Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Saturday, October 8, 2011

பெண்களுக்கு ஏற்ற இடம்!



பெண் எனப்படுபவள் பூவைப்போன்றவள், தேவை ஏற்படும்போது புயலாகவும் மாறக்கூடியவள், நாளைய சமுகத்தின் வளர்ச்சி அவள் கையிலேதான் உள்ளது, பெண்மைபோற்றும் உலகமே உன்னத உலகம் என்றெல்லாம் எழுதி பெண்களையே கடுப்பேற்ற நான் விரும்பவில்லை.

இருந்தாலும்கூட பெண்கள் பற்றி சில விடையங்களை பேசாமல் இருந்துவிடவும் முடியாது. சமூக அக்கறை கொண்ட சமுகத்தின்மேல் அதன் முன்னேற்றத்தின்மேல் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பெண்களின் முன்னேற்றம் வளர்ச்சி சுதந்திரம் பற்றி பேசாமல் இருக்கமுடியாது.
அதனால்த்தான் உண்மையான சுதந்திரம் பற்றி பேசிய மகாத்மா காந்தி நள்ளிரவில் ஆபரணங்களுடன் தனிமையாக ஒரு பெண் சுதந்திரமாக அச்சமின்றி செல்லும் நாளே உண்மையான சுதந்திரம் என்று கூறியிருக்கின்றார்.
இங்கே அவர் நள்ளிரவில் தனிமையில் செல்லும் பெண் ஒருத்தியை தனியே முன்னிறுத்தவில்லை இந்த ஒரு உதாரணத்திலே சமுகத்தில் ஏற்படவேண்டிய பல மாற்றங்களையும், பெண்ணிய சுதந்திரம் அபரிதமான வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார் என்றே கூறலாம்.

ஒரு விடயத்தை உன்னிப்பாகவும், நேரடியாகவும் கவனித்தீர்களேயானால் பெண்ணை அடிமைப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனமாக இருக்கும் என்பதையும், ஒரு பெண் அடிமைப்பட்டால் ஒரு நாட்டின் எதிர்காலமே அடிமைப்படப்போகின்றது என்பதும் வெளிப்படை உண்மை.
காரணம் ஒரு பெண்தான் நாளைய சமுதாயமான தன் குழந்தைகளை ஈன்று வளர்க்கின்றாள், அவளே அடிமைப்பட்டு, கல்வியறிவற்று திறனற்று இருந்தால் அவளின் குழந்தைகள் எப்படி அறிவாhர்ந்தவர்களாக மாறுவது?

இன்று வளர்ச்சி கண்ட அபிவிருத்தியை வெற்றிகொண்ட நாடுகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரம், சமத்துவம், அனைத்துமே அந்த நாடுகளை இந்த நிலைக்கு கொண்டுவந்தன என்பதிலும் எந்த உண்மையும் இல்லாமல் இல்லை.
இன்றைக்கு பதினான்கு ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் ஒலித்துக்கொண்டிருக்கும் 33 வீத இட ஒதுக்கீடும், தொடர்ச்சியான கோரிக்கைகளும் எதைக்காடுகின்றது?
பெண் என்ற பார்வையினை இந்தியா போன்ற நாடுகள் இன்னும் களைந்துவிட்டு உலக சவால்களை வெற்றிகொள்ளும் பாதையில் பயனிக்க தயார் இல்லை என்பதையே. பெண்ணுக்கு உரிய இடத்தையோ உரிமைகளையோ இன்னும் வளங்காது இதுபோன்றே பயணிக்க எத்தனித்தால் 2020 இல் வல்லரசு என்ற கனவு பகல்கனவுதான்.

மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள் கல்விநிலையில் இன்று வியக்கத்தக்க முன்னேற்றங்களையும், சிறப்பு தேர்ச்சிகளையும் பெற்றுவருவது மனதிற்குள் ஒரு ஓரத்தில் ஒளியை பரவவிடுவதுபோன்ற உணர்வை தருகின்றது.
இருந்தபோதிலும் கிராமமட்டங்களில் பெண்களின் கல்வி நிலைகள் உயர் கல்விக்கு செல்லாது இருப்பது வேதனையானதே.
மற்றப்பக்கம் இன்று வெளியிடப்படும் சகல பரீட்சை பெறுபேறுகளிலும் பெண்கள் முன்னிலையில் நிற்பது ஆணாதிக்க வர்க்க சிந்தனைகளுக்கும், ஆதிக்கங்களுக்கும் கிடைக்கும் செருப்படி என்பது குறிப்பிடத்தக்கது.

சரி... இப்போது விடையத்திற்கு வருவோம் ஆம் இன்றைய உலகில் பெண்களுக்கு எற்ற இடம் என்று ஆய்வுகளில் முதல் இடத்தில் இருக்கும் இடம் அல்லது நாடு எது தெரிமா?
ஐஸ் லன்ட்.....

பெண்ணியம், சட்டபாதுகாப்பு, சுகாதாரம், உரிமைகள், பாதுகாப்பு, பெண் முன்னேற்றம், கல்வி என்பனவற்றை அடிப்படையாக வைத்து உலக நாடுகளில் மேற்கொண்ட ஆராட்சி முடிவுகளே இதை சொல்கின்றது.

இந்த வகையில் பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளாக முதல் ஐந்து இடத்தையும் பெற்றுள்ள நாடுகளாவன, ஐஸ்லன்ட். சுவீடன், கனடா, டென்மர்க் மற்றும் பின்லான்ட் ஆகியன.
இந்த வகையில் உலக வல்லரசு நாடான அமெரிக்கா 8 ஆம் இடத்திலும், இங்கிலாந்து 19 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

அதேவேளை பெண்கள் வாழ்வதற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் உள்ள நாடுகளாக ஸாட், ஆப்கானிஸ்தான், ஏமன், கொங்கோ, மலீ, சொலமன் தீவுகள், நைகர், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலிடப்படடுள்ளன.

அப்ப நம்ம நாடுகள் இதிலை எத்தனையாவது இடங்களை பிடித்துள்ளன என்று அறிய உங்களுக்கு மட்டுமில்லைங்க எனக்கும் ஆவலே. இந்த வகையில் ஸ்ரீ லங்கா பெண்களுக்கு வாழ்வதற்கு ஏதுவான நாடுகள் பட்டியலில் 74ஆவது இடத்தை பிடிச்சுருக்கு. பரவாயில்லையே என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது, இந்த முன்னிலைக்கு காரணம் கல்விவீதம் கூடியதாக இருப்பதே, சட்டபாதுகாப்பு, பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பதில் பின்னிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பெரும் யுத்தம் ஒன்றினால் சூழப்பட்டிருந்த ஒரு தேசம் என்ற வகையில் இந்த நிலை ஸ்ரீ லங்காவைப் பொறுத்தவரையில் போதுமானதே.

அடுத்து இந்தியா.... பெண்கள் நள்ளிரவு சுதந்திரமாக அபரணங்களுடன் செல்ல கனவு கண்ட தேசபிதாவின் நாடு இதில் இருப்பது 141ஆவது இடத்தில்.

வல்லரசுப்பார்வை ரொம்ப தெளிவா இருக்கு.....

Wednesday, August 18, 2010

ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும்


ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள், அதாவது அவனின் வாழ்க்கைத்துணைநலமான மனைவி இருக்கின்றாள், அவனது இன்பங்களிலும், துன்பங்களிலும் ஒன்றாக பங்கேற்று, அவன் துவண்டு விழும்போது தன் தோழ்களில் தாங்கி, அவனை தேற்றி, அவனது வெற்றிகளில், உலகமே அவனைப்பாராட்டும்போது ஓதோ ஒரு மூலையில் இருந்து விழிகளில் வழியும் தனது ஆனந்தக்கண்ணீரால், கணவன் அந்த நிலையினை அடைவதற்காக பட்ட கஸ்டங்களை எல்லாம் நினைத்து பார்க்கின்றாள்.
என்றெல்லாம் நாம் படித்திருக்கின்றோம், அனுபவித்திருக்கின்றோம், கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.

தமிழை பொறுத்தவரையில் “ஈன்றபொழுதில் பெருதுவக்கும்” என்று தாயினையும், தந்தை மகற்காற்றும்” என தந்தை பற்றியுமே அவன் சான்றோன் ஆனால் அவர்களின் உவப்பினை சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் எங்கிருந்தோ தனது இரத்த சொந்தங்கள் அத்தனையினையும் விட்டுவிட்டு, தாய் 10 மாதம் சுமந்த அவனை, தனது நெஞ்சில் ஆயுள் முழுவதும் சுமக்கும் மனைவி பற்றி பெரிதாக யாரும் சொன்னதாக இல்லை.
எமனுடன் வாதிட்டு தனது கணவன் சந்தியவானை மீட்ட சாவித்திரியுடன் அது சரியாகிவிட்டது.


சரி, இன்றைய நிலையில், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் அவனது மனைவி எப்படி இருக்கின்றாள் என்பது பற்றி சிறிது அலசுவோம்.
பொதுவாக இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால், கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில், இருவருமே சந்தித்துக்கொள்ளும் நேரங்கள் வெகுவாக குறைந்துவிட்டன என்பதே உண்மை. முன்னைய காலங்களில், சிறு குழந்தைகள், தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அத்தை, மாமா, என ஒரு உறவு வட்டத்தினுள் இருந்து வழர்ந்தன. ஆனால் பாவம், இன்று அந்தப்பிள்ளைகள் தமது தாய் தந்தையரையே சந்திப்பது இரவாகத்தான் இருக்கும். காரணம் இன்றைய உலகமயமாதலின் விளைவு. இதனால்த்தான் பேசாத உறவுகள் பக்கத்தில் இல்லாததனால், குழந்தைகளுக்காக கார்ட்ரூன் சனல்களில், மிருகங்கள் அவர்களுடன் பேசுகின்றனவோ என்னமோ?


சரி, விடயத்திற்கு வருவோம், இன்று முன்னர்போல அல்ல, போட்டிகள் நிறைந்த உலகமாக இது இருக்கின்றது. எனவே பாரிய வேலைச்சுமையுடன் வீடுவரும் கணவனுக்கு மனைவி ஆறுதலாக இருக்கவேண்டும். ஆனால் இன்று மனைவியும் தொழிலுக்கு செல்வதனால் அவளும் பெரும் மன அளுத்தத்துடனே வீட்டுக்குவருபவளாக இருப்பாள். பணிமனையிலும், மனஅழுத்தம், வேலைப்பழு, வீட்டிற்கு வந்தாலும் நின்மதி இல்லை என்றால் அந்த ஆணினால் சாதிக்கமுடியுமா?
பெரும்பாலும் வேலைப்பழு அதன்மூலமான மன ஆழுத்தத்தினால் ஆத்திரமும், எரிச்சலும் தன்னை அறியாமலே அவர்களுக்குள் குடிகொண்டுவிடும். இந்தச்சூழ்நிலைகளிலேயே கணவன் மனைவியரிடம் ஒரு சிறு பிரச்சினைகூட பூதாகரமாக வெடித்துவிடும். இவ்வாறான சூழ்நிலைகளே இன்று பெரும்பாலாக நடப்பதை நாம் அவதானிக்கலாம்.
“ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண இருக்கின்றாள், இவர் ஒன்றும் பெரிதாக சொல்லும்படியான வெற்றியாளர் அல்ல! என்று சொல்லிக்கொண்டு” என்று ஒரு நகைச்சுவையினை அண்மையில் படிக்கக்கிடைத்தது. அது நகைச்சுவையாக மட்டும் அன்றி சிந்திக்கவைத்தது.
காரணம் ஒரு ஆணின் சகலத்துக்கும் உரிமையானவள், அவனது மனைவியே, கண்டிப்பாக, வெளியில் கணவன் பற்றி தெரியாத பல விடயங்கள் அவனின் மனைவிக்கு தெரியவரும். வெளியில் சண்டியர்களாக இருக்கும் பலர் தமது மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பர்.


ஒருவனிடம் இன்றைய நிலையில் அவனது மனைவி எதிர்பார்ப்பது, தனக்கு கணவனால் வழங்கப்படும் ஒரு கௌரவம், தனக்காக அவன் ஒதுக்கும் நேரம், அன்பான பேச்சு இவை மட்டுமே. ஆனால் இவற்றை கொடுப்பதற்குக்கூட இன்றைய உலக கணவன்மார்களால் இயலாமல் உள்ளது.
ஓவ்வொரு அணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் உள்ளால் என்று அவளை சிறப்பிப்பது. அவனது துறையில் அவளுடைய பங்கும் உள்ளது என்பதல்ல. சிறந்த ஒரு இல்லாளாக இருந்து கணவனை அனுசரித்து, அவனை முழுமையாக புரிந்துகொண்டு, அவனுக்கு வீட்டிலோ குடும்பத்திலோ எந்தப்பிரச்சினைகளும் வராது, வீட்டின் நிர்வாகத்தை தான் கவனித்து வீடும் வரும் கணவனுக்கு ஆறுதலை அளித்தாள் என்றால் அவள் கண்டிப்பாக அவளது கணவனின் வெற்றியில் பெரும் பங்கு எடுத்துக்கொள்கின்றாள் என்றே கூறமுடியும். நிச்சயமாக அவளது கணவன் வெற்றிபெறுவான். மாறாக எதிரும் புதிருமாக இருந்தால் நிலைமைகள் தலைகீழாவே மாறும்.



உதாரமாக இன்றைய வெற்றியாளர்கள் என்று நீங்கள், கருதும் நபர்களையும் அவர்களது மனைவிகளையும் உற்றுப்பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு, அந்நியோன்னியம், புரிந்துணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறான மனைவியரே தனது கணவனின் வெற்றிப்பாதைகளில் இருக்கும் முட்களை அகற்றி, அவனின் முன்னேறத்திற்கு பின்னால் நிற்கின்றனர்.
வெற்றிபெற்று பெரியமனிதர்கள் ஆகிவிட்டாலும், உலகின் கண்கள் முழுவதும் அவர்களை உற்றுநோக்கினாலும், எங்கு சென்றபோதிலும், போன அலுவல்களை உடனடியாக முடித்துக்கொண்டு தமது மனைவியை நாடி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓடிவந்துவிடுவார்கள். உதாரணங்கள் நிறைய பிரபலங்களைச் சொல்லலாம். அதற்காக அவர்களை பொண்டாட்டி தாசர்கள் என்று நினைத்துவிடக்கூடாது, அவர்கள் வாழ்க்கையின் அர்தத்தையும் வாழ்வியலையும், தூய்மையான அன்பையும் புரிந்துகொண்டவர்கள் என்பதே அதன் அர்த்தம்.

குறிப்பு இது ஒரு மீள்பதிவு. இன்னும் இந்தப்பதிவை வாசிக்காத என் மனைவிக்கும். இப்போது புதிதாக காதல் தேசத்திற்குள் நுளைந்து அசேலம் கேட்டுக்கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்கள் இருவருக்கும் இந்த மீள் பதிவு சமர்ப்பணம்"

LinkWithin

Related Posts with Thumbnails