Saturday, October 24, 2009

ஈழத்து குறும்படங்கள்.


உணர்வுகளையும், வலிகளையும் மற்றவர்களுக்கு உறையச்செய்ய குறும்படங்கள் இன்று ஒரு முக்கியமான கருவியாக கொள்ளப்படுகின்றது. சொல்லவந்த செய்திகளை அதே வலியோடு மற்றவர்களுக்கும் உணர்த்திவிட நேர்த்தியான குறும்படங்களால் முடிந்துவிடுகின்றது. பல கோடிகளை கொட்டி பிரமாண்டமாக தயாரிக்கப்படும், வர்த்தக திரைப்படங்களைவிட, சோமாலியாவில் ஒருவேளை உணவுக்கு ஏங்கும் குழந்தை ஒன்றை பற்றிய குறும்படம் ஒன்று உலகத்தை தனது பக்கம் ஈர்த்துவிடும்.

ஆக..கோடிகளிலும், பிரமாண்டங்களிலும் ஒரு படைப்பு வெற்றி பெறுவதில்லை மாறாக உணர்வுகளின் அடிப்படையில், உணர்வுகளை உறையவைத்த திரைப்படங்களே உலக அளவில் வெற்றிகளை பெறுகின்றன. ஈரானியத் திரைப்படங்களை இதற்கு சிறந்ததொரு உதாரணமாக கொள்ளலாம். இந்த வகையில், நயவஞ்சமாக அடக்கி, ஒடுக்கப்படும் சமுதாயமாக இன்று உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வியலை குறும்படமாக கொண்டுவந்து அவர்களின் வலியினை ஓரளவுக்காவது மற்றவர்களுக்கு புரிய வைக்க இத்தகைய குறும்படங்கள் ஏதுவாக இருக்கும்.

ஆனால் அவலத்தின் மேல் அவலங்கள் நடந்து, நடந்துகொண்டிருக்கும் இந்த நிலத்தில், உணவுண்ணும் உரிமைகள் கூட மறுக்கப்படும் இடத்தில் அவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் குறும்படங்களை தயாரிக்கமுடிமா என்றால் அது முடிவே முடியாது. எனவே இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இருந்து அவர்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கும் குறும்படங்களையோ, அல்லது ஒளி ஆவணத்தொகுப்புக்களையோ தயாரிக்கவோ எடுக்கவோ முடியாது. ஏனென்றால், அவர் தம்பி என்றால், இவர் அண்ணன் என்ற நிலைமைகளே இரண்டு இடத்திலும் காணப்படுகின்றது.

அதேவேளை இந்தியாவில் உள்ளவர்கள் ஈழத்தமிழர் விடயங்களை குறும்படமாக எடுப்பது என்பது அறவே முடியாத காரியம் என்பதை நான் ஆணித்தரமாக கூறுவேன். ஒரு குறும்பட வெளியீட்டு ஒன்றுகூடல் நிகழ்வொன்றின் மேடையிலும் இதை நான் ஆணித்தரமாக கூறியிருந்தேன். எல்லோருக்கும் பொதுவான வலி என்பது வேறு, குறிப்பிட்ட இனம்மட்டும் 30ஆண்டுகளாக அனுபவிக்கும் கொடுமைகள் வலிகள் என்பவை வேறு. “நெருப்பு எப்படி சுடும் என்பதை சூடுபட்டவனால்த்தான் கூறமுடியும். முற்றவர்களால் நெருப்பு இப்படி சுடுமாம் என்றுதான் கூறமுடியும்.”

இந்த நிலையில் ஈழத்தில் முன்னர் தமிழர் சுதந்திரப்பிரதேசம் இருந்த வேளையில் தயாரிக்கப்பட்ட மூன்று குறும்படங்களை காணும்வாய்ப்பு இன்று கிடைத்து. வேலி, பசி, மௌனம்.. ஆகிய மூன்று குறும்படங்களும் ஏதோ ஒரு விதத்தில் நெஞ்சின் உணர்வுகளை தொட்டு நிற்கின்றன. ஒரு கோர யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் தொழிநுட்ப கருவிகள் எதுமற்ற, தட்டுப்பாடான நிலையில், பல்வேறுபட்ட அவல, துன்பியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும் இத்தகய குறும்படங்களை தயாரித்து. இயக்கி இன்று உலகத்தின் கண்முன் கொண்டுவந்துள்ள அத்தனை கலைஞர்களும் மன, மொழி, மெய்களால் பாராட்டப்படவேண்டியவர்களே.

சாம்பிளாக உங்களுக்கு ஒரு குறும்படம் இதோ….

வேலி
கதை :ஆதிலட்சுமி சிவகுமார்
இசை : ராஜா
ஓளிப்பதிவு : அகல்விழி
படத்தொகுப்பு
திரைக்கதை : நிமலா
இயக்கம்
நேரம் - 20 மணித்துளிகள்.


கணவனை இழந்து கைக்குழந்தையுடன், வாழ்ந்துவரும் ஒரு விதவைப்பெண் லச்சுமி. சொந்தங்கள் அனைத்தும் கைவிட்ட நிலையில், சில சொந்தங்கள் வசைபாடித்தூற்றிய நிலையில், தோட்டத்தில் வேலை செய்து, வசதியுடையவர்களின் வீட்டுவேலைகள் பார்த்து, பத்து பாத்திரம் தேய்த்து, மாவிடித்துக்கொடுத்து என பல்வேறுப்பட்ட வேலைகளையும் செய்து தனதும் தனது பிள்ளையினதும் வயிற்றுக்கு உழைத்துக்கொண்டிருக்கின்றாள் அவள்.


தோட்டத்தில் அவள் வேலைபார்க்கும்போது தோட்டக்காரனாக இருக்கும் முத்துவிற்கு இவள்மேல் உள்ள இரக்கம் காதலாக மாறிவிடுகின்றது. லட்சுமியின் மகள் சுபிகூட எப்போதும் அவனையே சுற்றிவருவாள். அவனும் எப்போதும் அந்த பிஞ்சுக்குழந்தைமேல் அளவுகடந்த பாசம் பாராட்டிவருவான். ஆனால் லட்சுமி மட்டும் அவனுடன் எந்தப்பேச்சுவார்த்தைகளும் வைத்துக்கொள்ளமாட்டாள்.


லட்சுமி வீட்டில் கிணறு இல்லை என்பதனால் அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே அவள் தண்ணீர்பிடிப்பது வழமை. அன்று ஒருநாள் இவள் தண்ணீர் பிடிக்க செல்லும்போது எங்கேயோ புறப்பட தயாரான அந்த வீட்டுக்காரர் இவள் வருவதை கண்டு மறுபடி வீட்டிற்குள் சென்றுவிடுகின்றார். இவள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும்போது இவளை அழைக்கும் அந்த வீட்டுக்காரி, இனி நீ காலை வேளையில் தண்ணீர் பிடிக்க வரவேண்டாம், மாலை வேளைகளில் வந்து தண்ணீர் பிடித்துக்கொள். உன் முழுவியளத்தினால் (சகுனம்) அவர் வெளியில் செல்லாமல் மறுபடியும் வீட்டிற்குள் வந்துவிட்டார் என்று கூறுகின்றாள்.


அடுத்த காட்சியாக இவள் வீட்டுவேலை செய்துகொடுக்க செல்லும் பாட்டிவீட்டில், இவளது முகத்தைக்கண்டு நல்ல இதயம் கொண்ட அந்தப்பாட்டி, இவளது முகச்சோர்வைக்கண்டு என்ன என வினாவுகின்றாள். யாரையுமே குறைகூறிப் பழக்கமில்லாத லட்சுமி ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு, தன் வீட்டில் கிணறுவெட்டுவதற்கு நிலையமெடுக்கவேண்டும் ஐயாவிடம் சொல்லுங்கள் என்கின்றாள்.


கிணற்றினைக்கூட கூலி கொடுத்துவெட்ட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளே வெட்டுகின்றாள். இத்தனை கஸ்டங்கள் பட்டு, பலவீடுகளில் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் அவளை சில பெண்கள் குழுமியிருந்து பரிகாசிக்கின்றனர். ஜாடைமாடையாக அவளைக் குத்திக்காட்டி பல பேச்சுக்களையும் பேசுகின்றனர். அனால் வழமையான மௌனமான தன் இயல்பால் அவை எதையும் காதில் விழுத்தாமல் சென்றுவிடுகின்றாள் அவள்.


பின்னர் ஒருநாள் தோட்டத்தில் இவள் வேலை செய்துகொண்டிருக்கும்போது இவளருகில் வரும் முத்து, ஏன் நீ இப்படி கஸ்டப்படவேண்டும், நான் சுபியை எனது பிள்ளையாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன், என தன் மனதில் உள்ளதை இவளிடம் வெளிப்படுத்துகின்றான். இவள் எதுவும் சொல்லாமல் அவசரமாக அங்கிருந்து சென்றுவிடுகின்றாள். பின்னர் இவள் வீட்டுவேலை செய்யும், அந்த நல்ல பாட்டியும் இவளிடம் தோட்டக்கார முத்து நல்லபிள்ளை, அவனை திருமணம் செய்துகொள் என்று சொல்கின்றாள். இவளுக்கு அறிவுரை சொல்லுகின்றாள். எனினும் இப்போதும் இலட்சுமி எதுவும் பேசவில்லை.


பின்னர் இவளது கணவனின் நினைவு திதி வருகின்றது. இவளது கணவனை இராணுவத்தினர் கொன்றதும், அவனது எலும்புத்துண்டும், உடையின் எச்சங்களுமே மிச்சமாக கிடைத்தமையும் முன்னரே நினைவாக காட்டப்பட்டுவிடுகின்றது. இவளது கணவனின் திதிக்கு முத்துவும் வருகின்றான். இவள் உணவு பரிமாற சுபி அவனை உணவருந்த சொல்கின்றாள். அவன் சுபிக்கும் ஊட்டிவிட்டு தான் போய்வருவதாக சுபியிடம் சொல்லிவிட்டு, அம்மாவிடமும் சொல்லும்படி சொல்லிவிட்டு செல்கின்றான்.


லட்மியிடம் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும் சுபி, அம்மா மாமா போய்ட்டுவாறதாக உன்னிடம் சொல்லச்சொன்னார், என்கின்றாள்.. இவள் கண்களில் ஒரு உற்சாக மிகுதி ஏற்படும்போது மீண்டும் அம்மா, மாமா போய்ட்டுவாறதாக உன்கிட்ட சொல்லச்சொன்னார் என்கின்றாள்….
அட மாமா என்று சொல்லாதே இனி அவரை உன் அப்பா என்று சொல்லவேண்டும் என லட்சுமி குழந்தைக்கு சொல்லவேண்டும் என நாம் நினைக்கும்போதும், வழமைபோல இலட்சுமி எதுவுமே சொல்லாமல் வேலி மீண்டும் தடுக்க இந்த படம் முடிவடைகின்றது.

உண்மையில் பின்னணி இசையினை இந்த குறும்படத்தில் பாராட்டவேண்டும், அடுத்து இந்த குறும்படத்திற்கு சரியான கதாநாயகியாக லட்சுமிப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகையின் மௌனமான நடிப்பம். பார்வைகளால் கதைபேசுவதும் கச்சிதம். லட்சுமிக்கு அறிவரைகூறி அவளுக்கு ஆறுதலளிக்கும் நல்ல பாட்டியாக வரும் அம்மா, தனது இயல்பான நடிப்பினால் சும்மா புகுந்துவிளையாடியுள்ளார். நீங்களும் என்ற இந்த இணைப்பின்மூலம்
http://www.tamilkathir.com/news/1784/57/.aspx
இந்தக்குறும்படத்தை பார்க்கலாம்.

19 comments:

தங்க முகுந்தன் said...

ஜனா! அருமையான உமது பதிவைப் பார்த்துவிட்டுப் படத்தைப் பார்க்கப்போனால் என்னால் 8.58 நிமிடங்களுக்குமேல் பார்க்க முடியவில்லை - 30 வருடப் போராட்டத்தால் விதவைகளாக்கப்பட்ட கொடுமைகளின் தாக்கத்தை உணர்ந்தவன் என்ற வகையில் இதைப் பதிவிடுகிறேன். தீபாவளி தினத்தன்று அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்தேன்! சிறிது மனம் திருப்தியடைந்தாலும் அவர்களின் மனவேதனை - விரக்திகளை எம்மால் அறிந்துகொள்ள முடியாதுதானே! ஏதோ நடப்பதைப் பார்க்க வேண்டிய இயலா நிலை!

தங்க முகுந்தன் said...

அது சரி கேட்க மறந்துபோனேன்! இந்தப் படம் எங்கே எடுத்தது? வன்னியிலா? வேற எங்க? ஓடுகிற தண்ணியைப் பார்த்தால் நிலாவரைக் கிணறும் புன்னாலைக்கட்டுவன் வாழைத் தோட்டமும் தான் எனது நினைவுக்கு வருகிறது!

Priyan said...

waaaw..Grate writing Man. That is Jana.

கவிஞர். எதுகைமோனையான் said...

குறும்படம் மிக அருமை. அதைவிட அந்த குறும்படம் பற்றிய தங்கள் விமர்சனம் பாராட்ட வார்த்தைகள் இல்லைத்தோழரே.
நெருப்புச்சூட்டினை உணர்ந்தவனால்த்தான் அந்த சூட்டினை விபரிக்கமுடியும் என்ற உங்கள் கருத்து எவரும் மறுக்கமுடியாத ஒன்றே. இப்படி ஈழ மண்ணில் விதவைகள் ஆக்கப்பட்டுள்ள எத்தனை சகோதரிகள் உள்ளனர் என எண்ணும்போதே நெஞ்சம் வலிக்கின்றது. இந்தப்பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்றே. நன்றிகள் நண்பா..

டிலான் said...

மீண்டும் ஒரு அழகான சிக்கஸருடனான செஞ்சரி அடித்த பதிவு. உங்களால்மட்டும் எப்படி நண்பரே பதிவுகளின் தரத்தை அப்படியே வைத்திருக்கமுடிகின்றது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

Rajitha Muralitharan said...

இன்றுதான் உங்கள் வலைப்பதிவை கண்டுபிடித்து வந்து சேர்ந்தேன். இந்தக்குறும்படப்பதிவில் இருந்து சீ.ஜே.7வரை தொடர்ந்து படித்துகொண்டே இருந்தேன். அத்தனையும் பிரமாதமாக உள்ளது ஜனா.
நேரம்போதாமையினால் வெளியேற வேண்டியுள்ளது. உங்கள் பதிவுகள் முழுவதையும் படித்துவிட்டு மீண்டும் பதில் இடுகின்றேன்.
அருமையான பதிவுகள், வாழ்த்துக்களுடன்
-ரஜிதா (சுவிஸ்)

திருப்பரங்குன்றன் said...

அருமையான ஒரு பதிவு ஜனா. சிறந்ததொரு பணியினை செய்திருக்கின்றீர்கள். ஐரோப்பாவில் குறிப்பட்ட வானொலி ஒன்று தங்கள் வலைப்பதிவகளில் இருந்து யூதர்கள் -தமிழர்கள் தொடர் உட்பட பல விடயங்களை அவ்வப்போது எடுத்து ஒலிபரப்புவதுண்டு. இந்தக்குறும்படத்தை தங்கள் எழுத்துக்களால் அதிகமானபேரை பல நாடுகளில் இருந்தும் பார்க்க வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

மீண்டும் ஒரு சிறந்த பதிவு நண்பரே.
இந்தக்குறும்படத்தை நான் முன்னரே பார்த்திருந்தேன். ஆனால் உங்கள் எழுத்துக்கள்மூலம் அதில் நான் அறிந்துகொள்ளமுடியாத பல நுணுக்கமான விடயங்களை அறிந்துகொண்டு மீண்டும் பார்த்தேன். ஈழத்து படைப்புக்களை, ஆக்கங்களை, உண்மையான வரலாறுகளை வெளிக்கொணர்வது ஒரு எழுத்தாளனின் பணி. அதை நிதானமாக ஆறுதலாக, எந்த தம்பட்டமும் இல்லாமல் செய்கின்றீர்கள் ஜனா. பதிவுக்கு நன்றி.

Pradeep said...

சிறிந்ததொரு குடும்படம் பற்றிய அமையான தகவலுக்கு நன்றி.

Sasikumar said...

Short film is very good way to known outers Feelings. Last days I saw some Eelam Sort films.
Veli is Painful storey. “Pasi” also one of good film. Thank You for your writing about Eelam short films.
-Sasi

Jana said...

பதில்: தங்க முகுந்தன்.
நன்றி தங்கமுகுந்தன் அவர்களே. உண்மைதான் இப்படி விதவைகளாக்கப்பட்ட பெண்களும், அவர்கள் நாளாந்தம் அனுபவிக்கும் வேதனைகளும் ஏராளம்.
அப்புறம் இல்லை முகுந்தன் இது முழுவதும் வன்னியில் எடுக்கப்பட்ட படம்தான்.

Jana said...

பதில்:Priyan
நன்றி பிரியன். வருகைக்கும் வாழ்த்துக்கும், பின்னூட்டலுக்கும் நன்றிகள். மீண்டும் வருக..

Jana said...

பதில்:கவிஞர். எதுகைமோனையான்
நன்றிகள் கவிஞரே..
தங்களின் கவிதைத்தொகுப்பு நூலிலும் ஈழத்து சசோதரியின் உள் மனம் என்ற கவிதை வரிகள் என் நினைவில் உள்ளன.
நன்றி எதுகைமோனையான்.

Jana said...

பதில்:Dilan
நன்றி டிலான். பின்னூட்டலிலும் கிரிக்கட்தானா??? வருகைக்கு நன்றி.
வேறொன்றும் இல்லை தரமான வாசக நண்பர்கள், தரமான நண்பர்கள் இருப்பதனால்.

Jana said...

பதில்:Rajitha Muralitharan
நன்றி ரஜிதா.
தொடர்ந்து வாருங்கள், கண்டிப்பாக உங்கள் அபிப்பிரயாத்திற்கு ஏற்றவாறே பதிவுகள் தொடரும்.
கண்டுபிடித்து வந்ததற்கு முதல் நன்றிகள்.

Jana said...

பதில்:திருப்பரங்குன்றன்
வருகைக்கும். பின்னூட்டலுக்கும் நன்றிகள் திருப்பரங்குன்றன். (அழகான ஒரு பெயர்)
ஆம் இது சம்பந்தமாக குறிப்பிட்ட அந்த வானொலியால் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
தகவலுக்கும் நன்றி திருப்பரங்குன்றன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Jana said...

பதில்:Pradeep
நன்றி Dr.

Jana said...

பதில்:Vinoth
நன்றி வினோத், தங்கள் பாராட்டுக்களுக்கு ஏற்றதாக என்னை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கின்றேன்.

Jana said...

பதில்:Sasikumar
நன்றி சசிகுமார் நீங்கள் சுட்டிக்காட்டியதுபோல "பசி" என்ற குறும்படமும் சிறந்ததொரு படைப்பே. அது பற்றி அடுத்த பதிவில் வரும்.
வருகைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails