Tuesday, June 22, 2010

சிறுவர்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளிவரும் ஈரானியத் திரைப்படங்கள்.

மீள்பதிவு


ஆணும் பெண்ணும் தொட்டு, கைகோர்த்து நடிப்பதற்கு தடை, முத்தக்காட்சிகளுக்குத்தடை, வன்முறைகளின் காட்சிப்படுத்தலுக்குத் தடை, இஸ்லாமியச்சட்டத்திற்கு விரோதமாக படமாக்கலுக்கு தடை, சிறு சலன ஆபாசத்திற்கும் தடை, என ஈரானிய சினிமாவுக்கு தடைகள் மேல் தடைகள் போடப்பட்டாலும், அந்த தடைகளுக்குள்ளாகவே, உணர்வுகளை மட்டுமே கருப்பொருளாகக்கொண்டு வெற்றிபெறலாம் என்பதை நிரூபித்து தலைநிமிந்து நிற்கின்றது ஈரானிய சினிமா.

உலகின் வெற்றிபெற்ற, விருதுகளைப்பெற்ற படங்கள் அத்தனையையும் எடுத்துப்பாருங்கள், அதில் உணர்வு ஓட்டமான கட்டங்கள் பல இருக்கும். விருதுகளும், மரியாதைகளும் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களுக்கே வழங்கப்படுகின்றதே தவிர பிரமாண்டமான படங்களுக்கு அல்ல.
இன்றைய நிலையில் இரானில் அத்தனை அழுத்தமான சட்டங்களுக்கு மத்தியில் அந்த சட்டதிட்டங்களுக்கு எற்றதுபோல சிறுவர்களின் உணர்வுகள். அவர்களின் வாழ்வுலகம். அவர்களின் எண்ணங்கள், எதிர்பாhர்ப்புக்களை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் வெளியாகி பெருவெற்றிபெற்றுள்ளதை அவதானிக்கலாம்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் நின்றுவிடாது அதை ஒரு சமுகத்தின் கருத்துக்களையும், முக்கியமாக மற்றவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புக்கள், அவர்களின் வலிகளை மற்றவர்களும் உணரும் ஒரு ஊடகமாக இத்தகய சினிமாக்கள் உள்ளன.
பிரமாண்டங்களைக்கண்டு பிரமிப்பவர்கள் கூட, இன்று மெல்ல மெல்லமாக இந்த உணர்வோட்டமான சினிமாவின் பக்கம் வந்துகொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
முக்கியமாக ஈரானிய சினிமா இன்று கையில் எடுக்கும் முக்கியமான விடயம் சிறுவர்களின் உணர்வுகள், பிரச்சினைகளை உணர்விற்கும் விதமானவைகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன.
இன்று உலகத்தில் உள்ள அனைவருமே சிறுவர் என்ற பராய வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். அன்றைய நாட்களின் வசந்தங்களையும், சிறுபிராயத்தின் தமது மனதின் உணர்வுகளையும் தொலைத்துவிட்டு இன்றும் அந்த இறந்தகாலத்தில் ஒரு தடவையாவது வாழமுடியாதா என ஏங்கி, இறந்தகாலத்திற்கு தமது நினைவுகளை கொண்டு செல்பவர்களாகவே நாம் அனைவரும் உள்ளோம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்காது.

இந்த நிலையில் இந்த சிறுவர்களை மையப்படுத்தி வரும் உலகத்தரமான சினிமாக்கள் எங்களை சிலிர்க்க வைக்கின்றது. இவை எங்கள் தமிழ் சினிமா உட்பட இந்தியச்சினிமா கட்டுண்டுகிடக்கும் பல மாஜைகளைளுக்கு அப்பால் உள்ள பிரகாசமான ஒளியாக தெரிக்கின்றது.
ஒரு நான்கு சண்டைக்காட்சிகள், ஆறு பாடல்கள், அவற்றில் இரண்டு குத்துப்பாட்டுக்கள், கீரோஹிசம், விரசம், கவர்ச்சி என்று மூன்றாம்தரமான நிலையில் இருக்கும் இந்திய சினிமாக்களின் தோலை உரிக்கின்றன இத்தகைய சினிமாக்கள்.



சரி…இன்றைய பகிர்வுக்காக நான் எடுத்துக்கொண்ட ஈரானிய திரைப்படங்கள் சிறுவர் சம்பந்தப்பட்ட மிகப்புகழும், விருதுகளும் பெற்ற படங்களே. உலகப்புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிடியின் திரைப்படங்களில் இருந்து
1996 ஆம் அண்டு வெளியாகிய “த ஃபாதர்” (The father), 1997 ஆம் ஆண்டு வெளியாகிய “சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven), மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளியாகிய “த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise) ஆகிய திரைப்படங்களை நாம் பார்த்தோமானால், முற்றிலும் இந்த திரைப்படங்கள் சிறுவர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டதாகவே உள்ளன. மூன்று திரைப்படங்களை பார்த்து வெளிவரும்போதும் இதயத்தில் ஒரு வலியும் நெருடலும், ஒரு செய்தியும் கண்டிப்பாக இருக்கும். உச்ச வெயிலில் பாலை வனத்தில், வறண்ட மணற்காற்றில் பயணிக்கும் எங்களை ஒரு மெல்லிய ஊற்று அருவி ஒன்று தடவிச்செல்வதுபோல உணர்வுகளை இந்தத்திரைப்படங்கள் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இன்றி எம் மனதில் தடவிவிட்டுப்போகும்.

த ஃபாதர் (The father)

தந்தையை இழந்த தனது குடும்பத்தில் தனது தாயார் மற்றும் மூன்று தங்கைகளுக்கும், காப்பரனாக குடும்பத்தில் மூத்தவன் என்ற ரீதியில் தானே உள்ளதாக, தானே உணர்ந்து தனது ஊரில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பட்டணம் ஒன்றில் வேலை செய்துவருகின்றான். முஹ்மூத் என்ற சிறுவன்.
அவன் தொழில் செய்யும் இடத்தில் அவனுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பணமும் வழங்கப்படுகின்றது. அந்தப்பணத்தில் தனது தயாருக்கும், தனது தங்கைகளுக்கும் என பார்த்துப்பார்த்து ஆசை ஆசையாக அவன் பொருட்களையும், துணிமணிகளையும் வாங்குகின்றான். அவற்றை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு தனது ஊரை நோக்கி பயணமாகின்றான்.

ஊர் எல்லையில் சந்திக்க நேரும் நண்பன்வழியாக தெரியவரும் செய்தி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உள்ளூரில் இருக்கிற காவல்துறை அதிகாரிக்கும் அவன் தாயாருக்கும் திருமணம் நிகழ்ந்த செய்தியை அவனால் நம்பமுடியவில்லை. தாயார்மீது கடுமையான கோபம் கொள்கிறான் அவன். அவளையும் தங்கைகளையும் காப்பாற்றும் பொறுப்பை தானே விரும்பிச் சுமந்துசென்றவன் அவன். தன் தந்தையைப்போல குடும்பப் பாரத்தைச் சுமக்க நினைத்தவன். ஒரு தந்தையாக நின்று அக்குடும்பத்தை அவன் நிலைநிறுத்தவேண்டும். இப்படித்தான் அவன் மனம் நினைக்கிறது. இதனாலேயே அவன் பதற்றம் அதிகரிக்கிறது. சிறுவயதுக்கே உரிய துடுக்குத்தனமும் புரியாமையும் வேகமும் எகத்தாளமும் தந்திரமும் அவனிடம் அவ்வப்போது வெளிப்படாமல் இல்லை. ஆனால் அவையனைத்தும் சில கணங்கள்மட்டுமே நிலைத்திருக்கின்றன. மிக விரைவாகவே மறுபடியும் அவன் தந்தை என்னும் கோட்டுக்குச் சென்றுவிடுகிறான்.

தாயை மணந்துகொண்டு தன் சகோதரிகளுக்குத் தந்தையாக இருக்கிற அதிகாரிக்கும் அவனுக்கும் தொடக்கத்திலேயே மோதல் உருவாகிவிடுகிறது. மெல்லமெல்ல அம்மோதல் வலுப்பதில் சிறுவனுடைய இதயம் வெறியுணர்வால் நிரம்பிவிடுகிறது. ஆவேசத்தின் உச்சத்துக்குப் போன சிறுவன் தனக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமையையும் அதிகாரியின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தந்தைமையையும் ஒரே நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளும் தருணத்தை முன்வைத்துப் படம் முடிவெய்துகிறது. தந்தைமை என்பது ரத்த உறவால் உருவாவதில்லை. சட்ட உறவாலும் உருவாக்கப்படுவதில்லை. அது அனைத்துக்கும் மேலான ஓர் உணர்வு. அரவணைக்கிற உணர்வு. தன்னையே வழங்குகிற உணர்வு. அன்பைப் பொழிகிற உணர்வு. எங்கும் எதிலும் வேறுபாடுகளைக் காணாத உணர்வு. பாதுகாப்பை வழங்குகிற உணர்வு. அதைக் கண்டடையும்போது நம் நெஞ்சம் அடையும் பரவசத்துக்கு அளவே இல்லை.

ஒரு கட்டத்தில் காவல் பணியில் சின்னமாக விளங்கக்கூடிய கைத்துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிற சிறுவனை நகரத்தில் கண்டுபிடித்து கைவிலங்கிட்டு மீண்டும் அழைத்து வருகிறார் அதிகாரியான வளர்ப்புத்தந்தை. ஒரு கைதியாக அவரைத் தொடர்ந்து வரும் சிறுவனுக்கும் அவருக்கும் இடையே சாதாரண உரையாடல் எதுவுமே இல்லை. வளர்ப்புத் தந்தைக்கு தன் தரப்பில் எவ்வளவோ சொல்வதற்கிருந்தும் எதுவும் சொல்வதில்லை. அச்சிறுவனுக்கும் தன் தரப்பில் சொல்வதற்கிருந்தும் அவனும் எதையும் சொல்வதில்லை. எப்போதும் இருவருக்கும் ஒரு முறைப்பு. வெறுப்பு கலந்த பார்வை. எரிச்சல். இகழ்ச்சி புரளும் புன்னகை. இவைமட்டுமே அங்கே நிகழ்கின்றன. அதிகாரி ஏமாந்த தருணத்தில் வாகனத்தோடு தப்பிச் சென்றுவிடும் சிறுவனுடைய முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. குறுக்குவழியில் அவனை மீண்டும் பிடித்துவிடுகிறார் அதிகாரி. ஆனால் வாகனம் பழுதடைந்துவிடுகிறது. பாதைகள் மாறிவிட்டதில் திசை குழம்பிவிடுகிறது. உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட திசையைநோக்கி அவர்கள் பாலைவனத்தில் நடக்கத் தொடங்குகிறார்கள். எங்கும் ஒரே வெயில். நாக்கு வறள்கிறது. ஒரு வாய் தண்ணீருக்கு தவியாய்த் தவிக்கிறது நெஞ்சம். அங்கங்கே


தோண்டிவைக்கப்பட்டிருக்கும் ஊற்றுகள் வற்றிப்போய்க் கிடக்கின்றன. கானல்நீராய்த் தெரியும் ஓடைக்கரைகள் அருகில் சென்றதும் ஏமாற்றத்தைத் தருகின்றன. உணவு இல்லை. நீரும் இல்லை. இருவரையும் களைப்பு வாட்டியெடுக்கிறது. அதிகாரி சட்டென ஒரு முடிவெடுத்தவராக சிறுவனுடைய கைவிலங்கை அவிழ்த்து ஓடிப் பிழைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். தப்பிக்கும் கணங்களுக்காக அதுவரை காத்திருந்த சிறுவன் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகாரியைவிட்டு விலகாமல் அவர் அருகிலேயே நடக்கிறான். திடீரென பாலைவனத்தில் சூறாவளிக்காற்று வீசுகிறது. மண்புழுதி எங்கும் பற்றிப் படர்கிறது. பலமணிநேரம் வீசிய புயற்காற்றைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அதிகாரி கீழே விழுந்துவிடுகிறார். புழுதி தணிந்த கணத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒட்டகங்கள் மந்தையாக மேய்வதைப் பார்க்கிறான் சிறுவன். அவனுக்குள் ஒரு நம்பிக்கை ஊற்று சுரக்கிறது. அந்தப் புள்ளியைக் குறிவைத்து ஓடுகிறான். அவன் கணக்கு தப்பவில்லை. சளசளத்தபடி ஓரிடத்தில் நீர் பொங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருகணம்கூட தயங்காமல் திரும்பி ஓடிவரும் சிறுவன் மயக்கமாகி விழுந்திருக்கும் அதிகாரியின் கைகளைப் பிடித்து நீர்நிலைவரை இழுத்துச் செல்கிறான். கரையில் இருவரும் சரிந்துவிழுகிறார்கள். தண்ணீரின் குளுமை அவன் தவிப்புக்கு இதமாக இருக்கிறது. ஒரு கை அள்ளி பருகக்கூடத் தோன்றாமல் உடல்முழுக்கப் படரும் அந்தக் குளுமையில் ஆழ்ந்தபடி கிடக்கிறார்கள். ஒரு தந்தையின் பாதுகாப்பான கரங்களில் இருப்பதைப்போல அந்தத் தண்ணிரின் கரங்களில் அவர்கள் படுத்திருப்பதாகத் தோன்றுகிறது.
தண்ணீர் வலிமையான ஒரு படிமமாகப் படத்தில் இயங்குகிறது. சுட்டெரிக்கும் பாலைக்கு நடுவே தேடிவருகிறவர்களுக்கு ஆதரவாக ஓடிக்கொண்டிருக்கிறது அந்தத் தண்ணீரோடை. தந்தைமை என்பதும் ஒருவகையான ஆதரவு உணர்வு. வாழ்க்கை என்னும் பாலையில் நோய்வாய்ப்பட்டுவிட்ட பிள்ளைகளைக் காப்பாற்றமுடியாமல் தவிக்கிற பெண்ணுக்கு ஆதரவளிக்கத் தூண்டுகோலாக இருந்தது தந்தைமை உணர்வு. முதல்முறையாக சிறுவன் அதிகாரியைப் புரிந்துகொள்கிறான். அவருக்குள் வெளிப்பட்ட தந்தைமை உணர்வையும் புரிந்துகொள்கிறான்.

“சில்ரன் ஒவ் ஹவன்” (Children of haven)

அலி எனும் சிறுவன் தனது தங்கையின் கிழிந்த சப்பாத்தினை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான் அலி. உருளைக்கிழங்கு வாங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே சப்பாத்தினை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக அலி வைத்திருக்கும் சப்பாத்தினை எடுத்துச் செல்கிறான்.
சப்பாத்து தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கை ஜாராவிடம் கூறுகிறான் அலி. காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. அலியின் தாய் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர அவள் நோயாளியும்கூட. அலி, ஜாராவின் தந்தையோ நிரந்தர வேலையில்லாதவர். ஐந்து மாதம் வாடகை பாக்கி வைத்திருப்பவர்.


அண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் சப்பாத்தினை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து சப்பாத்தினை வாங்கி அணிந்து சென்றால் சப்பாத்து தொலைந்ததை தந்தையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.
தனக்குப் பொருந்தாத அண்ணனின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. மற்ற குழந்தைகளின் பளபளப்பான காலணிகள் அவளிடம் வெளிப்படுத்த முடியாத ஏக்கத்தை மனதில் தோற்றுவிக்கிறது. மேலும் ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அண்ணனிடம் சப்பாத்தினை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.


அப்படியும் வகுப்பு தொடங்கிய பிறகே ஒவ்வொரு நாளும் அலியால் பள்ளி செல்ல முடிகிறது. தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின்
பரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.
இதனிடையில் தொலைந்து போன தனது சப்பாத்தினை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் என்பது தெரிந்ததும் அண்ணனும் தங்கையும் ஏதும் பேசாமல் மவுனமாக வீடு திரும்புகிறார்கள்.
இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் மூன்றாவதாக வருகிறவர்களுக்கு பரிசு ஒரு ஜோடி சப்பாத்து என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் மன்றாடி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் மூன்றாவதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் சப்பாத்தினை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜதை சப்பாத்து வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.


பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு சப்பாத்தை கொடுக்க ஓடிவரும் சத்தமும், சப்பாத்து தொடர்பான அவர்களது உரையாடலும் ஒலிக்கிறது. இறுதியில் போட்டியில் மூன்றாவதாக வருவதற்குப் பதில் முதலாவதாக வருகிறான் அலி. தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் மூன்றாவதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான்;. மூன்றாவதா..? முதல்பரிசே உனக்குத்தான் என்கிறார் ஆசிரியர். அந்த சிறுவனின் முகம் வாடிப் போகிறது. ஏக்கத்துடன் சப்பாத்துப்பரிசை பாக்கின்றான் அனால் அவனுக்கு தங்கப்பதக்கமும், பெரிய வெற்றிக்கோப்பையும் பரிசளிக்கப்படுகின்றது.


வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் தொங்கிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.
அலியின் சப்பாத்து இப்போது நைந்து கிழிந்து போயிருக்கிறது. தொட்டியின் அருகே அமர்ந்து அவற்றை கழற்றுகிறான். ஓட்டப் பந்தயம் அவன் கால்களில் பல இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வலியும் ஏமாற்றமும் ஒரு சேர தனது கால்களை தொட்டியில் விடுகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி முத்தமிடுவதுடன் படம் நிறைவடைகிறது.

“த கலர் ஒவ் பரடைஸ்” (The color of paradise)

டெஹ்ரானில் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் எட்டு வயதான மொகமது விடுமுறை மாதங்களைத் தன் பாட்டியோடும் இரண்டு சகோதரிகளுடனும் கழிக்க ஆவலோடு இருக்கிறான். விடுதியில் உள்ள சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் வருகின்றனர். மாலை வேளையில் விடுதி அமைதியாக இருக்கிறது. மொகமது மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான். வெகு நேரம் கழித்து மொகமதுவின் அப்பா வருகிறார். பள்ளி நிர்வாகத்திடம், மொகமதுவைத் தன்னோடு அழைத்துச் செல்ல முடியாது. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. வேறு வழியில்லாமல் அவனைத் தன்னோடு அழைத்துச் செல்கிறார்.

தங்களுடைய மலைக்கிராமத்தை அடைய அவர்கள் வெகுதூரம் பயணம் செய்கிறார்கள். மொகமது பேரூந்தில் பயணம் செய்யும் போது, தனது அப்பாவிடம் சன்னலுக்கு வெளியே என்ன காட்சிகள் தெரிகின்றன எனக் கேட்கிறான். அவனுடைய அப்பா வெறுப்பாக பதில் சொல்கிறார்.
அவர்களின் கிராமம் வருகிறது. நடக்கும் போதே தனக்குப் பழகிய இடம் வருதுவிட்டதை அறிந்த மொஹமத் உற்சாகமாகத் தனியே ஓடுகிறான். ஊர் எல்லையைத் தொட்டதுமே 'பாட்டி' , 'பாட்டி' என உரக்கக் கூப்பிடுகிறான். அவனுடைய இரு சகோதரிகளும் இவனை வரவேற்க ஒடி வருகின்றனர். மொகமது சகோதரியின் முகத்தைத் தடவி பார்த்து ''போன தடவ விட இப்ப வளர்ந்திருக்க'' என்கிறான்.
மொகமகவும், சகோதரிகளும் பாட்டியைப் பார்க்கத் தோட்டத்திற்கு செல்கின்றனர். பாட்டி பார்க்கும் போது தன்னை மரத்தின் பின்னால் ஒளித்துக் கொண்டு குரல் கொடுக்கிறான். மொகமத் இதைப் பார்த்த பாட்டியின் மனது நெகிழ்கிறது. மொகமதுவின் விடுமுறை நல்ல முறையில் செல்கிறது.
மொகமதுவின் அப்பா தன்னுடைய மனைவி இறந்த காரணத்தால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அதற்கு மொகமது தடையாக இருப்பதனால் மரத்தச்சு செய்யும் ஒருவரிடம் மொகமதுவை சேர்க்க நினைக்கிறார். மரத் தச்சு செய்பவரும் கண்பார்வை இழந்தவர் என்பதனால் இதைக் காரணம் காட்டி பாட்டியிடம் சம்மதம் கேட்கிறார். ''உன்னுடைய சுயநலத்திற்காக படிக்க விரும்பும் பையனின் வாழ்க்கையைக் கெடுக்காதாதே'' என பாட்டி கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாள்.


மொகமது பிடிவாதம் செய்து உள்ளூரில் இருக்கும் சகோதரிகளின் பள்ளிக்கூடத்திற்கு செல்கிறான். பள்ளியில் அவனை அனைவரும் அன்போடு வரவேற்கின்றனர். மொகமதுவின் 'பிரெய்லி' கல்வி முறையும், வாசிப்பும் கேட்டு ஆச்சரியப்படுகின்றனர். மற்றவர்கள் வாசிப்பதைத் திருத்துகிறான் மொகமத். ஆசிரியர் மொகமதுவை வாசிக்கச் சொல்கிறார். எந்தத் தடையுமில்லாமல் வாசிக்கிறான். பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் மொகமதுவை சுற்றிக் கொள்கின்றனர். இதனைத் தூரத்தில் இருந்து அவன் அப்பா பார்க்கிறார். கோபத்தோடு பாட்டியிடம் சண்டை போடுகிறார்.
மொகமதுவின் ஆர்வத்தைக் கெடுக்க வேண்டாமென்று பாட்டி கெஞ்சுகிறாள்.

ஒருநாள் பாட்டி சந்தைக்கு சென்றிருக்கும் நேரத்தில் மொகமதுவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் அப்பா. கடைக்குச் சென்று வரும் பாட்டி, முகமது வீட்டில் இல்லை என்றதும் புரிந்து கொள்கிறாள். முகம் இறுக்கமடைகிறது.
மொகமதுவும், அவன் அப்பாவும் பயணம் செய்கின்றனர். தான் வேலை செய்யும் நிலக்கரி தொழிற்சாலையில் மொகமதுவை உட்கார வைக்கிறார் அவன் அப்பா. மொகமது சுற்றிலும் கேட்கும் பறவைகளின் ஒலி, குதிரையின் கனைப்புச் சத்தம், நீரின் சலசலப்பு ஒலிகளை தன்னுள் மொழிபெயர்த்துக் கொள்கிறான்.
வேலை முடிந்ததும் மொகமதுவும் அவன் அப்பாபவும் மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றனர். அப்பா அழைத்துச் செல்லும் பாதையில் கேட்டும் ஒலிகளை வைத்து இது தன்னுடைய கிராமத்திற்கு செல்லும் பாதை இல்லை என தெரிந்து கொள்கிறான். பாட்டியிடம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் மொகமதுவை பலவந்தமாக அழைத்துச் செல்கிறார் அவன் அப்பா.
மரவேலை செய்பவரிடம்; மொகமதுவை விட்டு கிளம்பிச்செல்கிறார். மரவேலை செய்பவர் மொகமதுவிகம் தானும் அவனைப் போல பார்வை இல்லாதவன் தான் என ஆறுதல் சொல்கிறார். மொகமது அழுகிறான். ''ஏன் அழுகிறாய்'' என கேட்கிறார் அவர்;.


"எனக்கு கண் தெரியாத்தால் யாரும் என்னை விரும்புவதில்லை. என் பாட்டிக்குக் கூட என்னைப் பிடிக்கவில்லை. என்னுடைய ஆசிரியர் ''கண்பார்வையற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றார். நான் கேட்டேன், பிறகு ஏன் கருணையுள்ள அவர் பார்வையற்றவர்களை படைக்கிறார்? அதற்கு ஆசிரியர், ' ஏனென்றால் கடவுளும் கண் பார்வையற்றவர்தான் ' என்கிறார். கடவுளை நாம் நம் விரல் நுனியில் அறிய முடியும் என்று சொன்னார். அதிலிருந்து நான் விரல் நுனியின் ஸ்பரிச்த்தில் கடவுளை அறிகிறேன். என் மனதில் உள்ள இரகசியங்களைக் கூட அவரிடம் சொல்கிறேன்" என்று அழுதுகொண்டே சொல்கிறான் மொகமத். மரவேலை செய்வர் சிறிது நேர மேளனத்திற்குப் பிறகு, "உங்கள் ஆசிரியர் சொன்னது சரி தான்" என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார்.


இங்கு பாட்டிக்கும், அப்பாவுக்கும் விவாதம் வருகிறது. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்புகிறாள். மொகமதுவின் அப்பா போக வேண்டாமென்று தடுக்கிறார். ஆனாலும் கிளம்பி விடுகிறாள் பாட்டி. போகும் வழியில் மயக்கமாகி விழும் பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அப்பா.
உடல்நலமில்லாமல் இருக்கும் பாட்டியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறார் மொகம்துவின் அப்பா. பாட்டி அமைதியாக தன்னுடைய நகைகளை எடுத்துக் கொடுக்கிறாள். அன்றிரவே இறந்து போகிறாள்.
மரவேலை செய்பவர் மொகமதுவிற்கு வேலை கற்றுது தருகிறார்- அங்குள்ள சூழலோடு தன்னை இணைத்துக் கொள்கிறான் மொகமத். பாட்டியின் இறப்பைத் தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்து கொள்கிறான் மொகமது. வருத்தத்தில் அழுகிறான் . பாட்டியின் மரணத்தை துர்சகுனமாக நினைத்து மொகமத் அப்பாவின் திருமணத்தை நிறுத்துகின்றனர். மனம் நொந்து போய் மொகமதுவைத் தன்னோடு அழைத்துக் கொள்ள வருகிறார் அவனுடைய அப்பா.
இருவரும் மௌனமாகவே பயணம் செய்கின்றனர். பயணத்தின் போது எதிர்பாராத விதமாக பாலம் உடைந்து அற்றில் விழுகின்றான் மொகமத். ஆற்றியல் அவன் அடிததுச்செல்லப்படுகின்றான், அவனைக்காப்பாற்ற அவனது தந்தையும் அற்றில் குதித்து அடித்துச்செல்லப்படுகின்றார். இறுதியில் அவர் நினைவினை இழக்கின்றார். கண் விழிக்கும்போது ஒரு கடற்கரை ஓரம் அவர் ஒதுங்கி இருப்பதை உணர்கின்றார். சுற்றும் முற்றும் பார்த்து மொகமத் எங்காவது தென்படுகின்றானா என அராய்கின்றார், தூரத்தில் அவன் கரையொதுங்கி இருப்பது கண்டு ஓடிச்சென்று அவனை வாரி அணைத்து எழுப்பி பார்க்கின்றாh,; அவனிடம் இருந்து ஒரு சலனமும் இல்லை. அவனை தன் மார்போடு இறுக்கி அணைத்து கதறி அழுகின்றார். அந்த வேளை பறவைகளின் ஒலிகள் கேட்கின்றன. அந்த சத்தங்களையும், சூழலில் நிலவிய தட்பவெப்பத்தையும் கிரகித்து அவனது விரல் நுனிகள் அசைவதுடன் இந்த திரைப்படம் நிறைவு பெறுகின்றது

5 comments:

Subankan said...

//நான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் //

சரியாத்தான் சொல்லியிருக்கிறியள் :)

படங்களைத் தேடிப் பார்த்துவிடுகிறேன் :))

டிலான் said...

மிக அண்மையில் ஆங்கில உப தலைப்பு இல்லாமல் ஈரானிய பாiசியிலேயே பார்த்தேன். அடடே அதிலும் இத்தனை நுணுக்கமான உணர்வோட்டங்கள் உள்ளதை கவனிக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி அண்ணர்

சயந்தன் said...

மிகவும் உணர்வோட்டமாக அலசும் உரு பதிவு. இந்த ஈரானிய திரைப்படங்களை குறும்படத்தயாரிப்பாளர்களுக்கான ஒன்று கூடல் ஒன்றில் சென்னையில் நாம் ஒன்றாக இருந்து பார்த்து கருத்தக்களை பகிர்ந்துகொண்ட பசுமையான நினைவுகள் நெஞ்சில் தற்போதும் உள்ள ஜனா அண்ணா.

சாந்தி பஞ்சலிங்கம் said...

ஈரானிய சிறுவர் திரைப்படங்கள் பற்றி சிறப்பான ஒரு தகவல். நன்றி.

Thava said...

அருமை அருமை அருமை..
சிறப்பான பதிவு.
நல்ல படைப்புகளை பற்றிய அறிமுகம் நன்று.
வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails