Tuesday, September 1, 2009

தவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)


ஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது மிக முக்கிமானதொன்றாகும். இருக்கும் போது பெரியவர்களின் பெருமைகளை பாராட்டாமல் விட்டுவிட்டு அவர்கள் இல்லாத போது அவர்களின் இழப்புக்கள் உணரப்படும் சமுதாயமாக ஈழத்து சமுதாயம் உள்ளமை யாரும் மறுக்கமுடியாத ஒரு உண்மையே. தமிழர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு தமிழர்கள் எனப்படுகின்றனர், தமிழ் மொழியின் சீரியங்கள் என்ன என்பவை குறித்து எப்போதோ வரையறைகள் வழங்கப்பட்டுளளன. பல ஈழத்துபெரியவர்களும் இதை சர்வதேச ரீதியில் கொண்டுசென்று மற்ற மொழிக்காரர்களுக்கும் தமிழ் மொழியினை பற்றி ஆராட்சிகளை சமர்ப்பித்து புரியவைத்து, ஏனைய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி தமிழர்கள் ஆகிய விடயங்கள் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ் மொழியின் சீர்மைகளை தொகுத்து தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

இந்த ஈழத்து தமிழ் அறிஞர்களில் தனிநாயகம் அடிகளார் மறந்துவிடமுடியாத ஒருவர். கண்டதற்கெல்லாம் நினைவு விழா எடுக்கும் ஈழத்து தமிழ் மக்கள் இத்தகைய தமிழ் அறிஞர்களின் நினைவுகளை மறந்துபோயுள்ளது வேதனையானதே. இன்று செப்ரெம்பர் மாதம் முதலாம் நாள் தனிநாயகம் அடிகளாரின் 29ஆம் ஆண்டு நினைவு நாளாகும்.

நெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளை கென்றி ஸ்ரெனிஸ் லெஸ், கரம்பொன் சிசில் இராசம்மா தம்பதிகளுக்கு 02.08.1913 இல் அடிகளார் பிறந்தார். சேவியர் என்ற திருமுழுக்கு பெயர் கொண்ட இவர் யாழ்ப்பானத்திலுள்ள புனித அந்தோனியார் ஆங்கிலப்பாடசாலை, புனித சம்பத்திரீசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் 1931 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருத்துவ கல்லூரியில் சேர்ந்து பின்னர் கொழும்பு புனித பேர்;னாட் குருத்துவக் கல்லூரியிலும் குருத்துவக் கல்வியை கற்றார்.பின் உரோம நகரத்து குருத்துவப் பல்கழைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டம் பெற்றார்.

1938.03.19 இல் உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் தனது சேவியர் என்ற திருமுழுக்குப் பெயருடன் தனது தந்தையாரின் பரம்பரை மரபுப் பெயரான தனிநாயகம் என்பதை இணைத்துக்கொண்டார். பின் 1938.09.29 அன்று நெடுந்தீவில் புனித சவேரியார் ஆலயத்தில் முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

1940 - 1945 காலப்பகுதிகளில் தமிழ்நாடு வடக்கன்குளம் புனித குழந்தையேசு திறேசம்மாள் உயர்தர பாடசாலையில் துணை அதிபராக கடைமையாற்றிய இவர் தூத்துக்குடி திருமறை ஆயர் மேதகு கபிரியேல் பிறான்சிஸ் திபூர் சியூஸ் றோச் ஆண்டகையின் திருமறை மாவட்டத்திலும் பணியாற்றினார்.

1945 - 1947 இல் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கழைக்கழகத்தில் முதுமானிப்பட்டம் பெற்ற இவர் பின்னர் அங்கேயே ஆராய்ச்சி புலமையாளராக கல்வி கற்றார். அக்காலப்பகுதியில் “தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகம்” அமைத்து பல நூல்களை வெளியிட்ட இவர் 1949 ம் ஆண்டு “Nature in Ancient Tamil Poetry” என்ற ஆராய்ச்சி கட்டுரையை எழுதி அண்ணாமலைப் பல்கழைக்கழகத்தின் இலக்கிய முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின் தமிழ்த்தூதின் முதல் படியாக வட, தென் அமெரிக்காவிலுள்ள பல்கழைக்கழகங்களிலும் சமூக சபைகளிலும் ஜப்பானிலும் தமிழ்மொழியினதும் தமிழினத்தினதும் பெருமைகளை எடுத்திக்கூறி விரிவுரைகள் நிகழ்த்தினார்.

சென்னைத் தமிழ்வளர்ச்சிக்கழகம் யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் விழாவில் “சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள்” என்ற பொருளில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தலைமையில் சொற்பொழிவாற்றிய இவர் 1952 ம் ஆண்டு முதல் தமிழர் பண்பாடு - Tamil Culture என்ற ஆங்கில சஞ்சிகையை தனது தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் ஆரம்பித்தார். இதனால் தொடர்பற்று இருந்த தமிழியல் அறிஞர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் கருத்துக்களை வெளியிடவும் நல்வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழர் பண்பாட்டின் பெருமையை உலகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து “தொல் தமிழ் கவிதையின் இயற்கை, செவ்விய இலக்கிய காலத்தமிழர், மனிதநேயம்” ஆகிய நூல்களை வெளியிட்டார். அதே காலப்பகுதியில் “தமிழ்த்தூது” என்;ற நூலையும் வெளியிட்ட இவர் கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவி விழா எடுத்தார். இவ்விழாவில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றி எழுதும் நூலுக்கு ரூபா 1000 பரிசு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கைப் பல்கழைக்கழகத்து கல்வித்துறை விரிவுரையாளர் பதவியை ஏற்ற இவர் கொழும்பில் தமிழர்பண்பாட்டுக்கழகத்தை உருவாக்கினாhர்.


1954 - 1955 ம் ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் தமிழ்த்தூதையும் கல்விச்சுற்றுலாக்களையும் மேற்கொண்டார்.
1955 - 1957 ம் ஆண்டுகளில் லண்டன் பல்கழைக்கழத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பு மேற்கொண்ட இவர் Ancient European and Indian Systems of Education Compared with Special Reference to Ancient Tamil Education என்ற ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதினார்.

பின் பல உலகநாடுகளுக்கும் தமிழ்த்தூது சென்ற இவர் 1961 ம் ஆண்டு மலேசியப் பல்கழைக்கழகத்தில் இந்திய கலைகள் பிரிவின் தலைவராகவும்
பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

1964 தைத்திங்களில் டில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டில் தமிழகமும் தமிழ்மொழியும் புறக்கணிக்கப்பட்டது இச்சம்பவத்தால் புண்பட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தாய்த்தமிழுக்கான உலகளாவிய கருத்தரங்கம் அல்லது மாநாடு ஏன் நடாத்தக்கூடாதென விவாதித்ததன் விளைவாக அங்கிருந்த அறிஞர்களை ஒன்றுதிரட்டி உலகத்தமிழாராச்சிமன்றதை முன்னின்று ஆரம்பித்தார்.

1961 ம் ஆண்டு முதல் தமது இறுதி மூச்சுவரை அடிகளார் மன்றத்தின் செயலாளராகவே இருந்து மாண்புறச் செயற்பட்டார்.
1967 இல் நடைபெற்ற 27 வது கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டின்போது இம்மன்றம் யுனெஸ்கோ ஆதரவுபெற்ற அமைப்பாக மாற்றப்பட்டது.

1966 ம் ஆண்டு சித்திரையில் அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் முதலாவது மாநாடு மலேசிய நாட்டு அரசின் முழு ஒத்துழைப்போடு கோலாலம்பூரில் நடைபெற்றது.
1968 தையில் இரண்டாவது மாநாடு சென்னையிலும் 1970 இல் மூன்றாவது மாநாடு பாரிசிலும் நடைபெற்றது. பின் 1974 ம் ஆண்டு அனைத்துலக தமிழாராய்ச்சியின் நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இறுதியாக வேலணையில் இடம்பெற்ற வான்புகழ் வள்ளுவர் விழாவில் "கண்களில் ஒளி மங்குகின்றது கைகளோ நடுக்கம் கொள்கிறது ஆனால் என் நினைவெல்லாம் தமிழின்மீது தவழ்ந்துகொண்டிருக்கிறது" என்று தமிழின்மீதுகொண்டிருந்த பற்றையும் பாசத்தையும் பறைசாற்றிய அடிகளார் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் உள்ள ஞானஒடுக்க இல்லத்தில் 1980 செப்ரெம்பர் முதலாம் நாள் இறையடிசேர்ந்தார்.

2 comments:

Unknown said...

ஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது மிக முக்கிமானதொன்றாகும்
This is Absolutely Right.

Unknown said...

உண்மைதான். தமிழுக்காக வாழ்ந்தவர்களை மறந்து நாம் செயற்படுவது கவலைக்குரியதுதான்.

LinkWithin

Related Posts with Thumbnails