
1984, 1985 காலங்கள் என்று நினைக்கின்றேன். அப்போது நாங்கள், முதலாம், இரண்டாம் வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த காலங்கள். வீட்டிலே பெரியவர்கள், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் இருந்து கிரிக்கட் மச் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மச்களும் அப்போது பார்க்கமுடியாது. எங்கள் தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினியில் இலங்கை அணி ஆடினால் காட்டுவார்கள், அல்லது இந்திய நஷனல் தொலைக்காட்சியில் காட்டுவார்கள். அப்போது ரூபவாஹினியைவிட யாழ்ப்பாண பிரதேசங்களில் இந்திய தொலைக்காட்சி புள்ளி இல்லாமல் விழுவதாக நினைவு உள்ளது.
அப்போதெல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்திருக்கின்றேன். என்றாலும்கூட, கவாஸ்கர், கபில்தேவ், டிலீப் வென்ஸாகர், ஸ்ரீ காந்த் என்ற பெயர்கள் மனதில் நின்றன. ஆப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இந்திய அணி இரசிகர்களே மிக அதிகம் என்பதை விட இந்திய அணி இரசிகர்களாகவே முழுப்பேரும் இருந்தனர் என்றே சொல்லவேண்டும்.
அப்படியான வேளைகளில் 1986, 1987 காலங்களில் மெல்ல மெல்ல கிரிக்கட் பார்க்கும் ஆசைகள் குடிகொள்ளத்தொடங்கியது. அப்போது எதேட்சையாக பாகிஸ்தான் அணி விளையாடிய போட்டி ஒன்றை பார்த்தபோதே இம்ரான் ஹான் என்ற அந்த வேகப்பந்துவீச்சாளர் என் மனதிற்குள்ளும் பந்தை எறிந்தார்.
உண்மையிலேயே முதன் முதலில் நான் இரசிகனான ஒரு கிரிக்கட் வீரர் இம்ரான் ஹானேதான். அவரது நடை, ஸ்ரைல், பந்துபோட ஓடிவரும் பாங்கு, அப்பீல் பண்ணும் இரகம், விக்கட் விழுத்தியதும் சக வீரர்களுடன் அதை கொண்டாடும் பண்பு என அத்தனையும் நச் என்று மனதுக்குள் குடிகொண்டன.
அப்புறம் என்ன? எங்கள் விளையாட்டுக்களிலும், இம்ரான் ஹான்போல ஸ்ரெப் எடுத்து ஓடிவந்து போடுவேன்.. ஆனால்.. பந்தின் வேகம் இம்ரான் ஹான் ஸ்பின்போட்டால் எப்படி போகுமோ அப்படி இருந்தது.
அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில், சென்ரலைட்ஸ், ஜொனியன்ஸ் கிரிக்கட் அணியில் இருந்தவர்கள்கூட இம்ரான்போல முடிவளர்த்து, அவரது ஸ்ரைலை பின்பற்றியது கவனிக்கத்தக்கதாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இம்ரான் ஹான் பைத்தியம் என்னை பிடித்து, ஸ்ரிக்கர்ஸ், கலண்டர்ஸ், படங்கள் என சேகரிக்க ஆரம்பித்தேன். பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு போய் ஸ்போட்ஸ்ராரை ஆவலுடன் எடுத்து படம் பார்ப்பேன்.
இம்ரான் ஹானின் ஒரு படம் இருந்தால், அந்தப் பக்கத்தை மற்றவர்கள் பின்பு காணமாட்டார்கள்.
இப்படி அவர்மேல் கிட்டத்தட்ட ஒரு வெறியே ஏற்பட்டது எனக்கு. இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடும்போது, சுற்றத்தின்தாக்கம், பக்கத்தில் இருந்து பார்ப்பவர்கள் அடிப்பார்கள் என்ற காரணத்தால், இந்தியா ஜெயிக்கவேண்டும் ஆனால் இந்தியாவின் 10 விக்கட்களையும் இம்ரான் ஹானே எடுக்கவேண்டும் என வேண்டிக்கொள்வேன்.
1992 வேள்ட் கப்.. அப்போ யாழ்ப்பாணத்தில் மின் சாரம் என்ன? மண்ணெண்ணையே கிடையாது. அப்போது நடக்கின்றது இறுதி ஆட்டம். ரேடியோவில் ஆவலாக கேட்டேன். என் ஆதஸ்ன நாயகனின் கரத்தில் உலக்கோப்பை..!! கற்பனை செய்தேன். பின்னர் விடவில்லை.. அப்போ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு அண்ணா.. கொழும்பு சென்று வரும்போது அந்த இறுதி ஆட்டத்தின் வீடியோ கொப்பி கொண்டுவந்தார். அவரது வீட்டில் ஜெரேட்டருக்கு மண்ணெண்ணை என் பங்காக கொடுத்து ஆசைதீர அந்த இறுதி போட்டியை அல்ல இம்ரானை பார்த்து இரசித்தேன்.
அவர் புற்றுநோய்க்காக மருத்துவமனை கட்டியது, தனது தாயை அளவுக்கும் அதிகமாக நேசித்தது, பொது சேவைக்கு முன்னுரிமை கொடுத்தது எல்லாம் என்னை பெரிதும் கவர்ந்தது.
ஆனால் பின்னர் தாம், முன்னர் போட்டிகளின்போது குளிர்பான மூடிகளால் பந்தை சுரண்டியது, அரசியலுக்கு சென்றது என்பவை எனக்கு மனதில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தின.
இன்றும் அன்று ஒரு கிரிக்கட்டராக இவரை இரசித்தபின்னர் அந்த அளவுக்கு நான் யாரையும் இரசித்து இல்லை. இருந்தபோதிலும் இவர் அளவுக்கு இல்லாது விடினும் பின்னர் என் மனதுக்குள் அரவிந்த டி சில்வாவும், இன்றுவரை சச்சினும் உள்ளதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே.
ஆண்டுகள் பல கடந்தாலும், இம்ரானின், வேகம், ஸ்ரைல், பந்துவிச்சு அத்தனையும் மதிற்குள் அதே சீதோஸ்ணத்தில் பக்குவமாகவே உள்ளது.
HAPPY BIRTHDAY IMRAN



































