
ஒரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமாகவே பார்க்கடுகின்றது. சூரியமையத்தின் பூமியின் பரிபூரணமான சுற்றாக மட்டும் அது பார்க்கப்படவில்லை. வாழ்வியலின் ஒரு கட்டத்தின் சுற்றாக பார்க்கப்படுகின்றது.
எது எப்படியோ வருடத்தின் இறுதிநாள், தெரிந்தோ தெரியாமலோ மனதிற்குள் பல கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துவிடுகின்றது! ஒரு வருடம் என்பது தனி மனித வாழ்வியலின் ஒரு வயது ஆகின்றது. அந்த வருடம் கொடுத்துச்செல்லும், அனுபவங்கள் பல, வலிகள் பல, சந்தோசங்கள் பல!! இந்த அனுபவங்களின் வீதங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது.
இன்றுடன் இந்த வருடம் ‘கடந்தகாலத்தில்’ என்ற பதத்தில் அடக்கப்படப்போகின்றது. ஒவ்வொரு வருட இறுதியும் எமக்குள் ஒவ்வொரு இரகசியங்களை சொல்லிவிட்டே விடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை நாம் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்கின்றோம் என்பதே கேள்வியாக உள்ளது.
எத்தனை பிரிவுகள், எத்தனை இழப்புக்கள், எத்தனை சோகங்களைக்கூட இந்த ஆண்டு சிலருக்கு கொடுத்துவிட்டு போய்க்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நாளை என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக, எல்லாநாளும் புதிதாக பிறந்தாலும் நாளை என்ற புதுவருடத்தின் புதியநாள் ஒன்று ஏக்கத்துடன் வரவேற்கப்படும் நாளாக அமையப்போகின்றது.
ஒன்றைக்கவனித்தீர்களா? வருட இறுதிநாள் என்று நாட்குறிப்பின் கடைசிப்பக்கத்தை, அல்லது கலண்டரின் இறுதிநாளை எட்டும்போது, மனதிற்குள் இனம்தெரியாத ஒரு சோகம்கூட இழையோடுவதை உணரமுடிகின்றது அல்லவா?
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்றும்போகின்றது என்ற ஆழ்மனதின் எச்சரிக்கையாக அதைக்கொள்ளமுடியுமோ என்னமோ?
இந்த நாளில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து முடியும் நாள்வரை, நாம் சாதித்தவைகள் எவை? தவறவிட்டவைகள் எவை? கற்றுக்கொண்டவைகள் என்ன? பெற்றுக்கொண்டவைகள் என்ன? முக்கியமான நிகழ்வுகள், சந்தோசங்கள், துன்பங்கள், என அத்தனையையும் இந்த நாளில் ஒரு சுயவிமர்சனத்திற்கான நாளாக கொள்ளவேண்டும் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவற்றை வைத்துக்கொண்டே அடுத்த ஆண்டின் திட்டங்களை வரையறை செய்யவேண்டும் என்று பல வெற்றிபெற்றவர்களின் குறிப்புக்களை கொண்டு உதாரணங்கள்வேறு கூறப்படுகின்றது. ஒரு வகையில் பார்த்தால் நாங்கள் போகும்பாதை சரியானதாக உள்ளதா? என்ன மாற்றங்களை செய்யவேண்டும், நாம் விட்ட தவறுகள் என்ன? பெற்ற வெற்றிகளுக்கான காரணங்கள் எவை? என்று அறிந்துகொள்ள அது மிக உதவியானதாகவே இருக்கும்.
“அடுத்த நொடி ஒழித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்” இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துவைத்திருக்கின்றோம். அதே ஆச்சரியத்துடன் அந்த நொடிகளின் பெருந்தொகுதியான இன்னும் ஒரு வருடத்திற்கு முகம்கொடுக்கத் தயாரானவர்களாக நாம் நாளை என்ற புதிய வருடம் ஒன்றுக்குள் இழுத்துச்செல்லப்படுகின்றோம்.
அடுத்த வருடம் எமக்கு ஒழித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களோ மிக ஏராளமானதாக இருக்கப்போகின்றது. இருக்கும்.
இணையங்கள், வலைப்பூக்களை கையாள்பவர்களுக்கு “பக்கப்” என்றதொரு வார்த்தை நன்றாகத்தெரியும், அதாவது தொடக்கத்தில் இருந்து இந்த கணம்வரை நாம் எழுதியவை, சேகரித்தவை, சேமித்தவை அத்தனையையும் பாதுகாத்துக்கொள்வது.
அதேபோல எம் மனதையும், இந்தவருட அனுபவங்களையும், “பக்கப்” எடுத்துக்கொள்ளும் நாள் இன்றுதான்.
எமது மனம் என்ற சிஸ்ரத்தில் அப்பப்போ படிந்த வைரஸ்களை, சிந்தனை என்ற அன்டி வைரஸ் அப்டேட்பண்ணி, தெளிவான ஒரு சிஸ்ரமாக நாளையை வரவேற்போம்.
இந்த வருடம் என் இணைய எழுத்துக்களுடன் பயணித்து என்னோடு இன்றும் தொடர்ந்து நிற்கும், பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள், திரட்டிகளில் வோட்டு போட்டு, பின்னூட்டமிட்டு ஆதரவு தந்து தட்டிக்கொடுத்தவர்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகளை சொல்லிக்கொள்கின்றேன்.
ஸியேஸ்….