Saturday, June 6, 2009

வானம் தொட்டுவிடும் தூரத்தில்த்தான் ……

தேடல்
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து " என்று ஒரு பழமொழி உண்டு. தயவு செய்து முன்னேறத்துடிப்பவர்கள் உங்கள் ஞாபகங்களில் இருந்து அந்த பழழொழியினை அழித்துவிடுங்கள், அல்லது வழக்கொழிந்துவிடச் செய்துவிடுங்கள். முன்னேறத்துடிப்பவர்களுக்கு அந்த பழமொழியில் சற்றும் உடன்பாடு வரக்கூடாது. எல்லோருமே எதையாவாது சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே சாதித்து வெற்றிக்கனிகளை பறித்து புசித்தக்கொண்டிருப்பதை எம்மில் பலர் கீழே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு செயலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் பொறுமையுடனான கால வரையற்ற தேடல்கள் எங்கள் மனதில் விதைக்கப்படவேண்டும். இங்கே தேடல் என்று சொல்லும் போது உங்களுக்கான வெற்றிப்பாதையின் கதவுகளை கண்டறிவதற்கான உங்கள் பயணமே தேடல் என்ற நிலையாகின்றது. ஆக வெற்றிபெறத்துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் மிக பிரதானமாக இருக்கவேண்டியது தேடல் உணர்வு.

ஓன்றை யோசித்துப்பாருங்கள் நாடுகாண் பயணங்கள் என்ற ஒரு தேடல் மட்டும் அன்று இல்லாது போயிருந்தால் இன்று உலகத்தில் அரைவாசி நாடுகளே காணமற்போயிருக்கும். ஏன் அதையும் விட முன்னோக்கிப்போனால் மனித இனத்தின் காட்டு வாழ்க்கையில் இருந்தே தேடல்கள் ஆரம்பித்துவிட்டன என்று கூறலாம். அங்கு மட்டும் தேடல்கள் இல்லாது போயிருந்தால் இன்று மனித இனம் இந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியுமா? அதேபோல மார்க்கோனியின் தேடல், தோமஸ் அல்லாவின் தேடல், சுவாரிகினின் தேடல், கிரகாம் பெல்லின் தேடல், கலிலியோவின் தேடல் என்பவை தான் முறையே எங்களுக்கு வானொலி, மின்குமிழ், தொலைக்காட்சி, தொலைபேசி, வான்வெளிப்பயணங்கள் என்பனவற்றை தந்திருக்கின்றன. " என்னத்தை தேடி என்ன செய்வது? எல்லாத்தையும் கொண்டா போகப்போறோம் ""எனக்கு போதுமான பணமே போதும், அதிகம் பணம் சம்பாதித்து சாதித்து பணக்காரன் ஆகிவிட்டால் ஒருபோதும் நின்மதியாக வாழவே முடியாது "

எம்மில் பலர் அடிக்கடி தெரிவித்துக்கொண்டிருக்கும் தத்துவ முத்துக்களே இந்த சம்பாசனைகள்;. இப்படிப்பேசிக்கொண்டிருப்பவர்கள் முழுமையாக தேடுவதற்கு முயற்சி செய்யாதவர்களே, எத்தனை சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் இவர்களால் தேட முடியாது. இந்த நிலையில் இவர்களது மேற்படி பேச்சுக்கள் தங்களையும் கெடுத்து சுற்றி இருப்பவனின் மனதிலும் தேடலின் வெறியை மழுங்கடிக்கும் விஷம் என்றே கூறவேண்டும்.

ஒருவன் தேடல் ஒருபோதும் அவனுக்கு மட்டுமே பயன்பாடுகளை சந்துவிட்டுபோய்விடுவதில்லை. வேண்டும் என்றால் அந்த தேடலில் ஈடுபட்டவனுக்கு அதற்குரிய பணத்தையும், வரலாற்றுப்புகழையும், அந்த தேடல் மூலம் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அந்த ஒருவனுடைய தேடல் மூலம் பயன்பெறப்போவது பலராகவே இருக்கும். மார்க்கோனியின் தேடல் அவருக்கு மட்டுமா பயன்தந்தது? அலக்ஸ் ஆன்டர் கிரகம் பெல்லின் தேடல் அவருக்கு மட்டுமா பயன்பட்டது? இல்லையே. சரி இவர்கள் சொல்வதுபோலவே உழைத்து பணம் சேர்த்து எதை நான் காண்பது? ஏன்ற கேள்விக்கே போவோம்.

பணம் சேர்ப்பதற்கு என்ன செய்யவேண்டும்? தொழிலில் தேடல்கள் மூலமான ஒரு தொடக்கம் வேண்டும். இவர் மட்டுமா தொழில் செய்யப்போகின்றார்? இல்லை அவர் லாபம் அடைய அடைய நிறுவனம் வழர்ச்சியடைந்து, ஊழியர்களின் எண்ணிக்கையும் கூடுதலடைகின்றது. சிந்தித்துப்பாருங்கள், சும்மா இருந்த ஒருவர் தேடல் வயப்பட்டு செயலில் இறங்கினால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினையும் பெற்றுத்தரமுடிகின்றது! தேடல்கள் என்பவை முடிவிலி, தொடர்ச்சியானவை, அவற்றுக்கு முடிவுகள் ஒருபோதும் இல்லை. தொழில் ரீதியான தேடல்களால் ஒருவன் அடைந்துகொண்டு செல்வது கண்டிப்பாக மேலும் மேலும் சிறப்பு என்பதுதான்.

உண்மையில் நடந்த இரு நண்பர்களின் கதை இந்த வியாபார வாழ்க்கை தேடல்களுக்கு நல்லதொரு சம்பவமாக இருக்கும் என நினைக்கின்றேன். கொளதமனும், சாரங்கனும் பாடசாலையில் இருந்தே நண்பர்கள், இரண்டுபேரும் பின்னர் பொறியில் துறையிலும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்து கணினி பொறியியல்த்துறையில் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் இருவரினதும் குணாதிசியங்கள் பற்றி குறிப்பட்டே அகவேண்டும். கௌதமன் ஒரு யதார்த்தவாதி, படிக்கும் காலங்களில்க்கூட படிப்புக்கான நேரத்தை எப்போதும் இழக்கவிரும்பமாட்டான். புறபாடவிதானங்களிலும் அவன் ஈடுபாடு காட்டுவது இல்லை. "படித்து பட்டம் பெற்றால்த்தான் சாதிக்கமுடியும் " இந்த காலத்தை வீணாக்குவது முட்டாள் தனம் என்பதுதான் அவன் தன் மனதில் வைராக்கியமாக காத்துவந்த வேதம். வகுப்பிலும், பாடசாலையிலும் அவனே முதன்மையானவன்.

சாரங்கன் அப்படி அல்ல! அப்போதே அவனுக்கு கலை ஆர்வம் கூடுதலாக இருந்தது. பாடசாலை நிகழ்வுகள் அனைத்திலும் அவனது கவிதைகள், பேச்சுத்திறமைகள் மெருகூடின. பெரும்பாலும் படிக்கும் நேரங்களைவிட அவன் கையில் பயன்தரக்கூடிய அறிவியல் புத்தகங்களே அதிகமாக இருந்தன. அப்போதே அவனுக்குள் புதியவற்றை தெரிந்துகொள்ளும் தேடலும், தனது துறையில் மற்றவர்களின் முறைகளையும் பற்றியெல்லாம் தேடிக்கொண்டிருப்பான். உயர்தர பெறுபேறுகள் வந்தபோது மிகச்சிறப்பாக கொளதமனுக்கே பெறுபேறுகளைப்பெற்று முன்னிலை வகித்தான். ஆனால் சாரங்கனும், கொளதமன் அளவுக்கு இல்லை என்றாலும் கூட பல்கலைக்கழக பொறியியல்த்துறைக்கு தெரிவாகியே இருந்தான். பின்னர் பல்கலைக்கழகத்திலும் கொளதமனே பெரிதாக பேசப்பட்டும் பெறுபேறுகள் பெற்றும் வந்தான். சாரங்கனது பெறுபேறுகள் சராசரியாகவே இருந்து இருவரும் பட்டத்துடன் வெளியேறினர்.

இருவரும் ஒரே வேளையில் தனித்தனியாக கணினி மென்பொருள் நிறுவனங்களை சிறிய அளவில் தொடங்கி தொழில் செய்தனர். கௌதமன் வழமைபோலவே கடுமையாக உழைத்து வந்தான். அனால் சாரங்கனது வியாபாரப்பயணம் அப்படி இருக்கவில்லை. சாதாரணமான நேரங்களுடனேயே அவன் தொழில் புரிந்துவந்தான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஓராண்டு முடிவதற்குள்ளேயே சாரங்கனின் நிறுவனம் மூன்று மடங்கு வழர்ச்சி பெற்று பாரிய இலாபம் பெற்றான். காரணம் என்னவாக இருக்கும் என நீங்களே அனுமானித்திருப்பீர்கள். ஆம் காரணம் சாரங்கனின் தேடல்கள்தான். அவன் பெரும்பாலான நேரங்களில் தனது தொழிலில் மேல் நாடுகள், மற்றும் பிறநாடுகளில் கையாளப்படும் முறைமைகள், புதிய தொழிநுட்ப புகுத்தல் என்பவை பற்றி தேடித்தேடி தனது தொழிலில் புகுத்தினான் அதனால் அவன் அந்த வெற்றியை பெற்றான்.

ஆகவே ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிடுகின்றது. திறமைகள் மட்டும் இருந்தும் தேடல்கள் இல்லை என்று ஆகிவிட்டால் மேலும் மேலும் வளர்ச்சி பெறுவது என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் என்பதுதான். விஞ்ஞானத்தின் மூலாதாரம் தேடல் என்பது மட்டும் இன்றி தனக்குள்ளான ஒரு தேடல்கள் தான் ஞானத்தை தரும் என்று ஆஞ்ஞானமும் சொல்கின்றது. தேடல் சிந்தனை என்பது ஒரு மனிதனின் மூளையில் எப்போது அலாரம் அடிக்கும் என்பதை சொல்லி விடமுடியாது. எந்த கணப்பொழுதிலும், ஒரு சம்பவத்திலும், சில உரையாடல்களிலும் கூட தேடல்கள் தொடங்கிவிடலாம். சோம்பலில் படுத்துக்கொண்டிருந்த நீயூட்டன் மீது அப்பிள் விழுந்த அந்த கணத்தில்த்தான் அவனது புவியீர்ப்பு பற்றிய தேடலும், அதன்பின்னரான கண்டுபிடிப்பும் உண்டாகியது என்பதை மறந்துவிடாதீர்கள்..
ஆகவே நீங்கள் புதிதாக ஒன்றையும் தேடும் பொறுப்பை உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுவிட்டு போகவில்லை. அவர்கள் உங்களுக்காக பலவற்றை தேடி வைத்துவிட்டே சென்றுள்ளனர். ஆகவே இப்போது நிங்கள் தேடவேண்டியது உங்கள் துறைகள் எதுவோ அவற்றை மேலும் சிறப்புறச்செய்து எவ்வாறு முன்னேறுவது என்பது மட்டுமே.. என்ன தேடத்தொடங்கிவிட்டீர்களா??தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும், காதல் போல தேடல் கூட ஒரு சுகமே..

1 comment:

ஆர்வா said...

அந்தக் கதை ரொம்ப சிந்திக்க வெச்சது.. Cool

LinkWithin

Related Posts with Thumbnails