
ஒவ்வொரு வருடங்களும் எம் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்கள் என்பது மறுக்கமுடியாத ஒன்றுதான். அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளையும், சுகங்களையும், சுமைகளையும், வருத்தங்களையும், திருப்திகளையும், இனிய நினைவுகளையும், மீண்டும் இதுபோல நடக்கக்கூடாது என்பதுபோன்ற சம்பவங்களையும், ஏன் பயங்கரமான நிகழ்வுகளையும் கூட தந்துவிட்டு போய் இருக்கும்.
ஆனால் கண்டிப்பாக ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அதி அற்புதமான அனுபவங்களையும், உலக மாற்றங்களையும், சிந்தனை மாற்றங்களையும் உலகில் வாழும் அத்தனை மனிதனுக்கும் சுட்டிக்காட்டிவிட்டுத்தான் போகின்றது.
நம்மில் அனேகமானோர் ஒவ்வொரு வருட ஆரம்பங்களிலும் இந்த வருடம் நான் இவற்றை செய்துமுடிக்கவேண்டும், அதற்கான திட்டங்கள் என்ன? செல்லும் நடைமுறைகள் என்ன? என்பவற்றை ஆராய்ந்து குறிப்பெடுத்து, அதற்கேற்றாற்போல செயற்படுவதை காண்கின்றோம். ஆனால் ஓரிரு ஆண்டுகளே எமக்கு நாம் நினைத்தபடி பூரணமான திருப்திகளையும், மன நிறைவினையும் தந்துவிட்டு போய் உள்ளன. பெரும்பலான ஆண்டுகளில் எம் திட்டங்கள் கால், அரை, முக்கால், என முன்னேற்றம் பெற்றோ அல்லது மிக மோசமாக திட்டங்கள் கைவிடப்பட்டோ இருந்திருக்கும். அவை கூட நமக்கு சில படிப்பினைகளை தந்துவிட்டு போகின்றன.
அதாவது முக்கியமாக ஏதாவது வியாபார விஸ்தரிப்பு திட்டங்கள் எங்களிடமிருந்தால், நேர்த்தியான எமது திட்டங்கள், எமது திறமைகள் மட்டும் போதுமானது என்ற எண்ணம் இலங்கையினைப்பொறுத்தவரை மிகத்தவறு.
ஓவ்வொரு ஆண்டும் முன்பு இருந்ததுபோல இல்லை மாறிக்கொண்டே இருக்கும். அதாவது மாற்றம் என்ற ஒற்றைச் சொல்லைத்தவிர மற்றய அத்தனையும் மாறிக்கொண்டிருக்கும். மூன்று தினங்களின் முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பல ஆண்டுகளின் முன்னர் அறிமுகமாகியிருந்த யாழ்ப்பாணத்தின் பிரபலமான வர்த்தகர் ஒருவரை சந்தித்திருந்தேன். 2002-2004 காலப்பகுதியில் அவர் புதிய ஒரு வர்த்தகத்தையும் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆரம்பித்திருந்தார். அவர் மிகத்திறமையானவர் என்பதுடன், பண பலம் உடையவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் - கொழும்பு என இரண்டு இடங்களிலும் அவரது வர்த்தகம் அடிபட்டு மிக மோசமான நட்டத்தை எதிர்நோக்கியிருந்தார் என்பது நான் அறிந்தது.
ஆனால் அதே வர்த்தகத்தை கடந்த வருடம் 2009 ஆவணியில் இருந்து மீண்டும் தொடங்கி மேற்குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் தான் அதிக இலாபம் பெற்வருவதாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஓன்றை சிந்தித்து பார்த்தீர்களா? அவரோ திறமையானவர், பண பலமும் இருக்கின்றது, மிகவும் தடிதுடிப்பாக இயங்கும் நிர்வாகி இருந்தபோதுலும், அப்போது முடியாத காரணிகள் இப்போது சாதகமாக ஆகிவிட்டதை!
எம் திட்டங்களையும், தீர்மானிக்கும் சக்திகள், எம் திறமைகள், எமது முயற்சிகள் என்பவற்றைத்தவிர, சூழல், அரசியல், நாட்டின் அபிவிருத்தி வளர்ச்சி, நாட்டு சூழ்நிலை என பல காரணங்கள் உண்டு.
புலர் கூறிக்கொள்வதைப்போல இலங்கையில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பது ஒரு தவறான எடுகோள் என்றே நானும் கூறுவேன். வேண்டும் என்றால் இராணுவ மயப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள், கீழ்ப்படிநிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள், அத்தோடு இனவாத சிந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இவைகள் இல்லாதொழிக்கப்படவேண்டும்.
2004 ஆம் ஆண்டின் முடிவே எமக்கு மீள முடியாத ஒரு பெரும் சோகத்தை ஒரே போடாக போட்டுவிட்டு போனது சுனாமி என்ற பெயருடன். 2005 மீண்டும் யுத்தம் தொடங்கியது மொத்தத்தில் பொதுவான இலங்கையர்கள் என்ற பார்வையில் கடந்த ஐந்துவருடங்களும் எமக்கு அரோக்கியமானதாக இல்லை. அதிலும் 2009 ஒரு ஊழிக்கூத்தே ஆடிமுடிக்கப்பட்டு இலட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.
சக நிகழ்வுகளின் கோர்வை தானே சரித்திரம்! எனவே ஒவ்வொரு அண்டுகளும் மிக முக்கிமானவைகள்தான். ஓவ்வொரு வருடங்களும் எமது வாழ்வின், வர்த்தகத்தில், சுய முன்னேற்றத்தின், எமது உயர் கல்வி திட்டங்களில் என சுயத்துக்குள் நின்று பல திட்டங்களை போட்டு வைத்துக்கொண்டு, புதிய ஆண்டுகளை வரவேற்காமல், ஒரு முறையாவது இந்த ஒரே ஒரு ஆண்டாவது நான் 365 நாட்களும் மனித நேயத்துடன் நடந்துகொள்கின்றேன், 365 நாட்களும் மற்றவர்களின் சுயங்களுக்கும் மரியாதை கொடுக்க தயாராகின்றேன், வருடம் முழுவதும் என்னால் இயன்ற தேவையான உதவிகளை உரியவர்களுக்கு கொடுக்கின்றேன், ஒரு வருடம் முழுவதும் சுயத்தை விட்டுவிட்டு அன்புள்ளவனாக வாழ்கின்றேன் என்று திட்டங்கள் போட்டால் அந்த ஒரே ஆண்டே போதும், அந்த ஆண்டு முழுவதும் வசந்தங்கள் மட்டுமே வரும்…
Happy 2010