
சூர்யா… தமிழ்த்திரையுலகத்தில் மறக்கப்படமுடியாத ஒரு பெயர். அதேபோல இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவின் போக்கை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கப்போகின்ற ஈர்ப்பு அந்தப்பெயர்.
“இவன் எல்லாம் ஏன் நடிக்கவந்தான்? சிவகுமாரின் பெயரையே கெடுக்கத்தான் வந்திருக்கின்றான்!, டான்ஸ் பண்ணத்தெரியுமா? கையைக்காட்டி அழைத்தவண்ணம் அதற்கு பெயர் டான்ஸ் என்கின்றான்!!, ஹிட் சோங் ஒன்றுக்கு ஆடமுடியாமல் பாடல் முடியும் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கின்றான், ஒரு சென்டிமென்டா நடிக்க முடியுமா?, ஜோக்காவது பண்ணத்தெரியுதா?, வாரிசுகளின் தொல்லை தாங்க முடியலைப்பா!”
இவைதான் சூர்யா நேருக்கு நேர் வெள்ளித்திரையில் தோன்றியபோது, பெரும்பாலானவர்களின் விமர்சனங்களாக இருந்தது. அதன் பின்னர் உடடியாக சூர்யா ஒன்றும் விஸ்வரூபம் எடுத்து இந்த நிலைக்கு வந்துவிடவில்லை.
தன் மீதான விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் ஆறுதலாக, ஒவ்வொரு படங்களிலும் அன்று தான் படு வீக்காக இருந்த ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து காட்டினார்.
தூற்றியவர்கள்கூட மூக்கின்மேல் விரலை வைத்தனர்.
ஆடத்தெரியாது என்றனரே…மௌனம்பேசியதே திரைப்படத்தில் அவர்களுக்கு ஆடிக்காட்டினார், ஜோக் வராது என்றார்களே…பேரழகன், பிதாமகன், மாயாவி படங்களில் அதை உடைத்துக்காட்டினார். சென்டிமென்ட்??? நந்தா மூலம் வெர்க்கவுட் ஆகியது. காக்க காக்க..பெண்களை மட்டும் அல்ல, ஆண்களையும் சேர்த்து அவர் பால் ஈர்த்துச்சென்றது. கட்டம் கட்டமாகத்தான் தன் நடிப்பையும், தன்னையும் மெருகேற்றி உச்சத்திற்கு வந்தார் சூர்யா.
சிவாஜி என்ற அந்த உன்னதமான நடிப்புலகச்சிகரத்தின் பின்னர், அந்த இடத்தை நிரப்பக்கூடியவர்கள் என்று யாரும் இல்லை இதுதான் உண்மை, இதுவே யதார்த்தம். ஆனால் தமிழ் சினிமாவில் சிவாஜிக்குப்பின்னர் ஒரே ஒரு ஆறுதல், உலகநாயகன் கமல்ஹாசனே என்பதிலும் எந்தவிதமான சந்தேகமோ, மாற்றுக்கருத்தோ இல்லை. அதன் பின்னரான வரப்போகும் அந்தப்பாத்திரத்தில், அருமையாக வடிகட்டப்பட்டு சூர்யா வார்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
ஒரு தலைமுறையின் ஜீன்கள் ஒன்றுவிட்ட தலைமுறைக்கு கடத்தப்படும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது அல்லவா? குறிப்பாக ஒன்றைக்கவனித்துப்பாருங்கள், சிவாஜிபோல சில திரைப்படக்கட்டங்களில் நடிக்கவேண்டி வரும்போது “சூர்யா அப்படியே பின்னி எடுகின்றார்”. பிரபுவிடம்கூட அந்த தன்மை இல்லை.
சூர்யா கஜினியில் காட்டும் மெனாரிஸம் அற்புதமானது, புதிய பறவை “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலுக்கு சிவாஜி காட்டும் மெனாரிஸத்துக்கு நீண்டகாலம் பின்னால் காட்டும் ஒரு அற்புதமான மெனாரிஸம்.. கஜினியில் சூரியாவிடம் இருந்தது. காக்க காக்கவில் காட்டும் கம்பீரத்தையும், தங்கப்பதக்கத்தின் பின்னரான ஒரு மிடுக்கு என்று சொன்னால் பிழை இல்லை.
உணர்ச்சி வசப்பட்டு நடிக்கும்போது அவர் தந்தைபோலவே சூர்யாவுக்கும் குரல் தளதளப்பது இயல்பானதே. தற்போது வரும் அவரது திரைப்படங்களில் அவர் கூடுதலாக முகபாவத்திலும், உடல்அசை மொழியிலும் கூடிய கவனம் காட்டி நடிப்பாற்றலை வெளிப்படுத்த துடிப்பதை துல்லியமாகக்காணலாம்.

கமல்ஹாசனை தனது குருவாக, தனது நாயகனாக மதிக்கும் சூர்யா, தான் பல விடயங்களில் கமல்ஹாசனை பின்பற்றுவதாக தெரிவித்திருந்தார். அதேவேளை அவரது நடிப்பு, தோற்றம் என்பன கமல்போல உள்ளன என்று விமர்சனம் வந்தாலே சிலிர்த்துவிடும் தன்மை அவரிடம் உண்டு. உன்னிப்பாக கவனித்தால் ஆய்த எழுத்து திரைப்படத்தில் நாயகன் கமலையும், பேரழகன் சின்னாவில் 16 வயதினிலே சப்பாணியையும், அயன் தேவாவில் விக்ரம் படத்தில் விக்ரத்தையும் காணமுடியும்.
தனது நடிப்பின் முதலாவது விமர்சகர், ஆலோசகராக நடிகர் ரகுவரனைக்குறிப்பிடும் சூர்யா, ஆரம்பத்தில் தனது முதலாவது திரைப்படமான நேருக்கு நேர், திரையாக்கல் சமய சம்பவத்தை நினைவு கோரியுள்ளார். தான் அப்போது எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல் ஏதோ நடித்துவிட்டு, ஜாலியாக இருந்தபோது, தன்னிடம் நடிகர் ரகுவன் நடிப்பு என்பது ஒரு உன்னதமான கலை, தெய்வம் என்று புரியவைத்ததையும், தனக்கு பொறுப்புணர்வை அன்றே அவர் ஏற்படுத்தியிருந்ததையும் ஒரு செவ்வியில் தெரிவித்திருந்தார்.
சூர்யாவிடம் தன் முன்னவர்களை மதிக்கும் நற்குணம் அதிகமாகவே உள்ளது. அவை பல மேடைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குடும்பவாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தந்தையாரின் வழிகாட்டலில் கண்ணியமாக வாழ்ந்துவரும் சூர்யா ஆகிய சரவணன், மனைவி சாதனாவுடனும் (ஜோதிகா), தனது இரண்டு குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றார்.
இனிவரும் காலங்கள் இவருக்கு இன்னும் பல மைல்கல்களை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
இதேவேளை “அகரம் பவுண்டேசன்” என்ற அமைப்பை தமிழ்நாட்டு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்திவருகின்றார். இதன்மூலம் கல்வியை தொடரமுடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கும், வறுமைவாட்டும் மாணவர்களுக்கும் தொடர்ந்தும் தமது கல்வியை பெற்றுக்கொடுக்கும் முகமான ஒரு உன்னதமான பணியினை இந்த அகரம் பவுண்டேசன் மூலம் செய்துவருகின்றார்.
ஆக..ஆரம்பத்தில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும்கூட, இதன்மூலம் நிலைத்து நிற்கமுடியாது, அரைத்த மாக்களை திரும்பத்திருபத்திரும்ப அரைக்கமுடியாது என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு, ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலா தூக்கிவிட, அதன் பின்னர் தன்னைத்தானே செதுக்கி இன்று ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கின்றார் சூர்யா.
ஒரு சிறந்த நடிகனாக மட்டும் இன்றி ஒரு சிறந்த மனிதனாகவும், பாசமான குடும்பத் தலைவனாகவும் இருந்துவருகின்றார் சூர்யா.
இன்று உச்சத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருக்கும் இந்தச்சூரியன்
He Stole My Heart…….

Wish You Many more Happy Returns of the day Surya