
ஆகக்கூடியது மூன்று தொடர்களுடன் முடித்துவிடுகின்றேன் என்று தெரிவித்து நான் ஆரம்பித்த இந்த தொடர், இந்த பதிவுடன் ஆறாவது தொடராக வந்துவிட்டதற்கு முதலில் அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த தொடரை நினைத்ததை விட நீளமாக்கியமைக்கு காரணம், இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து பெரும்தொகையாக வந்த மின் அஞ்சல்கள்தான்.
ஜூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் தேசம் கிடைத்துவிட்டது. இத்துடனேயே இந்த தொடரை முடித்துவிட எண்ணியுள்ளேன். அப்பப்போ எதிர்வரும் பதிவுகளில் பின்னர் நடந்தவைகளை பதியலாம் என எண்ணியுள்ளேன். முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று நான் இங்கு எழுதவந்தது ஜூதவரலாற்றினையோ, அல்லது யூதர்களையும் தமிழர்களையும் ஒப்பிடுவதற்கோ அல்ல. ஏனெனில் தற்போதைய நிலையில் மட்டும் நின்றுகொண்டு யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிடமுடியாது என்பது வெளிப்படை உண்மை.
ஆனால் உன்னிப்பாக கவனித்தீர்கள் என்றால் ஒரு இனம் எத்தனை நூற்றாண்டுகளாக தமது நாட்டுக்காக தொடர்ந்து இலட்சியப்பாதையில் பயணித்து, பல பல வருடவங்களை எடுத்தாலும், இறுதியில் தமது இலட்சியங்களை அடைந்தார்களே…ஏன் தமிழர்கள் அப்படி இருக்கக்கூடாது என்ற ஒரு கேள்விக்காகத்தான். தமிழ்த் தேசியத்தின் நாயகனுடன் தமிழர்களுக்கென்ற தேசமும் போச்சு என்ற வெறுப்புற்ற மனங்களுக்காகத்தான், அந்த உன்னதமான பாதையினை இன்றும் கொச்சைப்படுத்தும் சாத்தான்களை சுட்டிக்காட்டதான், சோரம்போகும் மனங்களை 30 வருடங்களிலேயே சோர்ந்துவிட்டீர்களா? 300 நூற்றாண்டு என்றாலும் கொண்ட இலட்சியத்திற்காய் மனம் மாறாது தொடர்ந்து பயணித்த ஒரு இனத்தின் வரலாற்றினை பாருங்கள்….குறுகிய பார்வை வேண்டாம்…என தைரியமூட்டத்தான்.
போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்ற சொல்லுக்கு யூதர்கள் சிறந்த உதாரணமாக இருக்கின்றார்கள் எனக்காட்டதான். ஒரு தலைவனுடன் யூதர்களின் பயணம் முடிந்துவிடவில்லை, தொடர்ந்தும் பயணித்தார்கள் எனச்சொல்லத்தான். தம் இலட்சியத்திற்காக பல நூற்றாண்டுக்கு முன்னாள் மரணித்த புனிதர்களை யுகங்கள் கடந்தபோதும், நினைத்து துதித்தார்கள் எனக்காட்டத்தான். வஞ்சகங்கள், சூழ்ச்சிகள் துரோகங்கள், பசப்பு வார்த்தைகளுக்கு எப்படி மயங்காமல் இருந்தார்கள் என்பதைக்காட்டத்தான்.
எவரும் எந்த இலாபங்களும் இல்லாமல் உதவிக்குவரமாட்டார்கள், அவர்களது பாதைகளில் பலவற்றை கொடுத்துத்தான் பல காரியங்களை யூதர்கள் சாதித்துக்கொண்டார்கள் எனக்காட்டத்தான். அவர்கள் பக்கத்தில் இருந்த பட்டமரங்களை பிடிக்காமல் தூரத்தில் இருந்தாலும் புளியங்கொப்புக்களை பிடித்தார்கள் என்று காட்டதான். உலகமெலாம் பரந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தபோது கிடைக்கும் துறைகளில் உச்சங்களுக்குச்சென்று சாதித்துக்காட்டி உலகின் கவனத்தை தம்பக்கம் திருப்பி தமது நியாங்களை உணரவைத்தமையினை காட்டத்தான். ஒரு யூதன் ஒரு துறையில் சிறப்பாக வருவான் என இனங்கண்டால் அவனது வழர்ச்சிக்கு உலகத்தில் அத்தனை யுதர்களும் ஏணியாகி அவனை உலக அரங்கின் உச்சிக்கு ஏற்றியதைக்காட்டத்தான். இப்படி பலவற்றை தமிழ் நெஞ்சங்களுக்கு என் சிறிய சிந்தனையில் காட்டத்தான் இந்த தொடரினை எழுதினேன்.
காலம் எப்போதும் ஒரேபோல இருந்துவிடப்போவதில்லை, நேற்று குற்றமாகத்தெரிந்தவை பல இன்று குற்றங்களில்லை என கூறப்படுகின்றன. உலகம் என்றோ ஒருநாள் நியாயத்தின் பக்கம் நின்றே ஆகவேண்டும். தமிழர்களுக்குரிய நாடு தூரப்போனதுபோல ஒரு தோற்றப்பாடு தெரிந்தாலும் நாளை என்ன நடக்கும் என்பதை இன்று எவரும் தீர்மானித்துவிடமுடியாது. என்ன இன்னும் 10 வருடங்களோ, அல்லது 50 வருடங்களோ, ஏன் 100 வருடங்கள் கூட அதற்கு எடுக்கலாம் அனால் என்றோ ஒரு நாள் அது தமிழர்களின் கையில் கிடைக்கப்போவது உறுதியின் மேல் உறுதி.
இந்த தொடரினை எழுத தொடங்கிய நாள் முதல் எனக்கு மின்னஞ்சல் செய்து ஊக்கப்படுத்திய அன்பு உள்ளங்களின் மின்னஞ்சலில் இருவர் தெரிவித்த கருத்துக்களை அவர்களின் அனுமதியுடன் இந்த இறுதிப்பாகத்தில் தருவதில் பெருமையடைகின்றேன்.

எம் நிலத்தையும், எம் உரிமையினையும் மற்றுமொரு இனம் வஞ்சமாகப்பறித்துக்கொண்டு, எம் ஒருதலைவர் கெஞ்சிக்கேட்டும் தரவில்லை, அடுத்த தலைவர் அடித்துக்கேட்டும் தரவில்லை என்றால் எமக்கு எமது உரிமைகளை கொடுத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை பாருங்கள். அநியாயமாக செயற்படும் அவனுக்கே இந்த உறுதி இருக்கின்றது என்றால், நியாம் வேண்டிநிற்கும் எங்களுக்கு மட்டும் ஏன் அந்த உறுதி தளரவேண்டும்? கெஞ்சியும் தராதவனுக்கு, அடித்தும் தராதவனுக்கு தந்திரமாக ஆப்புவைத்துத்தான் நாம் எமது உரிமைகளை பெறவேண்டும்.
இராஜதந்திரத்துடன், உலகத்தமிழர்களின் பேராதரவுடன், ஒரு தடவைக்கு நாறு தடவைகள் யோசித்து இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் தமது நடவடிக்கைகளை சாணக்கியத்துடன் காய் நகர்த்தவேண்டும். ஏன் தமிழன் மேல் கைவைத்தோம் என தன் ஆயுள்பூராகவும் எதிரியின் இனம் வருந்தத்தக்க வகையில் உலகத்தமிழர்கள் வைக்கும் ஆப்பு இருக்கவேண்டும்.
ஓன்றை மட்டும் யோசித்துப்பாருங்கள், உணர்ச்சி வசப்படுதல், பழிவாங்கல் என்பது யூதர்களுக்கு இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் தமக்கு துரோகம் செய்தவர்களை, தம் மக்களை கொன்றவர்களை பழிவாங்கினார்கள் தான் ஆனால் அது தமக்கான இலக்கினை அடைந்ததின் பின்னர்.-அபர்ணா. ஜெயபாலசிங்கம்
அவுஸ்ரேலியா

தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடு அருகிலே இருக்கும் தமிழ்நாடு. இலங்கையில் என்ன நடக்கின்றது என அறிய உலக வரைபடத்தை எடுத்து ஆராயும் ஒவ்வொரு நாட்டுக்குழந்தைகள் கூடச்சொல்லும், அட அருகில் தமிழ்நாடு என்று ஒரு பெரியதேசம், அறாரைக்கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலம், அதே இனம் இவ்வளவு அருகில் இருந்தா ஈழத்தில் இத்தனைவருட இனவன்முறைகள் என்று சொல்லி ஏளனம் செய்யமாட்டார்களா? மதிப்புக்குரிய எழுத்தாளர் பாமரன் சொன்னதுபோல இலங்கையில் என்ன நடக்கின்றது என முழுத்தமிழ்நாடும் அறியவே இன்னும் 25 வருடங்கள் வேண்டும். எனினும் ஈழத்தமிழர்கள் மீது உண்மையான பாசம் வைத்து வேதனைப்படும், துணிந்து குரல்கொடுக்கும், அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், பாமர மக்கள் என்று பலர் இல்லாமலும் இல்லை.-ராஜேஸ். சென்னை தமிழ்நாடு.
சரி…ஆரம்பம் முதலே இந்த தொடர் தொடர்பாக மின் அஞ்சலில் தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தியதோடு, தங்கள் விருப்பங்களையும், கேள்விகளையும் கேட்டு பல நெஞ்சங்களுக்கு முதலில் அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கினறேன். அதேபோல பின்னூட்டல் இட்டவர்கள், ஆலோசனைகள் தெரிவித்த நண்பர்கள், ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள். ஆதேபோல யூதர்களின் வரலாற்றினை தொகுத்து புத்தகவடிவிலே வெளியிட்டிருந்த நண்பர் முகில் அவர்களை இங்கு சொல்லியே ஆகவேண்டும்.
யூதர்கள் பற்றி பெரும்பாலான தகவல்களை அவரது நூலில் இருந்தே பெற்றுக்கொண்டேன். அவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோல இந்த தொடர்களை தமது இணைங்களில் வெளியிட்டிருந்த அப்பாடொட்கொம், மற்றும் யாழ்டொட்கொம் இணையத்தளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல என்வலைப்பதிவுகள் மற்றவர்கள் கண்களிலும்படும்படி என்னை நாடி பலரை வரவைத்த இணைய வலைப்பதிவு திரட்டிகளான தமிழிஸ், தமிழ்10, பூஞ்சரம் ஆகிய திரட்டிகளுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
இந்த யூதர் தமிழர் தொடர் ஏதோ ஒரு வழியில் தமக்கு உபயோகமாக இருந்ததாக பல மின் அஞ்சல்கள் கிடைக்கப்பெற்றன. அதேபோல இந்த தொடரை தொடர்ந்து படித்த வாசக நண்பர்கள், பதிவுலக நண்பர்கள் இதில் ஏதாவது உபயோகமான கருத்துக்களை பெற்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இந்த தொடரை நிறைவு செய்கின்றேன்.