Showing posts with label Where the Wild Things Are. Show all posts
Showing posts with label Where the Wild Things Are. Show all posts

Friday, October 23, 2009

Where the Wild Things Are மற்றும் ஒரு சிறுவர் விருந்து…


1963ஆம் ஆண்டில் அமெரிக்க சிறுவர் புனைகதை எழுத்தாளர், மவுரைஸ் ஷென்டக் என்பரால் சித்திரக்கதைப்புத்தகமாக வெளியடப்பட்ட கதையே “Where the Wild Things Are” என்பதாகும்.
அன்றில் இருந்து இன்றுவரை காலத்திற்கு காலம் மீள்பதிப்பு இடப்பட்டுவந்த இந்த சித்திரக்கதை பெரும் வரவேற்பையும், புகழையும் சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப்பருவத்தோரிடம் இருந்து பெற்றுக்கொண்டது.

2000ஆம் ஆண்டின் பின்னர் இந்த Where the Wild Things Are என்ற கதைகளை வைத்துகொண்டு பல முப்பரிமாண கார்ட்டூன் சித்திரங்கள், வீடியோ கேம்ஸ் என்பன வந்து மிகப்பிரபலம் பெற்றன.
அதேவேளை இறுதியாக 2008ஆம் ஆண்டு மீள்பிரசும் செய்யப்பட்ட Where the Wild Things Are சித்திரக்கதைப்புத்தகங்கள் 19 மில்லியன் பிரதிகள் உலகம் பூராகவும் விற்றுத் தீர்ந்தமை பலரையும் ஆச்சரியப்படவைத்தது.


இந்த நிலையிலேயே இந்த Where the Wild Things Are கடந்த வெள்ளிக்கிழமை (16.10.2009) அன்று அமெரிக்காவில் வெளியாகி சக்கைபோடுபோட்டுக்கொண்டிருக்கின்றது.
தற்போதெல்லாம் ஈரானியத்திரைப்படங்களைப்போல சர்வதேச ரீதியிலும் சிறுவர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவருவதும் அவை வெற்றிபெறுவதும் வரவேற்கத்தக்க விடயங்களாகும்.

ஆனால் ஒரு Where the Wild Things Are வைவிட, Harry potter விட சிறந்த கதைகளை கேட்டுவளர்ந்த நாங்கள் அவற்றை திரைப்படமாக எடுக்கவோ, எடுத்தாலும் அவை வெற்றிபெறுவதோ தற்போதைய நிலையில் வாய்ப்புக்கள் இங்கு அறவே இல்லை என்றே கூறவேண்டும்.


சரி.. Where the Wild Things Are திரைப்படம் பற்றிய பார்வைக்கு வருவோம்.
இந்த திரைப்படத்தின் நாயகன் மக்ஸ். கொஞ்சம் கோபசுபாவம் உடையவன், தன்னிடன் விளையாடவராத அக்காமீதும், தன்னுடன் நேரம் ஒதுக்கிக்கொள்ளமுடியாத அம்மாவிடமும் கோபம் கொண்டு தனிமைப்படுபவன்.
கற்கும் பாடசாலையில்க்கூட ஒரு பிடிப்பு அவனிடம் இல்லை.
ஒரு இரவில் அவன் தனிமையில் தன் அறையில் இருக்கின்றான் தனது தாயாருடன் உரையாடுவதற்காக வீட்டின் வராந்தாவுக்கு வருகின்றான், அங்கே அவனது தாய் அவளது காதலனுடன் பேசிக்கொண்டு இருக்கின்றாள்.

தாய்க்கும் மகனுக்கும் இடையில் எற்படும் வாக்குவாதத்தை தொடர்ந்து, அவன் உச்சக்கட்ட கோபத்தில் ஓடுகின்றான், வீட்டு கதவைத்தாண்டி, வீதியைத்தாண்டி, புதர்களைத்தாண்டி, சிறு காட்டினைத்தாண்டி என ஓடி, இறுதியில் ஒரு கடற்கரையினை அடைந்து அங்கு காணப்படும் ஒரு சிறிய படகில் எறி அந்த படகை திசையற்ற இலக்கு நோக்கிச்செலுத்துகின்றான் மக்ஸ்.


நெடுந்தூர பயணத்தின்பின் அவனுக்கு கழைப்பு எற்படுகின்றது, யாராவது உள்ளீர்களா என குரல் எழுப்புகின்றான். அப்போது சற்று தொலைவில் ஒரு தீவு ஒன்று தென்படுகின்றது. படகை அந்தத்தீவினை நோக்கிச்செலுத்துகின்றான்.
பேரலைகள் அவன் படகினை அலைக்கழித்தாலும் அந்த தீவினை நோக்கி பயணமாகி அந்த தீவினை அடைகின்றான்.


அந்த தீவில் நெருப்பு மூட்டப்பட்டு இருக்கும், அங்கு பலரது பேச்சுக்கள் கேட்பதை அறிந்து பதுங்கியிருந்து பார்க்கின்றான். அப்போது விசித்திரமான தோற்றங்களை உடைய அளவில் பெருத்த விகாரமான ஜந்துக்கள் அந்த தீவில் உள்ளதை மக்ஸ் அறிகின்றான்.
அவர்களுக்கு தன்னை அறிமுகம் செய்யும் மக்ஸ் தான் ஒரு இளவரசன் என்றும், அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கே அங்கே வந்துள்ளதாகவும் கூறுகின்றான், அந்த ஜந்துக்களும் அவனை தமது அரசனாக முடிசூட்டி அன்டன் பழகுகின்றன.

அவர்களுடன் அவன் அறிமுகமாகி மறுபடியும் கப்பலில் ஏறி தனது இருப்பிடம் செல்ல மட்டும் பல சுவாரகசியமான கட்டங்களையும், இவன் அங்கு செய்யும் மாற்றங்களையும், குதூகலங்களையும் சிறப்பாக படம்பிடித்துள்ளமை இந்தப்படத்தின் சிறப்பு.


விகாரமான பெரிய முகங்களை உடைய ஜந்துக்கள் என்பதனால் அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுகளை முகத்தில் கொண்டுவருவது மிகக்கஸ்டமாக உள்ளமை தெரிகின்றது.
அத்துடன் ஹரிப்பொட்டர்போல மந்திர தந்திர சாகசங்கள் இதில் இல்லை என்பதனால் அப்படி ஒரு கட்டங்களை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு (நான் உட்பட) இந்த திரைப்படம் ஏமாற்றமே. உரையாடல் அதிகமாக இருக்கும், அனால் அந்த உரையாடல்கள் மிக சுவையானதாகவும், உணர்வானதாகவும் இருக்கும்.

கதையில் வருவது போல பல சுவாரகசியங்களை சொல்ல இந்த திரைப்படம் தவறிவிட்டது என்று பல விமர்சனக்குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. எனினும் அமெரிக்க சிறுவர்கள் கடந்த ஒருவாரமாக அமெரிக்க திரையரங்குகளுக்கு படையெடுத்தவண்ணமே உள்ளனர்.

(பிற்குறிப்பு - இந்த பதிவை எழுதிவிட்டு பதிவேற்ற நினைத்தபோது மக்கர் பண்ணிய பிளாக்கருக்கு ஒரு குட்டு)

LinkWithin

Related Posts with Thumbnails