Friday, July 2, 2010

வேற்றுமொழிக்கதைகள்>>>01.கதகதப்பு…


இந்த கல்லினோவ்கா கிராமமே இருண்டுவிட்டதுபோல ஒரு தீர்க்கமுடியாத பிரமை சிறுவன் வஷிலியின் மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அவனுக்கு தனிமை சரியான தெரிவு அல்ல என்று அவனை தங்கள் அணைப்பிலேயே வைத்திருக்கவிரும்பிய அவனது அப்பா, அம்மாவை ஒருவாறு போக்கு காட்டிவிட்டு, ஏரிக்கரையோரம் வந்து, ஏரியில் முத்துக்குளிக்க தத்தளிக்கும் கரையோரக்கற்களை தனது பிஞ்சு விரல்களால் ஒரு வெறித்தனத்தோடு ஏரியை நோக்கி எறிந்துகொண்டிருந்தான் அந்தச்சிறுவன்.
அவனது மனதில் தற்போது எந்த எண்ணங்களும் இல்லை..வெறுமையும், காலத்தின் மீதான வெறுப்பும் அன்றி அவனால் அதற்கும்மேல் எதனையும் யோசிக்கமுடியாதவனான நிலைக்கு சென்றிருந்தான் அவன்.

நேற்று இந்தப்பொழுதுகளில் அவனின் தந்தையின் தாயான இவனது பிரியத்திற்குரிய பாட்டியின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தன..
பாட்டி…வஷிலியின் அனைத்தும், அனைத்து சந்தோசமும், அவனுக்கான முழு உலகமுமே அவளேதான். தன்மேல் இந்த அவளவுக்கு அன்பு செலுத்தும் எந்தவொரு பொருளையும், உயிரையும் அவன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அவன் சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கும்போது தானும் அவன் வயதிற்கு வந்து அவனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதும், அவனுக்கு ஒரு தலைவலி என்றாலே தாங்கமுடியாமல் பதறி அவனது அனுங்கல்கள் முடிந்து அவன் சுகமாக தூங்கும்வரை அவனை அன்பாகத்தடவிக்கொடுத்து விடுவதும,; அவள் அன்புகளின் பல வெளிப்பாடுகளில் சிலவாக இவன் குறிப்பெடுத்துவைத்திருக்கின்றான்.
தன் பாட்டியின் சுருக்கம்கொண்ட கைகளின் கதகதப்பும் எப்போதும் அவனுக்கு வேண்டும்.. பாட்டியின் முதுமையையும் அடிக்கடி அவளுக்குவரும் சுகயீனத்தையும் கண்டு பாட்டி இறந்துவிட்டால் என்ற நினைப்பே அவன் இருதயத்தை நிறுத்திவிடும்போன்று இருக்கும் அவனுக்கு. மறைவாகப்போய் விக்கி விக்கி அழுத்திருக்கின்றான் வஷிலி.

மாலைவேளையில் மணற்தரையில் இருந்து மணல்குவித்து பல விடயங்களையும் அவனுக்கு வரைந்துகாட்டுவதையும், மழைக்காலங்களில் தூறல் உள்ளே வரும்போது தன் பேரனை தன் போர்வையாலேயே மூடி அணைத்து தன் மடியில் வைத்திருப்பதையும் இந்த ஜென்மத்து மகிழ்ச்சியாக திரும்பத்திரும்ப கேட்பான் வஷிலி.

இத்தனை இருந்தும், இறுதி நேரத்தில் அறிவு அற்றுப்போகும்போது கூட, தன்பேரனையே வாஞ்சையுடன் பார்த்து, ஒரு மௌனப்புன்னகையுடன் கண்மூடியபாட்டியை நினைத்து, அவள் உயிரற்ற உடலினைப்பார்த்து ஏன் இன்னும் தனக்கு அழுகை வரவில்லை?? என்று திரும்பத்திரும்ப தன் மனத்தையே கேட்டுக்கொண்டிருக்கின்றான் வஷிலி. இனி பாட்டி தன்னிடம் வரப்போவதில்லை என்ற யதார்தத்தத்தை அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவே இல்லை. ஏரியை நோக்கி மிக ஆக்கிரோசமாக கற்களை எறிந்துகொண்டிருக்கின்றான் அவன்.

அந்த இடத்தில் ஆள்அரவம் கேட்கவே திடுக்கிட்டுப்பார்க்கின்றான், அங்கே அவனது தந்தையும், சிறிய தந்தையாரும் அவனை அழைத்துக்கொண்டு வீடுசெல்கின்றார்கள். ஏன் எனக்கு அழுகை வரவிலை? ஏன் எனக்கு அழுகை வரவில்லை??? திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தான் வஷிலி.
இரவு வந்தததும் அவனை யோசிக்கவிடக்கூடாது என்ற திர்மானத்தில் அவனது தாயும், தந்தையும், சிறிய தந்தையும் தொடர்ந்து அவனுக்குப்பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் பேசசுக்கள் எல்லாம் அவனுக்கு கேட்கவில்லை. தூங்கப்போவதாக சொல்லிவிட்டுப்போய் படுத்துக்கொள்கின்றான்.

ஈரப்பதனான காற்று அவனை சிலிர்க்வைக்கின்றது. காற்றும் திடீரென அடிக்க பலத்த மழை சோவெனப் பெய்யத்தொடங்குகின்றது. ஜன்னல்கள் ஊடாகத்தூறல் அவன் உடலில் விழுகின்றது. மெதுவாக எழுந்துசென்று ஜன்னலைத்திறந்து பார்கின்றான். பாட்டி போர்த்துக்கொள்ளும் போர்வை ஜன்னலின் அருகில் இருப்பதை கண்டு அதை வாஞ்சையுடன் தொட்டுப்பார்கின்றான்..அவன் உடல் பாட்டியின் அணைப்பின் கதகதப்பை தேடுகின்றது…கண்களில் சிறிது சிறிதாக நீர் கசிய இதயம் பொரும…ஓ வென்று அவன் அழுகின்றான்…மழையின் சத்தத்தினையும் மீறி அவன் குரல் கேட்கின்றது.

***இது ஒரு ரஷ்யக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு – ஆங்கிலத்தில் இருந்து என்னால் முடிந்தவரை தமிழில் (Vashily)

8 comments:

Subankan said...

அருமையான, உணர்வுகளை வருடிச்செல்கின்ற கதை. அதை உள்வாங்கி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். எதையுமே தாய்மொழியில் படிக்கும் சுகம் தனிதானே? பகிர்வுக்கு நன்றி :)

balavasakan said...

அருமையான கதை ஒன்றை நல்ல படியாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள் .. வார்த்தை பிரயோகங்கள் சூப்பர் தொடரட்டும் உங்கள் பணி..

டிலான் said...

பிறமொழி கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவருகின்றன. இவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு எழுத்தக்கூடியவர்கள் மொழிமாற்றம் செய்து தந்தால் அற்புதமாக இருக்கும் என்பது பலபேரின் பலநாட்கள் கோரிக்கை.
இதன் நிமித்தம் இந்த கடினமான விடயத்தை கையில் எடுத்து மிக அருமையாக தந்திருக்கும் உங்களுக்கு வாழத்துக்கள் ஜனா அண்ணா. கதை அருமை...

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பாக மொழி மாற்றம் செய்து இருகிறிர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன்

maruthamooran said...

ஜனா…..!

நுண்ணுனர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறது இந்தக் கதை. ரஷ்யா மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி மாற்றப்பட்ட கதையை தமிழ் வடிவில் படிக்க வைத்திருக்கிறீர்கள். தங்களுடைய மொழிபெயர்ப்பு இயல்பான நடையில் இருக்கிறது. இன்னும் மெருகேறலாம். இடங்களையும், பெயர்களையும் எம்முடைய சமூகத்துக்குள் பொருத்திவிட்டால் மொழி மாற்றுக் கதை என்றே தெரியாது. சரியான வடிவத்தையே தந்திருக்கிறீர்கள். தொடர்ந்தும் நல்ல கட்டுரைகளையும், கதைகளையும் இலகு தமிழில் மொழி பெயருங்கள். அது, என்போன்ற பலருக்கு உதவும்.

(ஹலோ பொஸ், இந்தப் பின்னூட்டம் அதிகாலை 4.10 எழுதியது.)

சயந்தன் said...

சிறப்பு, சிறப்பு ,சிறப்பு. பாராட்டப்படவேண்டிய முயற்சி அண்ணா. நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பல, மொழிமாற்றக்கதைகளை தாருங்கள். தமிழ் கதைகள் படித்து போரடித்துவிட்டது.

Unknown said...

மிக அருமையான உணர்வோட்டமுள்ள கதை ஐயா. என் அப்பம்மாவின் நினைவுகளை படிக்கும்போது கண்முன் கொண்டுவந்தீர்கள். நெகிழ்ந்துவிட்டேன் ஐயா. பிரமிக்க வைத்திருக்கின்றீர்கள் பாராட்டுக்கள்

ம.தி.சுதா said...

சகோதரா அருமையாக இருக்கிறது.பழைய நினைவுகள் சிலதை கண்முன் நிரப்பிட்டிங்க. உணர்ச்சிகளை கிளறீட்டிங்க போங்க

LinkWithin

Related Posts with Thumbnails