Wednesday, April 6, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …03

ஒபரேஷன் பூமாலை….

வான்வெளியில் வழமைக்கு விரோதமான பேரிரைச்சல்களும், வித்தியாசமான பெரிய விமானங்களும், மக்களை ஒருகணம் குலைநடுங்க வைத்தன.
பேரிழவு வந்ததோ! குலத்தோடு கைலாயம்தானோ என்ற எண்ணங்களில் மக்கள் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள்.
சுமார் ஏழு மிகப்பெரிய விமானங்கள் அன்று வான் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் 10 நிமிடங்கள் ஆனாலும் எந்தவொரு குண்டு சத்தங்களும் கேட்டதாக தெரியவில்லை.
மாறாக அந்த விமானங்களில் இருந்து பல சிறிய பரசூட்டுக்கள், பொதிகள் என்பன விழுந்துகொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தன.
அதற்குள் உத்தேசமான செய்தி ஒன்று மக்கள் மத்தியில் ஆறுதல் படும் அளவுக்கு கிடைத்திருந்தது. வந்திருப்பவை இந்திய “மிராஜ“; இரக விமானங்கள் என்றும், அவற்றில் இருந்து உலர் உணவுப்பொதிகள் போடப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், செய்திகள் பரவின.


பிறகென்ன அன்றைய விடலைத்தர இளைஞர்கள், முந்தி அடித்துக்கொண்டு உணவுப்பொருட்கள் விழும் இடங்களுக்கு சந்தோசத்துடன் ஓடினார்கள்.
குறிப்பிட்ட சில நேரத்திற்குள் பெருமளவிலான உலர் உணவு பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன. குறிப்பாக, பயறு, பருப்பு உட்பட்ட தானியப்பொருட்கள், பிரட் வகைகள், குழந்தைகளுக்கான அமுல் பால்மா டின்கள் என்பவற்றை என் கண்காளல் பார்த்தேன்.
எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்பேர் எம் பக்கத்தில் பக்கபலமாக இருக்கின்றார்கள், எமக்காக இந்தியாவே இருக்கின்றது! பாரதம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும், எல்லாவற்றுக்கும்மேலாக எங்கள் எம்.ஜி.ஆர் இருக்கும்வரை எமக்கு எந்த கவலையும் இல்லை! தானாடாவிட்டாலும் தசை ஆடுமல்லவா!!
என்பன போன்ற பலதரப்பட்ட சம்பாசனைகள், அடிபட்டு நொந்துபோய், இருந்த மக்கள் மத்தியில் இந்த சம்பவத்தின்பின் ஒரு உற்சாகமாக பரவிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் ஒரு செய்தி இளைஞர்கள் மத்தில் போய்க்கொண்டிருந்தது. தோலைக்காட்சியில் அப்போது கொழும்பில் இடம்பெற்ற இந்திய - இலங்கை ரெஸ்ட்போட்டியின்போது சிறிகாந்த் துடுப்பெடுத்து ஆடும்போது இலங்கை பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து “தமிலகொட்டி” “கொட்டி” (தமிழ்ப்புலி) என்ற சத்தங்கள் அதிகமாக வந்ததாகவும், சிறி காந்த் அந்தப்போட்டியில் 50 அடித்து விட்டு அவர்களை நோக்கி பட்டை ஆவேசத்துடன் தூக்கி காட்டியதாகவும் பேசிக்கொண்டார்கள்.
இவ்வாறான இந்திய அதிவிரோத நிலை தென்னிலங்கையில் தலை தூக்கியது. சிறி லங்கா அரச சார்பான ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தியா பற்றி வசைமாரி பொழியப்பட்டுக்கொண்டிருந்தது.

பெரிய ஆச்சரியம் என்ன என்றால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் வந்து போனதன் பின்னர், அன்று முழுவதும் எந்தவொரு ஷெல், தாக்குதலோ, விமானத்தாக்குதல்களோ எதுவும் இடம்பெறாமல் வழமைக்கு விரோதமாக எந்தவொரு குண்டு சத்தங்களும் அற்ற ஒரு பொழுதை நீண்ட நாட்களின் பின்னர் அனுபவிக்கக்கூடியதாக இருந்தது அன்று.
அந்த சந்தோசம் அவ்வளவு நீண்டதாக இருக்கவில்லை. மறுநாளே யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களில் விமானத்தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் முருகன் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக போற்றப்படும் செல்வச்சந்நிதி ஆலயத்தின்மீதும் கடும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த கோவிலின் மிக உயரமான அதேவேளை அழகான சித்திரத்தேர், முற்றுமுழுதாக குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்டது.
அதேவேளை சொல்லி வைத்தாலப்போல், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆலயங்களை மையமாக வைத்து அடுத்து அடுத்து வான் தாக்குதல்கள் அப்போது இடம்பெற்றன.

ஒபரேஷன் லிபரேஷன்.

யாழ்ப்பாணத்தை பொதுவாக வலிகாமப்பிரதேசம் எனவும், ஏழு தீவுகள் அடங்கிய தீவகம் எனவும், தென்மராட்சி எனவும், வடமராட்சி எனவும் நான்காக பிரிக்கலாம். இந்த வகையில் சிறி லங்கா அரசாங்கத்தால், அப்போது வடமாராட்சியை கைப்பற்றி தொடராக யாழ்ப்பிரதேசம் முழுமையாக கைப்பற்ற எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த பயங்கர இராணுவ நடவடிக்கையே ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சிறி லங்கா அரசாங்கத்திற்கு பெருமெடுப்பிலான உதவிகளை செய்தவண்ணம் இருந்தன.
மேலும் மேலும் மக்கள் மீதான தாக்குதல்களும் உச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுக்கொண்டிருந்தன.

சரமாரியன ஷெல் வீச்சுக்களால் நாளாந்தம் பெருமளவிலானவர்கள், மடிந்துகொண்டிருந்தார்கள். பாரிய தாக்குதல்கள் மூலம் வடமாராட்சியில் இருந்து அங்கிருக்கும் நெல்லியடி என்ற இடம்வரையும் இராணுவத்தினர் முன்னகர்ந்து, நெல்லியடியில் இருக்கும் முக்கிமான பெரிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரியில் பாரிய முகாமிட்டு அங்கிருந்து பாரிய நடவடிக்கைகளை எடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்…
வந்து சேரும் செய்திகள் ஒவ்வொன்றுமே மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கிக்கொண்டிருந்தன. எல்லாம் ஒரே அடியாக முடியப்போகின்றதா என்று பயந்துகொண்டிருந்தனர்.
“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”. இலங்கை அதற்கு ஒரு பூச்சியைப்போல, தொடர்டந்து சேட்டை விட்டால் பார்த்துக்கொண்டா இருக்கப்போகின்றார்கள், அடித்து தூக்கி எறியமாட்டார்களா? என்று பேசி தம்மையும், சுற்றத்தாரையும் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார்கள் சில பெரியவர்கள்…

இப்படி பீதியுடனும், அவநம்பிக்கையுடனும், நாளை என்ற பெரிய பயங்கரத்துடனும் போராடிக்கொண்டிருக்கும்வேளையில்….. நெல்லியடி மட்டும் அல்ல முழு இலங்கையுமே ஒரு கணம் அதிர்ந்தது…
-இலைகள் உதிரும் -

Tuesday, April 5, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …02

" எல்லாச்சாலைகளும் ரோமுக்குத்தான் செல்கின்றதோ என்னமோ" ! அந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் உயிருக்கஞ்சி ஓடும் பாதைகள் எல்லாம் திடீர் மாற்றத்திற்கு உள்ளாகும் "அகதிமுகாம்களையே " சென்றடைவதாக இருந்தன.

ஓடுவார்கள் ஓடுவார்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள், கைகளில் அகப்பட்ட முக்கிய பொருட்களும், தமது உயிர்களுமே அவர்களுக்கு அப்போது சொந்தமாக இருக்கும். கெட்டதிலும் நன்மைகளாக பல நன்மைகளும் இந்த ஓட்டம்காணும் சமுதாயத்திற்கு அப்போது இல்லாமல் போனதும் இல்லை. எத்தனையோவருடங்களாக முகம்கொடுத்து பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.

பாடசாலைகளில் ஏதிலிகளாக வந்து தங்கும் மக்களுக்கு, அடுத்த ஆபத்து தமக்குதான் என்பதையும் உணர்ந்துகொண்டு முன்னின்று அவர்களைத் தேற்றும் நடவடிக்கைகளில் அயல் ஊர் மக்கள் ஈடுபடுவதையும், அங்கே அவர்கள் தங்குவதற்கு உரிய அத்தியாவசிய உதவிகளை வழங்குவதையும் கண்டு அந்த சிறுவயத்திலேயே என்னையும் அறியாமல் கண்கசிந்துள்ளேன். இயைபாக்கம் அடைவது உலகியலில், விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை என்பதை நிரூபிப்பதுபோல காலப்போக்கில், தொடர்ந்து முகம்கொடுத்துவரும் துயரங்களும், இழப்புக்களும் அவர்களுக்கு புழக்கமாகிவிட்டிருந்தன. வாழ்க்கையில் விரக்தி, நாளைகள்மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையீனம், வெறுப்பு என்பன அவர்களை ஆட்கொண்டிருந்தது மட்டும் இன்றி இவை அனைத்தையும் விட மோசமான தன்மீதே தனக்கான " சுயவெறுப்பு" மனோநிலைக்கும் அவர்கள் ஆளாகியிருந்தனர்.

இந்த மக்கள் இடம்பெயர் தொடர்கள் இடம்பெறும் காலங்களில் மழைவேறு வந்துவிட்டால் இவர்களின்பாடு இன்னும் மோசமானதாகவே வந்துவிடும். இந்தக்கால கட்டங்களில்த்தான் எனக்கும் நிற்சயமற்ற ரீதியில் எப்போது பாடசாலை தொடங்கும் என்ற கேள்வி மனதில் உதித்தது. பாடசாலை இல்லாது விட்டாலும் எங்கள் வயது " அரை ரிக்கட்டுகளின்" பாடு படு சந்தோசமாகவே போய்க்கொண்டிருந்தது. எங்கும் பிள்ளைகளை வெளியில் செல்ல பெற்றோர்கள் அனுமதிப்பது கிடையாது. ஆனால் பாடசாலையில் ஆசியர்களைவிட படுமோசமாக " புத்தகத்தை எடுத்து படி" என்ற வார்த்தைகள் மட்டும் எங்கள் காதுகளுக்கு வேத மந்திரம்போல் எப்போதும் ஓதப்பட்டுக்கொண்டிருக்கும்.

நாங்களும் படித்துக்கொண்டுதான் இருப்போம். ஷெல், மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் மத்தியிலும், ஓடிவரும் மக்களின் அவலக்குரல்கள், உறவுகளை இழந்த மக்களின் கதறல்களுக்கு மத்தியிலும் நாங்களும் படித்துக்கொண்டுதான் இருந்தோம்.
ஏன் … எனது பெரியம்மா ஒருநாள் வந்து "இன்று காலை விழுந்த ஷெல்லில உன்னோட படிக்கிற சிறாப்பர் தனபாலசிங்கத்தின்ட மகனும் தாயும் செத்திட்டினமாம். என்று சொல்லும்போது கூட நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.

" விமலகாந்தன்"! மனது ஒருமுறை அவனது பேரை உச்சரித்துக்கொண்டது. மனதுக்குள் என்னவென்று சொல்லமடியாத ஒரு உணர்வை அப்போது உணர்ந்துகொண்டேன். " விமலகாந்தன்" என் வாழ்நாளில் குண்டுவீச்சினால் நான் இழந்த முதலாவது நண்பன்.

படிப்பு சுமார்தான், அனால் இன்றும் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது அவன் நன்றாகப்பாடுவான். எங்களைப்போல் குழப்படி செய்வதில்லை. அப்போதெல்லாம் எங்களைப்போல் " நீ அவன்ர சைட்டா? எங்கட சைட்டா?" என கேள்விகள் கேட்டு " சைட்" பிரித்து அடிபடுவதில்லை. மாறாக யார் வம்புக்கும் போகாமல் அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டே இருப்பான் " என்ன சத்தம் இந்த நேரம்" , " தேன் மொழி என்தன் தேவி நீ" என்ற பாடல்கள் அவன் அதிகம் விரும்பி பாடும் பாடல்கள் என்பது மட்டும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.
ஆசிரியர்கள் வழித்துணையுடன் கைகளில் "நித்திய கல்யாணிப்பூவுடன் " அவனினதும், அவனை ஈன்ற தாயுடையதுமான சாவீட்டில் இருந்து சுடுகாடு மட்டும் சென்று அடிவயிற்றில் தீயிட்டவளுடனேயே அவனும் தீயுடன் சங்கமானது வரையான நிகழ்வுகள் இன்றும் அவ்வப்போது " கறுப்பு வெள்ளை" காட்சிகாக மனத்திரையில் வந்துவிட்டுப்போகும். கிட்டத்தட்ட என் விழிகளில் நின்று தூங்கவிடாமல் திரும்ப திரும்ப நினைவுகளில் வந்துகொண்டிருந்தான் விமலகாந்தன். மனம் அவனது இழப்பை ஏற்க மறுத்துக்கொண்டே இருந்தது. எங்கே அவன் என்னருகில் ஆவி ரூபத்தில் வந்துவிடுவானோ என்ற பயமும் என்னை சில நாட்களாக அலைக்கழிக்கத்தவறவில்லை.

அப்போதெல்லாம் நாம் செய்திகள் கேட்பதென்றால், காலையில் இந்தியச் செய்திகளைத்தான் கேட்போம். ஈழத்தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும், அவர்களின் போராட்ட வெற்றிகள் குறித்தும் உணர்வோடு குறிப்பட்டு இந்தியச் செய்திகள் முழங்கிய காலம் அது. யாழ்ப்பாணத்தில் மக்கள் அனுபவித்துவரும், உணவுப்பற்றாக்குறை, மனித அவலங்கள் குறித்து அந்த செய்திகளில் முக்கியமாக செய்திகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். எங்கள் ஊரிலிருந்தும், அயல் ஊர்களிலிருந்தும் ஓடுவதற்கு இனி இடம் இல்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் " தமிழ் நாட்டிற்கு" சென்றுகொண்டிருந்தனர்.
உணவுக்கான போராட்டத்திலும் மக்கள் அப்போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கூட்டுறவுக் கடைகள் உள்ள வீதிகள் " இப்போது ரஜினியின் படத்திற்கு முதல்நாள் திரையரங்குகளில் கூடிநிற்கும் இரசிகளர்களைவிட" மக்கள் கூட்டம் நிறம்பி இருக்கும்.வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, நிரம்பல் மிக்க தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கு இருந்தன.

எங்களுக்கான உணவுகளை தந்துவிட்டு தமது பகல்கால, இராக்கால உணவுகளாக வெறும் தண்ணீரையே அகாரமாக எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் நிறையப்பேர் இருந்தனர்.

ஒருநாள் மதியம் எதேட்சையாக "லங்கா புவத் " என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகள் காதில் விழுகின்றன. " இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுளைய முயன்ற இந்திய கடற்படையினரின் கப்பல்கள், எமது சிறி லங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டன என்பதே அந்த செய்தி.

அவசரமாக எனது பெரிய தந்தையார் ஆர்வம் மேலோங்க இந்திய செய்திகளை கேட்பதற்காக அந்த வானொலியுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆலிந்தியா ரேடியோ ….( All India Radio) என்ற சொல்லுடன் ஆரம்பமான அந்த இந்தியச் செய்தியை அப்போது சீத்தாராம் வாசித்துக்கொண்டிருந்தார், யாழ்ப்பாணத்தில் உணவின்றி இலங்கை அரசின் இனவாத நோக்கத்திலான பொருளாதார தடையினால் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் மக்களின் உணவுத்தேவையினை தீர்க்கும் பொருட்டு, இந்திய கடலோர ரோந்துப்படையினரும், இந்திய கடற்படையினரும் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை, யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியாதென சிறி லங்கா கடற்படையினர் வழிமறிப்பு செய்து தடுத்துள்ளனர் என்பதே அந்த செய்தி. இந்த செய்தி கேட்டு (லங்கா புவத்) தென்னிலங்கையில் பட்டாசு கொழுத்தி சிங்கள மக்கள் ஆரவாரம் செய்ததாகவும் அறியமுடிந்தது.

அதே நாள் மாலை சுமாராக 4.30 மணியிருக்கும் என நினைக்கின்றேன். காதைப்பிளக்கும் ஓசைகளுடன், நாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் எமது வான் பிராந்தியங்கள் மேலாக பேரோசை எழும்பியது … வழமைக்கு விரோதமான இந்த சத்தங்களும், நிலம் அதிர்வதைப்போன்ற பேரிரைச்சலும், மக்களை மேலும் பயமுறுத்தியன!
-இலைகள் உதிரும்-

Monday, April 4, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் … 01



முற்குறிப்பு – நான் ஜனனித்த ஈழ மணித்திருநாட்டில், யுத்த வடுக்களால் மட்டுமே எழுதப்பட்டிருந்த என் பால்குடிப்பருவங்களில் குறிப்பாக எனது நினைவு தெரிந்த அதேநேரம் நெஞ்சுக்குள் இன்றும் அடிக்கடி என்னை சித்திரவதை செய்துகொண்டிருக்கின்ற சம்பவங்களும், நிகழ்வுகளும் அன்றைய காலக்கண்ணாடியாகவே, ஒரு ஒன்பது வயது சிறுவனின் மனதில், பதிந்துள்ளவை, மரணப்படுக்கை வரை தொடர்ந்து பயணிக்கப்போகும் நினைவுகளை அந்த சிறுவனின் கண்களின் ஊடாகவே சொல்லவேண்டும் என நான் நினைத்து நினைத்து ஏங்கியவைகளை சொல்லத்தான் நினைத்து அடக்கி என் இதயக்கூட்டுக்குள் புதைந்து வைத்திருந்தவைகளை உங்களுடன் தொடராக பகிர்ந்து கொள்கின்றேன்.
சிந்தனைக்கும் அப்பால்ப்பட்ட இந்த சிறுவனின் ஏக்கங்களை, கண்ணால் கண்டவைகளை, சோகங்களை சிந்தனைக்கு உட்பட்ட எழுத்துக்களில் செதுக்கிவிடுபவை கஸ்டமான காரியம்தான். என்றாலும் கூட முடிந்தவரை என்கண்களினூடே உங்களையும் பயணிக்கவைக்க முயல்கின்றேன். இதில் வரும் சம்பவங்கள் நீங்கள் அறிந்தவைகள்தான், புரிந்தவைகளும் கூட, ஆனால் ஒரு சிறுவனின் மனம் அந்த சம்பவங்களை எப்படி உள்வாங்கிக்கொண்டது, அதன் தாக்கங்கள் உங்களை மட்டுமின்றி சிறுவர்களையும் எவ்வாறு தாக்கியது என்பதையும், அதேநேரம் இந்த சம்பவங்களுக்கு பிறகு பிறந்து இன்று வாலிபப்பருவங்களையும் தொட்டுவிட்ட என் இளையோருக்கு ஒரு சுவையான சோகத் தகவலாகவும் இது இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒன்று மட்டும் நிச்சயம் இன்று தொடர்ந்தும் ஈழத்தில் அணையாத காட்டுத்தீயாக கொழுந்துவிட்டெரியும் யுத்தத்தீ இன்றும் பல சிறுவர்களை இன்னும் இருபது வருடங்களில் இதுபோன்று சொல்லவைக்கும் என்பது மட்டும் உண்மை..
இதை வாசிக்கும்போது நீங்கள் எனக்காகச் செய்யவேண்டியது ஒன்றுதான், காலச்சக்கரத்தை முன்னகர்த்தி 1987க்கு வரவேண்டும்.. என்பக்கத்திலேயே நீங்களும் உள்ளதாக மனக்கிரயம் செய்யவேண்டும்.. சரி..வந்துவிட்டீர்களா?????

மேற்குறிப்பு -இதை பதிவுலகிற்கு வந்த புதிதில் தொடராக எழுதி வந்தேன். எனினும் இதில் நான் கண்ணால் கண்ட வேதனையான உண்மை சம்பவங்களையே எழுத வேண்டி வரும், குறிப்பாக இந்திய இராணுவம் அந்தக்காலங்களில் ஈழத்தில் நடத்திய அநியாயங்கள் அத்தனையும் விரிவாக வரும் என்பதால் அதை எழுதுவதை இடை நிறுத்தி இருந்தேன். என்றாலும், அன்றைய நிகழ்வுகள் தெரியாத, மறைக்கப்பட்ட சிலர் எம் வேதனை புரியாமல் விதண்டாவாதம் புரிந்து மேலும் மேலும் வேல்பாச்சும் கதைகளை தொடர்ந்து பேசிவருவதால், இந்த உண்மைகள் அவர்கள் புத்தியில் இப்போதாவது உறைக்காதா? என்ற எண்ணத்துடனனேயே மீண்டும் எழுத விழைக்கின்றேன். அன்று நான் கண்ணால்கண்ட, அனுபவித்த துயரங்கள், சம்பவங்களே இவை இதில் இம்மி அளவுகூட நான் கற்பனை செய்யப்போவதில்லை என என் எழுத்தின் மேல் சத்தியம் செய்கின்றேன்.
இந்த தொடர் இந்திய நண்பர்கள் அனைவரையும் கண்டிப்பாக பாதிக்கும். ஆனால் உங்கள் மனங்களை வேதனைப்படுத்தவோ, அல்லது இந்தியாவை பழிக்கவோ நான் இதை மீண்டும் எழுத முனையவில்லை. மறைக்கப்பட்டவைகள், காலம் கடந்தும் இன்றும் கவனியாது விடப்பட்ட பெரும் தவறுகள் என்றாவது வெளிச்சத்திற்கு வரவேண்டும், காந்தீயம் பேசும் இந்தியா என்றோ ஒருநாள் ஈழத்தமிழரிட்ம் இந்த சம்பவங்களுக்கு வெளிப்படையான மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே என் அவா...



1987 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஓருநாள். ஆன்று காலைப்பொழுதே.. கதிரவன் ஒளி கசிந்து, வசந்தகால குறியீடுகளான குயிலின் கூவல்களிலும், அணிலின் கீச்சிடல்களிலும், பூக்களின் வாசங்களுடனும் விடிந்திருக்கவில்லை. வழமைபோல வானத்தில் இரண்டு உலங்குவானுர்திகளினதும், அவற்றினால் கக்கப்பட்டும் எரிகுண்டுகளுடனுமே விடிந்தது. அப்போதெல்லாம் சிறுவயது பேதமை மனமோ அல்லது விரக்தியோ தெரியவில்லை வானிலே பலியெடுக்கும், இரும்பு இராட்சதர்கள் வராது போனால் ஏதோ ஒரு வழமைவிரோத பண்பு தலைதூக்கும்.
அன்று அப்படி இல்லை. காலையிலேயே கச்சேரி ஆரம்பித்திருந்தது. "நல்லூர்க்கோவிலடிப்பக்கம்தான் கொட்;டுறாங்கள் " உடனடி முந்திய செய்தியை தெரிவித்துவிட்டு வீதியால் சைக்கிளில் செல்கின்றார் பாண் விற்பவர். மேலே பறந்துகொண்டிருந்த ஹெலிகொப்டரரின் சுற்றுப்பாதை அகலத்தொடங்கியது, கிணற்றுக்கட்டில் குளித்துக்கொண்டிருந்த என்தலைக்குமேலால் பறந்து செல்வது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. மறுகணம் பட பட என்ற பாரிய சத்தத்துடன் முற்றுப்பெறாத வாக்கியத்தொடர்போல் 50 கலிபர் துப்பாக்கி ரவைகள் வீதியோரங்களை நோக்கி பாய்ந்துகொண்டிருந்தன. குளித்துக்கொண்டிருந்த என் மனதுக்குள்ளும் பயம் வந்து புகுந்துகொள்ள, மனதுக்குள் அப்போது பெரும் காப்பகமாகப்பட்டது சுமார் 10 வாழைகள் உள்ள எங்கள் வீட்டின் வாழைத்தோட்டம் தான்.

அப்போது தான் கவனித்தேன் இரண்டு ஹெலி கொப்ரர்கள் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்த நிலையில் இருந்த எங்கள் ஊர் வான்பரப்பின்மீது மேலும் "சியாமா செட்டி" என அழைக்கப்பட்ட இரண்டு குண்டு வீச்சு விமானங்களும், அவ்ரோ என அழைக்கப்படும் பாரிய விமானம் ஒன்றும் (பெரும்பாலும் அது பரல் குண்டுகள் என்ற வகை குண்டுகளையே வீசும்.) கூட்டுச்சேர்ந்திருந்தன.

வாழைகளின் மத்தியிலிருந்து அன்று என் சின்ன ஆராய்வு மூளை சொல்லியது "இன்று நடக்கப்போவது அதிகமாகவே இருக்கும் என்று ".அப்போதெல்லாம் எங்கள் அயலவர்களுக்கு தெரிந்திருந்த அறிவியல் உண்மை! பிளாட் போட்ட வீடுகளில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதுதான். அது எவ்வளவு முட்டாள் தனம் என்பது பிறகு நடந்த சம்பவங்கள் வேறு இருக்கின்றது.

இந்த நிலையில் பல அயலவர்களும் எங்கள் வீடு பிளாட் போடப்பட்டது என்பதால் எங்கள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். அங்கு மேலால் நிலவிய பதட்டங்களைவிட தங்கள் கதைகளால் பதட்ட நிலைகளை அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிகரித்துக்கொண்டிருந்தனர். "இங்கபாருங்கோ … இவங்கள் பொம்பர்ல இருந்து ஓதோ எரிகுண்டு ஒன்று போடுறான்களாம், போட்டால் கீழே ஒரு சுற்று வட்டாரத்துக்கு ஒருத்தரும் தப்ப ஏலாதாம் " தன் ஆரம்ப உரையை மிகப்பயங்கரமாக அரங்கேற்றினார், ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலாயுதம். அவரது மாணவர் என்பதானாலோ என்னமோ உடனடியாக அதை வழிமொழிந்தார் மனோகரன் மாஸ்ரர். கேட்டுக்கொண்டிகொண்டிருந்த மற்றவர்களின் முகங்களில் ஈகூட ஆடவில்லை.

"மம்மி பின் கேட்டை லொக் பண்ணாமல் வந்திட்டேன், கேக் அடித்து வைத்திருக்கிறம் தானே.. இந்த ஏயார் பொம்பிங்கால பேக் பண்ணவும் குடுக்கேல்ல எங்கட "லான்ஸி" போய் அதுகளை சாப்பிட்டுபோடுமோ தெரியாது என்று தனது தாயிடம் செதல்லிக்கொண்டிருந்தா லக்ஸி அக்கா.அப்போது அவ உயர் தரம்படித்துக்கொண்டிருந்தா..அவவின்ட அப்பா வெளிநாட்டில இருந்தவர். கொஞ்சம் தமிழுடன் ஆங்கிலத்தை கலவி கொள்ள வைப்பதில் அவவுக்கு கொஞ்சம் விருப்பம் அதிகம் தான். அவ லான்ஸி என்று குறிப்பட்டது அவர்கள் வீட்டு நன்றியுள்ள நாலுகால் உடையவர்.

சனம் படுற பாட்டில உனக்கு கேக்குதான் கேட்குது என்ன? கொஞ்சம் அதட்டினார் வேலாயுதம் மாஸ்டர்.
இந்த சம்பவங்களுக்குள் எதுவுமே தெரியாமல் தனது தாயின் மடியில் இருந்துகொண்டே என் புது பேனாவை நான்காக உடைக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் "காகத்தை" காவம் என்று சொல்லப்பழகும் 2 வயதுடைய சஞ்சீவன்.

திடீர் என மிக பதிவாக விமானத்தின் ஓசை ஒன்று எங்கள் காதுகளின் செவிப்புலன்களை கெடுத்துவிடுவதுபோல் பேரிரைச்சலுடன் பதிந்து வந்தது. ஐயோ… முருகா, பிள்ளையாரப்பா… என்றெல்லாம் யார் யார் சொன்னார்கள் என்பதற்கு இடையில் பெரும் சத்தத்துடன் குண்டு ஒன்று போடப்பட்டு வெடித்தது. என் நெஞ்சுக்கூட்டின் இடைகளில் அடைப்பது போன்ற உச்ச பய உணர்வு அப்போது தெரிந்தது. எனக்கு ஆறுதலாகவோ அல்லது அவரது பயத்தாலோ மனோகரன் மாஸ்ரர் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்.

முதலில் நானும் அவரும்தான் வெளியில் எட்டிப்பார்ததோம் …நிலத்தில் கண்ணாடித்துண்டுகளும், சில குண்டு பிசிர்களும் முதலில் தென்பட்டன. வானத்தில் குண்டுச்சத்தம் கேட்ட திசையில் "நோட்டீஸ்கள்" பறப்பதுபோல மின்னி மின்னி ஏதோ பறந்தகொண்டிருந்தது. கீழே வந்து விழும்போது தான் அவைகள் நொட்டிஸ்கள் அல்ல விமானக்குண்டு விழுந்த கட்டடத்தின் ஸீட்கள்தான் மேலே பறந்து பின்னர் வந்து கீழே விழுவதை உணர்ந்துகொண்டேன். மீண்டும் பயப்பீதி உந்தவே வீட்டின் உள்ளே ஓடிச்சென்று விட்டோம். வீதியிலும் எவரையும் காணமுடியவில்லை. வானில் சத்தமும் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. மெல்ல மெல்ல வீதியில் ஆளலரம் அவலத்துடன் நடமாடுவதை உணரமுடிந்தது.

சொல்லி வைத்ததுபோல் அவ்விடத்தில் இருந்து அனைவருமே ஒன்றாக எழுந்து வீதிக்கு வந்தோம். முதலில் பல பொது இளைஞர்கள், தயவு செய்து இரத்தம் தேவைப்படுகின்றது கொடுக்கக்கூடியவர்கள் ஆஸ்பத்திரிக்கு உடனவாங்கோ எனத் தெரிவித்துக்கொண்டே சைக்கிள்களில் அவசரமாக ஓடினார்கள், அவர்களின் பின்னால், நான் கண்ட காட்சி அப்படியே சப்த நாடிகளையும் ஆட்டம் காணவைத்தது!! வயிற்றுப்பகுதியில் இரத்தம் வழிந்தோட கண்கள் மேலே சொருகியபடி மேல் மூச்சுவாங்க ஒரு நபரை இருவர் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல சன நடமாட்டம் காணத்தொடங்கியது வீதி.
அன்றைய குண்டு வீச்சு விபரங்களும் வெளிவரத் தொடங்கியது. இரண்டு பெண்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், நல்லூர் பகுதியில் இரண்டாம் குறுக்கு வீதி, முத்திரச்சந்தையில் உள்ள ஒரு உருக்கு நிறுவனம், நல்லூர் பின்வீதியில் முடமாவடியில் இருந்த ஒரு பிரபலமான கட்டம் என்பன இந்த குண்டுவீச்சு தாக்குதல்களால் தரை மட்டமாகியதாக செய்திகள் உடன் வந்தன.. பலரது வாய்மூல அறிக்கைகளாக.. சிறிய ஒரு ஓய்வுக்கு பின்னர் நல்லூரில் இருந்த எனது வீட்டிலிருந்து தென்கிழக்காக தொடர்ச்சியாக ஆழுத்தம் கொடுக்கும் ஒரு அதிர் வெடி போன்று தொடர்ச்சியாக குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நமக்கு அண்மையாக இருந்த இராணுவ முகாம்கள், ஒன்று கோட்டை இராணுவ முகாம், அடுத்தது நாவற்குளி இராணுவ முகாம்.

குடிமனைகளை நோக்கிய ஷெல்த்தாக்குதல்கள் கோட்டை இராணுவ முகாமிலிருந்தே இடம்பெறும். இரவு பகல் என்று காலவறைகள் எதுவும் அதற்கு கிடையாது. தென்கிழக்காக சத்தம் கடுமையாக கேட்டுக்கொண்டே இருந்தது. "நாவக்குளி காம்பில இருந்தும் அடிக்கத் தொடங்கிட்டான்போல! என வீட்டில் பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் மதியப்பொழுதை தாண்டி செல்லும் வேளைவரை இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. சந்று நேரத்தால் வீதியில் பெரும் சனமாட்டத்துடன் கூடிய குரல்கள் எழுந்தபோது என்னையறிமாலே வீதிக்கு ஓடிச்சென்று பார்த்தேன். குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு கிடைத்த தமது பொருட்களையும் ஏந்திக்கொண்டு பெருவாரியாக மக்கள் எங்கோ சென்று கொண்டிருந்தனர். வீதியில் நின்ற பெரியவர் ஒருவர் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் "எங்கியிருந்து தம்பி வாறிங்கள்? எங்க பிரச்சினை என்று கேட்டார். பாசையூர், குருநகர் இடங்களில இருந்து வாறம் அண்ணை. கண்போட்டால கொண்டுவந்து வெழுக்கிறான். கனபேருக்கு காயம் அண்ணை வீட்டு பக்கத்தில எல்லாம் வந்து விழுகுது. அதுதான் அங்கிருந்து பாதுகாப்புக்காக ஓடி வாறோம் என்றார்.

அவர்களில் பெரும்பாலான மக்கள் கல்விப்பணிமனைக்கு அருகில் உள்ள சாதனா படசாலையில் தங்கியிருந்தனர். நாங்கள் உட்பட பல எங்கள் இட மக்கள் தேனீர், படுக்கைகள் போன்றவற்றை அங்கு கொண்டுவந்து அந்த மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தனர். குழந்தைகள் சில இன்னும் அந்த சத்தத்தினால் ஏற்பட்ட பதட்டம் மாறாமல் காணப்பட்டனர். பெரியவர்கள் பெரும் வேதனை கலந்த தோற்றத்துடன் இருந்தனர். ஷெல், விமானத்தாக்குதல், கண்போர்ட் தாக்குதல் போன்ற மும்முனைத்தாக்குதல்களாலும் மக்கள் பெரும் அவலங்களை அனுபவித்துக்கொண்டிருந்னர்.

நான் உட்பட அனைவரும் தொடரப்போகும் அபாயங்கள் பற்றி தெரியாமல் இன்றைய நாளில் எமது பயங்கரம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. இது ஆரம்பம்தான் இதைவிட பயங்கர அனுபவங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கப்போகின்றது என்று …
( இலைகள் உதிரும்)

Friday, April 1, 2011

நாளெல்லாம் முட்டாள்கள் தினம்!

கடந்த 24 நாட்களாக பதிவுகளுக்காக கணணிக்கு முன்னால் வந்து உக்கார முடியவில்லை. திரும்ப எழுத தொடங்க நம்மளைப்பற்றிய விசேட நாள் ஒன்று வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்த்தான் இன்றைய நம்மநாளில் மீண்டும் எழுதத்தொடங்குவது என்ற திடசங்கர்ப்பம் பூண கொஞ்சம் நேரமும் தைரியமும், உரிமையும் வந்திடிச்சு!
சரி..25 தினங்களாக அண்ணனுக்கு என்னாச்சு என்று தொலைபேசியூடாகவும், மின் அஞ்சல் ஊடாகவும், பின்னூட்டமூடாகவும், சிலர் பதிவுகளுடாகவும் கேட்டிருந்தாங்க.
வெறும் 24 நாட்கள் தானுங்க.. எப்படியோ இதோ திரும்ப வந்திட்டோம்ல!!
காரணத்தை பதிவின் இறுதியில் தருகின்றேன்.

ஏப்ரல் மாதத்தின் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்று சிறுவயது முதல், ஏமாற்றியதைவிட, அதிகம் ஏமாந்து அசடுவழிந்தது என்போன்றவர்களுக்கு அதிகமாக நடந்திருக்கும்.
கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய வர்த்தக மற்றும் அரசியல் மயப்பட்ட வாழ்க்கையிலேயே நாம் நாளாந்தம் எப்ரல் ஏமாளிகளாக இருந்துகொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
சாதாரணமாக காலைக்கொள்வனவு முதல், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், தேர்தல் வாக்குறுதிகள் என்று தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றோம்!!

ஒரு வகையில் ஏப்ரல் முதலாம் திகதியான இந்த முட்டாள் தினத்தை; “உலக சமான்ய பொதுமக்கள் தினம்” என்று சொல்லிக்கொள்வது சாலப்பொருத்தமான ஒன்றாக இருக்குமோ என்னமோ!
உண்மையில் இன்றைய நிலையில் உலகில் வாழும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் கால தேச வர்த்த மானங்களை கடந்த நிலையில், பெரிய முதலைகளாலும், பரந்த கழுகுக் கண்களாலும், ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
உலக மக்கள் எல்லோரும் அப்பாவியாக போக்கற்று விழ்த்துக்கொண்டு நிற்கையிலே அரசியல்வாதிகளும், வர்த்தக முதலைகளும் அந்த மக்களைப்பார்த்து “ஏப்ரல் ப்பூல்” சொல்லி எக்காளம்போட்டு சிரிப்பதுபோன்ற தோற்றப்பாடு மனதில் உங்களுக்கும் தோன்றுகின்றது அல்லவா?

அடுத்த பார்வையாக ஏப்ரல் முதலாம் திகதியான முட்டாள் தினம் மக்களுக்கான ஒரு வழிப்புணர்வாக கொள்ளப்படவேண்டிய ஒரு நாளாக முக்கியமாக கொள்ளலாம். கிட்டத்தட்ட சத்தியங்கள், நியாங்கள், நேர்மைகள் என்பன 80களின் நடுப்பகுதியில் இருந்தே இந்த உலகில் இருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டு விட்டன. இன்றைய உலகம் அரசியல், மற்றும் பெருவர்த்தகம் சார்ந்ததாக முழுமையாக மயப்படுத்தப்பட்டே சுற்றிக்கொண்டிருக்கின்றது.
இரண்டுக்குமே தேவை நிறையவான நிறைய ஏமாளிகளே!
உண்மையில் இன்றைய நிலையில் உலகலாவிய வர்த்தக, அரசியல்களால் இன்று நாம் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஏமாளிகள் ஆக்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை.
எனவே இந்த நிலையில் எம்மைசசுற்றி அனைத்தும் எம்மை முட்டாள்கள் ஆக்கும் செயற்பாடுகளின் அஜன்டாக்களே என்று எம்மை சுதாகரிததுக்கொள்ள இந்த முட்டாள்கள் தினத்தை நாம் எமக்கான வழிப்பணர்வு நாளாக கொள்வதே சாலப்பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

குறிப்பு – எந்த விதமுன்னறிவுப்பும் இல்லாமல் கடந்த 24 நாட்களாக பதிவு பக்கம் வராது, பதிவிடாது. நண்பர்களுக்கு பின்னூட்டம் இடாது இருந்தமைக்கு அனைத்து பதிவுலக நண்பர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
தொழில் மாற்றம், அதிகளவிலான தொழில் விடயங்கள், செம்மையாக்கல்கள், பயிற்சிகள் என்பன இருந்தமையினால், இதனால் இரவும் இருந்து அந்த வேலைகளை செய்து முடிக்கவேண்டிய கடமைப்பாடுகள் கூடியதால் பதிவுப்பக்கத்தை நினைக்கவே முடியாது போய்விட்டது என்பதே உண்மை.
எனினும் இன்று முதல் வாரத்தில் 4 பதிவுகளைவுகளையாவது எழுதுவதற்கு முயற்சிப்பதாய் எண்ணியுள்ளேன். அதேவேளை பதிவுலக நண்பர்களின் பதிவுகள் அனைத்தையும் வாசித்து. பின்னூட்டம் இடுவதற்கு சில சமயம் தாமதங்கள் ஏற்பட்டால் பெருந்தகையோர் மன்னிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவருக்கும் என் நன்றிகள்.

Tuesday, March 8, 2011

ஹொக்ரெயில் - 08.03.2011

பெண் எனப்படுபவள்!

பெண்மை போற்றும் நபர்களும், பெண்ணியம் கண்ட தேசங்களும் எப்போதும் உயர்வான நிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
ஒருவகையில் இன்றைய நாகரீக உலகில் ஆண், பெண் என்ற சொற்பத பேதமே தவறானது, தடை செய்யப்படவேண்டியதாக இருக்க வேண்டும் என்பது முற்போக்குச்சிந்தனையாளர்களின் வாதமும்கூட.
இந்த நிலையில் இந்த உலகத்தில் ஒரு ஜீவன் கருத்தரிக்கும்போதில் இருந்தே அந்த ஜீவனின் இறுதி மூச்சுவரை பெண் எனப்பட்டவள், பல வடிவங்களில் அந்த ஜீவனுடன் ஒன்றித்து இருக்கின்றாள்.
தாயாய், குருவாய், பாட்டியாய், சகோதரியாய், பெரியன்னையாய், சிற்றன்னையாய், அத்தையாய், மாமியாய், மைத்துனியாய், நண்பியாய், காதலியாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், பேர்த்தியாய் என்று ஒரு ஜீவின் அத்தனை செல்வாக்குச்செலுத்தும் உறவுகளிலும் பாசத்துடன் கூடிய முதன்மையானவளாய் அவளின் பங்கு நிறைந்திருக்கும்.

பெண் என்ற பதத்தையே போகப்பொருளாயும், காம நினைவாகவும் சிந்திக்கும் வக்கிரமான சிந்தனைகளை இன்றைய உலகின் சினிமாக்களும், இன்னபிறவும் விசங்களாக தூவி விட்டிருக்கின்றன.
பாராளுவதில் இருந்து, மண்டலப்பயணங்கள்வரை இன்று பெண்கள் தங்களை நிரூபித்துக்காட்டியுள்ளது இத்தகைய சிந்தினைகளுக்கு வைக்கப்படும் தீயாக இருக்கட்டும்.
“ஆண், பெண் என்ற பேதங்கள் பொது இடங்களில் கழிப்பறைகளில் மட்டும் இருக்கட்டும்”
சகோதரிகள் அனைவருக்கும் ஹொக்ரெயிலின் மகளிர் தின வாழ்த்துக்கள்.

பதிவர் மதி.சுதாவின் பிறந்தநாள்.

இன்று பதிவர் மதி.சுதாவின் பிறந்தநாள். (எத்தனையாவது என்று அடித்தும் கேட்பாங்க சொல்லிடாதீங்கண்ணே! என்று சொல்லியுள்ளதால் அதை சொல்லலை)
குழந்தை மனம் உள்ள அவர் என்றும் குழந்தையாகவே குணத்தில் இருந்து, வாழ்வில் ஜெயித்துக்காட்டவேண்டும். நிச்சயம் ஜெயிப்பார்.

இன்றைய அவரது பிறந்த நாளினை முன்னிட்டு, அனைத்து பதிவர்கள் சார்பாகவும்,
பதிவுப் புயல்” என்ற சிறப்பு பட்டத்தை சுடச்சுட அவருக்கு வழங்குவதில் ஹொக்ரெயில் பெருமைப் பட்டுக்கொள்கின்றது.

இந்தவாரக் குறும்படம்

கண்டிப்பாக பாருங்க..அம்மாவை மிஸ் பண்ணிடாதீங்க..

வடக்கின் பெரும்சமர்!

“பட்டில் ஒவ் த நோர்த்” என்று இலங்கையில் சிறப்பிக்கப்படும், வடக்கின் பெரும்போரான மாபெரும் துடுப்பாட்டப்போட்டி எதிர்வரும் 10,11,12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதாவது.. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் பரி.யோவான் கல்லூரிக்கும் இடையிலான பாரம்பரியமிக்க “பிக் மச்” என்று சிறப்பிக்கப்படும் துடுப்பாட்டப்போட்டியே இது.
105ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்தப்போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கு சகல தரப்பினரும் தயார் செய்யப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், முன்னைய காலங்களைப்போல இந்தப்போட்டிக்கான மாணவர்களின் எழுச்சிகளை தற்போது காணமுடிவதில்லை. முன்னைய காலங்களில் இந்தப்போட்டிகள் ஆரம்பிபதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்கள் தங்கள் கல்லூரி கொடிகளை பல வாகனங்களில் ஏந்திய வண்ணம், எழுச்சியுடன் வீதி வலம் வருவதை அவதானிக்கலாம். இத்தகைய நிலை தற்போது அடியோடு மறைந்துபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 11ஆம் தேதி மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கான அழைக்கப்பட்ட “சென்றல் நைட்ஸ்” இரவு விருந்து இம்முறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்தவார வாசிப்பு
தாளப்பறக்காத பரத்தையர் கொடி

பிரபஞ்சன் என்ற படைப்பாளியின் எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்னமே, அந்தப்படைப்பாளியே எனக்கு அறிமுகமாயிருந்தார். சென்னையில் இருந்த காலத்தில் “தமிழ் ஸ்ரூடியோ டாட் காம்” அமைப்பினரின் குறும்பட வட்டம் நடத்திய குறும்பட, இலக்கிய கூட்டம் ஒன்றில் அவர் அறிமுகம் கிடைத்தது.
அதன் பின்னராகவே அவரது எழுத்துக்களை தேடிவாசிக்கத்தொடங்கினேன்.
இப்போது வந்திறங்கிய புத்தகங்களில் இரண்டாவதாக நான் கைவைத்திருக்கும் புத்தகம் பிரபஞ்சனின் தாளப்பறக்காத பரத்தையர் கொடி.
எனக்கு பிரபஞ்சனிடம் இருக்கும் பெரும் ஆச்சரியம் என்ன என்றால், ஒரு விடையத்தின் மேல் எல்லைகடந்த அறிவும், விடையப்பரப்பும் எழுத்துக்களில் காணப்படுவதும், அவற்றை மிக இயல்பான நடையில் கொண்டு செல்வதுமே.
சில கட்டுரைகளில் நாம் அறிந்த, படித்த சில விடையங்களைக்கூட நாம் சிந்திக்காத ஓர் கோணத்தை நோக்கி எம்மை பிரமிக்க வைத்துவிடுகின்றார் பிரபஞ்சன்.
அன்றாடம் நாம் கற்ற அறிந்த, அனுபவ ரீதியான கட்புல, செவிப்புல நுகர்வுகளைக்கூட எழுத்துக்களில் எப்படி இலாவகமாக கொண்டுவருவது என்பதை கண்டிப்பாக பிரபஞ்சனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.


மியூஸிக் கபே
புத்தம் புது மலர்கள் நாங்கள் அதை கிள்ள நினைக்கக்கூடாது!
மகளிர் தின சிறப்பு பாடல்.

ஜோக் பொக்ஸ்
ஒரு ஊரில் ஒரு பூசகர் இருந்திருக்கின்றார். அந்த ஊரில் அவர் மட்டும்தான் பூசகர் என்பதனால் அவர் படு பிஸியான ஆள். பல கோவில்களிலும் அவரே பூசகராகவேறு இருந்திருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு கோவிலில் மட்டும் தர்மகத்தா படு ஸ்ரிக்ட்டான ஆள். நேரம் தவறக்கூடாது. ஒரு கிருத்திகம் செய்ய பூசகர் சென்றிருக்கின்றார், குறிப்பட்ட அந்த கோவிலுக்கு பூசைக்கு செல்லவேண்டிய நேரம் அண்மித்து விட்டது. உடனடியாக வீடுவந்து அவசரமாக குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டார் பூசகர், வேண்டிக்கரை பின்பக்கமாக அமைந்துவிட்டது. நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் பறவாய் இல்லை என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொண்டார் அவசரமாக. அதுவும் பின்பக்கமாக போய்விட்டது. பறவாய் இல்லை முதலில் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவந்து, தனது “லம்பிரட்டா” ஸ்கூட்டரை உதைந்துகொண்டு உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்தார் பூசகர். ஒரு வளைவில் ஒரு பெரிய பஸ் வர, பலன்ஸ் தவறி அருகில் இருந்த வயல் வரம்புடன் மோதி அதிர்ச்சியில் மயக்கமடைந்துவிட்டார் அவர்.
இதை கண்டு வயலிலே வேலை செய்துகொண்டிருந்த ஊர்மக்கள் கூடிவிட்டனர். பூசகரை ஓடிவந்து பார்த்த மக்கள்! பெருங்குழப்பத்துடன் பார்த்தனர்.
அதில் ஒருவர் “அடி பட்டதும் ஐயாவின் தலை திரும்பிவிட்டது” என்று சொல்லி, பூசகரின் தலையை மற்றப்பக்கம் திருப்பிவிட்டார்.. அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக.

Sunday, March 6, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.அனுதினன்

பதிவர் அனுதினன் இலங்கைப்பதிவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் என்றுதான் சொல்லிக்கொள்ளத்தோன்றும். அதாவது யதார்த்தபூர்வமான ஒரு ஆழமான பார்வையும், முக்கிமான விடையங்களை நாசுக்காக உறைக்கும் விதம் சொல்லும் தரமும் இவரது எழுத்துக்களில் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்;.
தன்னைச்சுற்றியுள்ள சமுகத்தை மிக நிதானமாக அதேவேளை மிக ஆழமாக உற்றுநோக்கும், ஒரு கல்வி சார் இளைஞனின் எண்ணங்களை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக அனுதினனின் தளத்திற்கு ஒருமுறை சென்றுவரவேண்டும்.

இலங்கையின் உதிக்கும் திசையில் உள்ள திருகோணமலையினை சொந்த இடமாகக்கொண்ட சுதந்திரநாதன் அனுதினன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவன். நாளைகள் என்ற பாதையினை வளமானதாக்க இன்றே அந்தப்பாதைக்கு நிதானமான அத்திவாரங்களை முறையாக போட்டுக்கொண்டு முன்னேறிச்செல்ல திட்டமிடும் பண்புகளை அவரிடம் காணக்கூடியதாக உள்ளது.
அதேவேளை பழகுவதற்கு மிக இயல்பானவர்.

வலையுலகில் வந்து சிக்கல்களை எதிர்கொண்டவர்களின் பட்டியலில் அனுதினனுக்கும் இடம் உண்டு. ஆம்… அவரது வலைப்பதிவுகூட கையப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இருந்தாலும் தொடர்ந்தும் மீண்டும் தனக்கான வலைமனையினை உருவாக்கி இன்றும் தொடர்ந்தும் எழுதிவருகின்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பு, விளையாட்டுக்கள், கவிதை, சிறுகதை, சில மாறுதல் சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள், இசை, இசை விமர்சனங்கள், அவதானிப்புக்கள், தகவல்கள், என்று பயணித்துக்கொண்டிருந்த அனுதினனின் எழுத்துக்கள் அவரது பல்கலைக்கழக ஆரம்பத்தை தொடர்ந்து சமுகத்தை நோக்கிய ஆழமான பார்வையினை உள்ளடக்கத்தொடங்கிய புதிய பாதை ஒன்றை எடுத்துக்கொண்டதை நன்றாக அவதானிக்க முடிகின்றது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றபோதிலும், சில சமுக பதிவுகளில் அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவையாக இருப்பதும், வரவேற்ககக்கூடியதாக இருப்பதும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது.
அதேவேளை கடந்த வருட இறுதிப்பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்ற இலங்கை பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி, மற்றும் பதிவர் சந்திப்பு என்பவற்றின் ஏற்பாட்டு குழுவின் பிரதானமானவராக இருந்து மிகத்துடிப்புடன் அனுதினன் செயற்பட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கொண்டது அவரின் ஆளுமையின் ஒரு எடுத்துக்காட்டே.

அனுதினன் இலங்கை பதிவர்கள் மட்டத்தில் அனைவருடனும் நல்லுறவை பேணிவருபவர் என்பதும், அனைத்து தரப்பினரும் அனுதினன்மேல் ஒரு சிறப்பான மதிப்பு வைத்திருப்பதும் இன்றைவரை ஆச்சரியமாகவே உள்ளது.

தற்போது உலகக்கிண்ணப்போட்டிகள் பற்றிய பதிவுகள் இப்போது அனுதினனை மீண்டும் ஒருமுறை அதிசயமாக பார்க்க வைக்கின்றது.
ஒருவகையில், ஒரு சிறப்பான ஆரூடம் கூறுபவராகவும், ஆட்டநிர்ணயவாளராகவும்!
அவர் உள்ளதும், பெரும்பாலும் அவரது ஆரூடங்கள் பலித்துக்கொண்டிருப்பதையும் கண்டு பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அனுதினனின் எழுத்துக்களில் சில ரணங்களும் உண்டு. கொஞ்சம் அவர் எழுதிய பதிவுகளில் ஒன்றான இதை படித்துப்பாருங்கள்.

நான் ஒரு விற்பனைப்பொருள்


நான் ஒரு இலங்கைத்தமிழன்.




இந்த உலகத்தின் மிகக்கிராக்கி உடைய விற்பனைப்பொருள் நான்தான்.
என்றுமே நான் ஒரு விற்பனை பொருளாக இருப்பதை நினைத்து கவலை கொண்டதே இல்லை.




ஆனால், நான் எங்கே நாடப் பண்டமாக போவேனோ! என்று என் விற்பனையாளர்கள்தான் கவலை கொள்ளுவது உண்டு!
என் விற்பனையாளர்களும், கொள்வனவாளர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்.




என்றுமே, இதற்க்காக நான் கவலைப்பட்டதே இல்லை ஒன்றை தவிர,
அது, என்னை சாந்த சிலரே வெளிநாட்டு இலங்கைத் தமிழர் என்று என்னை விற்பனை செய்வதைத்தான்.


ஆனால், இன்று அதையும் சகித்து கொள்ள பழகி கொண்டேன். ஆனால், எனது எல்லா விற்பனையாளர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்:-






“என்னிடம் இப்போது எதுவுமே இல்லை. நீங்கள் எனக்காக என்ற போர்வையில் கேட்பது இனியும் கிடைக்கும் என்ற எண்ணமும் இல்லை! அதனால், இப்படி கேட்டு கேட்டே இருக்கின்ற ஒன்றையும் இழக்க வைத்து விடாதீர்கள்.”



ஆனால்,





என்றாவது ஒருநாள் இந்த நிலை மாறும், அப்போது என்னையும் ஒரு விற்பனையாளனாக மாற்றிவிடாதீர்கள்!!

சரி..இந்த வாரப்பதிவராக கொலுவீற்றிருக்கும் பதிவர் அனுதினனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் புதியவை அல்ல.. பதிவர்கள், மருதமூரான், வரோ ஆகியோரிடம் கேட்கப்பட்ட அதே மூன்று கேள்விகள்தான்.
அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதிலையும் பார்ப்போம்.

கேள்வி :உங்களின் பதிவுலகப் பயணம் எப்படி ஆரம்பித்தது?

அனுதினன் :வாசகனாக இருந்து பிறகு பதிவுலகை எழுதுபவனாக மாறினேன். உயர்தர கல்வி பயிலும் காலங்களில் இணையத் தேடலில் ஈடுபடும்போது வலைப்பதிவுகள் எனது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஊடகமாக இருந்தது. பிறகு, எம்மவர்கள் பலரும் எழுதும் வலைபதிவுகளை பார்த்து எழுதும் எண்ணம இருந்தாலும், உயர்தர கல்வியை முடித்து நீண்ட நாட்களின் பின்பு சக வலையுலக நண்பர் எரியாத சுவடிகள் பவனின் உதவியிடோன் வலையுலக வாழ்வு ஆரம்பித்தது. ஆரம்பத்தில், எழுதுவதில் இருந்த ஆர்வம் அதிலும் குறிப்பாக எனக்கு இருந்த அதிகளவிலான ஓய்வு நேரங்கள் என்பவை காரணமாக பதிவுகளை எழுதி இருந்தாலும், இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் என் வலைத்தளம் திருடபட்டு அளிக்கபட்ட பின்பு, எழுதுவதில் இருந்த ஆர்வம முன்பு போல வருவது இல்லை. பிறகு ஓய்வு நேரங்களும் குறைந்த காரனத்தினால் பதிவுகளும், குறைந்து விட்டன. ஆனாலும், பதிவுகளை வாசிக்கும் ஒரு வாசகனாக எண்ணமும் இருக்கிறேன்.

கேள்வி: இலங்கை பதிவர்களுக்கும் உங்களுக்குமிடையிலான உறவு எப்படியிருக்கிறது. ஏதாவது முக்கியமாக குறிப்பிட விருப்புகிறீர்களா?

அனுதினன் : ஓ.... நிறைய நண்பர்களை உருவாக்கி தந்த இடம் இது. தோழமையையும் தாண்டி அண்ணா என்ற உரிமையில் அழைக்க கூடிய வகையில் பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்களுடன் என் உறவு நெருக்கமானது. ஆனாலும், பல புதிய பதிவர்களுடன் எனக்கு அவ்வளவு பெரிய நெருக்கம் அல்லது அறிமுகம் இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லி கொள்ளுகிறேன். அதற்கு காரணம், அவர்கள் பதிவுகளை வாசிப்பதுடன் நிறுத்தி கொள்ளுவதும் ஒரு காரணம், அடுத்து கடந்த காலத்தில்
சக பல பதிவர்களுக்கு ஏற்பட்ட அனுபவகளை கொண்டு, நான் எனக்கான ஒரு சில எல்லைகளிலேயே இருக்க விரும்பியமையும் ஒரு காரணமாகும்.ஆனால், அறிமுகமான நண்பர்களுடன் பழக தவறுவதுமில்லை.

புதிய அனுபவகளை தந்த இந்த பதிவுலகத்தில் இருப்பவர்களுக்குள் இருக்கும் சண்டைகள் படிப்படியாக குறைந்து நான் அறிமுகாமான சமயத்தில் பதிவுலகம் எப்படி இருந்ததோ, அப்படியான பரஸ்பர நிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

கேள்வி: பதிவுலகம் தவிர்ந்து ஓய்வுநேரங்களில் எவற்றில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்?

அனுதினன் : பதிவுலகமே இருக்கின்ற ஓய்வு நேரத்தில்தான் செலவு செய்கிறேன். அதையும் தாண்டி, அடுத்தது என்றால், விளையாட்டு + சினிமா தான். எனது ஓய்வு நேரங்கள் ஏனையோரை போல எனக்கு பயனுள்ளதா? என்று எனக்கே தெரிவது இல்லை. கிடைக்கும் போது எல்லாம் கிரிக்கெட், சினிமா என்று இருக்க விரும்பும் சராசரி மனிதன் நான். இந்த கிரிக்கெட், சினிமா இது எதிலுமே வரையறை வைத்து கொண்டது இல்லை. கனடா போன்ற சிறிய அணிகள விளையாடினாலும் ரசிப்பேன். புதுமுக நாயகர் படங்களுக்கும் செல்வேன். இதை எல்லாம் விட, நேரம் என்று இருந்தால் அதில் நம் பதிவுலக நண்பர்களுடன் கடலை!


என்னையும் வலைத்தளம் எழுதுபவன் என்று ஏற்று, உங்கள் பதிவர் பகுதியில் என்னை பிரசுரிப்பதுக்கு நன்றிகள் அண்ணா!. யாரும் எனது வலைதளத்தை வந்து பார்த்து, உங்களுக்கு ஏதும் ஆபத்து நேரும் என்றால், அது என்னுடைய பொறுப்பல்ல!!!

Tuesday, March 1, 2011

ஹொக்ரெயில் - 01.03.2011

ரஜினியின் ராணா எப்படியான படம்?

எந்திரனின் இயந்திரத்தனமான ஆர்பரிப்பை தொடர்ந்து கே.எஸ்.ஆரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளதாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி சொல்கின்றது அல்லவா. அந்த திரைப்படத்தின் பெயர் ராணா என்றும், இதில் ரஜினிகாந்த் மூன்று வேடங்கள் ஏற்று நடிப்பதாகவும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் நேரடியாகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் பல செய்திகள் அடிபட்டன.
அசின், திரிஷா, என்று பலபெயர்கள் இந்த திரைப்படத்தின் நாயகிகள் என்று சொல்லப்பட்டு, இப்போது தீப்பிகா படுகோன், சோனு ஷ_ட் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், அதேவேளை வயதான ரஜினியின் ஜோடியாக ஹிந்தி நடிகை ரேக்கா நடிக்கவுள்ளதாகவும் உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
சௌந்தர்யா ரஜினி தயாரித்த சுல்த்தான் திவாரி என்ற அனிமேஷன் படத்தின் தொடர்ச்சி இது என்றும், பின்னர் இல்லை, இது ஒரு வித்தியாசமான கதை அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்கு குழப்பமான தகவல்களே இதுவரை கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
எது எப்படியோ சித்திரை மாதம் இடம்பெறும் புத்தாண்டு தினத்திற்கு பின்னர் படப்பிடிப்புக்கள் ஆரம்பித்துவிடும் என்று இப்போது உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே ரஜினி நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு வந்தவுடன், ஊடகங்கள், ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றும் பில்டப்புக்களை அவிட்டு விட்டு வருவது இயல்பான விடயம்தான். எனவே கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்த்தாலத்;தான் புரியும், இது அனிமேஷனின் தொடர்ச்சியா, அல்லது புதிய கதையா? என்பதெல்லாம்.

ப்பிளக் ஸ்வான்…

யார் இந்த கறுப்பு அன்னம்! என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று ஆஸ்கார் விருது பெற்று கௌரவம் பெற்றுக்கொண்ட ஒரு நடிகைதான் இந்த நட்ராலி போர்ட்மன் என்ற இந்தப்பெண்.
பிளக் ஸ்வான் திரைப்படத்தில் சிறப்பான ஆற்றுகைக்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் ஒரு யூதவழிவந்த பெண் இவர். 1981ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 09ஆம் நாள் பிறந்த இவர், புகழ்பெற்ற ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய, அமெரிக்க திரைப்படங்களில் நடித்து தனது பக்கம் இரசிகர்களை பெருமளவில் திரும்ப வைத்துக்கொண்ட இவர், 1994ஆம் ஆண்டளவில் நடிப்பு துறைக்கு வந்தார். பிரஞ்சு திரைப்படமான லியோனே இவரது அரங்கேற்றம் என்று கூறிக்கொள்ளலாம்.
இதேபோல இன்று வரை தன் நடிப்பாற்றலால் பல விருதுகளை பெற்று வந்துள்ள இவர், சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ஒரு லெஸ்பியன் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது அந்த குற்றச்சாட்டு தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. காரணம் கடந்த வருடம் நடன இயக்குனராக இருக்கும் பென்ஷமின் மில்லிபேட்டை காதலித்துவரும் இவர், தற்போது ஒரு கற்பவதியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது :)

இந்தவாரக் குறும்படம்

நம்ம நாட்டில் இன்று வானத்தில ஒரு அக்ஸிடன்ட்

ஸ்ரீ லங்கா வான் படை ஆரம்பிக்கப்பட்டு வைரவிழாக்கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதால் அந்த நிகழ்வில் விமான சாகசம் புரிவதற்கான ஒத்திகையில் இன்று ஈடுபட்டிருந்த இரண்டு கஃபிர் விமானங்கள் (நம்மட ஆக்கள் இதை கிபிர் எண்டும் சொல்லுவினம்) ஒன்றுடன் ஒன்று மோதலுக்குள்ளாகி நொருங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பலருக்கு சோகமான செய்தியாகவும், மேலும் பலருக்கு மகிழ்வான செய்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல! அதாவது விமான சாகச ஒத்திகைகளின்போது ஆபத்துக்கள், விமானத்தைவிட வேகமாக வரும் என்பது இயல்பான ஒன்றே. இதுபோலவே ரஷ்யாவில் இடம்பெற்ற சாகச நிகழ்வொன்றில் சில விமானங்கள் ஒரேயடியாக விழுந்த சம்பவங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆனால் ஒத்திகைகள், பெரும்பாலும், வெளியான பிரதேசங்கள், அல்லது கடல் பிரதேசங்களிலேயே நடத்தப்படவேண்டும் என்பது அறிவார்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கபடும் ஒரு நடைமுறை.
இன்று இடம்பெற்ற இந்த அனர்த்தம், குடிமனைகள் உள்ள இடத்திலேயே இடம்பெற்றுள்ளது. பாரிய சேதங்கள் பொதுமக்களுக்கு இல்லை என்றபோதிலும், இது பாரதூரமான ஒரு விடயமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலியைவிட வேகமாக இவை பயணிப்பதால், இவற்றை மிகைஒலிகாரி வானூர்த்திகள் என்று தமிழ்படுத்தியுள்ளனர்.
இந்த விமானங்கள், கடந்த யுத்த காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டவை என்பதும், ம்ம்ம்…ம்ம்ம்…எல்லாத்திலும் இந்த விமானத்தின் பங்கு உள்ளது என்பதும் அனைவரும் அறிந்தவிடயம்தான் என்பதால், அதை எல்லாம் பின்னூட்டம்போட்டு நம்மளை சங்கடப்படுத்தப்படாது ஆமா!

இந்த வாரவாசிப்பு
என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்.
இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர்களிடம் நான் சொல்லிவிட்டிருந்த பல புத்தகங்கள் இப்போதுதான் தொகையாக வந்து சேர்ந்திருக்கின்றன. பெரும்பாலானவை, நான் வாங்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் பல காலங்களாக தவித்த புத்தகங்கள். குறிப்பாக வொல்காவில் இருந்து கங்கைவரை, செந்நிலம், மஞ்சள் வெயில், தாய், போன்ற பெரிய புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன.
அதோடு இன்னும் சில புத்தகங்கள் வந்தன. அவற்றில் முதலாவதாக நான் எடுத்து படித்து முடித்துள்ள கவிதைப்புத்தகம் மனுஷபுத்திரனின் “என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்”.
கால்களின் ஆல்பங்கள் என்ற கவிதையை முதல்முதல் படித்து நெஞ்சம் பொருமி, கண்ணீர் கரைகட்டியபோதே மனுஷபுத்திரன்மேல் அப்படியொரு பிரியம் என் நெஞ்சில் சேர்ந்துகொண்டது. 2009ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் அவரை நேரில் சந்தித்து பேசியபோது, அந்த அன்பான பேச்சுக்கள், அக்கறையான விசாரிப்புக்கள், குழந்தைபோன்ற பார்வைகள் இப்போதும் நினைவில் பத்திரமாக உள்ளன.
அலட்டல்கள் இல்லாமல், இதயத்தின் அருகில் வந்து மெதுவாக, கௌரவமாகப்பேசும், அந்த ஒவ்வொரு கவிதையும் நயமாகவே உள்ளன.
மென்மையாக மேன்மையாக கவிதை எழுத நினைப்பவர்கள் ஒருமுறை கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.

வடக்கு கிழக்கில் மெல்ல மெல்ல பெருகும் சிறுவர் தொழிலாளிகள்.
யுத்தம் அது நடக்கும் காலத்தில்த்தான் கொடுமைகளை நிகழ்த்தும், ஓய்ந்தபின் கொஞ்சம் நின்மதி கிடைக்கும் என்பது அவ்வளவு உண்மையாக இருக்காது.
அந்த யுத்தத்தின் பின்னரான தாக்கங்கள், தூரல்கள் அதன் பின்னதான காலத்தில்த்தான் இன்னும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும்.
இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில், யுத்தத்தின் பின்னதான தாக்கங்களை உன்னிப்பாக கவனிக்க கூடியதாக இருக்கின்றது. பிறரிடம் உதவிக்காக ஏங்கும் மனோநிலை, பிச்சை எடுக்கும் மனோநிலை, அவற்றையும் தாண்டி ஏமாற்றுவது, திருடுவதற்கான மனோநிலைகளையும், அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே யுத்தம் இன்றும் மறைந்திருந்து தொடர்ந்து வெருட்டிக்கொண்டுள்ளதை காணலாம்.
இந்த வகையில் இன்று யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளிலேயே பெரும்பாலான சிறுவர் தொழிலாளிகளை, உணவகங்கள், மக்கானிக் சென்டர்கள், அலுவலகங்கள், என்பவற்றில் சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது.
எழுமாந்த ரீதியாக இங்க பார்! நீ சிறுவன்!! வேலை செய்யக்கூடாது என்று சொல்லிவிடலாம், அனால் அவர்களுடன் கொஞ்சம் பேசினால், அன்றாடம் அவனுக்கு கிடைக்கும் சிறுதொகையிலேயே அவனது குடும்பத்தின் வாழ்வாதாரமும், தம்பி, தங்கைகளின் கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறுவதை அறியமுடிகின்றது.
வினை விதைத்தவர்கள், மேலும்மேலும் வினைக்கு இரத்தப் பசளை போட்டவர்கள் எல்லோரும் யார்யாரோ..அனால் ஒன்றுமே செய்யாத இந்த பிஞ்சுகளல்லவா இன்று அந்த வினைக்கான அறுபடைகளை பெறுகின்றன!

மியூஸிக் கபே
ஒரே வசனம்.. எல்.ஆர்.ஈஸ்வரி…காதோடு மட்டுமல்ல இதயத்தோடும் பாடிவிட்டார்.

ஜோக் பொக்ஸ்
புதிதாக கல்யாணம் கட்டியயோகம் ஒரு கிராமத்தில் உள்ள குடியானவருக்கு நகரத்தில் குவாட்டசுடன் வேலை கிடைத்தது. எனவே புது மனைவியுடன் குவாட்டசில் வந்து குடியேறினார். சாப்பாட்டு விடயத்தில்த்தான் அவருக்கு வந்திச்சு சனி. முதலாவது நாள் மனைவி காலை உப்மா கிண்டி கொடுத்தாள். சுவையாக இருந்திச்சு. மதியம் வந்தார் மீண்டும் உப்மா, இரவு மீண்டும் உப்மா, இப்படியே 3 நாளாக தொடந்திச்சு சாப்பாடு. மனுசனுக்கு உப்மாவே வெறுத்துப்போச்சு.
ஏன்டி உனக்கு வேறு சமைக்கதெரியாதா என்று கேட்க! மனைவியோ எதையும் மறைக்காமல் தெரியாதுங்க என்றாள்.
பிறகென்ன ஒரு 7 நாளாக அவருக்கு 21 வேளையும் உப்மாதான் சாப்பாடு.
முடியாத நிலையில் ஒரு ஹோட்டலுக்குள் நுளைந்தார், அது ஒரு ஹிந்தி ஹோட்டல் மனுவில் எல்லாமே ஹிந்தியிலே இருந்திச்சு, எனவே 15ஆவதாக இருந்தை ரிக் பண்ணிவிட்டு பார்த்திருந்தார், ஆவிபறக்க சர்வர் கொண்டுவைத்த சாப்பாட்டை ஆவலுடன் உற்றுப்பார்த்தார். அந்தோ பரிதாபம், அங்கே இருந்ததும் உப்மாதான். முன்னால் பார்த்தார் ஒருவர் பானிப்பூரி வாங்கி சப்பிட்டுகொண்டிருந்தார், நம்மாளுக்கு எச்சில் ஊறியது, முன்னால் இருந்த நபர் றிப்பீட்டு என்றார், மீண்டும் அவருக்கு பாணிப்பூர் வரவே, அதைப்பார்த்து ஆவலுடன் சர்வரைப்பார்த்து இவரும் ரிப்பீட்டு சொன்னர்.
மீண்டும் சூடாகவே வந்து சேர்ந்தது உப்மா.

LinkWithin

Related Posts with Thumbnails