Thursday, January 20, 2011

திரையுலகில் ஜொலித்த பாத்திரங்களும் அதற்கான நடிகர்களும்.

நமது தமிழ்த்திரைப்படங்களை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். திரைப்படம் வந்தவுடன், விமர்சனம் செய்கின்றோம், விருதுகளைப்பற்றி சிலாகித்துக்கொள்கின்றோம், திரை நட்சத்திரங்களின் கருத்துக்களை வைத்து மோதிக்கொள்கின்றோம், சிறந்த நடிப்பை பார்த்து அதிசயித்து நிற்கின்றோம், அதேபோல பிளேட்டு படங்களை கண்டால் தூர ஓடுகின்றோம். இப்படி பல விடயங்களில் எமக்கு தமிழ்த்திரைப்படங்கள் பல விழிப்புணர்வுகளை! தந்திருக்கின்றன.
சாதாரணமாக பொழுதுபோக்கிற்காக பார்க்கும்படம் என்பதில் இருந்து, தற்போது, தமிழ் சினிமா இரசிகர்கள், இசை நுணுக்கங்களில் இருந்து. காமரா ஆங்கிள்வரை கவனிக்கத்தொடங்கிவிட்டதனாலும், பல ஆங்கிலப்படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டே தமிழ் சினிமாவுக்கு வருவதாலும், இப்போதெல்லாம் அவர்களின் காதுகளில் பூவை சொருகுவதற்கு இயக்குனர்கள் பெரும்பாடு படவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.

ஏன்றாலும்கூட சிறப்பான திரைப்படங்கள் ஒன்றில் சில காரக்டர்களில் சில நடிகர்கள் காரக்டர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். இந்த காரக்டருக்கு இவனை இயக்குனர் தெரிவு செய்ததற்கே கைகொடுக்கலாம்பா.. என்ற காமன்டுகள் உடனயடியாகவே வரும்படி சில காரக்டர்களில் சில நட்சத்திரங்கள் புகுந்துவிளையாடியிருப்பார்கள்.
இதைப்போல ஒரு காரக்டர்தான் வேண்டும்… வேண்டும் என மற்றய நடிகர்கள் ஆவலுடன் ஏங்கி காத்திருக்கும் வண்ணம் இவை அமைந்துவிடும்.
அப்படியான சிலகாரக்டர்களையும், படங்களையும், நட்சத்திரங்கள் பற்றியுமே இந்தப்பதிவில் பேச்சு….

மனோகர்.

மணிரத்னம் இயக்கிய “மௌனராகம்” படத்தில் கார்த்திக் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர்தான் மனோகர்.
அப்பா…. இப்படி ஒரு பாத்திரத்தை எவனாவது செய்யமுடியுமா? என்று சொடக்குப்போட்டு சவால்விடும்வகையில் இருந்தது கார்த்திக்கின் அபாரமான நடிப்பு.
மெதுவாக அசைந்துவரும் தேர்போல மெதுவாக ஓட்டத்துடன் வந்த திரைக்கதை ஓட்டம். பிளாஸ்பாக்காக வரும் கார்த்திக்கின் அறிமுகத்தில், ஜெட் விமானம் ரேக்காவ் ஆகி பறப்பதுபோன்ற உணர்வை தரும். விறுவிறுவென்று கதையோட்டம் கார்த்திக்கால் நகர்த்தப்பட்டுவிடும். குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் ரேவதியின் ஒரு பிளாஸ்பாக்காக வரும் கார்த்திக் பின்னர் படம் நிறைவுபெறும்வரை பார்ப்பவர்கள் மனதிலேயே நின்றுவிடுவது மாயம்.
இப்போதுகூட பல இளம்புயல்கள் இந்த மனோகர் பாத்திரம்போல ஏதாவது…(அப்படி முடியுமா என்பது வேறுகதை) என்று ஏங்குவது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ்

கிருஸ்ணவம்ஸி இயக்கத்தில் அந்தபுரம் திரைப்படத்தில் பார்த்தீபன் நடித்த பாத்திரம். கொலையுடனும், மனதில் வக்கிரம், வெறியுடன் அலைந்துதிரியும் தனது கணவனின் ஊருக்குவரும் சௌந்தர்யா, பயந்ததுபோலவே பல இக்கட்டுகளை சந்தித்து கணவனையும் இழந்துவிட்டு, மரணம் துரத்தப்பட ஒரு கட்டத்தில் தனக்கும் தன் குழந்தைக்கும் தப்பிக்க எந்தவழியும் இல்லை, என்ற நிலையில் திரையில் அறிமுகமாவார் பார்த்தீபன். பெரும் ரணகளத்தினுள்ளும் ஒரு கிலுகிலுப்பாக பின் கதையோட்டத்தை நகர்த்தி செல்லும் விதம் அபாராம். நெஞ்சில் நிலைதும்துவிடுகின்றது. இது பாத்தீபனால் மட்டுமே முடியும் என்ற முத்திரை அழியாமல் பதிந்துவிடுகின்றது.

ரமேஸ்

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நம்மவர் திரைப்படத்தில் நடிகர் கரன் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர்தான் இந்த ரமேஸ்.
அறிமுகமா? யார் சொன்னார்கள்? அப்போதே தன் ஆற்றல் மிகுந்த நடிப்பால் அனைவர் புருவங்களையும் உயரவைத்தவர் கரன்.
கமல்ஹாசனுக்கு சாலஞ்சிங்கான ஒரு காரக்டர் அதுவும், புதுமுகம் ஆனால் மிக யதார்த்தமாக ஒரு பெரும் நாகனின் நடிப்புக்கு ஈடாக நடித்து அழுத்தமான முத்திரையை நம்மவர் படத்தில் குத்திவிட்ட பாத்திரம் கரனுடைய கல்லூரி நிர்வாகியின் மகனாக வந்து அடாவடித்தனம் பண்ணும் ரமேஸ் என்னும் பாத்திரம்.

சிந்து

கே.பாலச்சந்தரால் செதுக்கப்பட்ட ஒரு அற்புதமான பாத்திரம் “சிந்துபைரவி” திரைப்படத்தின் சிந்து. சுஹாசினி…ஒருமுறை எழுந்துநின்று கைதட்டிவிடலாம்.
சிந்துவாக வாழ்ந்துகாட்டினார் சுஹாசினி. அந்த பாத்திரத்தின் தன்மையுணர்ந்து மிகச்சாலஞ்சிங்காக அதை ஏற்று, அறிமுகம்முதல் முடிவுவரை, உணர்வுகளுடான நடிப்பின்மூலம் மனதில் நின்றுவிடுவார் சுஹாசினி. ஏக்கம், ஏமாற்றம், பூரிப்பு, பரிதாபம், சந்தோசம், துக்கம், கவலை என அத்தனைபாவங்களையும் உடனுக்குடன் மாற்றி மறக்கமுடியாத பாத்திரமாக சிந்துவை எப்போதும் வைத்துக்கொள்ளவைத்துவிட்டவர் ஹாசினி.

ஜிந்தா.

பேரைக்கேட்டவுடனேயே புரிந்திருக்குமே? பிரதாப்போத்தனின் இயக்கத்தில் வெற்றிவிழா திரைப்படத்தில் சலீம் ஹோஷ் நடித்த பாத்திரம்தான் இந்த ஜிந்தா.
தமிழ் சினிமா வித்தியாசமான ஒரு வில்லனாக சலீம் ஹோசை பார்த்து ஆச்சரியப்பட்டது. வேற்றிவிழா திரைப்படம் என்றவுடன், கமல், பிரபுவை தள்ளிவிட்டு ஜிந்தா என்று சொல்லும் வண்ணம் அந்த திரைப்படத்தில் ஜொலித்துக்காட்டினார் சலீம் ஹோஸ். சலீம் ஹோஷின் பேச்சு, கம்பீரமான குரல், வித்தியாசமான வில்லத்தனம், அபாரமான சிரிப்பு என்பன திரைப்படம் பார்த்தவர்களை கட்டிப்போட்டு, இன்றும் அவரது பேரைக்கூட ஜிந்தா என்று சொன்னால்த்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த பாத்திரத்தில் முத்திரை பதித்துவிட்டவர் சலீம் ஹோஸ்.

கீத்தா…

கௌத்தம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தில்
ஜோதிகா ஏற்று நடித்த நெகட்டிவ் பாத்திரத்தின் பெயர் கீத்தா.
ஜோ… அதிரவைத்து அசத்திய பாத்திரம் கீத்தா. ஒரு நெகட்டிவ் ரோலில், அதுவும் மிக மிக சாலஞ்சிக்கான ஒரு பாத்திரத்தில் பாத்திரத்தின் போக்கிற்கு பாத்திரத்தின் உச்ச நிலைக்கே சென்று பிரமிக்கவைத்து விடுவார் ஜோ..
இறுதியில் சரத்குமார் அனைத்துவிடையங்களும் தெரியவந்ததும், ஜோ..மற்றும் மிலிந்த சோமன் ஆகியோரின் இடத்திற்கு வரும்போது, பல தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பலே ரவுடியாக ஜோ..வரும் ஸீன்…ஜப்பா…
சரத்தைப்பார்த்து கண்ணைக்காட்டி என்ன பார்க்கிறா…ஒருக்கா வந்திட்டுப்போறியா? என்று கேட்பது. ரவுடிப்பெண்ணாக யதார்த்தம்.

இப்படி முத்திரை குத்திய பாத்திரங்கள், நடிகர்களின் ஸீன்கள் பல இருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்தவைகளைத்தான் உங்களுக்கு சொல்லியிருக்கின்றேன்.
நீங்களும் சிலவேளைகளில் இதுபற்றி யோசித்திருப்பீங்க…

14 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

உங்கள் பார்வை மிகவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது ஜனா! சிந்து பைரவி, மௌனராகம் இரண்டும் நான் பார்த்த படங்கள்! ஏனையவற்றை நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் - நீங்கள் சொன்னதுக்காக!

தமிழ் உதயம் said...

பச்சைக்கிளி முத்துச்சரம் - உண்மையிலேயே முத்தான திரைப்படம். தொலைக்காட்சியில் தான் பார்த்தேன். பாதியில் வேலை நிமித்தமாக படத்தை தவிர்க்க வேண்டி வந்தது. மறுநாள் ஊரெல்லாம் தேடி அப்படத்தின் விசிடி வாங்கினேன். எந்த படத்திற்காகவும் இப்படி அலைந்ததில்லை. காரணம் படத்தின் கதை மற்றும் ஜோ.

Chitra said...

இதை ஒரு தொடராகவே, நீங்கள் எழுதலாமே.

KANA VARO said...

ஒரு படத்தை தவிர ஏனையவை பார்த்த படங்கள் தான். பதிவுகளை புதிது புதிதாக எப்படியெல்லாம் உருவாக்குகிறீர்கள். உங்களை நானும் பாலோ பண்ண போறான். நல்ல விசயங்களை கத்துக்கிறதில தப்பே இல்லை,.

pichaikaaran said...

நல்ல பார்வை . நம்மவர் படம் மட்டும் தவறான தேர்வு

தர்ஷன் said...

அடடா அருமை ஜனா அண்ணா,
இதைப் பார்த்ததும் எனக்கும் இப்படி ஒரு பதிவு போட தோன்றுகிறது.

ஷஹன்ஷா said...

இரண்டை தவிர மீதி பார்த்த படங்கள்......
நல்ல பதிவு அண்ணா...
இது தொடர வேண்டும்...எதிர்பார்ப்பு

கார்த்தி said...

நீங்கள் குறிப்பிட்டவர்களில் பச்சைக்கிளி முத்துசரம் ஜோதிகாவின் நடிப்புதான் மக்ஸிமம்!

டக்கால்டி said...

இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்.
ஆண் பாவம், அரங்கேற்றவேளை திரைப்படத்தில் வரும் நம்பி அண்ணே கேரக்டர் மூலம் அசத்திய திரு. வி.கே.ஆர் அவர்களை எப்படி விட்டீர்கள்?

Unknown said...

“பச்சைக்கிளி முத்துச்சரம்”அருமையான படம் ஆனால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை!

Unknown said...

மிகவும் ரசனைக்காராக இருக்கிறீர்கள். கதாபாத்திரங்களை நீங்கள் நினைவு கூர்ந்த விதம் அருமை..
அந்த புரம் பார்த்தீபன் நல்ல தெரிவு..

ம.தி.சுதா said...

அண்ணா நல்ல ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள்... அத்துடன் கரன் குழந்தை நட்சத்திரமாக முன்னரே படம் நடித்தள்ளார் என நினைக்கிறேன்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

Unknown said...

//இப்படி முத்திரை குத்திய பாத்திரங்கள், நடிகர்களின் ஸீன்கள் பல இருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்தவைகளைத்தான் உங்களுக்கு சொல்லியிருக்கின்றேன்.//
வேலு நாயக்கர், ரமணா, மற்றும் பாலாவின் பாத்திரங்கள் தங்களின் பட்டியலில் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.

வந்தியத்தேவன் said...

சிலபாத்திரங்களின் பெயர்களாகவே நடிகர்களை உணரமுடிந்தது ஒரு காலம். எனக்குப் பிடித்த கமலின் பாத்திரங்கள் பற்றி இரு வருடங்களுக்கு முன்னர் அவரின் பாத்திரங்களின் பெயருடன் நான் எழுதிய பதிவு உங்களின் பார்வைக்காக.

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_07.html

LinkWithin

Related Posts with Thumbnails