Sunday, May 29, 2011

மூன்றுவருட வலையுலகமும் சில மனந்திறப்புக்களும்...


சென்னையில் நான் இருந்த பெசன்ட் நகரை அண்டிய ஒரு கடற்கரை மைதானம், நண்பர்கள் பட்டாளம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெருகிவிட்டதனால், திடீர் என்று காற்பந்து விளையாடுவதாக உத்தேசிக்கப்படுகின்றது. உடனடியாக 'கப் கலக்ஸன்' போட்டு காற்பந்து ஒன்றும் வாங்கிவரப்படுகின்றது அந்த கடற்கரைக்கு..
இச்சம்பவம் நடக்கும்போதே பதிவராக இருந்த சமுத்திரன், பின்னர் என்போல பதிவர்களாகி தவறணைபோட்டு அனைவரையும் வெறியாடவைத்த டிலான், ஒன்று இரண்டு பதிவு எழுதினாலும், மிக மிக ஆழமாக எழுதியதுடன் சிறுகதைப்போட்டியிலும் வெற்றிபெற்ற சஜந்தன் ஆகியோரும் விளையாடுவதற்கு தயாராகவே இருந்தனர்.

மிக உச்சாகமாக விளையாட்டு தொடங்கியது, கிட்டத்தட்ட 18 பேர் ஒன்பது பேர் ஒரு அணிக்கு என பிரிந்து விளையாடுகின்றோம். எம் அணி இரண்டு கோல்கள் போட்டு முன் நிலையில் இருக்கு...திடீர் என மற்ற பக்கம் கோல் போஸ்ட்டுக்கு கிட்ட பந்து கொண்டு செல்லப்படுகின்றது.
வயது 31 ஆகிவிட்டாலும், மனசு 19 இல் நின்றபடியால், உற்சாகமிகுதியில் ஓடிச்சென்று கோல் போஸ்ரின் நேர் எதிர்ப்பக்கம் பந்தை ஓங்கி அடிக்கும் நோக்கில் முன்னேறி, ஓடுகின்றேன், அதேவேகம், அதே உதை ஆனால் தவறுதலாக பந்தின் உச்சிமேல் என்கால் ஊன்றப்படுகின்றது, ஓட்டவேகம் மறுபக்கம், கால் அப்படியே சரிகின்றது. ஓடியவேகத்திற்கும், பந்து காலை திருப்பிய திசைக்கும் இடையில் தடுமாறி விழுகின்றேன்.

வலி தாங்கமுடியாமல், காலை பார்க்கின்றேன். இடதுமுழங்காலுக்கு கீழே கால் திரும்பியிருந்தது. பின்னர் ஆஸ்பத்திரி, எஸ்ரேக்கள், கட்டுக்கள், என்று எழுந்து நடக்கமுடியாமல் இருந்தேன். இந்த நேரத்தில் நிகழ்த்தப்பட்டதுதான் என் வலையுலகப்பிரவேசம்.
சத்தியமாக ஒரு வலையினை எப்படி உருவாக்குவது என்பதுகூட தெரியாது.
ஏதோ கூகுல் தெய்வத்துக்கிட்ட கேட்டு கேட்டு ஒருமாதிரி, ஒப்பேத்தி 'என்னை நானே செதுக்கும் போது' என்று தலையங்கம்போட்டு செம்மஞ்சள் கலரிலை ஒரு எனக்கான புளக்கரை தொடங்கினேன்.
சோ... என் வலைப்பிரவேசம் ஒரு விபத்து அல்ல விபத்தினால் உருவானது.

அப்ப எப்படி டைப்பிங், ஆரம்பத்திலேயே உலக விடையங்கள், காத்திரமான விடையங்களை எழுதக்கூடியதாக இருந்தது என்று நண்பர்களுக்கு கேள்வி எழலாம். உண்மையில் என் இணையப்பிரவேசம், இணைய எழுத்து என்பன 2002ஆம் ஆண்டு ஆரம்பமாயிருந்தது.(எழுதுவது மட்டும்தான் அதை இணையேற்றுவது இன்னும் ஒரு நண்பன்) அந்த காலத்தில் இருந்து அனேகமாக அரசியல் கட்டுரைகள், ஆய்வுகள், முக்கிமான உலக அரசியல் அசைவுகள் என்பவற்றை எழுதிவந்தேன்.
(கல்கி, மேகநாதன், நல்லூரான் என்ற பெயர்களில்;) அந்த நேரம் மூன்று நண்பர்கள் சேர்ந்து அந்த இணையத்தை நடத்திவந்தோம், இளையதம்பி தயானந்தா அவர்கள், விமர்சகர் ராஜாஜி, தராக்கி, சிரேஸ்ர ஊடகவிலாளர் மரியதாஸ் மாஸ்டர், போன்றோர் எம் எழுத்துக்களுக்கு பசளையாக இருந்தனர். இதை இதை இப்படி இப்படித்தான் எழுதவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் வலையுலகத்திற்கு நான் வந்ததும், என் எழுத்துப்பாணியை மிக இயல்பானதாக ஆக்க பெருமுயற்சி எடுத்து, இயல்பானதாக்கினேன். எனினும் சில நண்பர்கள் ஆரம்பத்தில் இதை பெரும் ஆச்சரியமாகவே பார்த்தனர். இருந்தாலும் சிறிது நாட்களிலேயே இயல்பான நடைக்கு என் எழுத்துக்களை கொண்டுவந்தேன்.

எத்தனை நாள் கனவு கண்டு கண்ணீரால், தியாகங்களால், இரத்தங்களால் கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யமே வீழ்ந்துபோன மனம் வெடிக்கும் வேதனைகள், அழுகைகள், இத்தனையும் மீறிய ஒரு இயலாமை, சுயவெறுப்பு என்பவற்றோடுதான் வலையில் விழுந்தேன். எழுதுவது எழுதுகின்றோம் எவனுக்காவது எப்போதாவது பிரயோசனையாக எழுதுவோம் என்ற குறிக்கோளுடன் எழுத்துக்கள் ஆரம்பமாகின.
பலர் பயப்படும் விடையங்களைக்கூட பயப்படாமல் எழுதினேன்.


சமுக இணைய தளங்களில் நான் பகிர்வதை என் நண்பர்கள் பார்த்து கருத்துரைப்பது, சென்னையில் நடைபெறும் இலக்கிய கூட்டங்களுக்கு செல்வதால் அறிமுகமான நண்பர்களுக்கு லிங்குகளை கொடுப்பது மட்டுமே அப்போது நடந்தது.

அதேநேரம் குறும்பட தயாரிப்பு பக்கம் மனம் திரும்பியது. அது சம்பந்தமான தேடல்களில் ஈடுபட்டு, அத்துறையில் ஈடுபட்டவர்களின் நட்புகள் கிடைத்தன. அதில் சில வலையுலக நண்பர்களின் அறிமுகம்.
முக்கியமாக கேபிள் சங்கர் அண்ணா, பட்டர்பிளை சூரியா அண்ணா அகியோரின் நட்பு கிடைத்தது. அவர்களின் வலைகளுக்கு செல்ல ஆரம்பித்து, அந்த நேரம் மரீனாவில் இடம்பெற்ற மழைநாள் பதிவர் சந்திப்பிலே பல இனிமையான நண்பர்களை சந்தித்தேன்.
பதிவுலகின் இன்னுமொரு போனஸ் அருமையான நட்பு என்பது அப்போது புரிந்தது, நிலாரசிகன், அடலேறு, எவனோ ஒருவன், மணிஜீ, ஊரோடி...இப்படி அந்த வட்டம் பெருக்கெடுத்தது.


இந்த நட்புகளால் பதிவுலகம், திரட்டி, மற்றய பதிவர்களுக்கு பின்னூட்டம், அப்படி என்று பல விடையங்கள் தெரியவந்தன. பதிவுலகம் மட்டுமின்றி இன்ப தும்பங்களில் பங்கெடுத்து, தேவையான நேரங்களில் உதவிகள் புரியும் உன்னதமான நட்புக்கள் கிடைத்தன.
அதேவேளையில்த்தான் பல்கலைக்கழக முடிவுகள் வெளியாகியிருந்தன, சிறப்பு என்ற அடைமொழியுடன் முடிவுகள் வெளியாகின. நான் அதைபோய் பார்ப்பதற்கு முன்னதாகவே எவனோ ஒருவன், அடலேறு போன்றவர்கள் முடிவுகளை ஏற்கனவே பார்த்துவிட்டு என்னை பாராட்டி அழைப்பெடுத்திருந்தனர்.
அந்த நேரம் எனக்கு ஒரு அழகான மகள் உதயமானபோதுகூட குடும்பத்தில் ஒருவர்களாக மருத்துவமனைவந்தே என்னை வாழ்த்தி அணைத்து நட்பில் திக்குமுக்காடச்செய்தனர்.

ஒரு கட்டத்தில் வயதான விதண்டாவாதம் செய்யும் பதிவர் ஒருவர், ஈழப்பிரச்சினை தொடர்பில் என்னுடன் வேண்டுமென்றே மல்லுக்கு நின்றார். நான் அவரை நேருக்கு நேர் நின்று காதுகூச பேசும் அளவுக்கு அவரது செயற்பாடுகள் இருந்தன.
அந்த வேளைகளில்க்கூட இலங்கை, தமிழ்நாடு என்று பிரித்து பாராமல் நியாயத்தின் வழி நின்று எனக்காக அவருடன் வாதிட்டவர்கள் அவர்கள்.
அப்படி இருந்தும்கூட சில நண்பர்கள் இலங்கை பதிவுலகம், பதிவர்கள் பற்றி மென்மையாக சில செயல்பாடுகளை சொன்னாலும் அவர்களிடத்தில்க்கூட நான் எப்போதும் இலங்கை பதிவர்களை விட்டுக்கொடுத்து பேசியது கிடையாது.

இந்த கட்டங்களில் இலங்கை பதிவர் என எனக்கு முதல் முதல் அறிமுகமானவர் தங்க முகுந்தன் அண்ணா. அவருடனும் வாதங்களில் தொடங்கியே இன்றுவரை இணைபிரியாத நட்பாக அது தொடர்கின்றது. தனது பதிவு ஒன்றிலே பதிவர் டிலான் சுட்டிக்காட்டியதுபோல நேர் எதிர் கருத்துக்களை உடைய அவரும் நானும் இன்றுவரை உற்ற நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

தங்கமுகுந்தன் அண்ணா மூலம் இலங்கை சம்பந்தமான திரட்டி ஒன்று எனக்கு அறிமுகமாகின்றது. இலங்கை பதிவர்கள் பக்கம் பார்க்கின்றேன். படிக்கின்றேன்.
உண்மையை சொல்லப்போனால், அந்த நேரத்தில் ரமணன், அசோக்பரன், லோஷன் ஆகியோரின் பதிவுகளை நான் அதிகம் படிப்பதுண்டு. முக்கிமாக அசோக்கின் எழுத்துக்கள்மேல் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு வந்தது. மூவருக்கும் சிறப்பான பதிவுகளுக்கு அடிக்கடி பின்னூட்டங்களை அவ்வப்போது இட்டுவந்தேன். ஆனால் ரமணனை தவிர நான் ஒரு இலங்கைப்பதிவாளன் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்க நிஜாயம் இல்லைத்தான்.

பின்னர் இலங்கையில் முதலாவது பதிவர் சந்திப்பு நடக்கின்றது என்ற அறிவிப்பை தொடர்ந்து பல பதிவர்களின் பெயர்கள் அறிமுகமானது. அவர்களின் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன், அந்த தேடல்களின் மூலம் வந்தியத்தேவன், மருதமூரான் ஆகிய இருவரினதும் தளங்கள் நான் அடிக்கடி செல்லும் தளங்கள் ஆகின.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் அவர்களின் பதிவுகளை அப்போது வாசித்தாலும்கூட சிலவற்றுக்கு பின்னூட்டம் இட்டால்க்கூட அவர்கள் நம்மை கவனிக்கவில்லையே என்ற ஈகோவில் நானும் பின்னூட்டம் இடுவதில்லை. (இப்ப அந்த ஈகோ இல்லை என்று இல்லை இப்பவும் இருக்கு)
ஆனால் சில ஆணித்தரமான பதிவுகள் அவர்களிடமிருந்து வரும்போது அந்த ஈகோ எல்லாம் சுக்குநூறாக உடைந்து மூந்திப்போய் பின்னூட்டம் இடுவதும் உண்டு.
ஆனால் அனைவருக்குமே ஒரு விடையம் தெரியும் பொறாமை என்பது என்னிடம் துளியளவும் இல்லை. எனது எழுததுக்கள் மீது எனக்கு அசைக்கமுடியாத கர்வம் இருக்கும்போது எப்படி மற்றவர்கள்மீது பொறாமை வருவது?

இந்த நிலையில் மீண்டும் தாயகம் வருகின்றேன். இங்குவந்து உடனடியாக பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. வேலைதேடும் படலத்தில் மும்மரமாக இருந்ததால், அதை விட்டுவிடுவோம் என்றே நினைத்திருந்தேன்.
தங்கமுகுந்தன் அண்ணா அழைப்பெடுக்கின்றார், என்னடாப்பா பதிவுகளை விட்டுவிட்டாயோ, அப்படி இப்படி கேட்கின்றார்.
எனக்கு இங்கை யாரையும் தெரியாதுண்ணை என்றேன்! டேய்.. மருதமூரான் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான், நம்பர் அனுப்பிறன் கதை என்று ஒரு நம்பரை அனுப்புகின்றார். மருதமூரானுக்கு அழைப்பு எடுக்கின்றேன்.
ஹலோ... நான் ஜனா கதைக்கின்றேன், யாழ்ப்பாணத்தில் இருந்து
எந்த ஜனா?
ஸியேஸ் வித் ஜனா..
ஆ... எப்ப வந்தனீங்கள்? யாழ்ப்பாணம் எங்க? நல்லூரா? நான் பருத்தித்துறை ஐயா.. இன்டைக்கு வெளிக்கிடுறன் கோல் எடுத்தது சந்தோசம்.
என்கின்றார்.
இலங்கை பதிவர்களை இலங்கையில் முதல் அறிமுகம் அது?

எனக்கான நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு கொழும்பு சென்றபோது நேரடியாக மருதமூரானை சந்தித்து பேசுகின்றேன். பின்னர் யாழ்ப்பாணத்தில் யாழ்தேவி நடத்திய யாத்திரா ஏற்பாடுகளை மருதமூரான், சேரன், நான் சேர்ந்து செய்கின்றோம்.
யாத்திராவுக்கு முதல்நாள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மண்டபம் ஒழுங்கு செய்து சோடினை வேலைகளில் ஈடுபட செல்வதன் முன்னர், ரியோவுக்கு போகின்றோம், அங்கே பாலவாசகன் என்ற மூன்றாவது பதிவர் (இப்போ தம்பி) அறிமுகம். பின்னர் மதியம் அங்கு வந்திருந்த கோபி, இலங்கன், பிரசாத், ஆகியோர் அறிமுகமாகின்றனர். மாலை நேரம் எனக்கு ஒரு அழைப்பு,
ஹலோ யாத்திராவா! நாங்களும் பதிவர்கள்தான், பதிவுகளை எழுதுகின்றோம் இந்த மாநாட்டிற்கு வரலாமோ? இப்ப எங்க மத்திய கல்லூரியில்த்தான் நிற்கின்றீர்களா? ஆ..இந்த இரண்டு நிமிசத்திலை வாறன் என்றது அந்தக் குரல்...
அதற்கு சொந்தக்காரர் பதிவர்களின் கலகல கூல்போய்.

ஆனால் இரண்டு மணித்தியாலம் கழித்து ஒரு ஆள் சிரித்துக்கொண்டு வந்து நின்றது. ஆ..ஊ.. என்று கதைகள் சொல்லி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
மறுநாள்.. புல்லட் அறிமுகம், இப்படி என் பதிவுலக நட்பு நீண்டுகொண்டிருந்தது.
ஏற்கனவே எழுத்துக்களால் அறிமுகமான பலர் நேரடியாக அறிமுகமானது மனதுக்கு இனிமையாக இருந்தது.
இந்த மாநாட்டுடன் இலங்கைப்பதிவர்கள் பலபேரின் கணிசமான அறிமுகமும், நட்பும் கிடைத்தது. மீண்டும் தனியா இல்லை என்ற உணர்வுடன் பதிவுகளை எழுத தொடங்கினேன்.
இந்த வேளைகளில் தம்பி பாலவாசகனிடமிருந்து அழைப்பு அண்ணை உங்களுக்கு 5 மணிக்கு வேலை முடிந்துவிடும்தானே ஒரு 5.30 மணிபோல நல்லூர் கோவிலுக்கு வாறிங்களா சுபாங்கன் வந்திருக்கின்றார் சந்திக்கலாம் என்றார்.

சுரி..என்று விட்டுப்போனேன்... அங்கே சுபாங்கனும் பாலவாசகனும் நின்றார்கள். கூல்போயையும் கூப்பிட்டிரந்தார்கள் அனால் ஆள் இன்னும் வரலை.
ஒரு ஆள் கொஞ்சம் அவிச்ச வெள்ளையாக என்னைப்பார்த்து மௌனபுன்னகை பண்ணிச்சு. ஸியேஸ் என்று சொல்லிக்கொண்டதாக நினைவு.
முதல் சந்திப்பிலேயே சுபாங்கனிடமிருந்த வேகம், தேடல், இரசிப்பு, துடிப்பு அத்தனையும் என்னை கவர்ந்தது. பாலவாசகனுடன் சுபாங்கனுடனான என் பிடிப்பு இறுகியது. அதை நட்பு என்று சொல்லமுடியாது இந்த இருவரையும், டிலான், மற்றும் சஜந்தனையும் என் சகோதரர்களாகவே எப்போதும் நான் கருதுவது உண்டு.

மீண்டும் சுபாங்கனுக்கு என் அழைப்பு வித்தியாசமாக இருந்தது. குடைஸ்பீக் ரூ மிஸ்ரர் சட்டோ? என்று கேட்டேன். புயபுள்ளை ஆரம்ப இங்கிலீஸ் புத்தகத்தை மறக்காது என்ற நினைவுடன். ஆனால் பயபுள்ளை தடுமாறி, அப்படி யாரும் கிடையாது, சொரி ரோங் நம்பர் எண்டிச்சு! பின்னர் நான் ஜனா என்றேன்.
பின்னர் அடிக்கடி சந்திப்பு, சிந்திப்பு.... மற்றவர்களைவிட சுபாங்கனிடம் அதிக உரிமையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு என் சொந்த தம்பிபோலவே பாராட்டியும், சில இடங்களில் அதட்டியும் வந்தேன். ஏன் பதிவுகளை சீரியஸான மற்றர்களில் இருந்து ஜனரஞ்சகத்தன்மைக்கு கொண்டுவந்ததில் சுபாங்கனின் பங்கே பிரதானமானது. நான் விபத்து ஒன்றில் சிக்கி ரென்ஸனாக நின்ற போதும் என்னை சுதாகரிக்க வைத்தது சாத்ஜாத் பிறதர்தான்.

அடுத்தது மதிசுதா.. என் நினைவு சரியானது என்றால், மதிசுதாவை, நான், சுபாங்கன், கூல்போய் மூவரும் ஒன்றாகவே முதல் முதல் சந்தித்தோம்.
மதிசுதாவின் ஆற்றலை பல தடவைகள் கண்டு நான் பிரமித்ததுண்டு, அதேவேளை அதற்காகவே மதிசுதாவை கண்டித்ததும் உண்டு.

அடுத்த சந்திப்பு வரோ... யாழ்ப்பாணம் வந்து வரோ கோல் பண்ணியிருந்தார். சந்தித்தேன். முதலிலேயே ஒன்றை சொல்லியிருக்க வேண்டும் எனக்கு இலங்கையில் இருந்து முதல் முதல் பின்னூட்டம் போட்டது வரோதான்.
வரோ..சம்பந்தமான சர்ச்சைகள் முழுமையாக இல்லாதுவிடினும் பகுதியாக சிலர் என்னிடம் சொல்லியிருந்தனர்.
நல்லூரில் இருந்து பதிவுகள், தனது ஊடகவியல் என பலவற்றை என்னுடன் பகிர்ந்துகொண்டார். நான்தான் அவரை ஆசுவாசப்படுத்தி உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன். கண்கள் பனிக்க சில விடையங்களை கூறினார்.
பதிவு என்பது எங்களின் சகலதும் கிடையாது ஜஸ்ட் அது ஒரு டைம் பாஸிங்தான், நீங்கள் அதை பெரிய விடயமாக எடுப்பதுதான் பிரச்சினை என்று கொஞ்சம் ரிலாக்ஸாக கதைத்தேன். சில விடையங்களை அவரும் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மையில் கூர்ந்து கவனித்தால் அதன் பிறகு அவரிலும், அவரது பதிவிலும் பாரிய மாற்றங்கள் இருந்தன.

அடுத்து ஒரு பிழையில் உண்டான அன்னியோன்னியம். எப்போதுமே என்னில் பிழை இருந்தால் அதை ஏற்கவேண்டும் என்பதே என் பழக்கம், அதற்கு அமைவாக அந்த பிழையை ஏற்றுக்கொண்டு அந்த சுட்டிக்காட்டிய நெஞ்சத்துடன் உண்டான சொந்தம் வலையுலகில் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
அன்றிலிருந்து நெஞ்சங்கள் சிதறவில்லை ஒன்றல்வா ஆகியிருக்கு ரமேஸ்?

பின்னர் ஜீ... ஆரம்பத்தில் நான் கூட, ஜீயை இந்தியப்பதிவர் என்றே கணித்திருந்தேன். ஆனால் ஜீ..தான் யாழ்ப்பாணம் என்று பல இடங்களில் பிடிகொடுத்திருந்தார். அவரை தொடர்பு கொள்ள வழியின்றி இது பின்னூட்டம் இல்லை என்று சொல்லி தொடர்பை ஏற்படுத்தியிருந்தேன். ஜீ...எதையும் பொஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் ஒருவர். போடா குரங்கு என்று பேசினாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் ஒருவர் (ஹி...ஹி..ஹி..)

அடுத்து பதிவர் சந்திப்பு, அதன் முன்னால் கிரிக்கட் என்று அடுக்கடுக்காக நான் ஆவலுடன் சந்தித்துக்கொண்ட நெஞ்சங்கள்.
முக்கியமாக லோஷன். இலங்கை பதிவர்களில் என் வயதை உடையவர், என்பதால் நான் அதிகம் நோக்கும் ஒருவர். நான் எப்போதுமே ஒரு பதிவரை அவரது தனிப்பட்ட தொழிலுடன் சேர்த்து பார்பது கிடையாது.
எனக்கு தனிப்பட்ட ரீதியில் லோஷன் தகுதியான அதேநேரம் சிறப்பானதொரு அறிவிப்பார்தான். ஆனால் பதிவுலகத்தில் லோஷன், வாமலோஷன் என்ற வலைப்பதிவை எழுதும் லோஷன்தான்.
நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.
நான் நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பிலே லோஷனின் பதிவை மேற்கோள்காட்டி பதிவுலகம் என்பது வேறு, உங்கள் தனிப்பட்ட விடையங்கள், உங்கள் உயர்வுகள், கல்வி, தொழில் என்பதுவே முக்கியம் என்று பேசியிருந்தேன்.
இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.

இந்த மூன்றுவருட பதிவுலக வாழ்க்கை பல நன்மைகளை தந்திருக்கின்றது. பலதரப்பட்டவர்களின் பாராட்டுக்களை, அனுமதிவாங்கிய மீள் பிரசுரங்களை, ஒலிவடிவங்களை அத்தோடு அனுமதியற்ற பிரசுரங்களை, நன்றி இணையம் என்ற ஒற்றை வரிகளை எல்லாம் வாங்கியிருக்கின்றது.
அதேவேளை பதிவுலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளும், குரோதங்களும் ஏற்பட்டிருப்பதும் மறைக்கமுடியாத உண்மைகளே. பதிலுக்கு பதில் பேசுவதும், நீ பெரிதா நான் பெரிதா என்று ஆளாளுக்கு குத்திக்காட்டும் இடுகைகளை போடுவதும் இவற்றிற்கு தீர்வாக ஒருபோதும் இருக்கமுடியாது.


நான் பெரியவன், நாங்கள் பெரியவர்கள், நாங்கள்தான் பதிவுலகமே என்ற எண்ணங்கள் களையப்படவேண்டும். உண்மையில் இங்கு யாரும் பெரியவர்களும் கிடையாது, சிறியவர்களும் கிடையாது.

பதிவுலகத்தில் யாரும் தனித்திருக்கமுடியாது. தானே எழுதி தானே வாசிக்கும் நிலைமையோ, அல்லது குறிப்பிட்ட தாங்களே எழுதி தங்களுக்குள்ளேயே வாசிக்கும் ஒரு நிலைமைகளே ஏற்படும்.
தமிழர்களுக்கு கிடைக்காத ஒன்று 'ஒற்றுமை' அதற்கு பதிவுலகம் என்ற விதிவிலக்கா என்று மற்றவர்கள் பரிகாசனை செய்யாமல் இருக்க பொறுப்பாளிகள் நாங்கள்தானே?

ஓவ்வொரு மனிதனும் சுதந்திரமானவன், என், அல்லது எங்களின் எண்ணப்படிதான் ஒவ்வொருவனும் இருக்கவேண்டும் என்றும், எனக்கு அல்லது எங்களுக்கு எதிரி அனைவருக்கும் எதிரியாகவே இருக்கவேண்டும் என எவரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமே ஆகும்.
எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படக்கூடியதே ஆகும். அது அவரவர் புரிந்துணர்வுக்கு உட்பட்ட விடையமாகும்.
அதேவேளை பதிவுலகத்தில் கருத்து பகிர்வுகள் வரலாம் ஆனால் தனி மனிதன் ஒருவனை குறிவைத்து குவிக்கப்படும் கருத்துக்களுக்கு எப்போதும் நான் எதிரானவன்தான். இதில் நக்கல்களும் நையாண்டிகளும் அவரவர் தரங்களையே குறைக்கும்.

சில சச்சரவுகள் இடம்பெறுகின்றன என்பதை மணந்து தெரிந்துகொண்டே சில மூன்றாம் தரப்புக்கள் இவற்றுக்குள் தாங்களும் புகுந்துவிடலாம் என்று எண்ணுகின்றன அப்படியானவர்களுக்கு என் மின் அஞ்சல் தவறான முகவரிகளாகவே இருக்கும் என்பதை மீண்டும் அறிவித்துக்கொள்கின்றேன்.
இறுதியாகச்சொல்லிக்கொள்வது என்னவென்றால், நல்ல கருத்தை யார் சொன்னாலும் என்ன! உங்கள் ஒவ்வொருவரையும் நீங்களே சுயவிமர்சனம் செய்து உங்களை நீங்களே கேள்விகளை கேளுங்கள்!! என்று இன்று ஒருவர் சொல்லியிருக்கின்றார். கொஞ்சம் முயற்சி செய்துதான் பார்க்கலாமே (நானும் உட்பட)

***இன்றைய நாள் (29.05.2009) மாலை 5.00 மணிக்கு சென்னையில் என் வலைப்பிரவேசம் ***

Friday, May 27, 2011

தங்கச்சிக்கு கண்ணாளம்…

தங்கச்சிக்கு கண்ணாளம்..

தங்கச்சிக்கு கண்ணாளம்..

தாலியறுத்த தங்கச்சிக்கு

தடல்புடலாய் கண்ணாளம்..

என்றுதொடங்கும் நகைச்சுவையான கவிதை ஒன்றை நடிகர் ராதாரவி சொல்வதுபோல “லக்கிமேன்” என்ற திரைப்படத்தில் வரும் காட்சியை நீங்கள் பலர் பார்த்திருப்பீர்கள்.

அதில் முக்கிமான விடயம் என்னவென்றால், அந்த திரைப்படத்தில் ராதாரவி ஒரு பெரிய தாதாவாக இருப்பார், திடீர் என்று அவருக்கு கவிதை எழுதி புகழ் பெறவேண்டும் என்ற ஆசை வந்திருக்கும் அதன் பிரகாரமே அவர், மேற்படி தொடங்கும் கவிதையை ஒரு சஞ்சினை ஆபிஸில்போய் சொல்லியிருப்பார்.


நான் இன்றைக்கு சொல்லவரும் விடையமும், அது சம்பந்தப்பட்டதாக இருப்பதனாலேயே அந்த கவிதையே ஆரம்பத்தில் போட்டிருக்கின்றேன்.


ஒரு இசையினை கேட்டு எவ்வாறு இரசிக்கின்றோமோ அதுபோன்றதே கவிதைகளும், “கவிதைகளை காதலிக்கத்தெரிந்தவன் உலகத்தை காதலிக்க தொடங்கிவிட்டான்” என்பதுவும் அதனாலேயே.

செய்யுள், வெண்பா, விறுத்தங்கள், தொகைகள், மரபுக்கவிதைகள் என்ற இறுக்கங்களில் (யாப்பு) இருந்து புதுக்கவிதை பிறந்தபின்னர்தான், புலமைத்தனத்தில் இருந்த ஒருவிடயம் சாதரணமானது.

எழுத்து, சீர், அணி, மன்னிக்கவும்… அப்படியெல்லாம் வரையறைகளை சொல்லி உங்களை நான் குழப்பவிரும்பவில்லை. இருந்தபோதிலும் கவிதைகளை இரசிக்கத்தெரிவதற்கும், எழுத தொடங்குவதற்கு முன்னரும், தேர்ந்த செய்யுள்கள், வெண்பாக்கள், மரபுக்கவிதைகள் என்பவை சிலவற்றையும், அவற்றின் யாப்புக்களையும், தெளிவாக அறிந்துகொண்டால், கவிதைகளை இரசிப்பது அலாதியான இன்ப அனுபவங்களாக மாறிவிடும்.


இந்த இடத்தில் எழுத்தாளர் சுஜாதா சொன்ன ஒரு உதாரணம் நினைவுக்கு வருகின்றது. “சங்கீதத்தை இரசிக்க பாடவேண்டிய தேவை யாருக்கும் இல்லைத்தான், என்றாலும், இது என்ன இராகம், என்ன தாளம் என்பவற்றை அறியும் ஒரு அறிவிருந்தால், சிறப்பாக இரசிக்கலாம் அல்லவா?”


அடுத்த விடையம் மரபுக்கவிதைகள். மரபுக்கவிதைகளைப்பொறுத்தவரையில் இன்று அது மரணப்படுக்கைக்குப்போய்விட்டது என்றுகூட சொல்லிவிடலாம்.

புதுக்கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் தொகை பாரிய வீதத்தில் பெருகிவரும் நிலையில் மரபுக்கவிதைகள் முழுமையாக அழிந்துவிடும் நிலையினை எதிர்நோக்கவேண்டிநிலை ஏற்பட்டுவிட்டது.

ஆனால் உண்மையில் மரபுக்கவிதைகளை இரசிக்கும் நெஞ்சங்கள், இன்னும் பலர் உள்ளனர்.

இன்றையநிலையில், அந்தியேட்டி கிரிகையின்போது அடிக்கும் கல்வெட்டுக்களில் வெண்பாக்களாகவும், சில மரபுக்கவிதைகளாகவும் சில துதிப்பாக்களை மட்டும் பார்க்கமுடிகின்றது. அது தவிர மரபுக்கவிதைக்கான ஒரு இடத்தை பார்க்க கொடுத்துவைக்க வேண்டியதாகியுள்ளது.


புதுக்கவிதைகளை உணர்வோட்டமாக நேரிசை வெண்பாக்கள் தொடும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களாக சில புதுக்கவிதை கவிஞர்கள் எழுதுகின்றனர், ஏன் சில வலைப்பதிவர்கள்கூட நேரிசை வெண்பாவை தொடும் அளவுக்கு (அது நேரிசை வெண்பா எனத் தெரியாமலேயே) எழுதுகின்றனர்.

அவர்கள் சில யாப்புக்களையும், அணி அலங்காரங்களையும் கொஞ்சம் ஊன்றிக்கவனித்தால், கண்டிப்பாக மரபுக்கவிதையை தூக்கிநிறுத்திவிடலாம்.

வார்த்தை வித்தகங்களையும், சொல்நயங்களையும், எதுகை மோனை கூட்டி எழுதக்கூடியதாக இருக்கும் அவர்கள், இது பற்றிய சிறிய யாப்பு கட்டுக்களை அறிந்து மனதின் ஓரத்தில் வைத்தாலே மரபுக்கவிதைகள் புதிதாக பிரவாகம் எடுத்துவிடமுடியாதா?


ஃபுல் அடித்தும் போதையில்லை

பீர் அடித்தும் ஹிக்கு இல்லை

கள்ளு குடித்தும் தூக்கமில்லை

கண்ணைமூடி தூங்கினா

கனவில வருவது நீதானே!


இதுவும் ஒரு திரைப்படத்தில் வந்த புதுக்கவிதையின் இன்றைய நிலைதான். இதைக்கூட கவிதை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இதில்க்கூட அணி, சீர் சிறப்பாகவே உள்ளது.

மரபுக்கவிதைகளானாலும் சரி, புதுக்கவிதைகளானாலும் சரி, உணர்வுகளை தொடும் கவிதைகள், செய்யுள்களே மனதில் எப்போதும் ஒட்டிக்கொள்கின்றன.

உண்மையான கவிஞன் ஒருவன் தன்னைச்சூழ நடக்கும் அத்தனை விடையங்களையும், சிறு பூவின் அசைவைக்கூட ஆழமாக பார்க்கக்கூடியவனாக இருந்தால் அவனால் தன் பக்கம் உலகை திரும்பி பார்க்கவைக்கமுடியும்.

இதற்கு உதாரணம் பலர், ஷில்பி அப்படிப்பட்ட ஒரு கவிஞன்.

ஒரு படைப்பிலேயே அங்கு நிகழும் சகல விடையங்களையும், சத்தங்களையும்கூட (ஒலி) வாசிப்பவர்களின் மனங்களில் கொண்டுவந்துவிடுகின்றான் அல்லவா?


அதேபோல சிறப்பான உவமைகள் அப்படியே மெய் சிலிர்க்கும் அனுபவங்களாக வாசிப்போனுக்கு இருந்துவிடும்.

சிறுபூவை நீ அசைத்தால் எங்கேயோ ஒரு கிரகம் அழிந்துபோயிருக்கக்கூடும் என்று ஷெல்பியால் கூறமுடிகின்றது என்றால், அவன் எத்தனை தூரம் சிந்திக்கின்றான் என்று கொஞ்சம் பாருங்கள்…

ஒரு மரத்தில் இருந்து சாதாரணமாக பூ உதிர்ந்துவிழும் நிகழ்வை,

“உறங்கும் குழந்தையின் கைகளில் இருந்து பொம்மை பிரிந்துவிழுவதுபோல, மரத்திலிருந்து பூக்கள்…” என்று சாகாவரம் பெற்ற ஒரு தமிழ் கவிஞனால் எழுத முடிகின்றதென்றால், கண்டிப்பாக அவன் கவிதைகளாக எழுதுவது மட்டும் அன்றி, கவிதைகளாக பேசுவது மட்டுமன்றி, கவிதைகளாகவே அத்தனையையும் பார்க்கின்றான், அதையும் தாண்டி கவிதைகளாகவே சுவாசிக்கின்றான்!


அனேகமான திருஞான சம்பந்தர் பாடல்களை தேவாரங்களாக பக்தியோடு படித்திருப்பீர்கள், கொஞ்சம் அதை ஒதுக்கிவிட்டு, இயற்கையின் காதலர்களாக படித்து பாருங்கள்… அருமையான இயற்கை பற்றிய புனைவுகளும், உவமைகளும், பிரமிக்கவைக்கும், உவமேயங்களும் தென்படும்.


“புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.”


திருவையாற்றைப்பற்றி சம்பந்தர் பாடியது.

திருவையாறு மழைவளம் மிக்க இடமாகும், இங்கு குரங்குகள் அங்குள்ள சோலை மரங்களில் வசித்துவருகின்றன.

கோவிலை அண்டிய இடங்களிலேயே அவைக்கு உணவுகள் கிடைக்கும். அப்போது அழகிய மங்கையர்கள், ஆனந்தமாக சிரித்தபடி நடனமாடுகின்றனர், அவர்கள் நடனமாட பக்கவாத்தியமாக முழவு முழங்குகின்றது, இந்த நடன, மற்றும் முழவு ஒலிகளைக்கேட்ட குரங்குகள், அவை இடிமுழக்க சத்தமோ என்று அலறி, ஓடிச்சென்று மரத்தின் உச்திக்குப்போய் வான்நோக்குவதாக இந்தப்பாடல் உள்ளது.

ஆழமாக யோசித்துப்பாருங்கள் எத்தனை சிறப்புக்கள் இந்தப்பாடலில் உள்ளது என்பது புரியும்.

எனக்கு நல்ல கவிதைகளை இரசிக்கத்தெரியும், மரபுக்கவிதை எழுதும் சிலர் அவ்வப்போது எனக்கு கவி விருந்து வைத்துவருகின்றனர், ஆனால் பதிவுலகத்தில் மரபுக்கவிதை என்ற கனி புசிக்க நெடுநாள் பசியுடன் காத்திருக்கின்றேன்.

அந்த ஏக்கமே இந்தப்பதிவாகியது.

கவிஞர்களே… கொஞ்சம் மரபுக்கவிதைகள் ப்ளீஸ்…

Wednesday, May 25, 2011

செம்பகப்பூ தோட்டத்திலே….


பெண்:
செம்பகப்பூ தோட்டத்திலே
செக்கல்பட்ட நேரத்திலை..
சேர்த்துவைச்ச காசைக்கொண்டு
“சேட்டு” ஒன்று வாங்கிவந்தேன்..

எங்கம்மா மச்சாள் பெற்றவனே
எருமை துரத்திப்;போனவனே..
வாருமையா இந்தப்பக்கம்..
வசம்பை வைச்சு தைச்சுடுவேன்..

தெத்திப்பல்லால் தெறிக்கும் எச்சில்
தெப்பமாக நனையவைக்கும்..
தெற்குப்பக்கம் நீ பார்த்தால்
வடக்காய் இருந்து பதில் தருவேன்..

ஆண்:
போதுமடி போக்கிலியே
போடியார் பெற்ற பொக்கட்டியே
“சேட்டு” ஒன்றை தந்துவிட்டு
சேறுபூசும் மூஞ்சூறே..

ஆதாரமாய் இருந்ததெல்லாம்..- உங்கப்பனுக்கு
சேதாரமாய் கொடுத்துப்புட்டான் எங்கப்பன்
கொடுத்த சொத்து வரட்டுமென்று
கொத்திக்கிறேன் உன்னை இன்று

பெண்:
அத்தனைக்கும் ஆசைப்படும்
அத்தைமகன் நீ எனக்கு
அடியளவில் தூரம் விட்டு
அங்குலத்தில் பார்ப்பதென்ன?

ஆண்:
தூரமில்லை தூறலில்லை
பக்கம் வந்தால் செத்துடுவாய்..
உதட்டு வைத்தியம் பார்க்கப்போவாய்..
இடுப்பு நோக இருக்கமாட்டாய்…

கண்ணளக்கும் இடத்தை எல்லாம்..
கையளக்கும் இந்தநொடி..
அச்சாரம்போடாமலே தூழி
முச்சாரம் ஆகிடும் 90 நாளில்..

பெண்:
வாய்சொல்லில் பேரழகா..
மாமான் பெத்த மாட்டழகா…
மதினி என்னை தொட்டுப்பார்க்க
மருண்டு வழிக்கும் முழி அழகா..

எத்தனைநாள்தான் ஏச்சுப்புட்டேன்..
அப்படி இப்படி காட்டிப்புட்டேன்
அப்படியும் புரியாத தேவாங்கே..
அண்ணாந்து பார்க்கும் அலவாங்கே..

வானத்தில் ஏறி வைகுண்டம் போகாத நீதான்
என் கூட்டுக்குள் வந்து கோழி பிடிப்பாயோ!


****ஓன்றுமில்லை கிராமியப்பாடல்கள், நாட்டார் பாடல்களில் ஆண்பெண் நக்கல் நையாண்டிப்பாடல்கள் சுவை கூட்டும், படிக்கும்போதே ஒரு மெட்டு நடைபோடும்.
அப்படியான கிராமிய நடையில் பதிவுகள் வருவதை இதுவரை அறிந்ததில்லை.
அதுதான் ஒரு புது முயற்சி.

இது ஒரு மைத்துனன் மைத்துனிக்கு இடையில் நடக்கும் சம்பாசனை, அவள் அவனுக்கு ஒரு சேட் (மேல் சட்டை) வாங்கிவந்து அவனுக்கு காத்திருக்கின்றாள்.
இருவரினதும் தாய்மார்கள் மைத்துனிகள், இந்த ஆணின் தந்தையின் தங்கைதான் அவளது அம்மா. இருவருக்கிடையிலான நையாண்டியே இந்தப்பாடல், போடியார் என்பது மட்டக்களப்பில் பாவிக்கும் ஒரு வார்த்தை, பொக்கட்டி என்றாள் கட்டையானவள் என்று அர்த்தம்..
அடுத்து முக்கியமாக அவள் அவனை பிடிக்கமுடியாது என்று சொன்னது முட்டை இடும் கோழியைத்தான் (தப்பா எல்லாம் நினைக்கக்கூடாது)
இதுதான் விளக்கம்.

Tuesday, May 24, 2011

ஹொக்ரெயில் -24.05.2011


ரஜினிக்கு நடந்தது என்ன?
நாளாந்தம் ரஜினி பற்றிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒன்றுமே ரஜினி ரசிகர்களையோ, அல்லது சாதாரண தமிழ் மக்களையோ திருப்திப்படுத்துவனவாக இல்லை. ஏனோதானோ என்ற நிலையில் வரும் அறிக்கைகளால் பெரும்பாலான மக்கள் இந்த விடையத்தில் பெரும் குழப்பத்துடனேயே இருக்கின்றர்.
தமிழர்கள் மத்தியில் ரஜினியின் தாக்கம், அவரது செல்வாக்கு என்பன உச்சத்தில் என்றும் இருப்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதே உண்மை.
ஆரம்பத்தில் ரஜினி பற்றிய செய்திகளை வதந்திகள் என்றே மக்கள் கருதினார்கள், பின்னர் வந்த செய்திகள்தான், அவரது இரசிகர்களை கவலை கொள்ளச்செய்தது.

எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கும் ரஜினி இறுதியாக “எந்திரன்” மூலம் விஸ்வரூபம் எடுத்திருந்தார். அகில இந்தியா ரீதியில் என்றில்லாமல் உலக ரீதியில் ரஜினியின் மீது பல கண்ணகள் பட்டன.
இந்த வேளையில் அடுத்த “ராணா” திரைப்படத்திலும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு என்பது உண்மையில் பேரதிர்ச்சியான ஒன்றுதான்.

பிரபலங்களின் பிரார்த்தனைகள், அரசியல்வாதிகளின் நலம்பெறவாழ்த்துக்கள் என்பன ரஜினியின் உடல் நலக்குறைவை பெரிய அளவுக்கு சந்தேகம் கொள்ள வைக்கின்றது. எனினும் அவர் நலமாக இருக்கின்றார் என்று தொடர்ந்து வரும் செய்திகளும், இறுதியாக வெளியான புகைப்படங்களும் மக்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கின்றன.
பலருக்கு ஒரு உதாரணபுருஸராக, உயர்ந்த இடத்தில் இருந்தும் தாழ்வுக்கு உதாரணமாக இருக்கும் உத்தமான அந்த மனிதர் இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்பதே அனைவரது அபிலாசைகளும்.
கண்டிப்பாக நம்ம சூப்பர் ஸ்ரார் விரைவில் மீண்டும் பட்டையை கிளப்புவார்.

யாழ்ப்பாண இந்து மக்களை திகிலடையச்செய்துள்ள சுவாமி சிலைத் திருட்டுக்கள்.
இப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் அதில் ஒரு வழமையான செய்தியாக ஏதாவது ஒரு கோவிலில் சுவாமி சிலை களவாடப்பட்டிருக்கும் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு கோவில்களில் சுவாமி சிலைகள் களவாடப்பட்டிருக்கும்.
அண்மையில் திகிலூட்டும் இந்த புதுமுறைத்திருட்டுக்களால் இப்போது கோவில் தர்மகத்தாக்கள் உசாரடைந்து காவலாளிகளை நியமித்து வருவதாக அறியமுடிகின்றது.
இருந்தபோதிலும், சுவாமி சிலைகளை குறிவைத்து களவுகளை தொடரும் ஒரு கூட்டத்தின் நோக்கம் என்ன? இந்த சிலைகளால் அவர்களுக்கு உண்டாகும் இலாபம் என்ன என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த தொடர் திருட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுவந்தாலும்கூட, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்து மா சபைகள், இந்து ஒன்றியங்கள், சன்னிதானங்கள், அதிகாரமுள்ளவர்கள் இந்த விடையத்தில் வாயடைத்தப்போய் உள்ளமையும் பெரும் அச்சரியமாகவே உள்ளது.

புத்தர் சிலைகள் வருகுது என்று கத்துபவர்கள், ஊர்களில் இருக்கும் பிள்ளையார் சிலைகள் களவாடப்படுவதை பற்றி கதைக்கின்றார்கள் இல்லை.
எது எப்படியோ இந்த திருட்டுக்கள் பற்றி மக்கள் மத்தியில் பலத்த ஊகங்கள் நிலவுகின்றன. அதேவேளை எவரும் எந்த நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதையும் புரிந்துகொண்ட மக்களும், தர்மகத்தா சபைகளும், தங்கள் தங்கள் கோவில்களின் பாதுகாப்பினை தாங்களே கவனிக்க ஆரம்பித்துள்ளமை நல்ல விடையம்தான்.
கொஞ்சம் அலேட்டாக இல்லை என்றால், பிள்ளையாரை மட்டும் இல்லை நம்மையும் தூக்கிட்டு போயிடுவாங்க!!

இன்றைய காட்சி..

இந்த வார வாசிப்பு
அதிகாலையின் அமைதியில்.. சப்பா..ஒரு யுத்தகளத்தின் அருகில் இருந்து உன்னிப்பாக அந்த குறிப்பிட்ட குழுவுடனேயே இருந்து அவர்களின் வெற்றிகளில் மகிழ்ச்சி கொண்டும், ஒவ்வொருவரின் மரணங்களிலும், துடித்தும், இறுதிவரை நெஞ்சம் பதைபதைக்க அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தித்துக்கொண்டே படிக்கத்தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு இந்த அதிகாலையின் அமைதியில்.
அட..இந்த அற்புதமான படைப்பினை இத்தனை நாள் எட்டாமல் இருந்தேனே என்று மனது ஏங்குகின்றது.
கண்டிப்பாக முழுமையாக இதுபற்றி ஒரு நீண்ட பதிவு போட்டே ஆகவேண்டும்.
ப்ரீஸ்வஷிலீயின் எழுத்துக்கள் பிரமிக்கவைக்கின்றது.
ரஷ்ய – ஜெர்மன் எல்லைகளில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட கதை இது. ரஷ்ய எல்லைகளுடாக ஊடுருவி கேடுவிளைவிக்க எத்தனிக்கும் ஜெர்மன் படைகளுடன் மோதும் ஒரு பிரிவு ரஷ்ய படையினரின் கதைதான் இது. பெண்கள் குழுவையும் படையில் கொண்ட ரஷ்ய படைத்தலைவன் வஸ்கோவ் இறுதிவரை நெஞ்சில் நிற்கின்றான்.
வாசிப்பில் பிரமிப்பை தேடுபவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்.
(வாசிக்கும்போது கொஞ்சம் நம்ம பேராண்மை படமும் நினைவுக்கு வந்து போகுது)


மியூசிக் கபே

இன்றைய புகைப்படம்.
இந்த புகைப்படத்தில் சடலமாக இருக்கும் நபர் யார்? கெட்டிக்காரர்கள் பின்னூட்டுங்கள். சென்றமுறை புகைப்படத்தை கண்டுபிடித்த அகுலனுக்கு பாராட்டுக்கள்.

ஜோக் பொக்ஸ்..
இந்த பகுதிக்கு என் இனிய நண்பர் ஒருவரின் அனுபவத்தையே தருகின்றேன்.
கொழும்பில் ஒரு இடத்தில் 90களின் ஆரம்பங்களில் நண்பர்கள் ஒரு வீடொன்றை எடுத்து தங்கிருந்திருக்கின்றார்கள். அந்த வேளையில் இரவு வேளைகளில் யாரும் அறைகளில் படுத்துறங்குவதில்லையாம். எல்லோரும் ஹோலிலேயே பாயை போட்டுவிட்டு உறங்கிவிடுவது வழக்கமாமாம்.
ஒரு நாள் இரவு எல்லோரும் படுத்திருக்கவே நண்பர் அங்கிருந்த சோபா ஒன்றில் படுத்திருக்கையில், நள்ளிரவு தாண்டிய நேரம் தன் முகத்தின் முன்னால் ஒரு வெளிச்சம் வருவதுபோல உர்ந்து கண்ணை லேசாக வழித்து பார்த்திரக்கின்றார்,

எதிரே இருந்த அறையில் இருந்து அவரது கண்ணுக்கு நேரே ஒளி ஒன்று தென்பட்டிருக்கின்றது உண்மையிலேயே பயந்துபோய்விட்ட அவர், மெதுவாக எழ முயன்றிருக்கின்றார், ஆனால் அவர் எழும் நேரம் திடீர் என்று அந்த ஒளி மறைந்திருக்கின்றது. மிகவும் பயந்துபோன அவர், மற்றவர்களை எழுப்ப முயற்சித்து பின்னர், சரி படுப்போம் என்று படுத்திருக்கின்றார், அந்தநேரம் மீண்டும் அதே ஒளி தென்பட்டிருக்கின்றது. திடீர் என்று எழுந்திருக்கின்றார், ஒழி மறைந்துவிட்டிருக்கின்றது.
இப்படியே தொடர்ந்து பல தடவைகள் நடக்கவே.
நண்பர்களை அழைத்திருக்கின்றார், யாருமே எழுவதாக இல்லை, அருகில் ஒரு கட்டை ஒன்றையும் எடுத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்று பார்த்திருக்கின்றார் நண்பர்.
உண்மையில் யாரோ ஒரு வல்லை படுக்கமுன்னர் அயன் பண்ணிவிட்டு, அயன் பொக்ஸை ஆவ் பண்ணாமல் போய் படுத்திருக்கின்றது. அந்த ஸ்திரி பெட்டியின் வெளிச்சமே அது என்று தெரிந்து அசடு வழிந்திருக்கின்றார் அவர்.

Monday, May 23, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்……06

திடுக்கிட்டு திரும்பிய நான் ஆர்வமாக அந்த முகத்தை பார்க்கின்றேன். முழுமையாக மழிக்கப்பட்டிருந்த கேசம், அடர்த்தியாக மேவி வாரப்பட்டிருந்த தலைமுடி, மெல்லிய நீல மேற்சட்டை, முழங்கைக்கு கீழே நேர்த்தியாக மடித்து விடப்பட்டிருந்தது. அப்போதைய கறுப்கு ஹரா துணியில் ஜீன்ஸ் அணிந்து அழகாக மேற்சட்டை உள்ளே விடப்பட்டிருந்தது.
அப்போதுதான் அந்த உருவத்தை முதல் முதலில் பார்க்கின்றேன். மனதில் இனம்புரியாத ஒரு பயம் தொற்றிக்கொள்கின்றது. நான் ஏதும் குழப்படி செய்கின்றேன் என்று நினைத்து என்னை இவர் அடிக்கப்போகின்றாரோ என்ற சிறுவயது பேதமை அது!

மென்மையான, அனால் ஆழுத்த மான குரல் என்னைநோக்கி விழுகின்றது. தம்பிக்கு என்ன பெயர்?
ஜனா… ஜனார்த்தனன்..
ஏன் பயப்படுறீங்கள் மாமா ஒன்றும் பிடித்துக்கொண்டு போகமாட்டேன்..
ம்ம்ம்….
எங்கே படிக்கின்றீர்கள், எத்தனையாம் ஆண்டு? எங்கே இருக்கின்றீர்கள் என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் உசாராக பதிலளிக்கின்றேன்.
தம்பி… கெட்டிக்காரன் போல இருக்கு மாமா கேள்வி கேட்கவே?
பதிலாக அசடு வழிய நெழிந்துகொண்டு சிரித்திருக்க வேண்டும் நான் அப்போது..

சரி..உலகத்தில பெரிய நாடு எது?
சோவியத் ஜூனியன் என்றேன் சட்டென்று..
ஓம்..தம்பி நாலாம் ஆண்டெல்லே எங்க ஈழத்து புலவர்கள் இரண்டு மூன்று பேரிண்டை பெயர் சொல்லும் பார்ப்பம்?
ஆ…. சின்னத்தம்பி புலவர், சோமசுந்தரப்புலவர், கல்லடி வேலாயுதம்….
கேட்டிக்காரன் தான்…
சரி பள்ளிக்கூட புத்தகம் தவிர வேற என்ன புத்தகங்கள் படிக்கிறனீங்கள்?
கோகுலம், அம்புளிமாமா, வாண்டுமாமா, அர்சுனா இப்படி மா…மா..

சரி.. ஏன் இங்கை ஒன்றையும் படிக்க பிடிக்வில்லையோ தம்பிக்கு?
சரி வாரும்… நான் எடுத்து தாறன் என்று அலமாரிகளில்தேடி கொஞ்சம் சிறுவர் கதைப்புத்தகங்களை கொண்டுவந்து போட்டுவிட்டு, சிரித்தார்.
பிறகு இப்போது எனக்கு நினைவு வருகின்றது… சிறுவர்களுக்கான நூல்களாக சில பெரியோர்கள் பற்றி வந்த மெல்லிய புத்தகங்களை காட்டினார்.
ஆபிரகாம் லிங்கன், பாராதியார், காந்தி, போல பலர் பற்றி இருந்தன சின்ன சின்ன புத்தகங்களாக
தம்பி..கதைப்புத்தகங்கள் தவிர இவைகளையும் நீங்கள் படிக்கவேண்டும், அப்பத்தான் நல்ல கெட்டிக்கானாக வரலாம், பேச்சுப்போட்டிகளிலை பேசலாம், பரிசுகள் வாங்கலாம், ரீச்சர்ஸ், பிரின்ஸிபல் எல்லாம் பாராட்டுவார்கள் என்ன!
என்று அன்பாக சொன்னார்.

பேச்சுக்கள் ஒன்றும் வராமல் இன்னும் திரு… திரு என்று முழித்த படியே வெருண்டுகொண்டு நின்றேன் நான்.
வீடு பக்கத்திலைதானே.. இரண்டு.. இரண்டு புத்தகங்களாக வீட்டை கொண்டுபோய் படிக்க போவதென்றாலும் பறவாய் இல்லை.
என்று விட்டு அங்கிருந்த பொறுப்பான ஒருவரிடம், இங்க…! இந்த தம்பி கேட்கும் இரண்டு புத்தகங்களை கொடுங்கோ, தம்பி படிச்சுப்போட்டு திரும்பித்தருவார், பிறகு ரெண்டு ரெண்டாக தம்பியிட்ட கொடுங்கோ என்றார்.

பிறகு என்னிடம்…தம்பி பத்திரமாய் கொண்டுபோய் கிழிக்காமல் படிக்கவேண்டும், பேந்துவந்து இந்த அண்ணாட்ட குடுத்துட்டு வேற புத்தகம் எடுத்து கொண்டுபோம் என்ன என்றார்.
ஓம்..என்று உற்சாகத்துடன் தலையாட்டினேன்.
இவன்தான் தியாகத்திற்கு ஒரு முத்திரை பதிக்கப்போகும் மனிதன், அகிம்சையின் மறுஉருவம், போற்றுதலுக்கு அப்பாற்பண்ட புண்ணியமான மாமனிதன் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கிவில்லை.

சரி தம்பி…என்று என் தலையை கோதிவிட்டு, அங்கிருந்த ஒரு மோட்டார் பைக்கில், முடமாவடி சந்திவழியாக சென்று மறையும்வரை அந்த உருவத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
(இதை எழுதும்போதும் என் கண்களில் வழியும் நீரை இப்போதும் மறைக்கமுடியவில்லை)

இன்றும்கூட நல்லூர் மேற்குவீதியில் உள்ள அந்த நெல்லி மரத்தடியை பார்க்கும்போதும், யாழ்ப்பாணக் கோட்டை பகுதியில் நிற்கும்போதும் இதயத்தில் அசரீதியாக அந்த இடங்களில் தீர்க்க தரிசனமாக இவன் உதிர்ந்த வசனங்கள் காதுகளில்கேட்டு, கண்களை நனைக்கின்றது.

இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு அரக்க பரக்க முழித்துக்கொண்டு நின்ற என் அருகில் வந்த மைத்துனன் டேய்.. வாடா வீட்ட போகலாம் என்றான்.
ஓன்றுமே பேசாமல் வீடு சென்றடைந்து சாப்பிட்டுவிட்டு, எடுத்துவந்த முதலாவது புத்தகத்தை பார்த்த நான் திடுகிட்டேன். அது ஒரு சிறுவர் புத்தகம்தான் ஆனால் ஆங்கிலப்புத்தகம். ஆனால் அழகான நீழமான பின்னல் பின்னிய பெண்ணின் படம், இளவரச, இளவரசி கதை என்று படங்களைப்பார்த்து புரிந்தது!
அதை பிறகு வீட்டில் கேட்டு அறியலாம் என்று வைத்துவிட்டு, கொண்டுவந்த காந்தி பற்றிய புத்கத்தை திருப்புகின்றேன்.
காந்தி சிறுவயதாக இருந்தபோது தனது தாயாரின் நோன்பு நாளில் தாயார் உணவருந்திவிடவேண்டும் என்ற பாசம் கலந்த பதைபதைப்புடன் தொடங்கியது அந்த புத்தகம்.
ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது!

அந்தவேளையில் பேரிடியாக ஒரு செய்தி கிழக்கில் இருந்து எங்கள் குடும்பத்திற்கு கிடைக்கின்றது. வீட்டில் அனைவரும் ஆளாளுக்கு அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
ஏன் எனப்புரியமால் நான் பரிதவித்துக்கொண்டிருக்கின்றேன்.
என்ன பிரச்சினை என்று ஒன்றும் புரியவில்லை.. அயலவர்கள் வந்து கேட்கும்போது வீட்டார்கள் சொன்ன பதிலில்த்தான் அறிந்துகொண்டேன். இந்த யுத்தத்தில் என் குடும்பத்தில் முதலாவது இழப்பு நிகழ்ந்துவிட்டது என்று…

-இலைகள் உதிரும் -

Saturday, May 21, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்…..05

வலிந்த வான் தாக்குதல்கள், நெருப்புக்குண்டுகக்கும், இயந்திரப்பறவைகளின் வான்மறைப்பு என்பவற்றால் பாடசாலை என்பது அப்போது எங்களுக்கு பெரும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது.
அப்படி பாடசாலை நடந்தாலும்கூட ஹர்த்தால், மாணவர் அமைப்பு பகிஸ்கரிப்பு என்று நடக்கின்றது ஓடுங்கடா என்று பெரிய அண்ணாமார் வெள்ளையும் வெள்ளையுமாக வந்து எங்களை துரத்தி விடுவார்கள்.
இப்படி ஒரு கால கட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர், இன்றைக்கு ஸ்கூல் தொடங்குதாம் என்ற மனோகரன் மாஸ்டரின் பேச்சை நம்பி நான் அவசர அவசரமாக வீட்டில் வெளிக்கிடப்படுத்தப்படுகின்றேன்.
பெரிய தந்தையார் வாஞ்சையுடன் தனது வாகனத்தில் அழைத்துச்சென்று பாடசாலை வாசலில் இறக்கி விடுகின்றார்.

டேய்.. ஜனா வந்திட்டான்டா என்ற உட்சாகமான சத்தம், எல்லாவற்றையும் மறந்து மனதுக்குள் துள்ளிக்குதிக்க சொல்லுகின்றது. இருந்தாலும் நான் நல்லபிள்ளை என்று பெரியப்பாவுக்கு பாசாங்கு காட்டி அவரது வாகனம் மறையும் மட்டும் டாட்டா காட்டிவிட்டு, கர்ணன்களை நீண்ட நாள் பிரிந்த துரியோதனன்போல கத்திக்கொண்டே உள்ளே நுளைகின்றேன்.
ஆண்டு 4 ஏ கிளாஸ் நீண்ட நாள் காணாத தன் அன்பு செல்லங்களை கண்டு வாரி அணைப்பதுபோன்ற உணர்வு கிளாஸிற்குள் சென்றபோது உணரப்பட்டது.

என்ன கொடுமை என்றால் மாணவர்கள் 60 வீதமானவர்கள் வந்திருந்தார்கள், ஆனால் ஆசிரியர்கள் பெரிதாக வரவில்லை. ஆசை தீர விளையாடிக்கொண்டிருந்தோம். நேரம் ஒரு 10.30 மணியிருக்கும் பேரிடி காதுகளை பிளந்துகொண்டு விழுவதுபோல அடுத்தடுத்து கூவிக்கொண்டு மூன்று ஷெல்கள் விழுந்தன. புhடசாலைக்கு மிக அண்மையில்த்தான் அவை விழுந்திருந்தன. யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளே அவை.
ஆசிரியர்கள் குஞ்சுக்கோளிகளின் ஆபத்தறிந்து எகக்காலத்துடன் கொக்கரிக்கும் கோழிகள்போல எங்களை இழுத்துக்கொண்டு ஷெல் மற்றும் விமானத்தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அமைக்கப்பட்டிருக்கும் பங்கர்களுக்குள் (பதுங்கு குழி) எங்களை அவசரமாகத்தள்ளுகின்றார்கள்.
என்னடா என் வெள்ளை உடுப்பின் அரைக்கை மடிப்படியில் ஏதோ பிசுபிசுக்கின்றதே என்று உணர்ந்து என் முழங்கைக்கு மேலே பார்த்த நான் திடுக்கிட்டப்போனேன்.

அந்த இடத்தில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அரைக்கை வெள்ளைச்சட்டை சிவப்பாகிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த உடன்தான் எனக்கு வலிக்க ஆரம்பித்து.
அதற்குள் டேய்…ஜனா என்னடா இரத்தம் வருது! குண்டு பட்டுட்டா என்று மற்ற சினேகிதர்கள் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில்த்தான் எனக்கு வலிக்கவே ஆரம்பித்தது.

உண்மை என்னவென்றால் அந்தக்காயம் குண்டு அடிபட்டு வரவில்லை. அந்த பதுங்கு குழி வாசலில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு இரும்பு துண்டு கிழித்ததால்த்தான் அது ஏற்பட்டது என்பது சட்டென்று எனக்கு புரிந்தது.
பின்னர் என் அழுகைக்கு மத்தியில் மற்றவர்களுக்கும் அது புரிந்தது.

அன்றைய தினமே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒரு மாணவத்தலைவனாக இருந்த பொன்.விபுலானந்தன் என்ற மாணவன் கோட்டையில் இருந்து குண்டுமாரி பொழிவதையடுத்து விரைந்து சென்று மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு திரும்பும் பொழுது குண்டடிபட்டு தன் உயிரை தனது கல்லூரி மண்ணிலேயே விட்டிருந்தார்.

சரி..என் விடையத்திற்கு வருகின்றேன். கையில் இரத்தம் வழிந்துகொண்டிருக்க கிடைத்த ஒரு ஷெல் விழாத இடைவெளிக்குள் எனது பெரிய தந்தையார் வந்து என்னை அழைத்து சென்று ஒரு மருந்தகத்தில் காயத்திற்கு மருந்து கட்டிவிட்டார்.
வீட்டில் வந்து பெரும் மனக்குழப்பத்துடன் பத்திரமாக இருந்தேன்.
இப்போதைக்கு ஸ்கூலுக்கு போகவேண்டாம் என்ற ஒருமித்த கட்டளை வீட்டில் விழுந்தது.

மறுநாள் வேறு வழியில்லை. வீட்டில் இருக்கவும் பைத்தியம் பிடித்தது. எனது மைத்துனன் ஒருவன் லைபிரரிக்குப்போறேன் வாரியா? என்று வீட்டில் வந்து கேட்டான் அவன் 8ஆம் வகுப்பு படிப்பவன், நான் அரைவாசி.
அவனுடன் போவதென்பதால் பத்திரமா கூட்டிப்போய் வா என்று அவனிடம் என்னை ஒப்படைத்தனர். அப்போ நல்லூர் கோவிலுக்கு பின் புற வீதியில், போராளி ஒருவரின் பெயரில் ஒரு படிப்பகம் இருந்தது. அங்குதான் கூட்டிப்போனான்.

புத்தகங்கள் மீது எனக்கு காதலை ஏற்படுத்திய முதலாவது சம்பவம் அது. என்னை விட்டுவிட்டு, அவன் கற்கண்டு சஞ்சிகையை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். நான் அங்கிருந்த புத்தங்கள் ஒவ்வொன்றையும் பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அங்கே எனக்கு அந்த வேளைகளில் பிடித்தமான “கோகுலம்” புத்தகம் இருக்கா என்று தேடினேன். அதில் வரும் 16 பக்க வண்ணக்கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கே அது இல்லை. பெரும்பாலும் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களே தொகையாக இருந்தன.

நமக்கு காரியம் ஆகாது! என்ற எண்ணத்துடன் அங்கிருந்த சட்டம் ஒன்றில் சாய்ந்துகொண்டே வீதியில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது என் பின் புறமிருந்து வாஞ்சையாக ஒரு கை என் தலையை தடவிவிட்டது. திரும்பி பார்த்து பிரமித்து நின்றேன்.
என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.

சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்.

- இலைகள் உதிரும் -

Tuesday, May 3, 2011

ஹொக்ரெயில் - 03.05.2011

சுஜாதா 76
எழுத்து துறையில் மூன்று தலைமுறை இளைஞர்களை கட்டி இழுத்துவைத்திருந்த வியப்பான ஒரு எழுத்தாளர், அதிலும் தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்னும் எஸ்.ரங்காநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மனிதன்தான்.
ஆம்..இன்று தமிழ் எழுத்துலகத்தை விட்டு மறைந்தாலும் எப்போதும் தனது படைப்புக்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று.
சுஜாதா ஒரு சிறுகதை, நாவல், துப்பறியும் கதை, குறுநாவல், இலக்கிய ஆராய்வு, விஞ்ஞானக்கதை, விஞ்ஞானப்புனைகதை, அறிவியல் தர எழுத்தாளர் என்பதையும் கடந்து அவர் ஒரு பொக்கிசமான தகவற்களஞ்சியம் என்பதே யதார்த்தமானது.
“ஜெனரேசன் கப்” என்பது தனக்கும் தலைமுறை கடந்த வாசகருக்கும் இடையில் சற்றும் விழுந்துவிடாது இறுதிவரை காத்துக்கொண்டமையே பெரும் ஆச்சரியமாக உள்ளது.

சுஜாதாவினுடைய எழுத்தை இரசிப்பவர்களுக்கு, போனசாக அவரால் பல்வேறு பட்ட தகவல்களும், அறிவியலும், ஏன் சிக்கலான சில கோட்பாடுகளும் கூட, புளிப்பு மிட்டாயில் இனிப்பு தடவி கொடக்கப்பட்டு செரித்துக்கொண்டதுபோல பல தகவல்கள் கிடைத்துவிட்டிருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மை.

அடுத்து நேர்த்தியான ஒரு வாசித்தலுக்கு வாசிப்புத்துறைக்கு ஒரு சிறந்த ஹைடாகக்கூட சுஜாதாவின் எழுத்துக்கள் இருந்திருக்கின்றமை வெட்ட வெளிச்சம்.
சுஜாதாவால் பல அருமையான படைப்புக்கள் மேற்கோள் காட்டப்பட்டு, அல்லது ஏதாவது ஒரு பகுதியில் கூறப்பட்டு வாசகர்கள் அதையும் படிக்கவேண்டும் என்ற தனது ஆவலை ஆங்காங்கே வெளிப்படுத்தியிருப்பார்.
ஜெஸ்… சுஜாதா சுஜாதாதான். வேறு உவமைகள் கிடையாது.

உலகப்பத்திரிகை சுதந்திரம்!
உலகத்தின் முகத்தை உலகம் பார்க்க ஒரு காலக்கண்ணாடியாக இருப்பதே பத்திரிகை. உலகின் போக்கையே மாற்றக்கூடிய சக்தி இந்த பத்திரிகைகளுக்கு உண்டு என்றால் அது மிகை இல்லைத்தான். காலச்சக்கரத்தில் பத்திரிகைகளாலேயே பல ஆட்சிகள் கலைந்து போயிருக்கின்றன, பல வழக்குகள், நியாயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன, பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன, இத்தனையும் ஏன் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் ஆன்மக்குரலாக பத்திரிகைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓங்கி ஒலித்திருக்கின்றன என்பதற்கு வரலாற்றின் சுவடுகள் சாட்சி.

வளர்ந்த நாடுகளில் தற்போது பத்திரிகை சுதந்திரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பேணப்பட்டுள்ளது என்பதற்கு தற்போதைய நடைமுறைகளே சாட்சியாக இருக்கின்றன. ஆனால் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாக இருப்பது மூன்றாம் உலக நாடுகளில்த்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் சில இடங்களில் பத்திரிகைச்சுதந்திரத்திற்கு மிலேசத்தனமான அடக்குமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளில் பல ஊடகவிலாளர்கள் கொலை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, ஏன் நேரடியாக உயர் மட்டங்களால் எச்சரிக்கவும் பட்டு வருவது வேதனையானது என்பதுடன் கேவலமானதும் கூட.

ஒருநாட்டின் வளர்ச்சியை கணிப்பிடுவதற்கு முக்கிமாக அந்த நாட்டின் பத்திரிகை சுதந்திரமும் கணிக்கப்படவேண்டும் என தற்போது ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் ஏகமனதாக வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.
இதேவேளை இந்த பத்திரிகை சுதந்திரத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் விதமாக இன்று பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு கட்சியினரும் தமக்கான பத்திரிகைகளையும், பிற ஊடகங்களையும் வசப்படுத்தி வருகின்றமை மறுபுறத்தே பெரு வேதனையையே தோற்றுவிக்கின்றது. பத்திரிகா தர்மம் என்பதையே இவை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளாகவே கருத்தப்படவேண்டும்.

உண்மையில் எந்த ஒரு நாடு ஊடகசுதந்திரத்தை அடக்க முனைகின்றதோ அந்த நாடு 100 ஆண்டுகள் பின்னோக்கிப்போக தலைப்படுகின்றது.
இன்று உலக பத்திரிகை சுதந்திர தனம்.

இன்றைய காட்சி
மரினாவில் இன்னும் கிரிக்கட் விளையாடத்தடையா?

ஹசானின் கெட்ட நேரமா! இலங்கை கிரிக்கட்டின் கெட்ட நேரமா!!
ஆட்ட நிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள், நாடுகளின் தலைகள் உருளத்தொடங்கி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்கூட, ஸ்ரீ லங்கா அணி தொடர்பாக இதுவரை பெரிதாக ஒரு ஆட்ட நிர்ணய சதி குற்றசாட்டுகளும் எழுந்ததில்லை. அந்த அளவுக்கு கனவான் விளையாட்டை, கனவான் தனமாகவே இலங்கை கிரிக்கட் கடைப்பிடித்து வருவதாகவே பலரினதும் அபிப்பிராயங்கள் இருந்து வந்தன.

இருந்த போதிலும், கடந்த உலகக்கோப்பை இறுதி போட்டி, பல தரப்பினர் மனதிலும் சிறிய சந்தேகங்களை உருவாக்கிவிட்டது என்பது உண்மைதான்.
அடுத்தடுத்த இராஜிநாமாக்களும், விலகல்களும், சிரேஸ்ர வீரர்களின் சலிப்பான பேட்டிகளும் இதற்கு மேலும் தூபம் போட்டுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஹசான் திலகரட்னவின் கருத்து திடீர் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

இந்த நிலையில் ஹசானுக்கு ஆதவரவான குரல்களும் எதிரான குரல்களும் எழும்பத்தொடங்கிவிட்டன. இந்த நிலையில் சற்றுமுன் வந்த செய்திகளின் படி ஸ்ரீ லங்கா புலனாய்வுப் பிரிவினரால் ஹசான் இதுதொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னமோ ஏதோ..பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், இது ஹசானின் கெட்டகாலமா அல்லது ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கெட்டகாலமா என்று!

இந்த வாரவாசிப்புக்கள்.
இந்த வார வாசிப்புக்காக குறிப்பாக முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், நிர்வாகம் சம்பந்தமான புத்தகங்களையே வாசித்துக்கொண்டிருக்கின்றேன். (மை பெஸ்ட் ஸ்ரெப், டெவலெப்மென்ட் போர் ஈச் அதர்ஸ், கவ் ரூ கிளியர் யுவர் ஓன் வே.. என்பன அவற்றில் சில)
இருந்த போதிலும் கைவசம் வாசித்தவைகள் தவிர தமிழில் இது சம்பந்தமான புத்தகங்கள் கிடைப்பது அரிதாகவே இருப்பதால் இணையத்தேடுதலுக்கு போனால்,

ஈ புத்தகங்களாக சில கிடைக்கின்றன. ஏற்கனவே வாசித்தவைகள்தான் பெரும்பாலும்.
என்றாலும் கூட “சவாலே சாமாளி” என்ற ஆடியோ புத்தகத்தை தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.
இவற்றை படிப்பதில், கேட்பதில் இன்ரஸ்டிங்காக இருப்பவர்கள் கீழே கிளிக் பண்ணி அதை தரவிறக்கலாமே…

மியூசிக் கபே
மழைதருமோ என்ற கேள்வியுடன் ஆரம்பித்துவிட்டு மனதுக்குள் மெலடி மழை தூவிவிட்டு போகின்றது இந்த பாடல்.

இந்தவாரப்புகைப்படம்
இன்றைய ஊடக சுதந்திர தினத்துடன் தொடர்பு பட்ட கொலம்பியாவை சேர்ந்த பத்திரிகையாளரே இவர். ஆண்டு தோறும் இவர் பெயராலேயே சிறந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு யுனஸ்கோ விருது வழங்கி கொளரவிக்கின்றது.
இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.

ஜோக் பொக்ஸ்
வீடுகளில் பெரும்பாலும் டி.வி ரிமோட் யார் கையில் இருக்கும் என்று ஒரு பாலர் பாடசாலையில் ஒரு சர்வே எடுத்தாங்க..
அதில பெரும்பாலான மாணவ மாணவிகள் அம்மா கையிலதான் என்று தெரிவித்திருந்தாங்க சரிதான்..சர்வே முடிவு நூறு வீதம் அம்மாக்கள் கையிலதான் ரிமோட் என்று எழுதப்போகும் நேரத்தில ஒரு பையன் அவசரமாகச் சொன்னால் எங்க வீட்டில டி.வி. ரிமோட் அப்பா கையிலதான் இருக்கும் என்றான்..
ஆச்சரியமாக அப்படியா என்று சர்வே எடுக்கவந்தவர் கேட்டு முடிப்பதற்குள் சொன்னான்..
ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இருக்கு!

Monday, May 2, 2011

இவர்கள் இப்போ என்ன செய்கின்றார்கள்?

அஜய் ஜடேஜா

1992 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரை இந்திய கிரிக்கட் அணியில் இடம்பிடித்திருந்தவர் அஜய் ஜடேஜா. ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இவருக்கு போட்டிகளில் விளையாட ஐந்தாண்டு தடை டில்லி உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.
ராஜ்புட் அரச வம்சத்தில் பிறந்த அஜய் ஜடேஜா, குறிப்பாக 1994 -1999 ஆண்டு வரையான காலத்தில் பிரகாசமாக ஜொலித்தவர் என்பதுடன் பெரும்பாலான பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்ததுடன், பெருமளவிலான விளம்பரங்களிலும் சச்சினை முந்திக்கொண்டு நடித்துக்கொண்டிருந்தார்.
15 ரெஸ்ட் மற்றும் 196 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 2000 ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போட்டியின்பின்னர் அவரது, கிரிக்கட் வாழ்வு திடீர் என்று அஸ்தமனத்திற்குள்ளாகி காணாமற்போயிருந்தார்.

அதன் பின்னர் அடிக்கடி வெளிநாடுகளில் தங்கி நின்ற ஜடேஜா, 2003முதல் 2005ஆம் ஆண்டுவரை ஜம்மு காஸ்மீர் அணிக்காக விளையாடி வந்தார், அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2006வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார், அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல் போட்டிகளை என்.டி.ரியில் தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக வந்து முகம் காட்டினார்.
அதற்கும் சிலர் மத்தியில் இருந்து பாரிய எதிர்ப்புக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தற்போது அவர், முதலீட்டு வர்த்தகம், மற்றும் ரியல் எஸ்ரேட் என்பவற்றில் பெரியளவில் முதலீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக்ஹெய்ல் கொர்ப்பச்சேவ்

உலகம் இரு வல்லரசுகளின் கீழ் இருந்த காலத்தின் ஒரு வல்லரசின் தலைமை கதாநாயகனாக இறுதியில் இருந்தவர்.
சோவியத் யூனியன் என்ற பரந்துபட்ட பூமி சிதைவுறும் வரை 1985 முதல் 1991ஆம் ஆண்டுவரை அந்த இணைந்த தேசத்தின் தலைவராக கொலுவீற்றிருந்தவர் கொர்ப்பச்சேவ்.
ஒரு இலட்;சியத்தை நோக்கிய நீண்டகால தூரநோக்கான பயணியாக கொர்ப்பச்சேவை குறிப்பிடுகின்றது உலகம்.
பிறப்பு அடையாளங்கள் (பேர்த் மார்க்) பற்றிய உதாரணமாகவும் அவரே (அவரது தலையில் உள்ள பிறப்படையாளம்) முன்லை பெறுகின்றார்.

சோவியத் ஜூனியனின் சிதைவுக்கு பின்னதான காலங்களில் ஆடிய கால் சும்மா இருக்காது என்பதற்கு தக்கவாறு பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கத்தவராக இருந்ததுடன், மீண்டும் ஒரு வலுவான தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்த பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இருப்பினும் 2003ஆம் ஆண்டு புதிய கட்சி (ரஷ்ய சமுக ஜனநாயக கட்சி) முன்னிறுத்தி தேர்தலில் செல்வாக்கு செலுத்த எடுத்த முயற்சியும் பலிக்காது, 2007 ஆம் ஆண்டு அந்த கட்சி ரஷ்ய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் தனது மனைவின் பெயரில் தர்ம ஸ்தாபனம் ஒன்றை அமைத்து கொஞ்சம் சமுகசேவைப்பக்கம் அக்கறை காட்டினார்.
கடந்த (2010) ஒக்டோபர் 27 அன்று தனது 80ஆவது பிறந்தநாளை லண்டனில் விமர்சையாக கொண்டாடியுள்ளார் கொர்ப்பச்சேவ்.
தற்போதும் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளுடன் மொஸ்கோவில் வசித்துவருகின்றார்.

டி.ஆர்.கார்த்திகேயன்

தமிழ்நாட்டை சேர்ந்தவா.; இந்தியாவாலும் குறிப்பாக தமிழர்களாலும் மறந்துவிட முடியதவரும்கூட. ஏற்கனவே பல்வேறு சாதனைகளை புரிந்தவர் இவர் என்றாலும்கூட ராஜீவ் காந்தி கொலை வழங்கு மூலம் மேலும் பிரபலம் பெற்று ஜொலித்தவர். விசாரணைகள் தொடங்குமுன்னமே இதை செய்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்று முன்கூட்டிய முடிவுடன் செயற்பட்டு, மேலிட அழுத்தங்கள், சுய விஸ்வாசங்களால் தான் நினைத்தபடியே அந்த கொலை கேஸை தன் இஸ்டப்படியே நகர்த்தியவர்.
என்று நான் சொல்லலையுங்க இவருக்கு அடுத்த நிலை அதிகாரியாக இருந்த ரதோத்தமன் இப்படி கூறியிருக்கின்றார். அதேவேளை விடுதலைப்புலிகள் கருவிகளாகவே பயனப்டுத்தப்பட்டிருந்தனர் எனவும் ஏவியவர்களை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளுக்கு கார்த்திகேயன் பெரும் தடையாக இருந்ததாகவும் இவருடன் பல அதிகாரிகள் முரண்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இவர் மொஸ்கோ, நியுஸிலாந்து, புஜி ஆகிய தேசங்களின் இந்திய தூதரக செயலாளராக கடமையர்றியதுடன், தற்போது இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.

ராஜீவ் மேனன்

இந்தியாவின் தலைசிறந்த சினிமோட்டோகிரபர், சிறப்பான விளம்பர பட இயக்குனர், மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற கலர்புல்லான திரைப்படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன்.
இப்போதும் பிரபல கம்பனிகளின் விளம்பரங்கள், ஏன் இந்திய அரசாங்கத்தின் வரி விளம்பரம் என பல சிறப்பான விளம்பரங்களை இயக்கிவருகின்றார்.
அத்தோடு மிட்ஸ்கிறீன் பிலிம் இன்ஸிரியூட் என்ற நிறுவனத்தின் ஊடாக பல இளைய திறனாளர்களை உருவாக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதமூரான்

இலங்கைப்பதிவர்களில் மிகக்காத்திரமான யதார்த்தநிலை மற்றும் நடுநிலையான தரத்தில் நின்று காத்திரமான பதிவுகளை எழுதிவந்தவர்.
அரசியல், சினிமா, இலங்கியம், சமுகம் என்று மிக இயல்பாக அதேவேளை கனதியான பார்வையுடன் தனது பதிவுகளை தந்துவிடுவது இவரது சிறப்பியல்பு.
நீண்ட காலமாக பதிவுலகப்பக்கம் காணமுடியாத இவரை தற்போது மூஞ்சிப்புத்தகத்தில் தர்க்க ரீதியான பல பிலோசொபிக்கல் டாப்பிக் விடயங்களுடன் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
இருப்பினும் மிகத்தரமான அச்சு இதழ் ஒன்றை வெளியிடும் வேலைகளில் மிக பிஸியாக இருப்பதாக அறியமுடிகின்றது.(மருதமூரானுக்கு மட்டும் ஹி..ஹி..ஹி..)

LinkWithin

Related Posts with Thumbnails