Thursday, November 25, 2010

மறக்கமுடியாத வேகம் - இம்ரான் ஹான்


1984, 1985 காலங்கள் என்று நினைக்கின்றேன். அப்போது நாங்கள், முதலாம், இரண்டாம் வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த காலங்கள். வீட்டிலே பெரியவர்கள், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் இருந்து கிரிக்கட் மச் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மச்களும் அப்போது பார்க்கமுடியாது. எங்கள் தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினியில் இலங்கை அணி ஆடினால் காட்டுவார்கள், அல்லது இந்திய நஷனல் தொலைக்காட்சியில் காட்டுவார்கள். அப்போது ரூபவாஹினியைவிட யாழ்ப்பாண பிரதேசங்களில் இந்திய தொலைக்காட்சி புள்ளி இல்லாமல் விழுவதாக நினைவு உள்ளது.

அப்போதெல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்திருக்கின்றேன். என்றாலும்கூட, கவாஸ்கர், கபில்தேவ், டிலீப் வென்ஸாகர், ஸ்ரீ காந்த் என்ற பெயர்கள் மனதில் நின்றன. ஆப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இந்திய அணி இரசிகர்களே மிக அதிகம் என்பதை விட இந்திய அணி இரசிகர்களாகவே முழுப்பேரும் இருந்தனர் என்றே சொல்லவேண்டும்.
அப்படியான வேளைகளில் 1986, 1987 காலங்களில் மெல்ல மெல்ல கிரிக்கட் பார்க்கும் ஆசைகள் குடிகொள்ளத்தொடங்கியது. அப்போது எதேட்சையாக பாகிஸ்தான் அணி விளையாடிய போட்டி ஒன்றை பார்த்தபோதே இம்ரான் ஹான் என்ற அந்த வேகப்பந்துவீச்சாளர் என் மனதிற்குள்ளும் பந்தை எறிந்தார்.
உண்மையிலேயே முதன் முதலில் நான் இரசிகனான ஒரு கிரிக்கட் வீரர் இம்ரான் ஹானேதான். அவரது நடை, ஸ்ரைல், பந்துபோட ஓடிவரும் பாங்கு, அப்பீல் பண்ணும் இரகம், விக்கட் விழுத்தியதும் சக வீரர்களுடன் அதை கொண்டாடும் பண்பு என அத்தனையும் நச் என்று மனதுக்குள் குடிகொண்டன.

அப்புறம் என்ன? எங்கள் விளையாட்டுக்களிலும், இம்ரான் ஹான்போல ஸ்ரெப் எடுத்து ஓடிவந்து போடுவேன்.. ஆனால்.. பந்தின் வேகம் இம்ரான் ஹான் ஸ்பின்போட்டால் எப்படி போகுமோ அப்படி இருந்தது.

அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில், சென்ரலைட்ஸ், ஜொனியன்ஸ் கிரிக்கட் அணியில் இருந்தவர்கள்கூட இம்ரான்போல முடிவளர்த்து, அவரது ஸ்ரைலை பின்பற்றியது கவனிக்கத்தக்கதாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இம்ரான் ஹான் பைத்தியம் என்னை பிடித்து, ஸ்ரிக்கர்ஸ், கலண்டர்ஸ், படங்கள் என சேகரிக்க ஆரம்பித்தேன். பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு போய் ஸ்போட்ஸ்ராரை ஆவலுடன் எடுத்து படம் பார்ப்பேன்.
இம்ரான் ஹானின் ஒரு படம் இருந்தால், அந்தப் பக்கத்தை மற்றவர்கள் பின்பு காணமாட்டார்கள்.
இப்படி அவர்மேல் கிட்டத்தட்ட ஒரு வெறியே ஏற்பட்டது எனக்கு. இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடும்போது, சுற்றத்தின்தாக்கம், பக்கத்தில் இருந்து பார்ப்பவர்கள் அடிப்பார்கள் என்ற காரணத்தால், இந்தியா ஜெயிக்கவேண்டும் ஆனால் இந்தியாவின் 10 விக்கட்களையும் இம்ரான் ஹானே எடுக்கவேண்டும் என வேண்டிக்கொள்வேன்.

1992 வேள்ட் கப்.. அப்போ யாழ்ப்பாணத்தில் மின் சாரம் என்ன? மண்ணெண்ணையே கிடையாது. அப்போது நடக்கின்றது இறுதி ஆட்டம். ரேடியோவில் ஆவலாக கேட்டேன். என் ஆதஸ்ன நாயகனின் கரத்தில் உலக்கோப்பை..!! கற்பனை செய்தேன். பின்னர் விடவில்லை.. அப்போ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு அண்ணா.. கொழும்பு சென்று வரும்போது அந்த இறுதி ஆட்டத்தின் வீடியோ கொப்பி கொண்டுவந்தார். அவரது வீட்டில் ஜெரேட்டருக்கு மண்ணெண்ணை என் பங்காக கொடுத்து ஆசைதீர அந்த இறுதி போட்டியை அல்ல இம்ரானை பார்த்து இரசித்தேன்.

அவர் புற்றுநோய்க்காக மருத்துவமனை கட்டியது, தனது தாயை அளவுக்கும் அதிகமாக நேசித்தது, பொது சேவைக்கு முன்னுரிமை கொடுத்தது எல்லாம் என்னை பெரிதும் கவர்ந்தது.
ஆனால் பின்னர் தாம், முன்னர் போட்டிகளின்போது குளிர்பான மூடிகளால் பந்தை சுரண்டியது, அரசியலுக்கு சென்றது என்பவை எனக்கு மனதில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தின.
இன்றும் அன்று ஒரு கிரிக்கட்டராக இவரை இரசித்தபின்னர் அந்த அளவுக்கு நான் யாரையும் இரசித்து இல்லை. இருந்தபோதிலும் இவர் அளவுக்கு இல்லாது விடினும் பின்னர் என் மனதுக்குள் அரவிந்த டி சில்வாவும், இன்றுவரை சச்சினும் உள்ளதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே.

ஆண்டுகள் பல கடந்தாலும், இம்ரானின், வேகம், ஸ்ரைல், பந்துவிச்சு அத்தனையும் மதிற்குள் அதே சீதோஸ்ணத்தில் பக்குவமாகவே உள்ளது.

HAPPY BIRTHDAY IMRAN

Wednesday, November 24, 2010

யம்பங் நாவக்குலியட்ட..


முன்னர் ஓருகாலத்தில் 70களின் ஆரம்பங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் பல காணிகள் அரசாங்கத்தால் அரசாங்க உத்தியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் இருந்த பல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் வன்னியில் காணிகள் கிட்ட ஏதுவாக இருந்தது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அன்றைய நாட்களில் “வெளிக்கிடடி விசுவர்மடத்திற்கு” என்ற ஒரு நாடகம் சக்கை போடு போட்டது. இலங்கை வரலாற்றில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றாக அது பெரு வெற்றிபெற்ற வரலாறுகளும் உண்டு.

அதேபோல இன்றைய நிலையில் இலங்கையில் “குடியேற்றத்தில்” அனைவரின் கண்ணும் நாவற்குழி என்ற இடத்தின்மேல் திரும்பியுள்ளது. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து நாட்டின் பிற பிரதேசங்களுக்கு வெளியேறிச்செல்லும் பாதையில் யாழ்ப்பாண நகரில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு ஊரே நாவற்குழி.
முன்னைய நாட்களில் யாழ்ப்பாணத்தை சூழவுள்ள பிரதான இராணுவ முகாங்களில் நாவற்குழி இராணுவ முகாமும் பிரதானமாக இருந்தது. அதேபோல, கடல் உணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்று, மற்றும் அரசாங்க உணவுக்களஞ்சியம், அரசாங்க வீடமைப்பு தொகுதி என்பன இந்தப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. பெரும்பாலான வயல்நிலங்கள் இந்த ஊருக்கு அழகு சேர்க்கின்றன.

முப்பது வருட யுத்தகால பேரிருட்டில் காலத்தை கழித்த தமிழ் மக்கள், இன்னும் தமது சொந்த பூமிக்கு திரும்பாத நிலையில் தமது சொந்த நிலம் பற்றிய ஏக்கம், தொலைந்துபோன நாட்கள், இழந்துபோன உறவுகள், உயிர்கள், சொத்துக்கள் என பெரும் ஏக்கத்துடன் இன்றும் பிறர்மனைகளில் வாழ்ந்துவரும் நிலையில், திடீர் என பேரிடியாக பேரினவாத அரசியல் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்துவிட்டது.
பெரும் இரத்த வடுக்கள் இன்னும் காயமுன்னரே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

திடீர் என தாம் 1983ற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், தற்போது அங்கே குடியேற வந்துள்ளதாகவும் கூறி சில சிங்ளக்குடும்பங்கள், யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் என முன்பு ஒருகாலத்தில் அந்தப்பெயரில் செயற்பட்ட இடத்தில் வந்து குவிந்தனர். தாமும் யாழ்ப்பாத்தவரே என்றும் தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்றும் பல ஊடகங்களுக்கும் அங்கிருந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இவர்கள் தாமாக இங்கு வரவில்லை, இவர்கள் பின்னால் பலமான அரசியல் சக்திகள் இருக்கின்றன என்பது இதை வாசிக்கும் உங்களுக்கு மட்டும் இல்லை, கண் எங்கே, மூக்கு எங்கே..எனக்கேட்கும்போது முதல் முதலாக கண், மூக்கை தொட்டுக்காட்டும் சிறு குழந்தைக்கும் இந்தவிடயம் தெரிந்திருக்கும்.

புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் திடீர் என்று இந்த மாத முற்பகுதியில் மேற்படி நாவற்குழியில் குடியேறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாழத்தொடங்கிவிட்டார்கள். அதன் பின்னரும் பல குடும்பங்கள் வந்து குடியேறுவதாக ஒரு அதிர்ச்சி தகவலும் உண்டு.
இவர்கள் இங்கு குடியேறுவதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. என பூசனிக்காயை அல்ல பூகோளத்தையே சோற்றுக்குள் மறைக்கின்றது இராணுவம், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டே!


இங்கு சிங்களவர்கள் காணி உரிமை அற்றவர்கள், முன்னர் வாடகைக்கே அவர்கள் இருந்தார்கள் என்று உண்மையை சொன்னார் முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர்.
பாவம்..புதிய அமைச்சரவையிலேயே அவர் காணமற்போனதுதான் தர்மம்.
அதேவேளை யாழ்ப்பாணச் செயலகமும், இந்த மக்கள் இங்கு வாழ்ந்ததாக எந்த அத்தாட்சியும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இருந்தும் பயன் ஏதும் இல்லை.

எது எப்படியோ..இலங்கையில் எந்த பாகத்திலும் இலங்கையர் எவரும் சுதந்திரமாக வாழலாம். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தமது பணத்தைக்கொண்டு உரியமுறையில் காணிகளை வாங்கி வாழ்ந்துவந்தால் சரி.
சட்டவிரோதமாக எவர் செயற்பட்டாலும் அதை தடுப்பது அரசின்கடமையல்லவா?
தமிழர்கள் கொழும்பு உட்பட பல சிங்களப்பிரதேசங்களில் வாழ்க்கின்றார்கள்தானே என பல மேதாவிகள் கேள்விகளை தொடுகின்றனர்.
வாழ்க்கின்றார்கள்தான். தமது சொந்த பணத்திலே முறைப்படி காணிவேண்டி, சட்டப்படி அல்லவா அவர்கள் வாழ்;கின்றார்கள். சிங்கள பிரதேசம் ஒன்றில் தமிழ்க்குடியேற்றம் அரசாங்கத்தாலோ, அல்லது தம் இச்சைப்படியோ வரலாற்றில் நடந்துள்ளதா? நடக்கவும் விட்டுவிடுவார்களா என்ன?

பிரதேசங்களை பிரிக்கும் இடத்தில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை அமைப்பது சிங்களப் பேரினவாத எண்ணத்திற்கு இன்று வந்த எண்ணம் இல்லை இது. குறிப்பாக சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்ட இடங்களை பார்த்தீர்களேயானால், தமிழர்களின் நிலங்கள், பிரதேசங்களை பிரிக்கும் இடம் ஒன்றையே அதற்காக தெரிவு செய்திருப்பார்கள். வெலி ஓயாவில் இருந்து, ஜானகபுர வரை இன்று நாவற்குழியிலும் அதே (வலிகாமத்தையும், தென்மராட்சியையும் பிரிக்கும் நோக்கு) அதேபோல கூடியவிரைவில் வல்வைவெழியிலும், நாகர்கோவில் பக்கங்களிலும் இவ்வாறான குடிறேறங்கள் ஏற்பட்டாலும் சந்தேகம் இல்லை.

அனைவரினதும் அபிலாசைகளும், விருப்பங்களுக்கும் அமைய இனி ஒரு புதிய தேசம் என்றும், இலங்கையில் இனி சிறுபான்மை பெரும்பான்மை என்ற இனங்கள் இல்லை என்றும், இனியும் ஒரு இரத்தம் சிந்தும் சந்தர்ப்பம் நாட்டில் ஏற்படாது என்றும், யாவரும் ஓரினமே என்றும்!! துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு, சொன்னால் மட்டும் நல்லாட்சி புரியமுடியாது.

எது எப்படியோ அன்றைய நாட்களில் “வெளிக்கிடடி விசுவமடத்துக்கு” என்ற தமிழ்நாடகம் அந்த சந்தர்ப்பத்தில் சக்கைபோடு போட்டதுபோல…
இன்று துரைமார் யாராவது, “யம்பங் நாவக்குலியட்ட” என்று சிங்கள நாடகம் போட்டால் நல்லா தூக்குமுங்கோ..

Tuesday, November 23, 2010

ஹொக்ரெயில் 23.11.2010

டொன்லிஷாப் நதிக்கரை துயரம்.

பொதுவாகவே பாரம்பரியமாக மக்கள் கொண்டாடிவரும் விழா ஒன்றுக்கு பெருந்தொகையான மக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு குவிந்துவருவார்கள் என்பது அனைவரும் அறிந்தவிடயமே. எனவே பெருந்தொகையான மக்கள் கூடும் விழாக்கள் கேளிக்கைகளில் அந்த மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்குவது அந்த நாட்டின் அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் தலையாய கடமையாகவே கருதப்படுகின்றது.
இருந்தபோதிலும் சிறு கவலையீனம் ஒன்றினாலேயே பாரிய ஒரு அசம்பாவிதம் நடந்துவிடவும் இவ்வாறன சந்தர்ப்பங்களில் வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகின்றது.

அசம்பாவிதங்கள் திடீன எதிர்பார்க்காமல் வருபவைதான் என்றபோதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியாக கடமை புரிபவர்கள் எத்தகைய அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ள கடப்பாடுடையவர்களாகவே தெரியப்படுகின்றனர்.
கம்போடிய நாட்டின் டொன்லிஷாப் நதிக்கரையில் இடம்பெற்ற மக்கள் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட பாரிய சன நெருக்கடியில் 345பேர் கொத்தாக காவுகொள்ளப்பட்டதும், 400ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்த செய்தியும் திடுக்கிடவைக்கின்றது.

காலம் காலமாக மேற்படி நதிக்கரையில் மழைகாலத்தை வரவேற்க இந்த விழா ஆடம்பரமாக மக்கள் கூட்டத்தினரால் எடுக்கப்பட்டுவருகின்றது. அதாவது மழைகாலத்தை வரவேற்பதால் “தண்ணீர் திருவிழா” என்றே இது அழைக்கப்பட்டுவருகின்றது. இது அந்த நாட்டு மக்களின் பாரம்பரிய ஒரு பெருவிழா.
நதிக்கு அருகில் ஒடுங்கிய பாலம் ஒன்றுள்ளது. அதன் வாயிலுக்கு அருகில் ஏற்பட்ட பாரிய சன நெருக்கடியால் பலத்தின் வழியாக அதிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியே எத்தனித்ததாலேயே இந்த துயரசம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஆராய்ந்துபார்த்தால் எங்கோ ஒரு இடத்தில் சிறியதாக பாதுகாப்பு தரப்பினரால் கவனியாது, அசண்டையீனமாக விடப்பட்ட தவறே இத்தனை மக்களை காவு கொள்ளப்பட காரணமாகிவிட்டது.

தலாய்லாமாவின் ஓய்வு அறிவுப்பு ஏற்புடையதா?

கண்ணுக்கு முன்னால் தமக்கே உரியதான நிலம் மெல்ல மெல்ல அபகரிக்கப்பட்டு, பெருந்தேசமொன்று தம் நிலத்தை விழுங்கிவிட்டாலும், அயராது அந்த நிலத்தின் விடுதலைக்காக அதிலும் முக்கியமாக அகிம்சா வழியில் நாளைகள் மீதான நம்பிக்கையுடன், எதிர்பார்த்து நம்பியவர்கள்…. அன்று நேரு தொடக்கம் இன்று ஒபாமா வரை கைவிரித்தபோதிலும் நிச்சியம் ஒருநாள் தம் திபத் என்னும் புண்ணிய பூமிக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன், அமைதியாக, நம்பிக்கையுடன் அகிம்சாமுறையில் பல ஆண்டுகளாக போராடி வருகின்றார் தலாய்லாமா!

மறுபக்கத்தில் திடீர் என்று அவர் அறிவித்திருக்கும் ஓய்வு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தாம் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ள அறிவிப்பு விளக்கமில்லாத ஒன்றாகவே இருக்கின்றது. அப்படி என்றால் அடுத்த தலாய்லாமாவை தெரிவு செய்யவேண்டுமா? அவர் திபெத்திலா அல்லது வெளியிலா உள்ளார் போன்ற பல கேள்விகளை திபெத்திய மக்கள் மத்தியில் அது எழுப்பியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
தற்போதைய நிலையில் தனக்கு பின்னதான திபெத் விடிவுக்கான அகிம்சாவழி போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்களை தலாய்லாமா வளர்த்துள்ளபோதிலும், தற்போது உலகியலில் மிக கவனமாக பயனிக்கவேண்டிய கட்டத்தில் அவரின் ஓய்வு ஏற்புடையதாக இருக்காது என்பதே உண்மை.

ஒபாமாவின் இந்தியப்பயணம்








பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா.

பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் 85ஆவது ஜனன தினம் இன்றாகும். அவரை இன்றும் பெரும்பாலான மக்கள் அவதாரமாகவும், ஆன்மீக குருவாகவும், நினைத்து வழிபட்டுவருவதை கண்கூடாகக்காணமுடிகின்றது. இவர் பற்றி பல வாதப்பிரதிவாதங்களும் உண்டு. இதை எழுதும் நான் கூட அவரது தொண்டனோ, பக்தனோ இல்லை. ஆனால் அவர் செய்யும் பொதுசேவைகளுக்கு அவரை வாழ்த்தவேண்டும் என்பதும், அந்த சேவைகளுக்கு தலை சாய்க்கவேண்டும் என்பதும் என் எண்ணம்.

2006ஆம் ஆண்டு நான் முன்னர் தொழில்புரிந்த நிறுவனம் சார்பாக சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். சென்னையில் தங்கியிருந்தபோது திருவான்மீயூரில் சத்திய சாய்பாபாவின் யாகம் ஒன்று இடம்பெற்றுவந்தது.
ஆதிகாலை 4 மணிக்கே என்னுடன் வந்தவர்கள் அங்கே இருந்து அவர் தங்கியிருந்த மடத்திற்கு செல்ல ஆயத்தமானார்கள். நான் வரவில்லை என்று சொல்லிக்கூட, வலுக்கட்டாயமாக என்னை அழைத்து சென்றார்கள். வேண்டா வெறுப்பாக சென்றிருந்தேன். அவர் அங்கிருந்து காட்சி கொடுக்கும் இடத்தில் இருந்து மூன்றாவது அளாக அங்கு அமர்ந்திருந்து, காலை 10 மணிக்கு அவரை நேரில் கண்டேன். ஏழிமையான புன்னகையுடன் அனைவரையும் பார்த்தவண்ணம் தனது அசையும் ஆசனத்தில் சென்றுகொண்டிருந்தார். பக்தர்கள் ஆர்பரித்தனர், பஜனை பாடினர், பெரும் ஆச்சரியத்துடன் நான் பார்த்துகொண்டே இருந்தேன்.

அவர் சென்றவுடன் வெளியில் வந்து பார்த்தவுடன் திடுக்கிட்டுப்போனேன். எத்தனையோ அவரின் பக்தர்கள், தாம் உள்ளே அனுமதிக்கப்படவில்லையே, பகவானை பார்க்கமுடியவில்லையே என அழுதுகொண்டிருந்தனர்…
“என்னுடன் சித்தர்கள் ஆரம்பிக்கவும் இல்லை! என்னுடன் சித்தர்கள் இல்லாமல்போவதுவும் இல்லை!!” என்று யாரோ ஒரு சித்தர் சொல்லிவைத்த வசனம் மட்டும் மனதுக்குள் ஒலித்தது அன்று.

உந்தன் தேசத்தின் குரல்..
சொந்தமண்ணை பிரிந்து அதன் நினைவுடனே நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் எந்த உள்ளமும் இந்த பாடலை கேட்டு வழியோரத்தில் கண்ணீரை சொரியும் என்பது உண்மை. உடல் மட்டும் அங்கே எந்திரமாகவும், அறிவு சேமிக்கும் புத்தகமாகவும் இருக்க உயிரும் உணர்வுகளும் சொந்த தாய்மடியை என்றும் தேடிவரும் உணர்வு கொப்பளிக்கின்றதே இங்கே..

சர்தாஜி ஜோக்
மூன்று சர்தாஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.
போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம்இ இப்ப வந்து லிப்ட் கேக்குறியே! அறிவில்லையா உனக்கு?

Monday, November 22, 2010

யாழ்ப்பாணச்சுற்று சில புகைப்படங்கள்


பிளாந்தன் செடிகள் அதிகமாக காணப்படுவதனால் சுவையான மீன்களை தேசத்திற்கு வழங்கும் பண்ணைக் கடல்


யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்குள் பிரதேசித்து அல்லைப்பிட்டி என்ற இடத்தில் திரும்பியவுடன் வரும் அழகிய பனங்கூடல்


புங்குடுதீவில் தெற்கு பக்க கடற்கரையை பார்த்தவண்ணம் இருக்கும் பழைய கலங்கரைவிளக்கம் ஒன்று


தீவகத்தில் இருந்து யாழ் நோக்கி வரும்போது யாழ்ப்பாணத்தின் தோற்றம்


யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து பார்க்கும்போது சுப்பிரமணியம் பூங்கா, மத்திய கல்லூரி மைதானத்திற்கு இடைப்பட்ட வீதி


குதிரைமுகம் மாறப்பெற்றதாக வரலாறு கூறும் மாருதப்புரவல்லியின் குதிரை முகம்


மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கோபுரத்தில் இருந்து தெரியும் கோவிலின் உட்பிரவாகம்.


கீரிமலை தீர்த்தம்


அடிமுடி தெரியாத ஆண்டவன்போல ஆழம் அறியப்படாத நிலாவரை பெருங்கிணறு


தூக்கை அம்பாள் தேவஸ்தானத்தின் அழகிய தீர்த்தக்கேணி


வல்வைவெளி தாண்டிப்போகையில்..


பருத்தித்துறை முனைக்கடற்கரையின் ஒரு தோற்றம்.



பருத்தித்துறை முனை

Saturday, November 20, 2010

மறந்து போகா நகைச்சுவைகள்…


நகைச்சுவைகள் பல தரப்பட்டவை. சில நகைச்சுவைகள் எந்தக்காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய அற்புதமான நயம்கொண்டவை. சில கால ஓட்டத்தில் மறைந்து போகக்கூடியவை. இதில் பழைய நகைச்சுவைகள் பிரதானமானவை. அவைகளில் சில தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் மறைந்துபோயும் உள்ளன.
அண்மையில் நண்பர்களுடன் இருந்து அரட்டை அடிக்கும்போது இந்த பழைய கால நகைச்சுவைகள் பற்றி நீண்ட நேரம் பேசவேண்டி இருந்தது. அதில் எங்கள் மழலைக்காலங்களில் பெரியவர்கள் எங்களுக்கு சொன்ன நகைச்சுவைகள் பலவற்றை நினைவு படுத்தி சிரித்து மகிழ்ந்தோம்.
அவ்வாறான நகைச்சுவைகள் இன்றைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்டதோ என்ற ஐயம்வேறு வந்தது. பேசும்போது ஒரு நண்பர் ‘இந்த கதைகளில் சிலவற்றை பதிவாகப்போடலாமே’! என்று எடுத்து கொடுத்தார்.
ஆகவே அந்த காலத்தில் நாங்கள் கேட்ட சில நகைச்சுவைகளை பகிரலாம் என நினைக்கின்றேன். ஏற்கனவே கேழ்விப்பட்டிருந்தால் மீண்டும் ஒரு தடவை சிரியுங்கள்,
கேழ்விப்படவில்லை என்றால் இந்த சொற்களை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள்தான்..ஆம் உங்களிடம்தான் இவை மறுபடி சென்றடையவேண்டும் என்பது விதி!!

ஆரகரா..செம்பச்சோதி
இரண்டு கைராசிக்கார திருடர்கள், ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதிவாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில் ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்றுகொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ பொலிஸாருக்கு தெரிந்து அடுத்த ஸ்ரேசனில் இவர்களை பிடிக்க பொலிஸார் ஆயத்தமாக இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே பொலிஸாரை பார்த்துவிட்ட திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும் இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர். ஒருவன் தனது யடாமுடியினுள் வைரத்தை ஒழித்துவைத்தான், மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்.
சோதனை போட்டுக்கொண்டு வந்த பொலிஸார் இவர்களிடம் வந்ததும், இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து யடாமுடிக்குள் வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர். முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும் “அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்றதிருடனைப்பார்த்து கண்ணடித்தான். மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பொலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு.. பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.

எல்லாமே பின்பக்கம்..
ஒரு ஊரில் ஒரு பூசகர் இருந்திருக்கின்றார். அந்த ஊரில் அவர் மட்டும்தான் பூசகர் என்பதனால் அவர் படு பிஸியான ஆள். பல கோவில்களிலும் அவரே பூசகராகவேறு இருந்திருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு கோவிலில் மட்டும் தர்மகத்தா படு ஸ்ரிக்ட்டான ஆள். நேரம் தவறக்கூடாது. ஒரு கிருத்திகம் செய்ய பூசகர் சென்றிருக்கின்றார், குறிப்பட்ட அந்த கோவிலுக்கு பூசைக்கு செல்லவேண்டிய நேரம் அண்மித்து விட்டது. உடனடியாக வீடுவந்து அவசரமாக குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டார் பூசகர், வேண்டிக்கரை பின்பக்கமாக அமைந்துவிட்டது. நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் பறவாய் இல்லை என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொண்டார் அவசரமாக. அதுவும் பின்பக்கமாக போய்விட்டது. பறவாய் இல்லை முதலில் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவந்து, தனது “லம்பிரட்டா” ஸ்கூட்டரை உதைந்துகொண்டு உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்தார் பூசகர். ஒரு வளைவில் ஒரு பெரிய பஸ் வர, பலன்ஸ் தவறி அருகில் இருந்த வயல் வரம்புடன் மோதி அதிர்ச்சியில் மயக்கமடைந்துவிட்டார் அவர்.
இதை கண்டு வயலிலே வேலை செய்துகொண்டிருந்த ஊர்மக்கள் கூடிவிட்டனர். பூசகரை ஓடிவந்து பார்த்த மக்கள்! பெருங்குழப்பத்துடன் பார்த்தனர்.
அதில் ஒருவர் “அடி பட்டதும் ஐயாவின் தலை திரும்பிவிட்டது” என்று சொல்லி, பூசகரின் தலையை மற்றப்பக்கம் திருப்பிவிட்டார்.. அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக.

மரக்கட்டை
இரண்டு ஊர்களின் மத்தியில் அடர்ந்தகாடு ஒன்று இருந்திருக்கின்றது. அந்தக்காட்டில் பெரும் கொள்ளைக்காரர்கள் இருந்திருக்கின்றார்கள். மேற்படி இரண்டு ஊர்களுக்குக்கிடையில் போக்குவரைத்து என்றால் இந்த காட்டை தாண்டியே ஆகவேண்டிய நிலை இருந்திருக்கின்றது.
இந்த நிலையில் இரண்டு ஊர்களில் உள்ள தம்பத்தியினருக்கு திருமணம் நடந்திருந்தது. புது மாப்பிள்ளை பெண்வீட்டில் இருக்கின்றார். சீதனப்பணத்தை வாங்கிக்கொண்டு உடனடியாக வரும்படி அவரது தாயாரிடமிருந்து மாலை மங்கும் நேரத்தில் செய்தி வருகின்றது. பெண் வீட்டார் எவ்வளவு சொல்லியும் புதுமாப்பிள்ளை அம்மா சொல்லை தட்டமாட்டேன் பணத்தை கொடுங்கள் நான் போயே ஆகவேண்டும் என்றிருக்கின்றார். எனவே பெண் வீட்டுக்காரர்களும் தனியாப்போகவேண்டாம் உங்கள் புது மனைவியின் ஆசைத்தம்பி, உங்கள் மைத்துனனையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் காவலுக்கு என்றிருக்கின்றனர்.
அவனோ “ஆடு பறக்கிறது என்று சொன்னாலும் அண்ணாந்து பார்க்கின்ற படு முட்டாள்”. சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு சென்றிருக்கின்றார். கடும் இருள் சூழ்ந்துவிட்டது. அத்திம்பேர்..பாதையே தெரியவில்லை இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது பேசாமல் இங்கேயே படுத்துவிட்டு காலையில் போவோம் என்றிருக்கின்றான் அவன். புதுமாப்பிள்ளைக்கும் சோர்வு மிகுதியால் சரி..இங்கேயே படுப்போம்..ஆனால் ஒன்று இங்கு திருடர்கள் அதிகமாம் என்னிடம்வேறு ஒரு இலட்சம் ரூபா இருக்கு..ஒன்று செய்வோம் நீ உன் பைக்குள் 50 ஆயிரத்தை வைத்திரு. இரண்டுபேரும் அருகில் இருக்கும் புதருக்குள் மறைந்து படுத்திருப்போம் என்று அவனிடம் அரைவாசிப்பணத்தையும் கொடுத்து. புதர்மறைவில் படுத்துக்கொண்டார்கள். புதுமாப்பிள்ளை கழைப்பினால் தூங்கிவிட்டார். ஆனால் மைத்துனனுக்கு தூக்கம் வரவில்லை. எறும்புகள்வேறு கடிக்க தொடங்கவே. வீதியில்த்தான் யாரும் போகவில்லையே பேசாமல் அங்கேயே படுப்போம் என்றுவிட்டு, நடு வீதியில்போய் படுத்து நித்திரை ஆகிவிட்டான்.

சிறிது நேரத்தில் திருடர்கள் வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்த திருடன் இவன்மேல் தடக்கு பட்டு, இடறி விழ இவனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது. கோபமும் வந்தது. இடறிவிழுந்த திருடன் தன் தோழர்களிடம் “பார்த்து வாங்கடா..நடுரோட்டிலை ஒரு மரக்கட்டை கிடக்கின்றது” என்றான். உடனே இவனுக்கு வந்தது இன்னும் கோபம்..
“டேய் உங்கள் ஊரில் மரக்கட்டை 50 ஆயிரத்தோடையாடா கிடக்கும்?” என்று கேட்டிருக்கின்றான். பிறகென்ன திருடர்கள் இவனை பிடித்து பணத்தை பறித்து எண்ணிப்பார்த்திருக்கின்றார்கள். அதற்கும் அவன் “சரியாகப்பார் மடையா 50 ஆயிரம் கணக்காக இருக்கும்”. என் அத்திம்பேர் கணக்கில் புலி. எனக்கு 50 ஆயிரம் தந்துவிட்டு, தான் 50 ஆயிரத்தை வைத்துக்கொண்டு அந்த புதருக்கு பின்னால்த்தான் தூங்குகின்றார் என்றானாம்;.

எம்.ஜி.ஆரா சிவாஜியா?
ஒரு இரட்டை பையன்கள் பாடசாலையில் எப்போது பார்த்தாலும் ஒருவன் எம்.ஜி.ஆர்தான் சிறந்த நடிகன் எனவும், மற்றவன் இல்லை சிவாஜிதான் சிறந்த நடிகன் என்று சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். இவர்களின் சண்டை ஒவ்வொருநாளும் தொடரவே மற்ற மாணவர்களும் பாதிக்கப்படவே, ஆசிரியர் நாளை வரும்போது உங்கள் அப்பாவையும் பாடசாலைக்கு அழைத்துவாருங்கள் உங்களை பற்றி அவரிடம் சொல்லவேண்டும் என்றாராம். மற்றநாள் அவர்களின் தந்தையார் பாடசாலைவரவே, ஆசிரியரும் வாருங்கள் ஐயா..உங்கள் பையன்கள் என்ன ஒரே சினிமா பைத்தியமாக இருக்கின்றார்கள், ஒருவன் எம்.ஜி.ஆர்தான் சிறப்பான நடிகன் என்றும் மற்றவன் சிவாஜிதான் சிறப்பான நடிகன் என்றும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் நீங்கள் சொஞ்சம் கண்டிக்கக்கூடாதா என்று கேட்டாராம். அதற்கு அந்த தந்தை..சரியாகச்சொன்னீர்கள் ஐயா..இந்த மடையன்களுக்கு புத்தியில் உறைக்கிறமாதிரி சொல்லுங்கள். என்ன தான் இருந்தாலும் அவர்கள் ரெண்டுபேரும் ஜெமினி மாதிரி வருமா? என்று கேட்டால் புரியமாட்டுதென்கிறது இவனுகளுக்கு என்றாராம்.

இப்படி பல கதைகளை கூறிக்கொண்டே போகலாம் அனால் எழுதுவது சிரமம் அல்லவா? கண்டிப்பாக சிரித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

Friday, November 19, 2010

யாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்!


பொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அதனாலேயே வானில் நகர்ந்து செல்லும் நட்சத்திரமாக தோற்றமளிக்கும் சற்றர்லைட்கள் (Satellite ), வால்வெள்ளிகள், விண் எரிகற்கள், என்பவற்றை நாம் ஆர்வத்துடன் கவனித்துவருகின்றோம். எமது வான் பரப்புக்கு மேலே ஏதாவது அதிசயம் என்றால் நாம் அதீத அக்கறை எடுத்துக்கொள்கின்றோம்.

இந்த வகையிலேயே யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாளாக இதை எழுதும் நான் உட்பட இரண்டு பதிவுலக நண்பர்கள், மற்றும் பல நண்பர்கள் ஒரு அதிசயத்தை எங்கள் கண்களினால் கண்டு இருக்கின்றோம்.
பொதுவாகவே வானில் ஏதாவது அசாதாரண பொருள் பிரகாசமாக அசைவுகளுடன் தெரிந்தால் யூ.எவ்.ஓ (UFO ) என்ற எண்ணம் எங்கள் மனத்தில் எம்மை அறியாமலே குடிகொண்டுவிடுகின்றது. இதில் ஏராளமான பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமான விஞ்ஞான புனைகதைகளைவேறு தேடித்தேடி படித்திருகிக்கிறோம் அல்லவா?

சரி விடையத்திற்கு வருவோம் இது விஞ்ஞானப்புனைகதை அல்ல உண்மையான விடயம் என்பதை உறுதியாகச்சொல்லிக்கொள்கின்றேன்.
கடந்த புதன்கிழமை இரவு சுமார் 10.15 மணியளவில் எதேட்சையாக கிழக்கு வானில் சுமார் 35 டிகிரி கோணத்தில், ஏதோ பிரகாசமாக வழமைக்கு மாறாக ஒரு ஒளியை கண்டேன். நட்சத்திரக்கூட்டங்களைவிட அளவில் பெரியதாகவும், பச்சை நிறமும், சிவப்பு நிறமும் மாறி மாறி பிரகாசமானதாக தெரிந்த வண்ணம் இருந்தன. சற்று நேரம் அதை கவனித்துக்கொண்டிருந்தேன். முதலில் அது வானில் செல்லும் ஜெட் ஆக இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் அது அiசாயமல் ஒரு இடத்திலேயே பல நிமிடங்கள் நின்றபோதே எனக்கு ஆர்வம் மேலோங்கியது.
அது ஜெட் இல்லை என்பது நிரூபணம் ஆனது. நட்சத்திரமாக இருக்குமோ என்றுகூட எண்ணத்தோன்றியது. ஆனால் அதையும் முறியடிக்கும் வகையில் அது சிறிது சிறிதாக சின்னனாக ஒரு புள்ளியாக தோன்றி விட்டு, மீண்டும் மெல்ல மெல்ல பிரகாசமாகி வந்துகொண்டிருந்தது. அது மட்டும் அன்றி இரண்டு நிறங்கள் மாறி மாறி வந்தமையே பெரும் ஆச்சரியமாக இருந்தது.

அத்துடன் ஒரே இடத்தில் தானே நிற்கின்றது என்ற எண்ணத்தையும் சற்று நேரத்தில் அது தவிடுபொடியாக்கியது. ஆம், மெல்ல மெல்ல அசைந்து மேல்நோக்கி வந்தது. பின்னர் நல்ல பிரகாசமாக இரண்டு ஒளிகளையும் கொண்டு சுமார் 20 நிமிடங்களின் பின்னர் ஒரு புள்ளியாகி மறைந்து சென்றது.
உடனயடியாகவே முகநூலில் (Facebook) இந்த செய்தியை ஏற்றி கருத்து கேட்டேன்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியுள்ள நணபர் ஒருவர் எனக்கு அழைப்பு எடுத்து தானும் இதைக்கண்டு அதிசயித்ததாக சொன்னார்.
முகநூல் பதிவுக்கு பல பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தன. பதிவுலக நண்பர் மருத்துவர் பாலவாசகன்கூட “அண்ணா கனவு ஏதாவதா? என்று கேட்டிருந்தார்.
மீண்டும் தென்பட்டால் அழைப்பு எடுத்து கூறுவதாக சொன்னேன் அவருக்கும்.

ஆனால் மறுநாள் வியாழக்கிழமை மீண்டும் அதே இடத்தில் அதே நேரத்தில் அந்த அதிசயம் திடுக்கிடவைத்தது. இம்முறை என்னை மறை கழன்றது என்பார்கள் என்று எண்ணி, பல அயலவர்களையும் அழைத்து அதை காண்பித்தேன். பலர் மூக்கில் விரலை வைத்திருந்தார்கள். நண்பர் பாலவாசகனிடமும் தொடர்பு கொண்டு இருவரும் அதை கவனித்தவண்ணமே பேசிக்கொண்டிருந்தோம். பாலவாசகன் பிரமித்துப்போய் உள்ளதை அவரது குரலில் காட்டிக்கொண்டிருந்தார். நேற்று முதன்நாளை விட இன்னும் பிரகாசமாக அது தென்பட்டது.
நேற்று சுமார் 50 நிமிடங்கள் அது வானத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது.
எங்களிடமிருக்கும் கமராக்களினால் அவ்வளவு தெளிவாக அதை படம் எடுக்கமுடியவில்லை.
இன்று வெள்ளிக்கிழமையும் வந்தால் அதை பிடிப்பதற்கு இரண்டு நண்பர்கள் அதி தொழிநுட்ப கமராக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

நேற்று பல நண்பர்கள் உட்பட பல கண்கள் அதை கண்டுள்ளன. அந்த இனந்தெரியாத வான் பொருள் என்னவாக இருக்கும் என்பதுதான் எமது தற்போதைய ஏக்கம்! ஒரு சில சற்றர்லைட்கள் (செயற்கைக்கோள்கள்) ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரம் சஞ்சரிக்கும் என்று கூட சொன்னார்கள், ஆனால் செயற்கைக்கோள் மாறி மாறி ஒளி மாற்றுவதற்கும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தோன்றி மறைவதும் சாத்தியம் இல்லை என ஒரு விரிவுரையாளர் கூறினார்.
என் நித்திரை உட்பட பல நண்பர்களின் நித்திரையினை குளப்பியுள்ள இந்த இனந்தெரியாத வான் பொருளின் இன்றைய வருகைக்காக இன்னும் பலர் காத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் இதை பார்ப்பதற்கு (இன்றும் வந்தால்) ஒரு சின்ன டிப்ஸ்..
கிழக்கு வானின் ஒரியன் உடுத்தொகுதி தெரியும் (மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக இருக்கும்) அதற்கு இடது புறமாக கீழே சுமார் 35 பாகை ஏற்றக்கோணத்தில் கடந்த இரண்டு நாளாக இது தோன்றியது. அதன் பிரகாசமே அதை காட்டிக்கொடுத்துவிடும் கண்டுபிடிப்பது மிக இலகு.

தெரிவிப்பது நான்! தீர்மானிப்பது நீங்கள்!! (அட இந்த வசனம் இதற்குத்தான் நன்றாக பொருந்தியுள்ளது பாருங்கள்)

Note.-மேலே தரப்பட்ட புகைப்படம் சித்தரிப்புக்காகவே
தென்பட்ட வான்பொருள் அதுவல்ல

Wednesday, November 17, 2010

கொஞ்சம் உங்களையும் Refresh பண்ணிக்குங்க..


இயந்திரத்தனமான மனித வாழ்க்கையில் நாளாந்தம் வேலை, வேலைமுடிந்ததும் வீடு, இடைக்கிடை உணவு, இரவு உறக்கமில்லா இறுக்கம் என அவிழ்க்கமுடியாத அளவுக்கு கழுத்தில் ஒரு கயிறு ஒவ்வொருவர்மீதும் விழுந்துவிட்டது.
உலகம் இயந்திரத்தனமாக இன்னும் வேகம்பெற வேகம்பெற, மனிதனின் முகத்திலும் இறுக்கங்கள் வலுக்கின்றன. “நேரான மனிதர்களையும் வளைத்துப்போடும் உதட்டின் சிரிப்பு எனும் வளைவு”, இன்று பல முகங்களில் இருந்து விடைபெற்றுப்போய்விட்டன.
பணம் என்னும் பெயரில் உள்ள வெறும் காகிதத்தாள்களுக்காக மனிதம் தொலைந்துபோய்க்கிடக்கின்றது.


இவை எல்லாம் எனக்கிருந்தால், இவற்றை எல்லாம் நான் செய்தால், இப்படி எல்லாம் நான் வாழ்ந்தால் மகிழ்ச்சியாக, காலம் முழுவதும் சந்தோசமாக வாழலாம் என்று எமக்கு நாமே நீண்டதொரு தேவைப்பட்டியல்களை தயார் செய்துவைத்திருக்கின்றோம். அதை எதிர்பார்த்து அதைப்பூர்திசெய்வதற்கான வழிகளில் எமது வாழ்க்கையினை நாம் நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்.
இதற்கெல்லாம் தேவை பணம்..பணம்..பணம்.. இந்தப்பணத்திற்காக ஒரு கணம்கூட ஓய்வில்லை. ஓட்டம், அலைச்சல், போட்டி, பொறாமை, இவற்றின் விiளைவுகளாக ஏமாற்றங்கள், பிரச்சினைகள், தோல்விகள். மகிழ்ச்சி என்பது உண்மையில் பணம் சம்பந்தப்பட்ட விடயமா? உண்மையில் இல்லை. ஏன் பணம் இல்லாமல் மகிழ்ச்சி கிடைக்காதா? உண்மையில் மகிழ்ச்சி என்பது ஒரு மன நிலை. அது மனது மற்றும் உணர்வு சம்பந்தப்பட்டது.


சரி விடயத்திற்கு வருவோம். கடல் அடிமட்டத்தில் (ஆளத்தில்) உலாவும் மீன்கள் கூட இடைக்கிடை மேல் மட்டத்திற்கு வந்து சுத்தமான காற்றினை சுவாசித்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு உள்செல்லுகின்றன. இந்த நேரத்தில் மனிதன் மட்டும் இன்று இயற்கையிடமிருந்து தன்னை தூரப்படுத்திக்கொண்டு நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கின்றான். ஒரு சிலருக்கு தனது மனைவியுடனோ அல்லது கணவனுடனோ அல்லது குழந்தைகளுடனோ சிறிது நேரத்தை ஒதுக்கி பேசுவதற்கே நேரமில்லாமல் போய்விட்டது. காரணம் பணம் தேடல்.
பணம் என்பதும், அவர் அவர் வகிக்கும் பதவிகள், அவர்களுக்கான வேலைகள் என்பவை மிக முக்கிமானதே. இருந்தாலும் கூட இந்த உழைப்புக்கள் எல்லாம் எதற்கு? எமது பணம்தான் மகிழ்ச்சி என்ற தவறான எண்ணத்தினாலேயே.


ஒரு குழந்தைக்கு அவனது உள்ளத்தின் முதல் கதாநாயகன் அந்த குழந்தையின் தந்தைதான். அதேபோல அந்த குழந்தைக்கு தெரிந்த முதல் அன்பானவள், முதல் உலக அழகி அந்த குழந்தையின் தாய்தான். பெற்றோர்கள் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசத்தைவிட குழந்தைகள் பெற்றோர்கள்மீது அளவுகடந்த நம்பிக்கையினையும், பாசத்தையும் வைத்துள்ளன. எனவே அந்தக்குழந்தைகளின் ஏக்கங்கள் எப்படி இருக்கும் என்று யாம் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும்.
இந்த நிலையில் தமது அப்பாவினதும், அம்மாவினதும் கைகளை பிடித்தவண்ணம் இயற்கையோடு இணைந்த இடங்களில் நடந்துசெல்வதுதான் அந்த குழந்தையின் சொர்க்கமாக இருக்கும்.


சுற்றுலாக்கள், முக்கிய இடங்கள், சுற்றுலா தளங்கள், என்பவற்றுக்கு குடும்பத்துடன் செல்ல உங்களுக்கான நேரங்களை ஒதுக்கிக்கொள்ளுங்கள். அந்த சுற்றுலாக்கள் உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி உங்களுக்குள்ளும் ஒரு குதூகலத்தை தரும். உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெறும். கணவன் மனைவியருக்கிடையிலான பாசத்தினையும். குழந்தைகள்மேல் உங்களுக்குள்ள பாசத்தினையும் பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பங்கள் கிடைக்கும். குழந்தைகளுக்கும் பெருங் குதூகலமும் புதிய பல அனுபவங்களும் கிடைக்கும். பின்னாட்களில் அவர்கள் இந்த பயணங்களை நினைத்து சந்தோசம் கொள்ள ஏதுவாக அமையும்.


அட, இதெல்லாம் பணம் உள்ளவங்களுக்கு சரி நமக்கு எங்க? என்ற எண்ணம் எவருக்கும் வரவேண்டாம். நிச்சயமாக சுற்றுலா பயணங்களுக்கு என உங்கள் சம்பளத்தில் ஒரு தொகையினை தனியாக சேமித்து வையுங்கள். வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கான சேமிப்புக்கணக்குகளே உள்ளன. குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் சேர்க்கும் பணம் கணிசமான ஒரு தொகை வந்தவுடன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஜாலியாக கிளம்புங்கள். குடும்பத்தாருடன் செல்லும் சுற்றுலா ஆனந்தமானதே அதையும் விட குறிப்பிட்ட ஒருநாளில் உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களது குடும்பங்கள் இணைந்து சுற்றுலா செல்வது பேரின்பமானதாகவும், சந்தோசமானதான அனுபவங்களையும் தரும்.


சுற்றுலா என்றால் உடனடியாக சுவிஸர்லாந்திற்கோ, அல்லது நயாகராவை பார்க்கப்போவதாகவோ நினைத்துக்கொள்ளாதீர்கள். அருகில் உள்ள கடற்கரைக்கோ, மிருகக்காட்சிச்சாலைக்கோ, சற்று தொலைவிலுள்ள கோவிலுக்கோ செல்வது கூட சுற்றுலாதான். அங்கு நீங்கள் சென்று நின்மதியாக பொழுதை கழித்துவிட்டு வரலாம்.
“எவ்வளவு தூரம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு மகிழ்வானது என்பதே முக்கியமானது”


சுற்றுலாவுக்கு சென்றால் உங்கள். தொழில், கல்வி, அந்தஸ்துக்களை ஒருபுறம் தள்ளிவைத்தவிட்டு நீங்களும் ஒரு குழந்தைகளாகுங்கள். உங்கள் மகிழ்வுகளை குடும்பத்தாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். திருமணவீடுகள், பூப்புனித நீராட்டுவிழாக்கள், குடிபுகல்விழாக்கள், நண்பர்களின் பிறந்ததின நிகழ்வுகள் என்பவைகூட உங்களுக்கு மகிழ்வுகளை தரக்கூடிய நிகழ்வுகளே. அவர்கள் ஏன் உங்களை அழைக்கின்றார்கள் என எண்ணிப்பாருங்கள். தங்கள் மகிழ்ச்சிகளை உங்களுடன் பகிரவேண்டும் என்பதற்காக அல்லவா? அதேபோல சுற்றுலாவுக்கு சென்று உங்கள் மகிழ்ச்சிகளை மற்றவர்களுடன், குடும்பத்தாருடன் பகிர்ந்து உங்கள் மனங்களையும், மற்றவர்களின் மனங்களையம் மலரச்செய்வதுடன், குடும்பத்திலும் நிலையான ஒரு மகிழ்ச்சிக்கு அத்திவாரம் இடுங்கள்.


இத்தனை சொன்னதற்கப்புறம். சப்பா…ஈஸியா சொல்லிவிடலாம், எனக்கிருக்கிறவேலைகளுக்கு இது எல்லாம் முடியிறகாரியமா? என்று உங்களில் பலர் நினைப்பது எனக்கு புரிக்கின்றது. உண்மையும்தான்..
என்றாலும் உலகில் முதல்தர வல்லரசு நாடு ஒன்றின் ஜனாதிபதியாக இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும்? உலகில் எந்தநாளும் பெரும் ரென்ஸனாக இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவே இருப்பார். அப்படி ஜனாதிபதியாக உள்ள பாரக் ஓபாமா அவர்களே, இத்தனை தனது பதவி, வேலைப்பழுக்கள், அரசியல் நகர்வுகள், என அத்தனைக்கும் மத்தியில் தனது குடும்பத்துடன் உற்சாகமாக சுற்றுலாவுக்கு செல்கின்றார் என்றால் உங்களால் செல்லமுடியாதா என்ன?

LinkWithin

Related Posts with Thumbnails