ஒபரேஷன் பூமாலை….

வான்வெளியில் வழமைக்கு விரோதமான பேரிரைச்சல்களும், வித்தியாசமான பெரிய விமானங்களும், மக்களை ஒருகணம் குலைநடுங்க வைத்தன.
பேரிழவு வந்ததோ! குலத்தோடு கைலாயம்தானோ என்ற எண்ணங்களில் மக்கள் தலை தெறிக்க ஓடத்தொடங்கினார்கள்.
சுமார் ஏழு மிகப்பெரிய விமானங்கள் அன்று வான் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் 10 நிமிடங்கள் ஆனாலும் எந்தவொரு குண்டு சத்தங்களும் கேட்டதாக தெரியவில்லை.
மாறாக அந்த விமானங்களில் இருந்து பல சிறிய பரசூட்டுக்கள், பொதிகள் என்பன விழுந்துகொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தன.
அதற்குள் உத்தேசமான செய்தி ஒன்று மக்கள் மத்தியில் ஆறுதல் படும் அளவுக்கு கிடைத்திருந்தது. வந்திருப்பவை இந்திய “மிராஜ“; இரக விமானங்கள் என்றும், அவற்றில் இருந்து உலர் உணவுப்பொதிகள் போடப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், செய்திகள் பரவின.

பிறகென்ன அன்றைய விடலைத்தர இளைஞர்கள், முந்தி அடித்துக்கொண்டு உணவுப்பொருட்கள் விழும் இடங்களுக்கு சந்தோசத்துடன் ஓடினார்கள்.
குறிப்பிட்ட சில நேரத்திற்குள் பெருமளவிலான உலர் உணவு பொருட்கள் கொட்டப்பட்டிருந்தன. குறிப்பாக, பயறு, பருப்பு உட்பட்ட தானியப்பொருட்கள், பிரட் வகைகள், குழந்தைகளுக்கான அமுல் பால்மா டின்கள் என்பவற்றை என் கண்காளல் பார்த்தேன்.
எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்பேர் எம் பக்கத்தில் பக்கபலமாக இருக்கின்றார்கள், எமக்காக இந்தியாவே இருக்கின்றது! பாரதம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும், எல்லாவற்றுக்கும்மேலாக எங்கள் எம்.ஜி.ஆர் இருக்கும்வரை எமக்கு எந்த கவலையும் இல்லை! தானாடாவிட்டாலும் தசை ஆடுமல்லவா!!
என்பன போன்ற பலதரப்பட்ட சம்பாசனைகள், அடிபட்டு நொந்துபோய், இருந்த மக்கள் மத்தியில் இந்த சம்பவத்தின்பின் ஒரு உற்சாகமாக பரவிக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்னும் ஒரு செய்தி இளைஞர்கள் மத்தில் போய்க்கொண்டிருந்தது. தோலைக்காட்சியில் அப்போது கொழும்பில் இடம்பெற்ற இந்திய - இலங்கை ரெஸ்ட்போட்டியின்போது சிறிகாந்த் துடுப்பெடுத்து ஆடும்போது இலங்கை பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து “தமிலகொட்டி” “கொட்டி” (தமிழ்ப்புலி) என்ற சத்தங்கள் அதிகமாக வந்ததாகவும், சிறி காந்த் அந்தப்போட்டியில் 50 அடித்து விட்டு அவர்களை நோக்கி பட்டை ஆவேசத்துடன் தூக்கி காட்டியதாகவும் பேசிக்கொண்டார்கள்.
இவ்வாறான இந்திய அதிவிரோத நிலை தென்னிலங்கையில் தலை தூக்கியது. சிறி லங்கா அரச சார்பான ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தியா பற்றி வசைமாரி பொழியப்பட்டுக்கொண்டிருந்தது.
பெரிய ஆச்சரியம் என்ன என்றால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கை வான்பரப்பிற்குள் வந்து போனதன் பின்னர், அன்று முழுவதும் எந்தவொரு ஷெல், தாக்குதலோ, விமானத்தாக்குதல்களோ எதுவும் இடம்பெறாமல் வழமைக்கு விரோதமாக எந்தவொரு குண்டு சத்தங்களும் அற்ற ஒரு பொழுதை நீண்ட நாட்களின் பின்னர் அனுபவிக்கக்கூடியதாக இருந்தது அன்று.
அந்த சந்தோசம் அவ்வளவு நீண்டதாக இருக்கவில்லை. மறுநாளே யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களில் விமானத்தாக்குதல்கள் அடுத்தடுத்து இடம்பெற்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் முருகன் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக போற்றப்படும் செல்வச்சந்நிதி ஆலயத்தின்மீதும் கடும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த கோவிலின் மிக உயரமான அதேவேளை அழகான சித்திரத்தேர், முற்றுமுழுதாக குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்டது.
அதேவேளை சொல்லி வைத்தாலப்போல், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆலயங்களை மையமாக வைத்து அடுத்து அடுத்து வான் தாக்குதல்கள் அப்போது இடம்பெற்றன.
ஒபரேஷன் லிபரேஷன்.

யாழ்ப்பாணத்தை பொதுவாக வலிகாமப்பிரதேசம் எனவும், ஏழு தீவுகள் அடங்கிய தீவகம் எனவும், தென்மராட்சி எனவும், வடமராட்சி எனவும் நான்காக பிரிக்கலாம். இந்த வகையில் சிறி லங்கா அரசாங்கத்தால், அப்போது வடமாராட்சியை கைப்பற்றி தொடராக யாழ்ப்பிரதேசம் முழுமையாக கைப்பற்ற எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த பயங்கர இராணுவ நடவடிக்கையே ஒபரேஷன் லிபரேஷன் நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சிறி லங்கா அரசாங்கத்திற்கு பெருமெடுப்பிலான உதவிகளை செய்தவண்ணம் இருந்தன.
மேலும் மேலும் மக்கள் மீதான தாக்குதல்களும் உச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுக்கொண்டிருந்தன.
சரமாரியன ஷெல் வீச்சுக்களால் நாளாந்தம் பெருமளவிலானவர்கள், மடிந்துகொண்டிருந்தார்கள். பாரிய தாக்குதல்கள் மூலம் வடமாராட்சியில் இருந்து அங்கிருக்கும் நெல்லியடி என்ற இடம்வரையும் இராணுவத்தினர் முன்னகர்ந்து, நெல்லியடியில் இருக்கும் முக்கிமான பெரிய பாடசாலையான நெல்லியடி மத்திய கல்லூரியில் பாரிய முகாமிட்டு அங்கிருந்து பாரிய நடவடிக்கைகளை எடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்…
வந்து சேரும் செய்திகள் ஒவ்வொன்றுமே மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கிக்கொண்டிருந்தன. எல்லாம் ஒரே அடியாக முடியப்போகின்றதா என்று பயந்துகொண்டிருந்தனர்.
“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”. இலங்கை அதற்கு ஒரு பூச்சியைப்போல, தொடர்டந்து சேட்டை விட்டால் பார்த்துக்கொண்டா இருக்கப்போகின்றார்கள், அடித்து தூக்கி எறியமாட்டார்களா? என்று பேசி தம்மையும், சுற்றத்தாரையும் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார்கள் சில பெரியவர்கள்…
இப்படி பீதியுடனும், அவநம்பிக்கையுடனும், நாளை என்ற பெரிய பயங்கரத்துடனும் போராடிக்கொண்டிருக்கும்வேளையில்….. நெல்லியடி மட்டும் அல்ல முழு இலங்கையுமே ஒரு கணம் அதிர்ந்தது…
-இலைகள் உதிரும் -