Showing posts with label Karthi. Show all posts
Showing posts with label Karthi. Show all posts

Tuesday, October 4, 2011

குழந்தைகளின் நாயகன்!


குழந்தைகளின் உணர்வுகள், எண்ணங்கள் மட்டுமல்ல அவர்களின் இரசனைகளும் வித்தியாசமானவையே. அவர்களின் இரசனைகள் ஆச்சரியமானவை! பூக்களுடன் கைகுலுக்கிக்கொள்ளவும், அன்பு மிருகங்களுடன் பேசிக்கொள்ளவும், இயற்கையுடன் எந்த தயக்கமும் இன்றி உறவாடிக்கொள்ளவும், பிராமாண்டங்களை கண்டு பிரமிப்புக்கள் இன்றி இயல்பாகவே அந்த பிரமாண்டங்களையே கொஞ்சம் பிரமிக்க வைக்கவும் அவர்களாலேயே முடியும்.
எந்த வளைந்துகொடுக்காத மனிதர்களையும் தங்கள் உதட்டு வளைவுகளால் அடியோடு வளைத்துப்போடும் ஆற்றல் இந்த குழந்தைகளிடமே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட குழந்தைகளை தங்கள் கலைநயங்களாலும், நடிப்புகளாலும் வளைத்துப்போடும் கலைஞர்கள் அந்த ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?
ராபின் ஹீட், சார்லி சப்ளின், ரொபின்சன் குருஸோ, ஹரி பொட்டர், மிஸ்டர் பீன், போன்ற மேலை நாட்டு கதாபாத்திரங்கள் அவர்களின் கனவுகளின் நாயகர்களாக வலம் வந்தவர்களாக உள்ளனர்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இந்தக் குழந்தைகளுக்கு சாகசம் செய்யும் நாயகர்களையும் பிடிக்கின்றது, வீரமிக்க சீரியஸான நாயகர்களையும், ஹார்ஸமான நாயகர்களையும் பிடிக்கும் என்ற இந்த வகையறை நடிகர்களை மட்டுமே பிடிக்கும் என்ற கோடுகள் அற்றிருப்பதை காணலாம்.

குழந்தைகளை தனது கலைகளால் எவன் ஒருவன் கவர்கிறானோ அவன் சிறந்த கலைஞன் என்ற கட்டத்திற்கு வந்தவடுகின்றான் என்ற வார்த்தைகளை இவை நிரூபிப்பனவாக உள்ளன.
இதனால்தான் குழந்தைகள் தம்மை விரும்புகின்றனர் என்று அறிந்தவுடன் பல நடிகர்கள் குழந்தைகளை கவரும் விதத்திலும் தங்கள் படங்கள் இருக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் நடிக்க தொடங்குகின்றனர்.
குழந்தைகளை கவருகின்றேன் என்ற இறுமாப்புடன் எவராலும் அவர்களின் இதய அறைக்குள் அவ்வளவு சீக்கிரம் நுளைந்துவிட முடியாது.

சரி... நமக்கு தெரிந்த பரீட்சியமான தமிழ் சினிமாவில் இந்த குழந்தைகளின் நாயகர்களாக வலம் வருபவர்கள் யார்? அவர்களின் எந்த இயல்பு குழந்தைகளை அப்படி இழுத்து வைத்திருக்கின்றது என்று கொஞ்சம் பார்ப்போம்.

இந்தவகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் குழந்தைகளின் முதலாவது நாயகன் அன்றும் இன்றும் என்றும் சுப்பர் ஸ்ரார் ரஜினிகாந்தே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
இன்று தாம் குழந்தைகளாக இருந்து இரசித்த அதே ரஜினியை தங்கள் குழந்தைகளும் இரசிப்பதை கண்டு பலர் ஆச்சரியப்படுகின்றனர்.
இப்பேற்பட்ட தலைமுறை கடந்த மாறாத குழந்தைகளின் இதயம் கவரும் தன்மை ரஜினியிடம் எப்படி வந்தது? அப்படி அவரிடம் என்ன உள்ளது?

குழந்தைகளை பொதுவாக உன்னிப்பாக கவனிப்பீர்களே ஆனால், போலித்தனம். அல்லது நடிப்பு என்று தெரியாத உண்மையான மெனாரிஸங்களை வலுவாக அவர்கள் இரசிப்பார்கள். இப்பேற்பட்ட இயல்பான மெனாரிஸம் சிலருக்கு மட்டுமே உண்டு. ரஜினியிடம் அந்த இயல்பான ஸ்ரைலும், மெனாரிஸமும் நிறையவே உண்டு.
அதேபோல அவரது ஒவ்வொரு உடல்மொழியும் குழந்தைகளை அப்படியே கவரும் வண்ணம் உள்ளன என்பதே உண்மையாகவும் உள்ளது.

இந்த வகையில் ரஜினிக்கு பின்னரான குழந்தைகளின் நாயகன் என்ற கேள்வி இதை வாசிக்கும்போதே உங்கள் மனதில் தோன்றும்.
உண்மையில் ரஜினிக்கு பின்னரான குழந்தைகளின் நாயகன் என்ற இடம் நீண்ட காலமாகவே வெற்றிடமாகவே இருந்துவந்தது.
விஜய், பிரபுதேவா, சிலம்பரசன், போன்ற நடிகர்களின் தாக்கங்கள் குழந்தைகளிடம் செல்வாக்குச்செலுத்த தொடங்கியிருந்தாலும், ரஜினி அளவுக்கு அது அவ்வளவு நீட்சியாக இருந்திருக்கவில்லை.

ஆனால் இப்போது அந்த நீட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி முழுமையாக விழுந்திருக்கின்றது. அந்த இடத்திற்கு குழந்தைகளின் பேராதரவு பெற்ற நாயகனாக அவர்களின் இதய வாசல்களில் வரவேற்கப்பட்டிருக்கின்றார் நடிகர் கார்த்தி.
'நான் அவர்களை கவரும் வண்ணம் என்ன செய்திருக்கின்றேன் என்று எனக்கே தெரியவில்லை, தனம் தினம் குழந்தைகளிடமிருந்து வரும் அன்பு கடிதங்களும், சித்திரங்களும், பெற்றவர்களிடமிருந்து வரும் அழைப்புகளும், உங்கள் பாடல்களை பார்த்தால்த்தான் சாதமே வாய்க்குள் வைக்கின்றான் பையன்! என்ற உரிமைகளும் என்னை நெகிழ வைக்கின்றது' என்று ஆச்சரியம் மாறாமல் சொல்கின்றார் நடிகர் கார்த்தி.
இப்படி கார்த்தி சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை! ஏன் இதற்கு இதை எழுதும் எனது மகளும் விதிவிலக்கு அல்ல!!

கார்த்தியிடமும் அந்த குழந்தைகளை கவரும் இயல்பான மெனாரிஸம் நிறையவே இயல்பாக உண்டு. உண்மையை சொல்வதென்றால் உண்மையில் குழந்தைகளின் நாயகர்களாக இருப்பது ஒரு தவம்.
அது ரஜினிக்கு பிறகு கார்த்திக்கு கிடைத்திருக்கின்றது.

LinkWithin

Related Posts with Thumbnails