகத்தே வைத்துள்ள ஒரு கட்சி. 
வடபுலத்தே மகேஸ்வரனை மையப்படுத்தி வெற்றிகண்டதும், மகேஸ்வரனின் செல்வாக்கில் பல வருடங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி கொண்டதும் உண்மைதான்.
அதை தொடர்ந்து மகேஸ்வரன் குடும்பம், காரைநகர் என்ற வட்டங்களிலேயே இந்தக்கட்சி தனது செயற்திட்டங்களை எடுத்துவருவது அதன் கையாலாகாத தனம்.

இந்தத்தேர்தலில் ஒன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அல்லது அதற்கு எதிரான ஆளும்தரப்பு இரண்டில் ஒன்றுக்கு வாக்குப்போட்டாலும் அதில் நிஜாயம், நாட்டிலேயே செல்லாக்காசாக இன்று மாறி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து என்ன பிரயோனம் என்ற யதார்த்தமான கேள்வியை மக்கள் கேட்டுக்கொண்டால் நிலமை என்ன என்பதே இப்போதைய கேள்வி.

இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறைந்தது ஒரு ஆசனமாவது வடமாகாணசபைத்தேர்தலில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

ஈழமக்கள்  ஜனநாயக் கட்சி.
அரசாங்கம், மக்கள், முழு இலங்கை, ஏன்! தமது கட்சியினருக்கே இந்தத்தேர்தலில் எப்படியும் பெரும்பாலான ஆசனங்களைப் பெற்று தமது இருப்பை நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை எல்லோரையும் விட ஈ.பி.டி.பிக்கு இருக்கின்றது.

இணைந்த வடக்கு கிழக்கு! மத்தியில் கூட்டாட்சி!! மாநிலத்தில் சுயாட்சி!!! இவையோடு இணைந்து செயற்படும் இணக்க அரசியல் என்ற அவர்களது கொள்கையை அவர்கள் இப்போதும் வைத்திருக்கின்றனர் என்பதும், ஏனைய கட்சிகள் ஏளனம் செய்வதுபோல சொந்த சின்னத்திலேயே கேட்க முடியவில்லையே என்ற அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அவர்களே நோகவேண்டிய விடயங்கள் என பல இறுக்கங்களும், மறைமுக அளுத்தங்களுக்கும் மத்தியில் இந்தத்தேர்தலில் அவர்கள்.

ஆனால் வடக்கில் தேர்தலில் குத்தித்துள்ள கட்சியில் வடக்கில் அமைச்சர் ஒருவரை கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி அவர்கள் மட்டும்தான் என்பது அவர்களின் மிகப்பெரிய பலம்.
அது தவிர ஏனையவர்களை விட மக்களின் வாழ்வாதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையையும், மக்களுக்கான ஏதோ ஒரு வழி உதவிகள், வேலைவாய்ப்புக்கள் என்பவற்றை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

அதேவேளை சொந்த இனம் அல்லலுற்று நின்ற சில வேளைகளில் கைகட்டி, வாய்பொத்தி நின்றமையும், அரசாங்கத்தால் சொல்லப்பட்டதை அறிக்கையாக கூறியதும் பெரிய பலயீனமே.
அது தவிர வெற்றிபெற்ற சபைகளில் உலகறிய நடக்கும் ஊழல்கள், மேசைக்கு கீழே வாங்கும் பெட்டிகள் என்பனவும் பெரும் பலவீனமே.
எனினும் ஈழமக்கள்! ஜனநாயக்கட்சி இந்த மாகாணசபைத்தேர்தலில் ஆகக்குறைந்தது 05 ஆனங்களையாவது கைப்பற்றும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி.
ஆளும் தரப்பு என்பதும், தொடர்சியான தேர்தல் வெற்றிகள் என்பனவும் எவருக்கும் இல்லாத மிகப்பெரிய பலம் இவர்களது. 
ஆனால் மறு புறம் வடபுலத்தில் எதிரி மனோநிலை குறிவைத்துள்ளதும் இவர்கள்மேலே என்பது வடமாணசபை தேர்தல் என்ற வகையில் இவர்களின் மிகப்பெரிய பலவீனமும் அதுவே.

பேரினவாதத்தின் கரம், எமக்கு வலி தந்தவர்கள், வமது எதிரிகள் என்ற எண்ணங்களும் அதை தூண்டிவிடும் கோசங்களும் இந்த தேர்தல் காலத்தில் காட்டுத்தீபோல கனன்று கொண்டே இருப்பது இன்னொரு பலவீனம்.
கட்சி வேட்பாளர்களிடையே ஒருங்கிணைவு, ஒற்றுமை இல்லாமை மிகப் பெரும் பலவீனம். 
ஒரு சம்பவம் இடம்பெற்ற உடனேயே இந்த கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் இப்படி நடந்தால் நாங்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவோம் என அறிககை விட்டது நகைப்புக்குரியதே.

இத்தனை இருந்தாலும்கூட நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும், இன்றைய காலங்களை ஓரளவு சிரமமின்றி கொண்டு செல்வதற்கும், நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களில் கட்சியின் நேரடி வேட்பாளராக இருந்து அமைச்சர்கள் வருவதுபோல வடபுலத்திலும் ஆளும் தரப்பில் நேரடியான ஒரு அமைச்சர் இருப்பது மற்றவர்கள் மறுத்தாலும் உண்மையில் தேவையே. யதார்த்தநோக்கத்தோடு இதை நோக்கினால் உண்மையாக இந்த மண்ணின் மக்களுக்கு தன்னாலான உதவிகளை நேரடியாக பெற்றுத்தரக்கூடிய ஒரு நபரை உருவாக்குவதும் தேவையே. இது ஒருவகையில் மக்களின் சாணக்கியமே.

எது எவ்வாறு இருப்பினும் ஸரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் கூடியது 03 பேருக்கு ஆசனங்கள் அமையலாம்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு 
தமிழ் கட்சி, தமிழ்த்தேசியம், தமிழர் தாயகம், தமிழ் என்பனவே இவர்களின் பலங்கள். மக்களுக்கு நியாயமான வேறு தெரிவுகள் இல்லாமை இவர்களுக்கு பலத்திலும் பெரிய பலம். 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதானே சக்கரை' என்ற வடபுல பெரும்பாலான மக்களின் எண்ணமும், வேறு வழி இன்மையும்தான் இவர்கள் அடைந்த அடையப்போகும் வெற்றிகள்.

சந்தேகத்துக்குரிய தலைமை, உள்குத்துக்களும், களுத்தறுப்புக்களும், மனக்கசப்புக்களும் கொண்ட பல கூட்டங்கள். இப்படி பல விடயங்கள் இவர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.
எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களின் எண்ணங்களையும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இவர்களைவைத்தே தெரிவிக்கவேண்டும் என்ற தமிழர்களின் நிலையே இவர்களின் பலத்தில் பெரிய பலம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற சொந்த கட்சி பதிவு செய்யப்படாமல் இலங்கை தமிழரசுக்கட்சி பெயரிலேயே தொடர்ந்தும் சொந்த சில்லில் ஓடாமல் இரவல் சில்லில் ஓடுவதை இவர்களே அறிந்தாலும் அசட்டையீனமாக தொடர்ந்து இருந்து வந்தவர்கள் ஐயன்மார்களே!

சரி... விடயத்திற்கு வருவோம் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது குறித்து அரசாங்கத்தைத் தவிர யாரும் ஏன்! இவர்களே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
எனினும் பேரினவாதம், தமிழர்களுக்கு ஏன் உரிமை! என்ற விடாப்பிடியை பிடித்துவைத்திருக்கும் பேரினவாத அரசுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் மாறவேண்டும் என்று கொக்கரிப்பது பேடித்தனமானது.

மறுபுறம் அரச சார்பான கட்சிகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து என்னத்தை பெறப்போறீர்கள், அபிவிருத்தியை நாம்தான் செய்வோம், வேலைவாய்ப்பினை நாம் தான் தருவோம், யுத்தம் முடிந்த பின்னர் எத்தனை அபிவிருத்தி பாருங்கள் என்பன எல்லாம் வேடிக்கைப்பேச்சே.
வெறும் வேலைவாய்ப்புக்கும், அபிவிருத்திக்குமாகத்தான் இத்தனை இலட்சம் பேர் முப்பது வருடமாக மடிந்தார்களா என்ன? பேரினவாதமும், பெரும்பான்மை சமுகமும் அடாவடியாக மாறாமல் இருக்கும்போது நிஜாயத்திற்காக மாறாமல் இருப்பதில் தமிழர்களது குற்றம் ஏதுமில்லை.

மாறாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டோம் என்று கொக்கரித்தவர்களே மீட்கபட்ட மக்களுக்கான அபிவிருத்திக்கு முழுப்பொறுப்பானவர்கள். 

அடுத்தது தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை முழுமையாக கூட்டமைப்பின் முதன்மைவேட்பாளர் புரிந்துகொண்டு பேசவேண்டும்.
இறுதி யுத்தத்தில் அங்கே மக்கள் மடியும்போது நீங்கள் வாய்பொத்தி இருந்தபோதும், மனைவி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நீங்களும் போய்வந்தபோதும் தீக்குளித்தும், போராட்டம் நடத்தியும் உறவுகளுக்காக கண்ணீரும் செந்னீரும் விட்ட உறவுகள் அவர்கள். 
ஈழத்தமிழரின் போராட்டங்களின் ஒவ்வொரு கட்ட ஆணிவேர்களும் அங்கிருந்து கிடைத்தவையே என்பதை மறந்துவிடாதீர்கள். நாக்கில் நன்றி கெட்டத்தனமாக பேசாதீர்கள்.
இந்த விடயம் கிள்ளுக்கீரை விடயம் அல்ல... வாய்க்கு வந்தபடி எல்லாம்பேசிக்கொள்ள. உயிரோட்டமான உடன்பிறப்புகளின் விடயம். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

அதேநேரம் கடந்த பல தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்த மக்களுக்கு இனிவரும் காலங்களிலாவது அவர்கள் ஏதாவது செய்தே ஆகவேண்டும். வெறுமனே வாய்ச்சொல்லில் வீரர்களாகவே அவர்கள் நீடித்த அரசியலை மேற்கொள்வார்களே ஆனால் பிளவுகள் ஏற்படுவதும், புதிய கட்சிகள் உருவாவதும், பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதும் தடுக்கமுடியாதவையாகப்போகும். 

'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூதானே சர்க்கரை' என்ற மக்களின் எண்ணமே இந்த முறையும் கூட்டமைப்புக்கு இறுதியாக கொடுக்கும் பலமாக அமையும். ஆகக்கூடியது 10 ஆசனங்கள் வெளியால் போக மிச்சம் உள்ளவைகள் அனேகமாக இவர்களுக்கே செல்லும்.

Saturday, September 14, 2013

வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -01



காலப்பெருவெளியில் சமுக ஓட்டகளின் மத்தியில் அடிபட்டு ஒதுங்கிநிற்கும் சமுதாயம் நாம் என்ற மிரட்சியுடன், உலகியலின் ஓட்டத்திற்கு இயல்பானதாக மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு திசைக்கு இழுத்துச்செயல்லப்படும் சமுதாயமாகவே நாம் உள்ளோம் என்பது வெக்கப்படாமல் நாம் ஒத்துக்கொள்ளவேண்டிய தொனியாகவே உள்ளது.
எமது தலைவிதியை நிர்ணயிக்க நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் யார் யாரையோ பரிதவிப்புடன் பார்த்து ஏங்கிநிற்கும் பிச்சைக்காரத்தனம் எம்மிடம் எந்தப்புள்ளியில் இருந்து வந்தது! 
எம்மை நாம் ஆண்டவர்கள், இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருடன் எப்போதும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அல்லர், மாற்றார்களால் ஒன்றாக வாழ வைக்கப்பட்டோம், நான்கு நூற்றாண்டுகள் இடைவந்த மாற்றார்களின் ஆட்சிமுறைமைகளே எமக்கு இன்று பெரும் சிக்கல்களை தந்துவிட்டன என்பது ஒருபுறம், பின் நோக்கி வரலாற்றையும், முன்னோக்கி தொலைநோக்கத்தையும் அடைய வல்ல தலைமைத்துவம் இல்லாமை மற்றொரு புறம் என ஒரு முடிவின்றி இழுபடும் சமுதாயமாக நாம்.

இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் இருந்து ஒரு தசாப்தத்தின் உள்ளேயே, சேர்ந்துவாழ்தல் என்பதற்கான ஆழமான கேள்விக்குறிகள் விழ ஆரம்பித்ததுதான் வரலாறு. பிரித்தானியா தனது பிரித்தாளும் தந்திரத்தில் 'சிறுபான்மைத்தமிழரை தமது அதிகாரிகளாகவும், பெரும்பான்மை சிங்களவர்களை சாதாரணர்களாகவும் வைத்திருந்துவிட்டு, தான்போகும்போது, பெரும்பான்மை சாதாரணர்களிடம் அதிகாரத்தை கையளித்துப் போனமைதான்' கொடிதிலும் கொடிது.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது தமிழ்த்தரப்பில் ஒரு ஆணித்தரமான தலைமை அன்றைய 1940 களில் இல்லாமையே. சேர்.பொன். இராமநாதன் அவர்கள் பிரித்தானியரிடம் மட்டும் அன்றி மகாராணியிடமே செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும்கூட 1930 ஆண்டு அவரது இறப்புக்கு பின்னரும், பின்னர் 50 களின் நடுப்பகுதிகளில் மிளிரத்தொடங்கிய தந்தை செல்வா, ஜீ.ஜீ.பி என்போரின் வருகைக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் தமிழருக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியது என்பதை பலர் கவனிக்கத்தவறுகின்றனர்.

எமது வரலாற்றை முறைப்படுத்தி அதைக்கையில் எடுத்து, எமது உரிமைகள் பற்றி சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த நாம் தவறிவிட்டோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றும் வரலாற்றைக் கையில் எடுத்து தமிழ்ச்சார்பு கட்சிகள் செயற்படவில்லை, வரலாறு மிக முக்கியமானது என்பதையும் இந்த வரலாற்றினை வைத்தே பல காய்களை நகர்த்த முடியும் என்பதையும் தமிழ்த்தரப்பு முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு சொல்வதுபோல அவர்களது அகிம்சைவழி, மற்றும் அரசியல்வழி, ஆயுத வழிப்போராட்டங்கள் என அனைத்து அஸ்திரங்களும் பாவிக்கப்பட்டதும், ஆனால் இன்று வரை அவர்களுக்கான தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருப்பதும் அனைவரும் அறிந்த விடயமே. 
காலம் காலமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் குப்பையில் போடப்பட்டு இந்த சமுதாயத்தின் முன்னால் நடாத்தப்படும் நாடகத்தின் ஒரு அங்கமாக இப்போது வந்து நிற்கின்றது வடமாகாணசபைத் தேர்தல்.

வடமாகாணசபைத்தேர்தலும் மக்களும்
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக உருவானதே இந்த மாகாணசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஆனால் பெரிய விந்தை என்னவென்றால் வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருட்டு கொண்டுவரப்பட்ட இந்த மாகாணசபை முறமையை வடகிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் இதுவரைகாலமும் முறையாக அனுபவித்து வந்தன என்பதே.
யுத்த வெற்றியின் பின்னதாக எல்லா மகாணங்களிலும் வெற்றிக்கொடி ஏற்றிவரும் ஆளும் தரப்பு ஆரம்பத்தில் வட மாகாணசபை தமக்கு கிடைக்காது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து அங்கு தேர்தலை நடத்த பின்னடித்தே வந்தது என்பதும் முற்றிலும் உண்மையே. அதேவேளை இன்றைய நிலையில் தேர்;தலை அங்கு நடத்தியே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஆளும்தரப்பு, வடக்கிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தனது பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பியையும் தனது சின்னத்திலேயே போட்டியிட இணைத்து தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளது. மறுபுறம் ஒரு ஊரைமட்டும் நம்பி தானும் தேர்தல்களத்தில் களமிறக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி! இவையே இங்கு பிரதானம் மற்றக்கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்பன வேறு!!

மக்களை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களின் பின்னால் தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டிருப்பது ஒரு கவனிக்கப்படவேண்டிய விடயம். இந்த வடமாகாணத் தேர்தலில் குறைந்தது 75 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்பது கணிப்பீடு. இத்தோடு முதல் முதல் வாக்களிக்க உள்ளோரின் வீதமும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடு, வெற்றிலை, யானை இந்த மூன்றுக்கும் வாக்குகள் இந்த மக்களிடம் இருந்து பிரதானமாக கிடைக்கும், மற்றக்கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விழும் வாக்கு வீதம் கண்டிப்பாக மிக மிக குறைவானதாகவே அமையும்.

வடபகுதி மக்களின் இன்றைய வாழ்வியல்
வடபகுதியில் வாழும் இன்றைய சராசரி மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமான பார்வையில் கவனித்தோமாயின், நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களின் வாழ்வியலில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பது உண்மை.
யுத்தத்தின் பின்னான காலத்தின் ஆரம்பத்தில் திடு திடுப்பென மாற்றமெடுத்த வாழ்வியல் மாற்ற நிலை இன்று மெதுவான ஒரு ஓட்டத்திற்கு வந்துள்ளதெனினும் சீராகவில்லை. இந்த வாழ்வியல் மாற்றங்கள் பல எதிர்மாறான பலன்களையும் அவர்களுக்கு தந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.
அடுத்து முக்கியமாக ஒரு சமுதாயத்தின் வாழ்வியலில் தாக்கம் செலுத்தும் காரணி தலைமுறைகள், எமக்கான உரிமையினைப்பெறும் போராட்டத்தின் விடை கிடைக்கும் முன்னதாகவே நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன என்பதே உண்மை. இந்த கால தேச வர்த்த மானங்களால் எழுந்துள்ள தலைமுறை இடைவெளி வடபகுதி வாழ்வியிலில் பெரும் முரண்பாடு ஒன்றை கொண்டுள்ளது.

பொதுவாகச்சொன்னால் ஆயதப்போராட்டத்திற்கு முன்னர் பிறந்தவர்களின் மனநிலை, ஆயுதப்போராட்டத்தின்போது பிறந்தவர்களின் மனநிலை, 1990களின் பின்னர் பிறந்தவர்களின் மனநிலை என்பன முற்றிலும் முரண்பாடுகளை கொண்டதாகவே கருத்திலும், செயலிலும் உள்ளதை ஒரு உளவியல் கண்ணேட்டததின் ஊடாக கண்டு கொள்ளமுடியும்.

வளப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால் மறைமுகமாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வடபகுதி வளங்கள் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு அல்லது அத்துமீறப்பட்டு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
கடல் உணவில் இருந்து இரும்பு, மரங்கள் வரை தொடர்சியாக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வர்த்தகம்.
உழைத்தலுக்கும் சேமிப்புக்கும் பெயர் பெற்றது வடபுலம். கட்டைவில் நோண்டும்போது தண்ணீர் பீச்சி வேளான்மை செய்யும் கூட்டமல்ல இவர்கள். உடல்வருத்தி வான்பார்த்து பயிரிட்டு நலக்கீழ்நீரை துலாமித்து வருந்தி உழைத்து முன்னேறிய சமுகப்பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள். 
வெள்ளையர்காலத்தில் இருந்தே கல்விநிலையில் உயர்வு பெற்று உயர்தொழில்களும்புரிந்து மெல்ல மெல்ல வர்த்தகத்திலும் கொடி நட்டு, முழு இலங்கையிலும் பெரு வர்தகர்களாக கோலாச்சியவர்கள் இவர்கள்.

இன்று.........
யுத்தம் முடிவடைந்தது என்ற அரசர்கத்தின் அறிவிப்பையும், பாதை திறப்பையும் அடுத்து தென்னிலங்கை நிறுவனங்கள் பல போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவந்து தங்கள் மடைகளை திறந்தன, திறந்து கொண்டு இருக்கின்றன.
'ஆசியாவின் சந்தை இலங்கை! இலங்கையின் சந்தை யாழ்ப்பாணம்!!' என்பதுதான் உண்மை. 
'நீங்கள் எதுவும் உற்பத்தி செய்யவும் வேண்டாம், விற்பனை செய்யவும் வேண்டாம், நாங்கள் தருவதை வாங்குபவர்களாக மட்டும் இருங்கள் போதும்' என நேரடியாகவே வட புலத்தாரை தென்னிலங்கை சொல்வதுபோலவே வடபுல வர்த்தகத்தின் இன்றைய நிலை உள்ளது.
முன்னொரு காலத்தில் பெருமளவு பணத்தினை சேமிப்பில் போட்டு பணமிருக்கு பொருள் இல்லை என்று சொல்லிவந்த வடபுல வர்த்தகர்களின் இன்றைய நிலை, பல நிதி நிறுவனங்களால் பரிதாபகராமாக்கப்பட்டுவிட்டது.

சாதாரணமாக மருதானார்மடம், திருநெல்வேலிச்சந்தைகளில் மரக்கறி விலைகளை தம்புள்ள மரக்கறிகளின் வரவே தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.
ஏந்தவொரு கைத்தொழில் நிலையமோ, பக்டரியோ இங்கு இல்லை, இயங்கவும் முடியாது என்ற நிலைக்கு யாழ்ப்பாண வர்த்தகம் மறைமுகமாக திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொடரும்.....

Saturday, May 4, 2013

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்.......



வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது.
மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்புகை, என முழுவதும் மனதுக்குள்ளும் ஒரு எரிவை ஏற்படுத்திவிடும்.

பரபரப்புடன் பிங் கலர் குடையை பிடித்துக்கொண்டு நிலப்பக்கமாக நடந்து வந்துகொண்டிருந்தவள், நெருசலில் சில ஆண்டிமாரும், சில நடுத்தரங்களும் உஸ்.. உஸ் கொட்டியபோதுதான், குடை அவர்களுடன் உரசிப்பார்த்ததை உணர்ந்து அவசரமாக தனது குடையினை சுருக்கிக்கொண்டாள்.
அவள்  இலங்கையில்தான் வசித்துவந்தாலும் சத்தியமாகத்தான் அவளுக்கு வெயில் ஒத்துவராது.

நிலப்பக்கத்தில் இருந்து கடற்பக்கமாக மாறினால் கொஞ்சம் வெயில் குறைவாகப்படும் என்று அவளது ஆறாவது அறிவு அந்தப்பக்கம் இழுக்கவே மற்றப்பக்கமாக கடக்க எத்தனித்தவள் தன்னிலை மறந்து கொஞ்சநேரம் ஸ்தம்பித்து நின்றாள்...
ஆமாம் அவளைச்சுற்றி நுவரேலியாவின் குளிர் சூழ தொடங்கியது, கொழுத்தும் வெயில் சண்கிளாஸினூடே பார்ப்பதுபோல மங்கிப்போனது, அவளைச்சூழ புரூட் பெர்பியூம் நறுமணம் பரவ தொடங்கியது......
ஆம் நிச்சயமாக அவன் வந்துவிட்டான்...... இது அவனேதான் என்று உணர்ந்த மறுகணமே அவளது முகம் இன்னும் சிவந்துகொண்டது. 

ஓவ்வொன்றையும் இரசித்தபோதும் அவன் பின்தொடர்வதை உணர்ந்த அவள், அவசரமாக தன் நடையினை வேகமாக்கிக்கொண்டாள். அவன் வந்த அறிகுறிகள் ஒன்றும் குறையாததைக்கண்டு அவன் தனது நடைக்கு ஈடாகவே தானும் பின்தொடர்வதை அறிந்துகொண்டாள். மனதிற்குள் விபரிக்கமுடியாத ஒரு கிளுகிளுப்பு! ஆதனால் அவளுக்கு பயங்கரமாக ஒரு படபடப்பு ஏற்பட்டது.

தான் முதல் நினைத்ததுபோலவே வாகனங்களை சமாளித்துக்கொண்டு அவசரமாக எதிர்த்திசை சென்று, அதே அவரமாக தரிப்பிடத்தில் இருந்து புறப்பட தொடங்கிய பஸ்ஸில் அது என்ன பஸ்? எத்தனையாம் இலக்கம் என்பதைக்கூட பார்க்காமல் ஏறிக்கொண்டாள்.
பஸ்ஸில் கொஞ்சம் கூட்டம்தான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நின்றவள், தன் அருகில் நிலவிய குளிர்மை அதிகரித்திருப்பதையும், பூருட் பெர்பியூம் மிக அருகில் மணப்பதையும் உணர்ந்து கால்கள் நடுங்கத்தொடங்க பயந்தவளாக அதேநேரம் அதை இரசிப்பவளாக முகத்தில் சிறு புன்முறுவல் பூத்தாள்.

என்ன 155 பஸ்ல ஏறியிருக்கிறீங்க? மோதரைக்குத்தானே போறீங்க? என்று அவள் காதுமடல்களின் பின்னால் குழைவான குரலில் அவனது குரலைக்கேட்டதும் சொக்கித்து நின்றாள். 
அந்தநேரத்தில் கொன்டக்டர் வரவே மோதரைக்கு இரண்டு என்று சிங்களத்தில் சொல்லி காசைக்கொடுத்தான் அவன்.
 மற்ற ஆள் யார்? என்று சிங்களத்தில் கென்டக்டர் கேட்டபோதுதான் இயல்பு உலகத்திற்கு வந்தான் அந்த காதல் கிறுக்கன்.

Thursday, May 2, 2013

நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை.



ஆம் அது ஒரு காலம்....... யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை அமைதி காக்கத்தான் வந்திருக்குது, எங்கட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று கனக்கக்கப்பேர் அவையை பூப்போட்டு வரவேற்ற காலம்.
அதாவது 1987 ஆம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மிஞ்சி மிஞ்சிப்போனால் வெறும் இரண்டு மாத்களே. அதற்குள் என்றுமில்லாத விமர்சையாக வந்து போன நல்லூர்த்திருவிழா!

சும்மா சொல்லக்கூடாது இந்த இரண்டு மாதங்களும் யாழ்ப்;பாணத்தைப் பொறுத்தவரை ஒரு ஜொலிபுள் மாதங்கள் தான். அப்ப விடலை கண்ட அண்ணை அக்கா மார், ரியூசனுகளுக்கும் சாலியில (ஒரு வகை மோட்டார் சைக்கிள்) போய் இறங்கினது இப்பவும் என் கண்ணில் நிற்கிறது.
ஜி ரென் டெக்குகளும், சொனி ரீவிகளும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திறங்கி வீடியோ வாடைக்கு விடுறவைபாடு படு பிஸியாக இருந்த காலகட்டம் அது.

இந்தியாவில இருந்து பாஸ்போட் இல்லாம வந்திறங்கிய அமைதி காக்கும் படையுடன், யாழ்ப்பாணத்திற்கு அந்த நதியா மோகமும் வந்திறங்கியதாகவே இப்பவும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.
தமிழ்நாட்டுக்காரார் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும், அங்க முதல் முதல் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினதென்டால் அது குஸ்புக்கு என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்...... ஆனால் யாழ்ப்பாணத்திலை அந்தநேரம் நதியாக்கு இருந்த மார்க்கட்டே தனி ரகம்.

அந்த நாட்களில் பூக்கும் பூக்கள் எல்லாம் நதியாவாகவே பல அண்ணன்மாருக்கு பூத்தன, தலை வெட்டிலிருந்து பாவாடை வெட்டுவரை நதியாவாகவே பல அக்காமார் மாற முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
நதியாவின் வகை வகையான புகைப்படங்கள் சேர்ப்பதிலே பல அண்ணன்மாருக்கு போட்டி நடந்துகொண்டிருந்தது. 
நதியாவின் புண்ணியத்தில் பான்ஸி கடைகள் எல்லாம் வீறுகொண்டு எழுந்து கூட்டத்தில் சிக்கித்தவித்தன. பல பான்ஸி கடைக்காரர்களின் யாழ்ப்பாண பீக் ரைம் இதுதான் என்று இன்றும் பல மூத்த பான்ஸி கடைக்காரார்கள் சொல்லிக்கொண்டிருகின்றார்கள்.

புடவைக்கடைகளில் நதியா புரொக், நதியா ஸ்கேட், நதியா புளவுஸ், நதியா பெல்ட், நதியா பியாமா என்று நிறைய, பன்ஸி கடைகளில் நதியா தோடு, நதியா வளையல், நதியா ஹேர் பான்ட், நதியா கம்மல், நதியா பட்டன் என ஏராளமான நதியா ஐட்டங்கள் வெளியில் எடுத்து 15 நமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
மறு புறம் நதியா செருப்பு, நதியா சைக்கிள், நதியா பொட்டு, நதியா ஹான்ட் பாக் என குவிந்துகொண்டிருந்தன.
இவற்றில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாம் நதியா திரைப்படங்களில் உடுத்து, அணிந்து நடித்த பார்க்கக்கூடிய ஐட்டங்கள்தான்.
ஆனால் அதே நேரத்தில் நதியா சென்ட் என்று ஒரு ஜஸ்மின் நறுமண சென்ட் வகை அப்போது பெண்கள் பெரும்பாலானவர்கள் பாவித்த ஒன்று!

சரி........ இவ்வாறு வாங்கிக்குவித்தவற்றை போட்டுக்காட்டுவதற்கான களம் ஒன்று வேண்டாமா? கணக்காக வந்தது நல்லூர் கந்தன் திருவிழா. அப்பா அந்த 25 நாட்களையும் வேற எந்த வருட 25 நாட்களுடனும் ஒப்பிட முடியுமா என்ன?
நதியா ஹாவ்சாறிகள் நிறைந்து நின்றன நல்லூர் வீதிகள் எங்கும்.

மேற்சொன்ன நதியா வகையறாக்களை விட மேலும் பல நதியா ஐட்டங்கள் வந்து குவிந்தன இதைப்பார்த்து வேறு விற்பனையாளர்கள் கூட தமது பொருட்களையும் நதியா என்ற அடைமொழியுடனே விற்கத்தொடங்கினர்.
நதியா ஐஸ்கிறீமில் இருந்து நதியா கச்சான் வரை சென்றது.

உண்மைதான் என்னைப்பொறுத்தவரை நதியா, மற்றும் நதியா கோஸ்மட்டிக் பொருட்களுக்கு அப்போதைய யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த வரவேற்பை அதன் முன்போ, அதன் பின்போ வேறு யாருக்கும் தரவில்லை.
யாழ்ப்பாணம் ஜொலிபுள்ளாக இருந்த அந்த 1987 ஜூலை, ஓகஸ்ட்டு மாதங்களில் அடித்த நதியாப்புயல் அதை நினைத்துப்பார்க்காத அளவுக்கு கரைபுரண்டு சென்றது அடுத்தடுத்து நிகழ்ந்த யுத்தங்களால்.

Wednesday, May 1, 2013

வல்லமை தாராயோ..........




இந்த வரிகள் இப்போதெல்லாம் அடிக்கடி இதயப்பொருமலுடன் முணுமுணுத்துக்கொள்ளும் வறட்சியான வார்த்தைகளாக இதயத்தில் தொக்கி நிக்கின்றது. 
'கலியுக முடிவுக்காலம் என குறிப்பிடப்பட்ட விபரணங்கள் எமக்கே நடப்பதுபோல ஒரு முரட்சியும் அப்பப்போ மிரட்டிக்கொண்டுதான் இருகின்றது'

உலகப்பரப்பில் நாம் யார்? நாம் சபிக்கப்பட்ட ஒரு இனமா? அரசியல் அநாதைகளா?
இவையே மனம் முழுவதும் மரணவேதனையை விட அதிக ரணம் தரும் சுய அதிஉச்ச கேள்வியாக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் துளைத்துக்கொண்டிருக்கின்றது.

கால தேச வர்த்த மானங்களைத்தாண்டி ஒரு முடிவின்றி வரையறையின்றி அல்லலும், இன்னலும்;தான் பரிசுகளாக மாறி மாறி வருவதென்றால் வாழ்வியலில் எங்கோ ஆழமான ஒரு புரழ்வு இருப்பதாகவே தெரியும்.
மறுபுறம் முடிவின்றி தொடரும் அல்லல்களின் இடையே பல தலைமுறைகள் மாறிவிட்டன. தலைமுறைகளின் சிந்தனை வயப்புகள் பெரும் வியப்பு நிலைக்கு இட்டுச்செல்கின்றன.

இந்நிலைக்கு காரணம் அவைதான், அவர்கள்தான், அவங்கள்தான், என மாறி மாறி விரல்களை சுட்டிக்கொட்டிக்கொண்டிப்பதிலேயே காலங்கள் கரைந்துகொண்டிருகின்றது. 
வரலாற்று, பூகோள, அமைவிட, கலாசார இருப்புகள்தான் நமக்கு பாதகமாகப்போகினவோ தெரியாது! 
சரியான ஒரு அரசியல் தலைமை இல்லை, பொறுப்பான ஒரு வழிகாட்டல் இல்லை, தோழ்கொடுக்க ஒரு நாடுகூட இல்;லை, அடக்கு முறையை எதிர்க்க ஒரு நாதி இல்லை, நாளைகள் மீது நம்பிக்கை மட்டும் எப்படி வரும்? 

இப்போதெல்லாம் நம்மில் பலரை பார்த்திருக்கின்றேன், எதையும் யோசிக்காமல், பத்திரிகை கூட பார்க்காமல் கஸ்டப்பட்டு தாம் உண்டு தம்பாடு உண்டு என்று இருக்கவேண்டும் என்றே பிரயத்தனம் எடுத்து வாழப்பழகுகின்றார்;கள், இருந்தபோதிலும் ஏதோ ஒரு வகையில் அவர்களையும் அக்கிரமங்களும், அஜாக்கிரகங்களும் துரத்திக்;கொண்டுதான் இருகின்றன.

ஒரு முப்பது வயதை கடந்து அடுத்த சந்ததியையும் கைகளில் ஏற்தியுள்ள பெண் ஒருவர்  'நான் பிறந்தது மயிலிட்டி ஆனால் நான் இன்றுவரை என் இடத்தில் வாழ்ந்ததில்லை' என கண்களின் ஈரத்துடன் சொல்வது ஒன்றும் செய்திக்;கான தொனிப்பொருள் இல்லை, அந்த சொல்லின் உள்ளே அவளின் ஆணிவேரே அறுக்கப்பட்ட வேதனை அடங்கியுள்ளது.

நாதியற்று குற்றுயிராய்க்கிடக்கும் ஒரு சமுதாயம் வேதனையுடன் வான் பார்த்து நிற்பதென்னமோ.... அட எங்காவது ஒரு ஒளிக்கீற்றாவது தென்படுகின்றதா என்பதுதான். இப்போது தென்படும் எரிகற்களை எல்லாம் நட்சததிரங்கள் என்று நம்பினால் மீண்டும் ஒரு ஏமாற்றததுடன் நிரந்தரமாக கண்மூடுவதை தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

மீண்டும் இதெற்கெல்லாம் காரணம் அவங்கள்தான், அவர்தான், அவைதான், என்று சுட்டுவிரல்களைக் காட்டாமல் ஒட்டுமொத்தமாக உ(எ)ங்கள் யாருக்குமே வல்லமை இல்லை என்ற பெரிய உண்மையை ஒத்துக்கொண்டு.
இனியாவது சிந்தித்து சாணக்கியத்தனமாக வல்லமையாக இருக்க முயற்சி செய்வோமா?

(அடடா...... இந்த பதிவை பொறித்துக்கொண்டு இருக்கும்போது வீதியால் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது என ஒரு ஐஸ்பழ வாகன ஒலிபெருக்கி பாடிக்கொண்டு செல்கின்றது)

Tuesday, January 8, 2013

தேவதைக்கதைகளின் கதை – 02



பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், கொடுமை, அடிமை நிலை என்பவற்றினால் தவிக்கும் இந்த தேவதைக்கதாபாத்திரங்கள் கதையோட்டத்தால் அந்த சூழ்சிகளில் இருந்து தப்பி இறுதியில் உயர்ந்த நிலையை அடைவதாகவே கதையோட்டங்கள் யாவும் அமைந்துசெல்வதை கவனிக்கலாம்.

பாலர் பருவங்களில் அவர்களின் மனங்களில் விதைக்கப்படும் இந்தக்கதைகள், காலங்கள் கடந்தாலும் அவர்களின் மனங்களை விட்டகலாமல் இருப்பதற்கு அந்தக்கதைகளின் பாத்திர வார்ப்புக்களும் பிரதான காரணம்தான் எனலாம்.

பியூட்டி அன்ட் த பீஸ்ட்

இந்த தேவதைக்கதையின் நாயகியாகிய தேவதையின் பெயர் பெல்லி. மென்மையான எதையும் நேசிக்கும் மாசற்ற அன்புள்ளம் கொண்டவர்களுக்கு எவற்றின்மீதும், மயமோ, அச்சமோ, அதீத ஆசைகளோ கிடையாது அன்பு எந்தவொரு மாஜத்தையும் செய்துவிடும் என்று கருத்தை பறைசாற்றுகின்றது இந்தக்கதை.

இதுவும் ஒரு பிரஞ்சுதேசத்துக்கதைதான், 1740 ஆம் ஆண்டு பிரஞ்சுப் பெண் புனைகதை எழுத்தாளரான கேப்ரியல் ஸூசான் பார்போர்ட் விலனியூவ் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது என அறியப்படுகின்றது.
அதேவேளை 1756ஆம் ஆண்டு இதே கதையினை ஜென்னி மரீன் என்பவர் மீள் பிரசுரம் செய்துவைத்தபோதே இந்த தேவதைக்கதை மிகப்பிரபலம் அடைந்ததாக குறிப்புக்கள் கூறுகின்றன.
அந்தவகையில் அடுத்த ஆண்டாகிய 1757ஆம் ஆண்டே இது ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து உலகமெல்லாம் பீஸ்ட்டுடன் அந்த தேவதை உலாவரத் தொடங்கினாள்.

இது மட்டுமன்றி மேற்படி பியூட்டி அன்ட் த பீஸ்ட் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடக அரங்கங்களில் பெரிதும் இடம்பிடித்த மக்களின் மனதைக்கவர்ந்த நாடகமாவும் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளுக்கு நவரசத்தையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்கும் இந்தக்கதை அவர்களை வெகுவாகக்கவர்ந்து கொண்டது எவ்வாறு என்ற சந்தேகத்தையே இல்லாது செய்துவிட்டது.

மனைவியை இழந்து தனது மூன்று பெண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தார் ஒரு வர்த்தகர். அந்த மூன்று பெண்களிலும் இளையவளான மூன்றாவது பெண் பெல்லி ரொம்ப அழகானவள்.
அவளது அழகு மட்டும் அன்றி, அவளது இனிமையானபேச்சு, அன்பான அணுகுமுறை, மென்மை, நேர்த்தி என்பன பலருக்கு அவள் மேல் பேரபிமானத்தை ஏற்படுத்திவிட்டன.
இதனால் மூத்தவர்களான இரண்டு பெண்களுக்கும் இவள்மேல் பொறாமை இருந்துவந்தது. 

இந்தவேளை வர்தகரின் கப்பல் ஒன்று புயலிலே சிக்குண்டுவிட்டதாக செய்திவருகின்றது. அதனால் அவர்களின் தந்தையான வர்த்தகர் பெருந்துயரத்திற்கு உள்ளாகின்றார். அந்தவேளை பெல்லி அவருக்கு ஆறுதல் வார்ததைகள்கூறி அவரை ஆசுவதப்படுத்துகின்றாள். கப்பல் மீண்டும் கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருங்கள் என்கின்கின்றாள்.

அவள் சொன்னதுபோலவே வணிகருடைய கப்பல் துறைமுகத்துக்கு வந்துசேர்ந்ததாக செய்தி வருகின்றது. சந்தோசமடைந்த வர்ததகர் கப்பலை பார்க்க பிராயாணத்திற்கு ஆயத்தமாகின்றார்.
அந்தவேளை தமது மூன்று பெண்களையும் அழைத்த தந்தை, உங்களுக்;கு என்ன வேண்டும் என்று வினவுகின்றார். அதற்கு பதிலளித்த முதலிரு பெண்களும், தமக்கு விதவிதமான உயர்தர ஆடைகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் என அடுக்குகின்றனர்.
ஆனால் பெல்லியோ தனக்கு எதுவும்வேண்டாம் என தந்தையின் நிலையை உணர்ந்து சொல்கின்றாள். ஆனால் அவளது தந்தை எதையாவது நீயும் கேள் மகளே என்றபோது.... சரி எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ மட்டும் வாங்கிவாருங்கள் என்றாள்.

துறைமுகத்தை அடைந்த தந்தை அங்கு தனது கப்பலை பார்த்துவிட்டு, நெடுந்தூரப்பயணமாக பெருநகரத்தில் தனது முதல் இரு மகள்மாரின் வேண்டுகோளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி நெடுந்தூரம் தனது வீட்டைநோக்கி பயணிக்கும்போது தாகம் பசி கழைப்பு நிலைக்கு உள்ளாகின்றார், தூரத்தில் அவர் கண்களுக்கு அழகான அரண்மனை ஒன்று தென்படுகின்றது. 

மகிழ்ச்சியுடன் அந்த அரண்மனையை அடைகின்றார், அங்கு எவரையும் காணமுடியவில்லை, ஆனால் நிறைய பழரசங்கள் முதல் மேசையிலே இருந்தன, அவற்றை எடுத்து அருந்தி தாகத்தை தீர்த்துக்கொள்கின்றார். பின்னர் அறுசுவை உணவாக பலவேறான உணவுகள் நாவுக்கு ருசியாக அவருக்கு தெரிகின்றன அவற்றையும் உட்கொண்டு பசியாறுகின்றார்.
அடுத்து சோம்பலாக இருக்கவே காற்றோட்டமான இடத்தில் உயர்தர இலவம்பஞ்சு மெத்தையிலே படுத்து உறங்குகின்றார். 

உறக்கம், சோம்பல் இரண்டும் விடுபட்ட நிலையில் அப்போது மேசைமேலே இருந்த தேனீரை அருந்தியவாறே இந்த உபசரிப்பு செய்தவர் யார்? அவருக்கு நன்றி சொல்லவேண்டும் என அங்குமிங்கும் யாராவது உள்ளனரா எனத்தேடுகின்றார்.
அந்தநேரம் அந்த அரண்மனை தோட்டத்திற்கு வருகின்றார். அங்கே பூத்துக்குலுங்கும் ரோஜாக்களைக்கண்டு தனது இளைய மகளின் நினைவு வரவே ஒரு ரோஜா மலரை அவர் பிடுங்கிவிடுகின்றார்.

அந்தவேளையில் பேரிரைச்சலுடன் அவர் முன்னால் ஒரு பூதம் தோன்றுகின்றது...
ஏ...... மானிடனே உன் புத்தியை காட்டிவிட்டாயே........ அருந்த பழரசம், விதவிதமான உணவு, இளைப்பாற மெத்தை இத்தனையும் தந்தேன் ஆனால் இந்த நந்தவனத்தில் உள்ள பூக்களை கொய்ய உனக்கு உரிமை இல்லை. இந்தப்பூவை நீ யாருக்காக கொய்தாயோ அவரை நீ இங்கே சேவகம் செய்ய நீ அனுப்பி வைக்கவேண்டும் என ஆணையிடுகின்றது........

அதன் பின்னர் அந்த அரண்மனைக்கு வரும் பெல்லியின் அன்பால், கவரப்படும் பூதம் ஒரு கட்டத்தில் அவளைப்பிரிந்து இறக்கும் நிலைக்கு செல்லும்போது, பெல்லி ஓடிவந்து அந்த பூதத்திறகாக அழுவதும், அவளது தூய்மையான கண்ணீர் பட்டதும் பூதம் சாப விமோசனம் பெற்று அழகிய இளவரசனாகி பெல்லியையே மணந்துகொள்வதும் நீங்கள் அறிந்த கதைதானே!

இவ்வாறான தேவதைக்கதைகள் குழந்தைகளின் முனதில் எவ்வளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதற்கு இந்த தேவதைக்கதைகள் தொடரை எழுதும் நானே சிறந்த உதாரணம். இந்தக்கதைகளை படித்த பாலர் காலத்திலே எனது பெரிய தந்தையார் வெளியூர் பிரயாணம் ஒன்று செல்லும்போது அன்பாக எம்மிடம் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒன்றைச்சொல்ல 'எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ போதும்' என்று சொன்னவன் சாட்ஜாத் நான் தான்.

அடுத்த பதிவில் மீண்டும் ஒரு தேவதையுடன் உங்களை சந்திக்கின்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails