Showing posts with label பேராசிரியர் பெரியார்தாசன். Show all posts
Showing posts with label பேராசிரியர் பெரியார்தாசன். Show all posts

Sunday, August 9, 2009

பேராசிரியர் பெரியார்தாசன்…தமிழின் சாட்டை


பேராசிரியர் பெரியார்தாசனுக்கு அறிமுக உரை தேவையில்லை. பேராசிரியர் பெரியார்தாசன் பற்றி உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களும் அறிந்திருப்பார்கள்.
ஆணித்தரமான தனது கருத்துக்களால் அழுத்தமாக உரையாற்றும் ஒரு பேச்சாளர், எத்தனை மணித்தியாலங்கள் என்றாலும் சுற்றியிருக்கும் கூட்டத்தினரை தன் பேச்சுக்களால் கட்டிப்போடவல்ல ஒரு இலாவகம் நிறைந்த சிந்தனையாளர், தன்னம்பிக்கை சுயமுன்னேற்றத்தை ஊட்டும் பேச்சுக்களால் இளைஞர்களுக்கு பின்னால் ஒரு தூண்டுகோலாக இருந்துவருபவர். தமிழை இகழ்வோருக்கும், பார்ப்பனிய தந்திரக்கொள்கை, இந்திய கொள்கைவகுப்பாளர்களுக்கும் ஒரு அச்சப்படாத சாட்டை அடி கொடுப்பவராகவும், ஒரு பேராசிரியராகவும், மூட நம்பிக்கைகளை அழித்தல், மற்றும் முற்போக்கு சிந்தனைகளுக்கான ஒரு முனைவனாகவும் என்று தெரிந்தது மட்டும் அன்றி, இயக்குனர் இமையம் பாரதிராஜா இயக்கிய “கருத்தம்மா” திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, தேசிய விருதுபெற்ற நடிகராகவும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
பார்ப்பனியம் சார்ந்த ஏடுகளிலும், முக்கியமாக பார்ப்பனிய கொள்கை திணிப்பாளர் இந்து பத்திரிகையின் ராமின் செய்திகளில், கட்டுரைகளில் இவர் பற்றி தாறுமாறாக எழுவதில் இருந்து பார்ப்பனியத்திற்கு இவர்மீது உள்ள வஞ்சகமான கோபங்கள் தமிழர்களுக்கு புரிந்திருக்கும்.
“ஒரு துறையில் செல்ல வேண்டும் என்கிற முனைப்பு, வெல்ல வேண்டும் என்கிற வெறியாக மாறினால் இந்த இடர்பாடு இல்லை. எல்லோரும் பங்கேற்கும் துறையில் தன் இலட்சியத்தை நோக்கி மனிதன் செல்ல வேண்டுமே தவிர அடுத்தவர்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவது ஆக்கப்பூர்வமாகாது” என்ற கருத்தினை அணித்தரமாக சொல்பவர் என்பது மட்டும் இன்றி தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் அப்படியே வாழ்ந்தவர்.


சுட்டுப்போட்டாலும் இவனுக்கு சரிவராது என்று இவரை கேவலப்படுத்தியவர்களுக்கே அவர்களை சுட்டிக்காட்டும் வகையில் தன் விடாமுயற்சியால் உயர்ந்து அவமானப்படுத்தியவர்களின் தலைகளை குனியச்செய்தவர். இன்று உலகம் போற்றும் பேச்சாளராக இருந்தபோதிலும் இளமைப்பருவத்தில் அவருக்கு இருந்த திக்குவாயினை ஒரு குறையாக நினைக்காமல் தான் எதிர்காலத்தில் பெரிய பேச்சாளனாக வரவேண்டும் என கடுமையான பயிற்சிகளை செய்து திக்குவாயினை போக்கி இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்.
பெரியாரை பார்க்கும், அவரை வாழ்த்தி கவிதை பாடும் அவசரத்திலேயே சேஷாசலம் என்ற அவரது இயற்பெயர் பெரியார்தாசன் ஆனது. பெரியாரைப்போலவே… “தனது கருத்து என்பதற்காக தனது பேச்சினை அனைவரும் ஏற்றாகவேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இன்றி தனது பேச்சுக்களையும் உங்கள் அறிவினால் திறனாய்வு செய்து பாருங்கள் என்ற எண்ணத்தில் உள்ளவர்”.

“தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கே உரிய ஒரு குணம், அவர்கள் தமக்கான ஒரு நிலையினை எடுத்தவுடன் புதிதாக வருபவர்களுக்கு, முன்னுக்கு வருபவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை” அனால் பேராசிரியர் பெரியார்தாசன் வித்தியாசமானவர். பலபேர் முன்னுக்குவர ஏணியாக இருந்தவர். இன்றைய பிரபலங்கள் பலரை தன் கையால் அரவணைத்து வழர்த்துவிட்டவர். தான் சிகரங்களில் இருந்தாலும்கூட, புதிதாக ஒருவன் சிகரத்திற்கு வர எண்ணி இரண்டு எட்டு வைத்தாலும் ஓடிவந்து அவனுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்பவர்.


இத்தனையும் மற்றவர்கள் மூலமாகவும், சில நூல்கள், பதிப்புக்கள் வாயிலாகவும் நான் அவரைப்பற்றி அறிந்தவைகள். சென்னையில் ஏழும்பூரில் இடம்பெற்ற ஒரு இலக்கிய ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து. அங்கு இலக்கியச் சொற்பொழிவாற்ற வந்த அவரை நேரடியாக கண்டு, அதன் பின்னர் சில மணித்துளிகள் அவருடன் பேசும் சந்தர்ப்பமும் கிடைத்து. நான் ஒரு ஈழத்தவன் என்பதால் இன்னும் ஒருபடி நெருங்கியே வந்தார் என்றுதான் கூறவேண்டும். ஈழ அவலங்கள் பற்றி மனமுருகினார், ஈழத்தமிழர்கள், அவர்களது போராட்டம் தொடர்பாக, ஒரு தமிழின உணர்வாளராக இருந்து அவர் குரல்கொடுப்பது அனைவரும் அறிந்த விடயமே, எனவே அவரின் அந்த பரிதவிப்பில் எந்த மாசும் தெரியவில்லை.
எழுத்துக்கள் பற்றியும், ஈழத்து இலக்கிய நிலை பற்றியும் என்னிடம் கேட்டார். “உங்களால் இலங்கையில் இருந்துகொண்டு மனதில் உள்ளதை எழுதமுடியாது என்பதை நான் அறிவேன் என்றார்” தனது வாகனத்தின் ஏறிச்செல்லும்வரை என்னுடன் ஆர்வமாகப்பேசினார். நான் எட்டாம் ஆண்டு படிக்கும்போது எனது கல்லூரி நூலகத்தில் எதேட்சையாக எடுத்து வாசித்த ஒரு சஞ்சிகையில் (அனேகமாக ராணி என நினைக்கின்றேன்) உன்னால் முடியும் தம்பி என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார்தாசன் பேச்சு..என்று இருந்து, அதைப்படித்தபோது எனது மனது முதற்தடவையாக அறிந்த அந்தப்பெரியமனிதர், என் தோழில் கைபோட்டு நின்று என்னுடன் பேசி, தட்டிக்கொடுத்துவிட்டுப்போனதை நினைக்கையில் நெஞ்சுபெருமிதம் கொள்கின்றது.


நான் நேரடியாக கேட்ட அவர் பேச்சின் சுவாரகசியமான ஒரு கட்டத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.
பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியபோது பி.யூ.சி. மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப்பரீட்சை நடந்துகொண்டிருந்தபோது அந்த பரீட்சையின் கண்காணிப்பாளராக பெரியார்தாசன் அவர்கள் இருந்தார்கள்.
அங்கே “அசோகவனத்தில் சீதையின் நிலை என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாம். முழுமாணவர்களும் அவசரமாக விரைவாக எழுதிக்கொண்டிருந்தனராம். ஆனால் கறுப்பாக இருந்த ஒரு மாணவன் மட்டும் பேனாவை முகவாயில் வைத்து எதையோ கடுமையாக யோசித்தவண்ணம் இருந்தானாம். என்னடா இவன் அப்போது தொடக்கம் பேசாமல் இருக்கின்றானே என எண்ணி, அவன் அருகில் போய் நின்றுபார்த்துவிட்டு, முதுகில் தட்டி, எழுதப்பா என்றுவிட்டுப்போனராம் பேராசியர் பெரியார்தாசன். மீண்டும் அந்த மாணவன் அதேபோல சிந்தனையில் இருக்க அவனது விடைத்தாளை வாங்கிப்பார்த்தாராம்,
அதைப்பார்த்தும் அதிர்ந்துவிட்டாராம், காரணம் அதில் இருந்தது,

“அசோகவனத்தில் எல்லா மலர்களும் சிரித்துக்கொண்டிருந்தன, ஒரு மலர் மட்டும் வாடிக்கொண்டிருந்தது” என எழுதியிருந்தானாம் அந்த மாணவன்;.
உடனயடிhக அந்த மாணவனிடம் “தம்பி கவிதை நல்லா எழுதுவீகளோ?” என கேட்டுவிட்டு கல்லூரி அதிபரிடம் அவனைக்கூட்டிச்சென்று விடைத்தாளை காட்டிவிட்டு. சிரி நன்றாக கவிதை எழுதுவாய் போல இருக்கிறது. எங்கே ஒரு கவிதை சொல்லு எனக்கேட்டாராம். ஏற்கனவே பயந்துபோயிருந்த அந்த மாணவன், ஏற்கனவே பேரறிஞர் அண்ணாவைப்பற்றி ஒரு கவிதை வைத்திக்கின்றேன் சேர் அதை பாருங்கள் என்று ஒரு மடலைக்காண்பித்தானாம்; அதில்,
“ஆயதோர் காலையில் ஆலய வீதியில்
நாயகனே உன் நாத்திகம் கேட்க
தெய்வங்கள் எல்லாம் தேரினில் வந்தன…
என எழுதப்பட்டிருந்தன. உடனடியாக அதை பார்த்த பெரியார்தாசன் ஏன் தம்பி நாத்திகம் என்று எழுதுகின்றாய், ஆனால் அங்கே தெய்வம் எல்லாம் தேரில் வந்தனவே எனறு எழுகின்றாயே என்று கேட்டாரம், அதற்கு அந்த மாணவன் அடுத்த வரியினை பாருங்கள் சேர் என்றானாம். அடுத்தவரி
பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின” என எழுதப்பட்டிருந்தனவாம்…
ஆக…
“ஆயதோர் காலையில் ஆலய வீதியில்
நாயகனே உன் நாத்திகம் கேட்க
தெய்வங்கள் எல்லாம் தேரினில் வந்தன
பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின”
என இருந்ததாம் அந்த கவிதை. இப்போது நீங்களும் ஊகித்திருப்பீர்களே அந்த மாணவன் வேறு யாரும் அல்ல கவிப்பேரரசு வைரமுத்துவே.

LinkWithin

Related Posts with Thumbnails