Sunday, September 15, 2013

வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -02


யுத்தமொன்று திணிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட மண்ணின் வளங்கள் முழுமையாக சுரண்டப்பட்டு கொண்டு செல்லப்படும் என்பது உலகம் பல யுத்தங்களில் கண்ட உண்மைதான். ஆனால் இங்கு நடைபெற்றது உள்நாட்டு யுத்தம் என்று சொல்லிக்கொள்ளப்பட்டாலும் இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தமாகவே நடைபெற்றது. அதேபோல யுத்தமுடிவும் வெற்றி பெற்றவர்களால் செயற்படுத்தப்பட்டும், கொண்டாடப்பட்டும் இருந்தது.
யுத்தத்தை தொடர்ந்து வடபகுதி மக்கள் எதிர்பாராத நேரம் அவர்களை நோக்கி அதே சூட்டோடு பிரகடனப்படுத்தபட்டதே பொருளாதார யுத்தம்.
இன்றைய நிலையில் இந்த பொருளாதார யுத்தத்தின் முற்றுகைக்குள் அகப்பட்டு செய்வதறியாது திண்டாடுகின்றது வடபுல பொருளாதாரம். இதுவே யதார்த்தம். இதை புரிந்துகொள்ளாது இன்னும் தூங்குபவர்களும், தூங்குபவர்கள் போல நடிப்பவர்களும் இனி எழுந்திருக்கவே முடியாத நிலைக்கே போய்விடுவர்.

இளைய தலைமுறையின் தவறானபாதை!
அனைவரும் சொல்லிக்கொள்வதுபோல கட்டுக்கோப்புடன் இருந்த ஒரு தலைமுறை கட்டுக்கோப்பு அறுபடும்போது சிதறி ஓடுவதுபோல இன்றைய இளைய சமுதாயம் வடபுலத்தே போய்க்கொண்டுள்ளது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
காவாலித்தனங்கள், குழுச்சண்டைகள், காதுகூசும் வார்த்தைப்பிரயோகங்கள், அடிதடி வாள் வெட்டுக்கள் என்று இன்று இளைய தலைமுறைகள் சில தறுதலைச் சமுதாயமாக போய்க்கொண்டிருப்பதை கண்ணூடாகவே காணக்கூடியதாக உள்ளது.

பேற்றோர்கள், ஆசிரியர்கள், சமுக நலன்விரும்பிகள், மதப்பெரியவர்கள், அரியல்வாதிகள் என்போர் முன் எப்போதும் இல்லாதவாறு இன்றைய நாட்களில், வளமான சமுதாயம் ஒன்றை உருவாக்க பெருமுயற்சி கண்டிப்பாக எடுக்கவேண்டிய நாட்கள் இன்நாட்களே.

கல்வியும் வேலைவாய்ப்பும்
யுத்தகாலத்தைவிட தற்போது வடபுல கல்வி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏன் எனில் முன்னர்போல பெறுபேறுகள் பெரிய அளவில் இல்லாது விடினும் உயர் கல்வி என்பது பல்கலைக்கழகம் என் மட்டுப்படாமல் பல்வேறு கற்கை நெறிகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தற்போது உள்ளதனால் முன்னரை விட உயர் கல்வி கற்பவர்களின் அளவு கணிமான அளவு உயர்ந்துள்ளது.

தொழில் விடயத்தில் முன்னைய நிலையை விட பல நிறுவனங்கள் தாராளமான வேலை வாய்ப்புக்களை கொடுத்துவருகின்றபோதிலும் இன்னும் அரசாங்க வேலை, வெளிநாடு என்ற கனவுகளுடன் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்பு என்று அரசியல் வாதிகளிடம் போவது ஆளுமையை விடுத்து அடிமையாவதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது.

சரி.... இந்த இடத்தில் வடபுல சமுதாயத்தின் நிலையினை நிறுத்திக்கொண்டு வடபுல தேர்தல் நிலைக்குச்செல்வோம்.

முன்னரே குறிப்பிட்டதுபோல தமிழ்த் தேசியக் கூடடமைப்பு, சுதந்திரக்கட்சி ஈ.பி.டி.பி. கூட்டணி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இவையே வடபுலத்தில் பிரதானமாக மோதவுள்ள கட்சிகள்.

ஐக்கிய தேசியக் கட்சி.
நாட்டின் பிரதானமான எதிர்கட்சி! என்ற பெயரை மட்டும்தான் இன்றைய நிலையில் தன்னகத்தே வைத்துள்ள ஒரு கட்சி. 
வடபுலத்தே மகேஸ்வரனை மையப்படுத்தி வெற்றிகண்டதும், மகேஸ்வரனின் செல்வாக்கில் பல வருடங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி கொண்டதும் உண்மைதான்.
அதை தொடர்ந்து மகேஸ்வரன் குடும்பம், காரைநகர் என்ற வட்டங்களிலேயே இந்தக்கட்சி தனது செயற்திட்டங்களை எடுத்துவருவது அதன் கையாலாகாத தனம்.

இந்தத்தேர்தலில் ஒன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அல்லது அதற்கு எதிரான ஆளும்தரப்பு இரண்டில் ஒன்றுக்கு வாக்குப்போட்டாலும் அதில் நிஜாயம், நாட்டிலேயே செல்லாக்காசாக இன்று மாறி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து என்ன பிரயோனம் என்ற யதார்த்தமான கேள்வியை மக்கள் கேட்டுக்கொண்டால் நிலமை என்ன என்பதே இப்போதைய கேள்வி.

இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறைந்தது ஒரு ஆசனமாவது வடமாகாணசபைத்தேர்தலில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

ஈழமக்கள்  ஜனநாயக் கட்சி.
அரசாங்கம், மக்கள், முழு இலங்கை, ஏன்! தமது கட்சியினருக்கே இந்தத்தேர்தலில் எப்படியும் பெரும்பாலான ஆசனங்களைப் பெற்று தமது இருப்பை நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை எல்லோரையும் விட ஈ.பி.டி.பிக்கு இருக்கின்றது.

இணைந்த வடக்கு கிழக்கு! மத்தியில் கூட்டாட்சி!! மாநிலத்தில் சுயாட்சி!!! இவையோடு இணைந்து செயற்படும் இணக்க அரசியல் என்ற அவர்களது கொள்கையை அவர்கள் இப்போதும் வைத்திருக்கின்றனர் என்பதும், ஏனைய கட்சிகள் ஏளனம் செய்வதுபோல சொந்த சின்னத்திலேயே கேட்க முடியவில்லையே என்ற அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களை அவர்களே நோகவேண்டிய விடயங்கள் என பல இறுக்கங்களும், மறைமுக அளுத்தங்களுக்கும் மத்தியில் இந்தத்தேர்தலில் அவர்கள்.

ஆனால் வடக்கில் தேர்தலில் குத்தித்துள்ள கட்சியில் வடக்கில் அமைச்சர் ஒருவரை கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி அவர்கள் மட்டும்தான் என்பது அவர்களின் மிகப்பெரிய பலம்.
அது தவிர ஏனையவர்களை விட மக்களின் வாழ்வாதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையையும், மக்களுக்கான ஏதோ ஒரு வழி உதவிகள், வேலைவாய்ப்புக்கள் என்பவற்றை அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

அதேவேளை சொந்த இனம் அல்லலுற்று நின்ற சில வேளைகளில் கைகட்டி, வாய்பொத்தி நின்றமையும், அரசாங்கத்தால் சொல்லப்பட்டதை அறிக்கையாக கூறியதும் பெரிய பலயீனமே.
அது தவிர வெற்றிபெற்ற சபைகளில் உலகறிய நடக்கும் ஊழல்கள், மேசைக்கு கீழே வாங்கும் பெட்டிகள் என்பனவும் பெரும் பலவீனமே.
எனினும் ஈழமக்கள்! ஜனநாயக்கட்சி இந்த மாகாணசபைத்தேர்தலில் ஆகக்குறைந்தது 05 ஆனங்களையாவது கைப்பற்றும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி.
ஆளும் தரப்பு என்பதும், தொடர்சியான தேர்தல் வெற்றிகள் என்பனவும் எவருக்கும் இல்லாத மிகப்பெரிய பலம் இவர்களது. 
ஆனால் மறு புறம் வடபுலத்தில் எதிரி மனோநிலை குறிவைத்துள்ளதும் இவர்கள்மேலே என்பது வடமாணசபை தேர்தல் என்ற வகையில் இவர்களின் மிகப்பெரிய பலவீனமும் அதுவே.

பேரினவாதத்தின் கரம், எமக்கு வலி தந்தவர்கள், வமது எதிரிகள் என்ற எண்ணங்களும் அதை தூண்டிவிடும் கோசங்களும் இந்த தேர்தல் காலத்தில் காட்டுத்தீபோல கனன்று கொண்டே இருப்பது இன்னொரு பலவீனம்.
கட்சி வேட்பாளர்களிடையே ஒருங்கிணைவு, ஒற்றுமை இல்லாமை மிகப் பெரும் பலவீனம். 
ஒரு சம்பவம் இடம்பெற்ற உடனேயே இந்த கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் இப்படி நடந்தால் நாங்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவோம் என அறிககை விட்டது நகைப்புக்குரியதே.

இத்தனை இருந்தாலும்கூட நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும், இன்றைய காலங்களை ஓரளவு சிரமமின்றி கொண்டு செல்வதற்கும், நாட்டில் வாழும் ஏனைய சிறுபான்மை இனங்களில் கட்சியின் நேரடி வேட்பாளராக இருந்து அமைச்சர்கள் வருவதுபோல வடபுலத்திலும் ஆளும் தரப்பில் நேரடியான ஒரு அமைச்சர் இருப்பது மற்றவர்கள் மறுத்தாலும் உண்மையில் தேவையே. யதார்த்தநோக்கத்தோடு இதை நோக்கினால் உண்மையாக இந்த மண்ணின் மக்களுக்கு தன்னாலான உதவிகளை நேரடியாக பெற்றுத்தரக்கூடிய ஒரு நபரை உருவாக்குவதும் தேவையே. இது ஒருவகையில் மக்களின் சாணக்கியமே.

எது எவ்வாறு இருப்பினும் ஸரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் கூடியது 03 பேருக்கு ஆசனங்கள் அமையலாம்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு 
தமிழ் கட்சி, தமிழ்த்தேசியம், தமிழர் தாயகம், தமிழ் என்பனவே இவர்களின் பலங்கள். மக்களுக்கு நியாயமான வேறு தெரிவுகள் இல்லாமை இவர்களுக்கு பலத்திலும் பெரிய பலம். 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூதானே சக்கரை' என்ற வடபுல பெரும்பாலான மக்களின் எண்ணமும், வேறு வழி இன்மையும்தான் இவர்கள் அடைந்த அடையப்போகும் வெற்றிகள்.

சந்தேகத்துக்குரிய தலைமை, உள்குத்துக்களும், களுத்தறுப்புக்களும், மனக்கசப்புக்களும் கொண்ட பல கூட்டங்கள். இப்படி பல விடயங்கள் இவர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.
எது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களின் எண்ணங்களையும், தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இவர்களைவைத்தே தெரிவிக்கவேண்டும் என்ற தமிழர்களின் நிலையே இவர்களின் பலத்தில் பெரிய பலம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற சொந்த கட்சி பதிவு செய்யப்படாமல் இலங்கை தமிழரசுக்கட்சி பெயரிலேயே தொடர்ந்தும் சொந்த சில்லில் ஓடாமல் இரவல் சில்லில் ஓடுவதை இவர்களே அறிந்தாலும் அசட்டையீனமாக தொடர்ந்து இருந்து வந்தவர்கள் ஐயன்மார்களே!

சரி... விடயத்திற்கு வருவோம் இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் எப்படி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே அது குறித்து அரசாங்கத்தைத் தவிர யாரும் ஏன்! இவர்களே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
எனினும் பேரினவாதம், தமிழர்களுக்கு ஏன் உரிமை! என்ற விடாப்பிடியை பிடித்துவைத்திருக்கும் பேரினவாத அரசுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் மாறவேண்டும் என்று கொக்கரிப்பது பேடித்தனமானது.

மறுபுறம் அரச சார்பான கட்சிகள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்து என்னத்தை பெறப்போறீர்கள், அபிவிருத்தியை நாம்தான் செய்வோம், வேலைவாய்ப்பினை நாம் தான் தருவோம், யுத்தம் முடிந்த பின்னர் எத்தனை அபிவிருத்தி பாருங்கள் என்பன எல்லாம் வேடிக்கைப்பேச்சே.
வெறும் வேலைவாய்ப்புக்கும், அபிவிருத்திக்குமாகத்தான் இத்தனை இலட்சம் பேர் முப்பது வருடமாக மடிந்தார்களா என்ன? பேரினவாதமும், பெரும்பான்மை சமுகமும் அடாவடியாக மாறாமல் இருக்கும்போது நிஜாயத்திற்காக மாறாமல் இருப்பதில் தமிழர்களது குற்றம் ஏதுமில்லை.

மாறாக பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டோம் என்று கொக்கரித்தவர்களே மீட்கபட்ட மக்களுக்கான அபிவிருத்திக்கு முழுப்பொறுப்பானவர்கள். 

அடுத்தது தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை முழுமையாக கூட்டமைப்பின் முதன்மைவேட்பாளர் புரிந்துகொண்டு பேசவேண்டும்.
இறுதி யுத்தத்தில் அங்கே மக்கள் மடியும்போது நீங்கள் வாய்பொத்தி இருந்தபோதும், மனைவி மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நீங்களும் போய்வந்தபோதும் தீக்குளித்தும், போராட்டம் நடத்தியும் உறவுகளுக்காக கண்ணீரும் செந்னீரும் விட்ட உறவுகள் அவர்கள். 
ஈழத்தமிழரின் போராட்டங்களின் ஒவ்வொரு கட்ட ஆணிவேர்களும் அங்கிருந்து கிடைத்தவையே என்பதை மறந்துவிடாதீர்கள். நாக்கில் நன்றி கெட்டத்தனமாக பேசாதீர்கள்.
இந்த விடயம் கிள்ளுக்கீரை விடயம் அல்ல... வாய்க்கு வந்தபடி எல்லாம்பேசிக்கொள்ள. உயிரோட்டமான உடன்பிறப்புகளின் விடயம். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

அதேநேரம் கடந்த பல தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்த மக்களுக்கு இனிவரும் காலங்களிலாவது அவர்கள் ஏதாவது செய்தே ஆகவேண்டும். வெறுமனே வாய்ச்சொல்லில் வீரர்களாகவே அவர்கள் நீடித்த அரசியலை மேற்கொள்வார்களே ஆனால் பிளவுகள் ஏற்படுவதும், புதிய கட்சிகள் உருவாவதும், பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதும் தடுக்கமுடியாதவையாகப்போகும். 

'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூதானே சர்க்கரை' என்ற மக்களின் எண்ணமே இந்த முறையும் கூட்டமைப்புக்கு இறுதியாக கொடுக்கும் பலமாக அமையும். ஆகக்கூடியது 10 ஆசனங்கள் வெளியால் போக மிச்சம் உள்ளவைகள் அனேகமாக இவர்களுக்கே செல்லும்.

Saturday, September 14, 2013

வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -01



காலப்பெருவெளியில் சமுக ஓட்டகளின் மத்தியில் அடிபட்டு ஒதுங்கிநிற்கும் சமுதாயம் நாம் என்ற மிரட்சியுடன், உலகியலின் ஓட்டத்திற்கு இயல்பானதாக மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு திசைக்கு இழுத்துச்செயல்லப்படும் சமுதாயமாகவே நாம் உள்ளோம் என்பது வெக்கப்படாமல் நாம் ஒத்துக்கொள்ளவேண்டிய தொனியாகவே உள்ளது.
எமது தலைவிதியை நிர்ணயிக்க நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் யார் யாரையோ பரிதவிப்புடன் பார்த்து ஏங்கிநிற்கும் பிச்சைக்காரத்தனம் எம்மிடம் எந்தப்புள்ளியில் இருந்து வந்தது! 
எம்மை நாம் ஆண்டவர்கள், இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருடன் எப்போதும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அல்லர், மாற்றார்களால் ஒன்றாக வாழ வைக்கப்பட்டோம், நான்கு நூற்றாண்டுகள் இடைவந்த மாற்றார்களின் ஆட்சிமுறைமைகளே எமக்கு இன்று பெரும் சிக்கல்களை தந்துவிட்டன என்பது ஒருபுறம், பின் நோக்கி வரலாற்றையும், முன்னோக்கி தொலைநோக்கத்தையும் அடைய வல்ல தலைமைத்துவம் இல்லாமை மற்றொரு புறம் என ஒரு முடிவின்றி இழுபடும் சமுதாயமாக நாம்.

இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் இருந்து ஒரு தசாப்தத்தின் உள்ளேயே, சேர்ந்துவாழ்தல் என்பதற்கான ஆழமான கேள்விக்குறிகள் விழ ஆரம்பித்ததுதான் வரலாறு. பிரித்தானியா தனது பிரித்தாளும் தந்திரத்தில் 'சிறுபான்மைத்தமிழரை தமது அதிகாரிகளாகவும், பெரும்பான்மை சிங்களவர்களை சாதாரணர்களாகவும் வைத்திருந்துவிட்டு, தான்போகும்போது, பெரும்பான்மை சாதாரணர்களிடம் அதிகாரத்தை கையளித்துப் போனமைதான்' கொடிதிலும் கொடிது.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது தமிழ்த்தரப்பில் ஒரு ஆணித்தரமான தலைமை அன்றைய 1940 களில் இல்லாமையே. சேர்.பொன். இராமநாதன் அவர்கள் பிரித்தானியரிடம் மட்டும் அன்றி மகாராணியிடமே செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும்கூட 1930 ஆண்டு அவரது இறப்புக்கு பின்னரும், பின்னர் 50 களின் நடுப்பகுதிகளில் மிளிரத்தொடங்கிய தந்தை செல்வா, ஜீ.ஜீ.பி என்போரின் வருகைக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் தமிழருக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியது என்பதை பலர் கவனிக்கத்தவறுகின்றனர்.

எமது வரலாற்றை முறைப்படுத்தி அதைக்கையில் எடுத்து, எமது உரிமைகள் பற்றி சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த நாம் தவறிவிட்டோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றும் வரலாற்றைக் கையில் எடுத்து தமிழ்ச்சார்பு கட்சிகள் செயற்படவில்லை, வரலாறு மிக முக்கியமானது என்பதையும் இந்த வரலாற்றினை வைத்தே பல காய்களை நகர்த்த முடியும் என்பதையும் தமிழ்த்தரப்பு முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு சொல்வதுபோல அவர்களது அகிம்சைவழி, மற்றும் அரசியல்வழி, ஆயுத வழிப்போராட்டங்கள் என அனைத்து அஸ்திரங்களும் பாவிக்கப்பட்டதும், ஆனால் இன்று வரை அவர்களுக்கான தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருப்பதும் அனைவரும் அறிந்த விடயமே. 
காலம் காலமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் குப்பையில் போடப்பட்டு இந்த சமுதாயத்தின் முன்னால் நடாத்தப்படும் நாடகத்தின் ஒரு அங்கமாக இப்போது வந்து நிற்கின்றது வடமாகாணசபைத் தேர்தல்.

வடமாகாணசபைத்தேர்தலும் மக்களும்
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக உருவானதே இந்த மாகாணசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஆனால் பெரிய விந்தை என்னவென்றால் வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருட்டு கொண்டுவரப்பட்ட இந்த மாகாணசபை முறமையை வடகிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் இதுவரைகாலமும் முறையாக அனுபவித்து வந்தன என்பதே.
யுத்த வெற்றியின் பின்னதாக எல்லா மகாணங்களிலும் வெற்றிக்கொடி ஏற்றிவரும் ஆளும் தரப்பு ஆரம்பத்தில் வட மாகாணசபை தமக்கு கிடைக்காது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து அங்கு தேர்தலை நடத்த பின்னடித்தே வந்தது என்பதும் முற்றிலும் உண்மையே. அதேவேளை இன்றைய நிலையில் தேர்;தலை அங்கு நடத்தியே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஆளும்தரப்பு, வடக்கிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தனது பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பியையும் தனது சின்னத்திலேயே போட்டியிட இணைத்து தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளது. மறுபுறம் ஒரு ஊரைமட்டும் நம்பி தானும் தேர்தல்களத்தில் களமிறக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி! இவையே இங்கு பிரதானம் மற்றக்கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்பன வேறு!!

மக்களை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களின் பின்னால் தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டிருப்பது ஒரு கவனிக்கப்படவேண்டிய விடயம். இந்த வடமாகாணத் தேர்தலில் குறைந்தது 75 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்பது கணிப்பீடு. இத்தோடு முதல் முதல் வாக்களிக்க உள்ளோரின் வீதமும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடு, வெற்றிலை, யானை இந்த மூன்றுக்கும் வாக்குகள் இந்த மக்களிடம் இருந்து பிரதானமாக கிடைக்கும், மற்றக்கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விழும் வாக்கு வீதம் கண்டிப்பாக மிக மிக குறைவானதாகவே அமையும்.

வடபகுதி மக்களின் இன்றைய வாழ்வியல்
வடபகுதியில் வாழும் இன்றைய சராசரி மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமான பார்வையில் கவனித்தோமாயின், நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களின் வாழ்வியலில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பது உண்மை.
யுத்தத்தின் பின்னான காலத்தின் ஆரம்பத்தில் திடு திடுப்பென மாற்றமெடுத்த வாழ்வியல் மாற்ற நிலை இன்று மெதுவான ஒரு ஓட்டத்திற்கு வந்துள்ளதெனினும் சீராகவில்லை. இந்த வாழ்வியல் மாற்றங்கள் பல எதிர்மாறான பலன்களையும் அவர்களுக்கு தந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.
அடுத்து முக்கியமாக ஒரு சமுதாயத்தின் வாழ்வியலில் தாக்கம் செலுத்தும் காரணி தலைமுறைகள், எமக்கான உரிமையினைப்பெறும் போராட்டத்தின் விடை கிடைக்கும் முன்னதாகவே நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன என்பதே உண்மை. இந்த கால தேச வர்த்த மானங்களால் எழுந்துள்ள தலைமுறை இடைவெளி வடபகுதி வாழ்வியிலில் பெரும் முரண்பாடு ஒன்றை கொண்டுள்ளது.

பொதுவாகச்சொன்னால் ஆயதப்போராட்டத்திற்கு முன்னர் பிறந்தவர்களின் மனநிலை, ஆயுதப்போராட்டத்தின்போது பிறந்தவர்களின் மனநிலை, 1990களின் பின்னர் பிறந்தவர்களின் மனநிலை என்பன முற்றிலும் முரண்பாடுகளை கொண்டதாகவே கருத்திலும், செயலிலும் உள்ளதை ஒரு உளவியல் கண்ணேட்டததின் ஊடாக கண்டு கொள்ளமுடியும்.

வளப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால் மறைமுகமாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வடபகுதி வளங்கள் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு அல்லது அத்துமீறப்பட்டு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
கடல் உணவில் இருந்து இரும்பு, மரங்கள் வரை தொடர்சியாக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வர்த்தகம்.
உழைத்தலுக்கும் சேமிப்புக்கும் பெயர் பெற்றது வடபுலம். கட்டைவில் நோண்டும்போது தண்ணீர் பீச்சி வேளான்மை செய்யும் கூட்டமல்ல இவர்கள். உடல்வருத்தி வான்பார்த்து பயிரிட்டு நலக்கீழ்நீரை துலாமித்து வருந்தி உழைத்து முன்னேறிய சமுகப்பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள். 
வெள்ளையர்காலத்தில் இருந்தே கல்விநிலையில் உயர்வு பெற்று உயர்தொழில்களும்புரிந்து மெல்ல மெல்ல வர்த்தகத்திலும் கொடி நட்டு, முழு இலங்கையிலும் பெரு வர்தகர்களாக கோலாச்சியவர்கள் இவர்கள்.

இன்று.........
யுத்தம் முடிவடைந்தது என்ற அரசர்கத்தின் அறிவிப்பையும், பாதை திறப்பையும் அடுத்து தென்னிலங்கை நிறுவனங்கள் பல போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவந்து தங்கள் மடைகளை திறந்தன, திறந்து கொண்டு இருக்கின்றன.
'ஆசியாவின் சந்தை இலங்கை! இலங்கையின் சந்தை யாழ்ப்பாணம்!!' என்பதுதான் உண்மை. 
'நீங்கள் எதுவும் உற்பத்தி செய்யவும் வேண்டாம், விற்பனை செய்யவும் வேண்டாம், நாங்கள் தருவதை வாங்குபவர்களாக மட்டும் இருங்கள் போதும்' என நேரடியாகவே வட புலத்தாரை தென்னிலங்கை சொல்வதுபோலவே வடபுல வர்த்தகத்தின் இன்றைய நிலை உள்ளது.
முன்னொரு காலத்தில் பெருமளவு பணத்தினை சேமிப்பில் போட்டு பணமிருக்கு பொருள் இல்லை என்று சொல்லிவந்த வடபுல வர்த்தகர்களின் இன்றைய நிலை, பல நிதி நிறுவனங்களால் பரிதாபகராமாக்கப்பட்டுவிட்டது.

சாதாரணமாக மருதானார்மடம், திருநெல்வேலிச்சந்தைகளில் மரக்கறி விலைகளை தம்புள்ள மரக்கறிகளின் வரவே தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.
ஏந்தவொரு கைத்தொழில் நிலையமோ, பக்டரியோ இங்கு இல்லை, இயங்கவும் முடியாது என்ற நிலைக்கு யாழ்ப்பாண வர்த்தகம் மறைமுகமாக திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொடரும்.....

LinkWithin

Related Posts with Thumbnails